கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் கிறிஸ்தவத்தை விமர்சனம் செய்து வருவது என்றுமே இருந்திருந்தாலும் சமீப காலத்தில் இணையத்தில் அது அதிகரித்திருக்கிறது. இதிலும் சில வகையறாக்கள் இருக்கின்றன. காழ்ப்புணர்ச்சியோடும், சந்தேகக் கண்களோடும் பார்த்து விமர்சனம் செய்கின்ற இந்துத்துவ ராஜீவ் மல்கோத்திரா போன்றோர் ஒருவகை. இன்னொரு வகையினர் கிறிஸ்தவத்தை மதித்து, அதேநேரம் அதைப் புரிந்துகொள்ளும் முயற்சியோடு அது பற்றிக் கருத்துத் தெரிவிப்பவர்கள். இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் எழுத்தாளர் ஜெயமோகன். அவருக்கு கிறிஸ்தவ நண்பர்களும் இருக்கிறார்கள். ஜெயமோகன் மார்க்ஸிய பார்வைகொண்ட இந்து. தமிழகத்தில் முக்கியமான எழுத்தாளர். தன்னுடைய வலைத்தளத்தில் அவரெழுதிய ‘விவிலியம், புதுமொழியாக்கம்’ ஆக்கத்தை சமீபத்தில் நான் வாசிக்க நேர்ந்தது. ஆச்சரியமாகத்தான் இருந்தது, கிறிஸ்தவர்களே இதுவரை சிந்தித்துப் பார்க்காத ஒரு விஷயத்தை கிறிஸ்தவரல்லாத ஒருவர் இந்தளவுக்கு கருத்தோடு சிந்தித்து அதுபற்றி எழுதியிருப்பதைப் பார்த்தபோது.
ஜெயமோகனின் ஆக்கம் 1995ல் வெளிவந்த பொது மொழிபெயர்ப்பான ‘திருவிவிலியம்’ என்ற தமிழ் மொழிபெயர்ப்பைப் பற்றிக் கருத்துத் தெரிவித்து எழுதப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பை தமிழக கத்தோலிக்க நடுநிலையமும், அனைத்துலக வேதாகம சங்கமும் மதுரையில் வெளியிட்டன. இந்திய வேதாகம சங்கப் பதிப்பான இதன் பிரதி ஒன்றை சீ. எஸ். ஐ. திருச்சபை போதக நண்பர் ஒருவர் 2002ல் என்னிடம் தந்து வாசித்து கருத்துத் தெரிவிக்கும்படிக் கேட்டிருந்தார். அன்று பல வேலைப்பளுவின் காரணமாக அதை நான் உடனடியாக செய்யமுடியவில்லை. ஜெயமோகனின் ஆக்கத்தை வாசித்தபிறகு அதை மறுபடியும் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அதன் விளைவுதான் இந்த ஆக்கம்.
தமிழில் நாம் பெரும்பாலும் பயன்படுத்தி வரும் வேதப்புத்தகத்தின் மொழிநடை பற்றி நான் கடந்த வருட திருமறைத்தீப இதழொன்றில் ‘தமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா?’ (திருமறைத்தீபம், இதழ் 4, 2012) என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். அதுபற்றி இந்தளவுக்கு சிந்தித்து எவருமே எழுதவில்லை என்று பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘எதை வாசிக்கிறேன் என்று உணராமலேயே வாசித்து வந்திருக்கிறேனே’ என்று வருத்தத்தோடு சொன்னவர்களும் உண்டு. ஜெயமோகனின் ஆக்கத்தை தற்செயலாக வாசிக்க நேர்ந்தபோது நம் பக்கத்தில் இராத ஒருவர் அதுபற்றி நமக்கு முன்னாலேயே கருத்துத் தெரிவித்திருக்கிறாரே என்ற எண்ணத்தில் வாசிக்க ஆரம்பித்தேன். ஆய்வு செய்து அது எழுதப்பட்டிருந்தாலும் கிறிஸ்தவன் என்ற முறையில் அதைப்பற்றிய எதிர்வினை தராமல் இருக்க முடியவில்லை.
ஜெயமோகன் தன் ஆக்கத்தின் ஆரம்பத்தில் சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தரை தவறாக மார்டின் லூத்தர்-கிங் என்று ஒருமுறைக்கு மேல் எழுதியிருக்கிறார். மார்டின் லூத்தரும், மார்டின் லூத்தர்-கிங்கும் வெவ்வேறு மனிதர்கள். மார்டின் லூத்தர் 16ம் நூற்றாண்டு பெற்றெடுத்த தலைசிறந்த ஜெர்மானிய சீர்திருத்தவாதி. ஜெர்மன் மொழியில் வேதத்தை மொழிபெயர்த்தவர். இன்று தமிழில் வேதம் நாம் வாசிக்கும்படியான வசதி இருப்பதற்கு கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட மனிதர். மார்டின் லூத்தர்-கிங் அமெரிக்காவில் மனித உரிமைகளுக்காகப் பாடுபட்ட சமூக சேவையாளர்.
மார்டின் லூத்தரின் மொழிபெயர்ப்புத் தத்துவத்தை ஜெயமோகன் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார். லூத்தர், ‘பைபிள் மொழியாக்கம் சந்தை மொழியில் இருந்தாக வேண்டுமென்று எண்ணினார். ஏனெனில் சந்தைகளில்தான் அதிகம் பிரச்சாரம் செய்யப்பட்டது’ என்றும், ஆரம்பகால தமிழ் மிஷனரிகள் ஜெர்மனி, இத்தாலி நாட்டைச் சேர்ந்த டச்சு மிஷனைச் சேர்ந்தவர்களாக இருந்தபடியால் அவர்கள் லூத்தரின் மொழிபெயர்ப்புக் கொள்கையினால் பாதிக்கப்பட்டு தமிழ் வேதத்தை எளிய, அடித்தட்டு மக்களுடைய பாஷையில் மொழிபெயர்த்ததன் விளைவாக தமிழ் வேதம் அந்த மொழியில் இருக்கிறது என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
நாம் ‘சந்தை மொழிபெயர்ப்பு’ என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வில்லியம் டின்டேலும் அது கலப்பை பிடிக்கிறவனும் வாசிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்கு அர்த்தம், வேதம் சாதாரண மக்களும் வாசிக்கக்கூடிய மொழியில் இருக்க வேண்டும் என்பதுதான். அப்படியில்லாவிட்டால் அதனால் என்ன பலனிருக்கப்போகிறது? இதுதான் ‘சந்தை மொழிபெயர்ப்பு’ என்பதன் உண்மையான விளக்கம். ‘சந்தை மொழிபெயர்ப்பு’ என்பதை சேரித்தமிழ் மொழிபெயர்ப்பு என்ற அர்த்தத்தில் புரிந்துகொள்ளக்கூடாது. இந்த ‘சந்தை மொழிபெயர்ப்பு’ தத்துவத்தை நம்மினத்தில் பயன்படுத்தும்போது நம்மொழி அறிந்திராத மேலைநாட்டு மிஷனரிகளுக்கு பிரச்சனை ஏற்படுவதில் ஆச்சரியமிருக்க முடியாது. தமிழை நாம் ஏரியாவுக்கு ஏரியா வித்தியாசமாகப் பேசுகிறோம்; எழுதுகிறோம். சேரிப்பாஷை வேறிருக்கிறது. இதனால்தான் இந்தியாவுக்கு வந்த இன்னொரு மிஷனரியான சீகன் பால்க் தமிழில் வேதத்தை முதன் முதலாக மொழிபெயர்த்தபோது தான் சுவிசேஷப்பணி புரிந்த கீழ்தட்டு மக்களுடைய பாஷையில் அதை மொழிபெயர்த்தார். அன்று அவருடைய இலக்கு அந்த மக்களுக்குப் புரியும்படி வேதம் இருக்கவேண்டுமென்பது மட்டுமே. தமிழர்கள் எல்லோரும் வாசிக்க வேண்டும் என்ற பெருந்திட்டத்துடன் அவர் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபடவில்லை. அவருக்குப் பின்னால் வந்தவர்கள் இன்று நாம் பரவலாகப் பயன்படுத்தும் தமிழ் வேதத்தை மொழிபெயர்ப்பு செய்தார்கள். அது பிராமண வழக்கு மொழியில் இருப்பதற்கான காரணத்தை என்னுடைய ‘தமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா?,’ (திருமறைத்தீபம், இதழ் 4, 2012) என்ற ஆக்கத்தில் விளக்கியிருக்கிறேன்.
ஜெயமோகன் விளக்கியிருப்பதுபோல் தமிழ் அன்று அதிகம் செய்யுள் வடிவ ஆதிக்கத்தில் இருந்தது. ஜோன் பனியனின் ‘மோட்ச பிரயாணத்தைத்’ தழுவி ‘இரட்சண்ய யாத்திரீகம்’ வரைந்த கிருஷ¢ணபிள்ளைகூட அதை செய்யுள் வடிவில்தான் செய்தார். அந்தக்காலத்தில் அதற்குத்தான் மதிப்பும் இருந்தது. உரைநடை வளர்ச்சி அன்றிருக்கவில்லை. உயர்குலத்தவர் மத்தியில் பேச்சுத் தமிழும் பிராமண வடமொழித் தாக்கத்தைக் கொண்டிருந்தது. அதுவே தமிழ் வேதத்திலும் பிரதிபலித்ததில் ஆச்சரியமில்லை. பின்னால் உரைநடை வளர்ச்சி ஆறுமுக நாவலர், உ. வே. சாமிநாதையர் போன்றவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாரதிக்கும் இதில் பெரும்பங்குண்டு. பிராமணத் தமிழ் ஆதிக்கம் படிப்படியாகக் குறைந்து தமிழ் உரைநடை பின்னால் தனித்தன்மை கொண்டதாக வளர்ந்தது. ஒரு காலத்தில் அறவே இல்லாமலும், மதிப்பில்லாமலும் இருந்த உரைநடை இன்று தழைத்தோங்கி நிற்கிறது. தமிழ் வேதத்தில் இருக்கும் பிரச்சனையே இன்றிருக்கும் உரைநடையில் எல்லோரும் இலகுவாகப் புரிந்துகொள்ளும்படி இல்லை என்பது தான். ஜெயமோகன் சொல்லியிருப்பதுபோல், ‘இப்போதே இருபது முப்பது வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் புரிந்துகொள்ள முடியாதபடி இருக்கிறது’.
இதிலிருக்கும் இன்னுமொரு பிரச்சனையை ஜெயமோகன் சரியாக இனங்காட்டியிருக்கிறார். இதை நான் என்னுடைய ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதை ஜெயமோகனின் வார்த்தைகளிலேயே தருகிறேனே, ‘சாதாரணக் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் அந்தமொழி பைபிளுக்கே உரிய தனிமொழி. ஆண்டவனின் மொழி. அது மொழியாக்கந்தான் என்ற எண்ணங்கூட சாதாரண கிறிஸ்தவர்களிடம் இல்லை. அதன் விநோதமான சொல்லாட்சிகள் அவர்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீகத் தன்மையுடன் ஒலிக்கின்றன.’ இதை நாம் மறுக்க முடியுமா? கிறிஸ்தவரே அல்லாத ஒருவர் இந்தளவுக்கு நம்மைப் புரிந்துவைத்திருந்து நமக்குப் புத்தி சொல்லவேண்டிய நிலையில் நாமிருக்கிறோம்.
இதுவரையில் சில விஷயங்களில் எனக்கு ஜெயமோகனோடு ஒத்துப்போக முடிந்திருக்கிறது. இனிப்பிரச்சனைக்குரிய விஷயத்துக்கு வருவோம். ஜெயமோகன் தன் ஆக்கத்தில் 1995ல் இந்திய வேதாகம சங்கம் வெளியிட்ட “திருவிவிலியம்” பொதுமொழிப்பெயர்ப்பை அதிகம் பாராட்டி அது ‘கடந்த இருபது வருட காலப்பகுதிகளில் தமிழில் நிகழ்ந்த பிரமாண்டமான தமிழ்ச்சாதனைகளில் ஒன்று என்று ஐயமில்லாமல் சொல்லலாம்’ என்று எழுதியிருக்கிறார். இங்குதான் அவரோடு நான் கிறிஸ்தவன் என்ற முறையில் முரண்பட வேண்டியிருக்கிறது. அவருடைய கருத்தின்படி தமிழ்மொழியைப் பொறுத்தவரையில் அது பெரிய சாதனையாக இருக்கலாம். ஆனால், கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் அந்த மொழிபெயர்ப்பு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது; கிறிஸ்தவர்களால் பயன்படுத்தக்கூடியதா? என்பதை நாம் ஆராய வேண்டும்.
கத்தோலிக்க மதமும், கிறிஸ்தவமும்
ஜெயமோகன் மட்டுமல்லாது தமிழக கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோரும் இன்றைக்கு ரோமன் கத்தோலிக்க மதத்தைக் கிறிஸ்தவமாக எண்ணி வருவது நாமறிந்ததே. திருச்சபை வரலாற்று நூல் சரியாக எழுதப்பட்டு நம்மினத்தில் பரவலாகக் காணப்படாததாலும், கிறிஸ்தவ திருச்சபைகள் கத்தோலிக்க மதத்தைப் பற்றிய தெளிவான புரிந்துகொள்ளுதலைக் கொண்டிராததாலும் கத்தோலிக்க மதத்தைக் கிறிஸ்தவத்தின் தாய் சபையாக எண்ணிவருகின்ற பேராபத்து நம்மினத்தில் இருக்கிறது. புரொட்டஸ்தாந்து சீர்திருத்த கிறிஸ்தவம் கத்தோலிக்க மதத்தில் இருந்து பிரிந்த ஒன்றல்ல; மெய்கிறிஸ்தவ அனுபவத்தை விசுவாசத்தின் மூலம் கிறிஸ்துவிடம் இருந்து மட்டும் அடைந்து, வேதத்தின் அடிப்படையில் மட்டும் திருச்சபையை அமைக்க கர்த்தரால் எழுப்பப்பட்ட அவருடைய மக்களின் கூட்டம். கத்தோலிக்க மதம் கர்த்தரை அறியாதது; கிறிஸ்தவம் ஆவிக்குரியது.
கிறிஸ்தவத்தைப் போலிப்போதனைகள் மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு தாக்க அது பெருகி வேதத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் உருவாகி வளர்ந்த மதமே ரோமன் கத்தோலிக்க மதம். அது கத்தோலிக்க போப்புகளின் கட்டளைகள், ஆவணங்கள் என்பவற்றையும், வத்திக்கான் முடிவுகளின் அடிப்படையிலும் இயங்கி வரும் மதமேயன்றி கர்த்தரின் வேதத்திற்கும் அதன் போதனைகளுக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஆவிக்குரிய விஷயங்களை அணுகுகின்ற ஒரு சபையல்ல. கடவுளுடைய வார்த்தையோடு சாதாரண மனித சிந்தனைகளை சம அதிகாரத்துடன் இணைத்துப் பார்க்கிற ஒரு மதமே அது. வேதத்தை அணுகி அதன்படி நடக்கின்ற சபையாக அது இருக்குமானால் முதலில் தன்னை தெய்வீக அம்சமாகக் கருதும் போப்புக்கும், வத்திக்கானுக்கு அதில் இடமிருக்காது. ஏனெனில் கர்த்தரின் வேதத்தில் போப்புக்கோ, வத்திக்கான் தலைமைச் செயலகத்துக்கோ இடமில்லை. கிறிஸ்தவ திருச்சபைகளுக்கும், கத்தோலிக்க மதத்திற்கும் இடையில் இருக்கும் இந்தப் பெரிய வேறுபாடு ஜெயமோகனுக்குப் புரிவது கொஞ்சம் கடினம்தான். அவர் அதை இரு திருச்சபைகளுக்கிடையில் இருக்கும் வேறுபாடாக மட்டுமே பார்ப்பார். ஆவிக்குரிய மனிதனாக இல்லாமலிருந்தால் இந்த வேறுபாட்டை உணர்வது கஷ்டம். அதனால் அவரை நான் இந்த விஷயத்தில் பெரிதாகக் குறைகூற முடியாது. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாமல் இருக்கும் கிறிஸ்தவர்களை எண்ணித்தான் என்னால் வெட்கப்பட முடியும். நான் எழுதி வெளியிட்டுள்ள ‘கிறிஸ்தவ திருச்சபை வரலாறு’ (2012) என்ற நூலின் முதல் பாகம் கத்தோலிக்க மதத்தை வெளிப்படையாக இனங்காட்டுகின்ற ஒரு நூல்.
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பின் பதிப்புரிமை பக்கமும் முன்னுரை பக்கமும்
ரோமன் கத்தோலிக்க மதம் சார்ந்த மொழிபெயர்ப்பு
இந்தப் பொது மொழிபெயர்ப்பைக் (1995) கொண்டுவர முன்னின்று நடவடிக்கை எடுத்தது கத்தோலிக்க மதமே. இரண்டாம் வத்திக்கான் சங்கமே (1962-65) இதை ஊக்குவித்து தன்னோடு இந்தப் பணியில் சேர்ந்துழைக்க கிறிஸ்தவ சபைகளை நாடியது. தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவையும் (Tamil Nadu Catholic Bishops’ Council), இந்திய வேதாகம சங்கமும் (Bible Society of India) இதில் இணைந்து செயல்பட்டன. இந்தப் பொது மொழிபெயர்ப்பை தமிழக கத்தோலிக்க நடுநிலையமும் (TNBCLC), அனைத்துலக வேதாகம சங்கமும் (United Bible Society-UBS) இணைந்து 1995ல் இதை மதுரையில் வெளியிட்டன.
ஆவிக்குரிய மதமாக இல்லாத கத்தோலிக்க மதம் இந்தளவுக்கு ஊக்கம்காட்டி வேதமொழிபெயர்ப்பில் ஈடுபட்டால் அதில் கிறிஸ்தவ நோக்கங்களுக்கும், கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுமா? என்பதை முதலில் சிந்தித்துப் பாருங்கள். நிச்சயமாக முடியாது. நம்முடைய ஆவிக்குரிய நம்பிக்கைகளுக்கெல்லாம் அத்திவாரமாக இருக்கும் கர்த்தரின் வேதத்தை வேத அதிகாரத்துக்கே இடங்கொடுக்காத கத்தோலிக்க மதம் எப்படி சரியாக மொழிபெயர்க்க முடியும்? கத்தோலிக்கர்கள் பயன்படுத்துவதற்காக இந்தப் பொது மொழிபெயர்ப்பு பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் இடையில் தள்ளுபடி ஆகமங்களை (Apocrypha) ‘இணைத்திருமறை’ நூல்கள் என்ற பெயரில் இணைத்துள்ளது. இந்தத் தள்ளுபடி ஆகமங்கள் ஆரம்பத்திலிருந்தே கர்த்தரின் வேதத்தோடு எந்தவித சம்பந்தமில்லாதவையாக கிறிஸ்தவ சபைகளால் தள்ளிவைக்கப்பட்டிருந்தன. 1689 விசுவாச அறிக்கையின் முதல் அதிகாரம் தள்ளுபடி ஆகமங்கள் வேதத்தின் ஒருபகுதியல்ல என்பதைத் தெளிவாக விளக்கியிருக்கிறது. கிறிஸ்தவ சபைகளுக்காக இந்திய வேதாகம சங்கம் வெளியிட்டுள்ள பொது மொழிபெயர்ப்பின் பதிப்பில் தள்ளுபடி ஆகமங்கள் இணைக்கப்படவில்லை. இந்தவிதத்தில் கத்தோலிக்க மதத்தோடு இணைந்து வேதமொழிபெயர்ப்பில் ஈடுபடுவதே அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாத பெரும் முரண்பாடு. சீகன் பால்க் முதன் முதலாக வேதத்தைத் தமிழில் மொழிபெயர்த்தபோது கத்தோலிக்கரோடு சேர்ந்து அதைச் செய்யவில்லை. அவருக்குப் பின் நூறு வருடங்களுக்குப் பிறகு இந்திய மொழிகளில் வேதத்தை மொழிபெயர்த்து அருஞ்சாதனை செய்த வில்லியம் கேரி வேதமொழிபெயர்ப்பில் கத்தோலிக்கரோடு இணைந்து ஈடுபடவில்லை. ஏன் தெரியுமா? மெய்க்கிறிஸ்தவர்கள் வேதத்தை அடிப்படையாகக் கொண்டமையாத கத்தோலிக்க மதத்தோடு இந்த அதிமுக்கியமான ஆவிக்குரிய பணியில் இணைந்து செயல்படமாட்டார்கள்.
இந்தப் பொது மொழிபெயர்ப்பை ரோமன் கத்தோலிக்க மதத்தாரின் ஒருபகுதியினர் மட்டுமே இன்று பயன்படுத்துவதாகவும், பிறர் அதைப் பயன்படுத்துவதாக இல்லை என்றும் ஜெயமோகன் தன் ஆக்கத்தில் குறைபட்டுக்கொள்கிறார். அதற்குக் காரணமில்லாமலில்லை; அது அவருக்குப் புரிவதும் கஷ்டம்தான்.
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பின் இணைத்திருமறை’ நூல்கள் முதல் பக்கம்
தூய தனித்தமிழுக்கு முக்கியத்துவம்
இன்று பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தமிழ் வேத மொழிபெயர்ப்பின் தமிழில் மாற்றங்கள் தேவை என்பதை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன் (தமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா?, திருமறைத்தீபம், இதழ் 4, 2012). அதில் எந்த சந்தேகமும் இல்லை. இருந்தபோதும் வேதமொழிபெயர்ப்பு என்று வரும்போது அதற்கு மட்டுமே முக்கியத்துவம் தரமுடியாது. இப்போது நாம் பயன்படுத்தும் தமிழ் மொழிபெயர்ப்பில் சமஸ்கிருதம் தழுவிய வார்த்தைகள் அதிகம் என்பதற்காக தனித்தமிழில் இந்த மொழிபெயர்ப்பைக் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார்கள். நல்ல தமிழ் வேறு, தனித்தமிழ் வேறு. நல்ல தமிழ் என்பது எல்லோராலும் இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தைகளையும், நடையையும் கொண்டமைந்தது. அதில் நிச்சயம் அந்நிய மொழிகளில் இருந்துவந்த அவசியமான வார்த்தைகள் இருக்கும். தூய தனித்தமிழ் மொழிக் கோட்பாடு எப்போதுமே சரியானதல்ல. அது அரசியலாகிவிட்டது தமிழகத்தில். எந்த மொழிகளிலுமே அந்நிய வார்த்தைகள் வந்து சேர்ந்திருக்கின்றன. அந்நிய வார்த்தைகளே இருக்கக்கூடாது என்று கூறுவது மொழியை வளர்ப்பதற்கு அறிகுறியல்ல; அந்நிய வார்த்தைகள் மொழி வளர்ச்சியின் அடையாளந்தான். தமிழில் அறவே வடமொழி வாடை இருக்கக்கூடாதென்று எண்ணுவது தவறு. வடமொழியில் இருந்து வந்து சேர்ந்துள்ள வார்த்தைகள் மொழிக்கு அழகூட்டுகின்றன. தூய தனித்தமிழை நாடியுள்ள இந்த மொழிபெயர்ப்பு ‘திருவிவிலியம்’ என்று தலைப்பைக் கொண்டிருப்பது ஆச்சரியந்தான். இதைவிட ‘பரிசுத்த வேதாகமம்’ எத்தனையோ மேல். திருவிவிலியம் என்பதைக் கிறிஸ்தவர்கள் பொதுவாகவே வழக்கத்தில் பயன்படுத்துவதில்லை.
இந்த மொழிபெயர்ப்பில் இலக்கிய நடை அதிகம். அதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பாடல் பகுதிகளையெல்லாம் தமிழ்க்கவிதை நடைக்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றியிருக்கிறார்கள். வேதம் வாசிக்கும் சாதாரண தமிழர்களெல்லாம் இலக்கிய ஆர்வம் கொண்டவர்களல்ல. இலக்கிய நடையைப் புரிந்துகொள்ள இலக்கியப் பரிச்சயம் இருக்க வேண்டும். அது தெரிந்தவர்கள் நம்மில் குறைந்த தொகையினரே. எல்லோராலும் இலகுவாக வாசித்துப் புரிந்துகொள்ள வேண்டிய வேதமொழிபெயர்ப்பில் இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது எல்லோரும் வாசிக்க முடியாதளவுக்கு வேதத்தை மாற்றிவிடும். அத்தோடு இலக்கிய நடைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது மூல மொழியில் சொல்லப்பட்டிருப்பதை உள்ளபடியே சொல்லுவதற்கும் தடை ஏற்படும். ‘வாயைத் திறந்து பேசினார்’ என்பதைத் ‘திருவாய் மலர்ந்தார்’ என்று இலக்கிய நடையில் பொது மொழிபெயர்ப்பில் எழுதியிருப்பதால் மூலமொழியில் சொல்லப்பட்டிருப்பதன் அழுத்தம் மறைந்துவிடுகிறது. இது தேவையற்றது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘பரத்தைமை’ என்ற இலக்கிய வார்த்தை பலரும் இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தையல்ல. பேருவகை (மத். 5:12) நல்ல வார்த்தைதான்; சாதாரண மக்களுக்கு சுலபமாகப் புரியுமா?
தெளிபொருள் மொழிபெயர்ப்பு (Dynamic Equivalence) அளவுக்குமீறிப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது
வேதமொழிபெயர்ப்பில் மூலமொழிகளில் காணப்படும் வார்த்தைகளும், வசனங்களும் எழுத்துபூர்வமாக உள்ளது உள்ளபடியே மொழிபெயர்க்கப்பட வேண்டும். இதை Formal Equivalence என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இதற்கு மாறானது, Dynamic Equivalence என்பதாகும். அதாவது, எழுத்துபூர்வமாக அல்லாமல் அன்றிருந்த வார்த்தைகளுக்கு இன்று புரிந்துகொள்ளக்கூடிய மொழியைப் பயன்படுத்துதலே இதன் அர்த்தமாகும் (தெளிபொருள் மொழிபெயர்ப்பு). வேதமொழிபெயர்ப்பில் எப்போதுமே ஓரளவுக்கு Dynamic Equivalence முறை பயன்படுத்தப்பட்டபோதும் அதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டதாக மொழிபெயர்ப்பு ஒருபோதும் அமையக்கூடாது. இந்த மொழிபெயர்ப்பு அளவுக்குமீறி Dynamic Equivalence க்கே பெருமுக்கியத்துவம் அளித்திருக்கிறது. எழுத்துபூர்வமாக மொழிபெயர்ப்பு இல்லாவிட்டால் மூலத்திலிருந்த வார்த்தைகளின் பொருளே போகப்போகக் காணாமல் போய் வேதம் தன்னுடைய தரத்தை இழந்துவிடும்.
வேத மொழிபெயர்ப்புக்கும் வேறு நூல்களை மொழிபெயர்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. வேதவார்த்தைகள் ஆவியினால் அருளப்பட்டவை; அவர் தெரிந்தெடுத்தே வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். அத்தோடு வார்த்தைகளில் இறையியல் உண்மைகள் ஆழமாகப் பொதிந்து காணப்படுகின்றன. அந்த இறையியல் உண்மைகள் மொழிபெயர்ப்பில் காணாமல் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இறையியல் தெரிந்த ஆவிக்குரிய மனிதர்களால் மட்டுமே இந்தப் பாதிப்பு மொழிபெயர்ப்பில் ஏற்படாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள முடியும்; கத்தோலிக்கர்களால் அது முடியாது. அத்தோடு வேதத்தை வேதமாக இருக்கும்படி மொழிபெயர்ப்பு இருக்கவேண்டும். அதை ஆழமாகக் கருத்தோடு படித்துப் புரிந்துகொள்ள வேண்டியது வேத மாணவனின் கடமை. வேத மொழிபெயர்ப்பு வேதவியாக்கியானத்தைப்போலவோ (Commentary), பொழிப்புரையாகவோ (Paraphrase) அமைந்துவிடக்கூடாது. அதாவது, வேதவிளக்கமாக இருந்துவிடலாகாது. அதனால்தான் எழுத்துபூர்வ மொழிபெயர்ப்பே மேலானது. இதையெல்லாம் இந்தப் பொது மொழிபெயர்ப்பு அலட்சியம் செய்திருக்கிறது.
பழகிப்போன வார்த்தைகளுக்கு புதிய வார்த்தைகள்
நாம் இப்போது பயன்படுத்தி வரும் தமிழ் வேதத்தை வாசித்து, வாசித்து அநேக வார்த்தைகள் கிறிஸ்தவர்களுக்கு பழகிவிட்டன. அத்தகைய வார்த்தைகளை மாற்றுவது அநாவசியச் செயல். உதாரணத்திற்கு விசுவாசம், பரலோகம், பரிசுத்தம், அப்போஸ்தலர் போன்ற வார்த்தைகளுக்கு இந்த மொழிபெயர்ப்பு மாற்று வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறது. இந்த வார்த்தைகளில் எதுவுமே வழக்கொழிந்து போனவையல்ல. விசுவாசத்தை ‘நம்பிக்கை’யாக மாற்றியிருக்கிறார்கள். அதை சொல்லிப்பார்க்கும்போதே எதையோ இழந்தது போலிருக்கிறது. இதை மாற்றியிருக்க வேண்டிய அவசியமில்லை.
‘ஜீவன்’ என்ற வார்த்தை எல்லோருக்குமே புரிவதுதான். ஜெயமோகனும் பயன்படுத்துகிற வார்த்தைதான். அதை ‘வாழ்க்கை’ என்றாக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல் ‘நித்திய’ என்ற வார்த்தையும் அனைவரும் அறிந்திருப்பதுதான். ‘நித்திய ஜீவன்’ என்று சொல்லுகிறபோதே அது தரும் அழுத்தமும், அழகும் இந்த மொழிபெயர்ப்பு பயன்படுத்தியிருக்கும் ‘நிலை வாழ்வில்’ தெரிவதாக இல்லை. நித்திய வாழ்வு என்று மாற்றியிருந்தாலாவது நன்றாயிருக்கும். சித்தம் இதில் ‘திருவுளம்’ ஆக மாறியிருக்கிறது. ‘சாட்சி’ சான்றாக மாறியிருக்கிறது. இன்றைக்கும் ‘சாட்சி’ என்ற வார்த்தையை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம்.
வேசித்தனம், விபச்சாரம் இரண்டுமே சில இடங்களில் ‘பரத்தைமை’ என்று மாற்றப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தையைப் புரிந்துகொள்ள டிக்ஷனரியைத் தேடவேண்டும். சாதாரணமாகப் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தைகள் வேறு எத்தனையோ தமிழில் இருக்கின்றன. இது இலக்கியத் தமிழ். பொதுவாக எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தை அல்ல. வேதம் சரீர ஒழுக்கக்கேடான உறவை விளக்க ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது. அவற்றில் இரண்டு முக்கியமானவை. மணவாழ்க்கைக்கு வெளியில் இருக்கக்கூடிய சகல ஆண், பெண் உறவுகளையும் fornication (porneia – in Greek) குறிக்கிறது. திருமணம் செய்தவர்கள் மணவாழ்க்கைக்கு வெளியில் ஈடுபடும் ஒழுக்க உறவுகளை adultery (Moikos – in Greek) என்ற வார்த்தை குறிக்கிறது. இந்த இரண்டும் காரணத்தோடேயே மூலமொழியில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டையுமே ‘பரத்தைமை’ என்று இந்தப் புதிய மொழிபெயர்ப்பு சில இடங்களில் மொழிபெயர்த்திருக்கிறது.
வேதம் வாசிக்கும் பெரும்பாலான மக்கள் இலக்கியம் அறியாதவர்கள். இலக்கிய வார்த்தைகளைத் தேடிப் பயன்படுத்துவதைவிட எந்த வார்த்தை பொதுவாக மக்களுக்கு புரியக்கூடியது என்பதை மொழிபெயர்ப்பில் கவனிக்கவேண்டும். பொதுவாக இதுவரை கிறிஸ்தவர்கள் பயன்படுத்தி வந்திருக்கும் தெரிந்த, பரிச்சயமான வார்த்தைகளை இம்மொழிபெயர்ப்பில் கண்மூடித்தனமாக மாற்றியிருப்பது புதிதாக ஏதோவொரு நூலை வாசிக்கிறோம் என்ற உணர்வைத்தான் தருகிறதே தவிர வேதத்தை வாசிக்கிறோம் என்ற உணர்வையல்ல.
அப்போஸ்தலர்கள் இதில் ‘திருத்தூதர்களாக’ மாறியிருக்கிறார்கள். யோவானுக்கு ‘அருளப்பர்’ பட்டம் சூட்டப்பட்டிருக்கிறது. வேத பாரகர் ‘மறைநூல் அறிஞர்கள்’ ஆகியிருக்கிறார்கள். இதெல்லாம் கத்தோலிக்கர்கள் பயன்படுத்தி வருகின்ற வார்த்தைகள். அப்போஸ்தலர்கள் என்பதற்கு ‘திருத்தூதர்கள்’ என்பது சரியான மொழிபெயர்ப்பு இல்லை. அப்போஸ்தலர்கள் என்ற வார்த்தையின் மூலக் கருத்து ‘அனுப்பப்பட்டவர்கள்’ என்பதே. அப்போஸ்தலர் என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையில் இருந்து ஒலியமைப்புப்படி தமிழில் ஒலிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தாலும் அதில் தவறில்லை. அதற்கு மாற்று வார்த்தை தேடவேண்டிய அவசியமில்லை. இந்தவகையில் தமிழில் எத்தனையோ வார்த்தைகள் வழக்கத்தில் இருக்கின்றன. மிஷனரி என்ற இலத்தீன் மொழியில் இருந்து வந்த வார்த்தை இப்படிப்பட்டதுதான். இதையெல்லாம் சுத்தத் தமிழாக்க முயல்வது அசட்டுத்தனம். திமுக ஒரு காலத்தில் தூய தனித்தமிழ் ஆர்வக்கோளாரால் ‘இராஜாஜியை’ ‘இராச்சாசி’ என்று எழுதியது. இதெல்லாம் தமிழாக்கமல்ல; நடைமுறைக்கே அப்பாற்பட்ட செயல்.
வேத நூல்களுக்கு வழக்கமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ள தலைப்புகளில் பல மாற்றப்பட்டிருப்பதும் அநாவசியமானது. ‘ஆகமம்’ என்ற வார்த்தையில் என்ன தவறு? அது புரிந்துகொள்ளக்கூடிய இன்றும் பயன்படுத்தப்பட்டு வரும் பதந்தான். ஆதியாகமத்தை ‘தொடக்கநூல்’ என்று மாற்றியிருப்பது தேவையற்றது. நிருபம் என்ற வார்த்தை ‘திருமுகம்’ என்று மாற்றப்பட்டிருக்கிறது. நிருபமாவது என்னவென்று நமக்குத் தெரியும். திருமுகம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நிருபம் என்றால் கடிதம். கடிதம் ஏன் திருமுகமாக மாறவேண்டும்? இந்தவகையில் தூயதமிழை நாடியிருப்பது அவசியமற்றது. நியாயாதிபதிகள் என்று வாசித்துப் பழகிப்போன நமக்கு இந்த மொழிபெயர்ப்பில் அதை ‘நீதித் தலைவர்கள்’ என்று வாசிக்க வேண்டியிருக்கிறது. நீதித்தலைவர்கள் என்று வழமையாக பேச்சிலோ எழுத்திலோ யாரையும் நாம் குறிப்பிடுவதில்லையே. வார்த்தைகள் பரிச்சயமானதாக, புரிந்துகொள்ள இலகுவாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு மொழிபெயர்ப்பு செய்தால் வழக்கத்தில் சாதாரணமாக நாம் பயன்படுத்தாத வார்த்தைகளைப் புகுத்தக்கூடாது.
தேவன் என்ற பதம் இந்த மொழிபெயர்ப்பில் ‘கடவுள்’ என்றிருக்கிறது. தேவகுமாரன் என்ற பதம் ‘இறைமகன்’ என்று மாற்றப்பட்டிருக்கிறது. கடவுளின் பெயர்களில் மாற்றம் கொண்டுவந்திருப்பது கிறிஸ்தவ திருச்சபைகளுக்கு பிடிக்கவில்லை. அந்தப் பிரச்சனை வேதமொழிபெயர்ப்பில் ஆரம்பத்திலேயே இருந்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் கடவுள் என்ற வார்த்தையைக் கர்த்தருக்குப் பயன்படுத்துவதில் தப்பில்லை. மேல்நாட்டு மிஷனரிகள் நம்நாட்டுக்கு வந்தபோது பொதுவாக மக்கள் பயன்படுத்திய வார்த்தையான ‘கடவுள்’ என்பதை அவர்கள் பயன்படுத்த விரும்பவில்லை. அதைப் பிறமத வார்த்தையாக அவர்கள் கருதினார்கள். உண்மையில் கடவுள் என்ற வார்த்தை இந்துக் கடவுள்களை மட்டும் குறிக்கும் வார்த்தையல்ல. எல்லாவற்றையும் கடந்து நிற்கும் தனிப்பெருங் கடவுளை அது குறிக்கிறது. பராபரன், தம்பிரான், சர்வேசுவரன் என்ற பதங்களெல்லாம் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டு இன்று வழக்கொழிந்து போய்விட்டன. ஆறுமுகநாவலர் அறிமுகப்படுத்திய வார்த்தை ‘தேவன்’ என்று அறிகிறேன். அதுவே இன்று பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தமிழ் வேதத்தில் இருக்கிறது. இந்த மொழிபெயர்ப்பில் தேவகுமாரன் என்பது ‘இறைமகனாக’ மாற்றப்பட்டிருக்கிறது. தீர்க்கதரிசிகளுக்கு இதில் ‘இறைவாக்கினர்’ என்ற பெயரளிக்கப்பட்டிருக்கிறது. நியாயப்பிரமாணம் இதில் ‘திருச்சட்டம்’ என்று மாற்றப்பட்டிருக்கிறது. இத்தகைய அதிரடி மாற்றங்கள் அவசியமில்லாதது என்பது என் கருத்து.
முக்கியமாக ‘பிரசங்கம்’ என்ற வார்த்தையை எடுத்துக்கொள்ளுவோம். பொதுமொழிபெயர்ப்பில் அது ‘அறிவிப்பு’ என்று மாற்றப்பட்டிரு¢கிறது (ரோமர் 10:14-15). இது சரியான ஆய்வு இல்லாமல் செய்யப்பட்ட வார்த்தை மாற்றம். பிரசங்கம் என்பது மூல மொழியான கிரேக்கத்தில் அதிகாரத்தோடு ஆண்டவரின் செய்தியை ஆணித்தரமாக சொல்லுவது என்ற அர்த்தத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது (Kerusso-Greek). ஆங்கிலத்தில்கூட அதற்கு Preaching என்ற வார்த்தையையே தெரிந்து பயன்படுத்தியிருக்கிறார்கள். வெறுமனே speach, talk, lecture, communication என்ற வார்த்தைகளெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. பிரசங்கம் என்ற வார்த்தையில் இருக்கும் தொனியும், அழுத்தமும் ‘அறிவிப்பில்’ வெளிவரவில்லை. பிரசங்கம் என்பது இன்று வழக்கொழிந்துபோன வார்த்தையல்ல; கிறிஸ்தவர்களுக்கு நன்கு பரிச்சயமான வார்த்தை. கிறிஸ்தவரல்லாதவர்களும் இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தைதான். அதைத் தவிர்த்திருப்பது சரியல்ல.
இதுவரையிலும் பரிச்சயமான பகுதிகள் அந்நியமாய்த் தெரிதல்
தமிழ் வேதத்தை வாசித்து சில முக்கியமான பகுதிகள் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் பரிச்சயமான பகுதிகளாகியிருக்கின்றன. உதாரணத்திற்கு மலைப்பிரசங்கத்தில் பாக்கியவான்கள் பகுதி, ஆண்டவரின் ஜெபம், பத்துக்கட்டளைகள் போன்றவை. ஆங்கில வேத மொழிபெயர்ப்பு செய்கிறவர்கள்கூட இந்தப் பகுதிகளைக் கூடுமானவரை அதிகம் மாற்ற முயலுவதில்லை. பொது மொழிபெயர்ப்பு இவற்றை அடியோடு மாற்றியிருக்கின்றது. அவற்றை வாசிக்கும்போது வித்தியாசமான எதையோ வாசிப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. இவற்றை இந்தளவுக்கு மாற்றியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. பாக்கியவான்கள் ‘பேறுபெற்றோர்’ ஆகியிருக்கிறது. தூய தமிழ் ஆர்வம் மொழிபெயர்ப்பாளர்களை அளவுக்கு மீறிய எழுத்து நடைக்கு இட்டுப்போயிருக்கிறது.
தவறான மொழிபெயர்ப்புக்கு உதாரணங்கள்
இந்தப் பொது மொழிபெயர்ப்பில் இதுவரை நாம் பார்த்து வந்திருப்பவை பாரதூரமான மாற்றங்களாக இருப்பினும் இவற்றில் காணப்படும் மொழிபெயர்ப்புத் தவறுகள் அவற்றையும்விடப் பாரதூரமானவை. நூல் முழுவதும் பல்வேறு இடங்களில் மொழிபெயர்ப்பில் தவறுகளும், இறையியல் போதனை மாற்றங்களும் காணப்படுகின்றன. இதில் நீங்கள் வாசிக்கப்போகும் உதாரணங்கள் நான் தேடித் தேடித் தெரிந்தெடுத்தவை. எந்தளவுக்கு இந்தப் பொதுமொழிபெயர்ப்பு மோசமானது என்பதை எடுத்துக்காட்ட இவையே போதும்.
2 கொரி 5:21, தவறான மொழிபெயர்ப்பு. ‘நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படி’ என்றிருக்க வேண்டியது ‘தமக்கு ஏற்புடையவராகுமாறு’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் Righteousness of God என்றிருப்பதில் காணப்படும் ‘தேவநீதி’ இந்த மொழிபெயர்ப்பில் அகற்றப்பட்டிருக்கிறது. இந்த வசனத்தில் அது மிகப்பெரிய போதனை. எப்படிப் பாவமில்லாத இயேசு நமக்காகப் பாவமானாரோ அதேபோல் நீதியற்ற நாம் அவருக்குள் தேவநீதியாகிறோம் என்பதுதான் இந்த வசனம் போதிக்கும் உண்மை. இந்தப் பொதுமொழிபெயர்ப்பு அதை வெளிக்கொணராததால் மொழிபெயர்ப்பில் பெரும் இறையியல் தவறு நிகழ்ந்திருக்கிறது. கத்தோலிக்கர்கள் இந்த மொழிபெயர்ப்பில் சம்பந்தப்பட்டிருப்பதால் இது தெரிந்தே செய்யப்பட்டதாகவும் இருக்கலாம்.
அதேபோல் கலாத்தியர் 5லும் Righteousness, Justify எனும் பதங்களுக்கு ‘ஏற்புடைய’ என்ற வார்த்தையையே இந்த மொழிபெயர்ப்பு பயன்படுத்தியிருக்கிறது. இதேவிதத்தில்தான் ரோமர் 4ம் அதிகாரத்திலும் ‘ஏற்புடைய’ என்ற பதத்தைப் பயன்படுத்தி இந்த மொழிபெயர்ப்பு ‘விசுவாசத்தினால் நீதிமானாகுதல்’ என்ற போதனையின் வலிமையைக் குறைத்து அதை பலவீனப்படுத்தியிருக்கிறது. விசுவாசத்தினால் நீதிமானாகுதல் என்ற போதனை வேதத்தின் அடிப்படைப் போதனைகளில் ஒன்று. ரோமன் கத்தோலிக்க மதத்தில் இருந்து வேறுபட்டதாக கிறிஸ்தவம் இருப்பதற்கும் இந்தப்போதனைதான் முக்கிய காரணம். அந்தப் போதனையை இந்த மொழிபெயர்ப்பு அலட்சியப்படுத்தியிருக்கிறது. அதற்கு ஒரு காரணம் மூல வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மொழிபெயர்க்காதது. அடுத்த காரணம் இறையியல் போதனைகளுக்கு முக்கியத்துவம் தராதது. இன்னொரு முக்கிய காரணம் நீதிமானாகுதல் போதனை பற்றி கிறிஸ்தவ வேதம் போதிக்கும் உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் அதுபற்றி செயற்கையான போதனையைப் பின்பற்றும் கத்தோலிக்கர்கள் இந்த மொழிபெயர்ப்பில் சம்பந்தப்பட்டு நீதிமானாகுதல் போதனையைத் திரிபுபடுத்தியிருப்பது. கத்தோலிக்கர்கள் விசுவாசத்தினால் நீதிமானாகுதல் என்ற போதனையை ஏற்றுக்கொள்ளுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் கத்தோலிக்க மதமே ஒருவரை நீதிமானாக்குகிறது. அந்த அடிப்படையிலேயே அவர்கள் ஞானஸ்நானம் ஒருவரை நீதிமானாக்குவதாகவும், ஒவ்வொருமுறை மாஸ் நிகழும்போதும் அதில் பங்குகொள்ளுகிறவர்கள் நீதிமான்களாவதாகவும் நம்புகிறார்கள். இது போலிப்போதனை. கிறிஸ்தவ வேதமோ விசுவாசம் மட்டுமே ஒருவரை நீதிமானாக்குகிறது என்று விளக்குகிறது (ரோமர் 1:17).
மத்தேயு 5:12ல் ‘விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்’ என்று இந்தப் பொதுமொழிபெயர்ப்பில் இருக்கிறது. நாம் பயன்படுத்திவரும் வேதத்தில் ‘பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்’ என்றிருக்கிறது. ‘பலன்’ என்ற வார்த்தை பொதுமொழிபெயர்ப்பில் ‘கைம்மாறு’ என்று மாற்றப்பட்டிருக்கிறது. கைம்மாறு என்பதற்குப் பொருள் நன்றிக்கடன், பிரதிபலன், பதில் உதவி, பிரதியுபகாரம் என்று பலவிதங்களில் சொற்பொருளகராதி விளக்குகிறது. ஆங்கிலத்தில் இதற்கு making a return for favours என்று அர்த்தம். இந்த இடத்தில் மூலமொழியிலிருந்த வார்த்தை ஆங்கிலத்தில் reward என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதை வெகுமதி, பலன் என்று தமிழில் மொழிபெயர்க்கலாம். வெகுமதி வேறு கைம்மாறு வேறு. இந்த உலகில் நீங்கள் துன்புறுத்தப்பட்டால் அதை எண்ணிக் கலங்காதீர்கள்; விண்ணுலகில் உங்களுக்கு அதற்கான பலன் (வெகுமதி) கிடைக்கும் என்பதை இந்தப் பகுதி போதிப்பது. ‘கைம்மாறு’ என்ற வார்த்தை இங்கு சரியான மொழிபெயர்ப்பில்லை. கைம்மாறு என்ற பதத்தை, யாரோ நமக்குச் செய்ய ஒன்றிற்கு நாம் பதிலாக ஏதாவது செய்வது என்ற பொதுவான அர்த்தத்திலேயே நாம் பயன்படுத்துகிறோம். அது இந்த இடத்தில் ஒத்துவராது. அத்தோடு ‘கைம்மாறு’ என்பது இந்த இடத்தில் இறையியல்பூர்வமாகவும் பொருந்தி வராது. வேத இறையியலின்படி கர்த்தர் நமக்களிக்கும் இந்த ‘பலன்’ அல்லது ‘வெகுமதி’ நம்மில் தங்கியிருக்கும் எதனாலுமோ அல்லது நம்முடைய செயல்களின் அடிப்படையிலோ தரப்படுவதல்ல. கத்தோலிக்கர்கள் இந்தப் பொதுமொழிபெயர்ப்பில் ஆழமாக பங்குபெற்றிருப்பதால் அவர்களுடைய போதனைகளை இங்கு திணிக்கிறார்களோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. அவர்களைப் பொறுத்தவரையில் இந்த உலகத்தில் அவர்கள் படுகின்ற பாடுகளுக்கும், செய்கின்ற செயல்களுக்கும் ஏற்றளவிலேயே எந்த விண்ணுலக ஆசீர்வாதமும் கிடைக்கும். கர்த்தரில் வைக்கும் விசுவாசத்தை கிரியை மூலம் அடைவதாகவே அவர்கள் போதிக்கிறார்கள். மனிதனின் கிரியைகளை அடிப்படையாகக் கொண்டே அவர்களுடைய சகல மதபோதனைகளும் அமைந்திருக்கின்றன. அந்தப் போதனையைப் பிரதிபலிக்க ‘கைம்மாறு’ என்ற பதம் இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
அதேபோல் மத்தேயு 5:3-11வரையிலும் இதுவரை இருந்த வார்த்தையான ‘பாக்கியவான்கள்’, பேறுபெற்றவர்கள் என்று மாற்றப்பட்டிருக்கிறது. பாக்கியவான்கள் வேறு, பேறுபெறுதல் வேறு. பாக்கியவான்கள் என்ற வார்த்தை blessed என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் வடிவம். கிரேக்கம் Makarios என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறது. இதற்கு அடிப்படை அர்த்தம் ‘மகிழ்ச்சி’ என்பதே. அதிகளவுக்கு ஆவிக்குரியவிதத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பது இந்த வார்த்தைக்கான விரிவான விளக்கம். பாக்கியவான் என்பது சரியான மொழிபெயர்ப்பு, வடமொழி தழுவியதாக இருந்தபோதும், பேறுபெற்றவன் என்பது அந்த அர்த்தத்தைக் கொண்டுவரவில்லை. ‘பேறு’ என்பதற்கு பயன், தகுதி, வரம், வாய்ப்பு, இலாபம், கொடை, செல்வம் என்று பல பொருள்கள் இருக்கின்றன. பேறு என்ற இந்த வார்த்தையில் ஆவிக்குரிய மகிழ்ச்சிக்கோ, ஆசீர்வாதத்திற்கோ இடமில்லை.
1 யோவான் 2:2 லும் மொழிபெயர்ப்பு தவறானதாக இருக்கிறது. ‘நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே’ என்றிருக்கிறது. இந்தக் ‘கழுவாய்’ என்ற பதம் Propitiation என்ற ஆங்கில வார்த்தையில் பொதிந்திருக்கும் ‘தேவ கோபத்தை நிவர்த்தி செய்தல்’ என்ற இறையியலுண்மையை மறைத்துவிடுகிறது. ‘கழுவாய்’ என்ற பதம் பாவத்தைக் கழுவுதல் என்ற அர்த்தத்தை மட்டுமே கொடுக்கிறது. இதுவும் மொழிபெயர்ப்பில் காணப்படும் இறையியல் தவறை சுட்டிக் காட்டுகிறது.
1 கொரிந்தியரில் (12-14) விளக்கப்படும் அந்நியபாஷை இந்த மொழிபெயர்ப்பில் ‘பரவசப் பேச்சு’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இது tongues என்ற ஆங்கில பதத்தின் சரியான மொழிபெயர்ப்பல்ல. மூல மொழியான கிரேக்க மொழியிலும் ‘அந்நியபாஷை’ அல்லது ‘அந்நிய மொழி’ என்ற அர்த்தமே இருக்கிறது. பரவசப் பேச்சு என்ற மொழிபெயர்ப்பு தெளிபொருள் மொழிபெயர்ப்பு முறையால் ஏற்பட்ட தவறு. அது பரவச நிலையில் பேசுகின்ற பேச்சு என்ற அர்த்தத்தையே தருகிறது. இதில் அந்நிய மொழி என்ற பொருள் அறவே இல்லை; இது வேத அர்த்தத்தையே மாற்றிவிடுகிறது.
கலாத்தியர் 5:1ல் பவுல் நம்மை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்து ‘சுயாதீன நிலைமையை’ அல்லது சுதந்திரத்தைத் தந்திருக்கிறார் என்று விளக்குகிறார். சுயாதீனம் என்பதை இந்த மொழிபெயர்ப்பு ‘உரிமை’ என்று மாற்றியிருக்கிறது. சுயாதீனம், உரிமையல்ல. உரிமை எனும் பதம் நமக்கு எதன்மீதாவது இருக்கும் சொந்தத்தையும், அதிகாரத்தையும் குறிக்கிறது; அதுவல்ல பரிசுத்த ஆவி பவுல் மூலம் இங்கே விளக்குவது. நமக்குத் தரப்பட்டிருக்கும் ‘விடுதலையை’ அவர் விளக்குகிறார். இந்த இடத்தில் இந்த மொழிபெயர்ப்பு தேவைக்கதிகமான உரிமையைப் பயன்படுத்தி பரிசுத்த ஆவி மூலமொழியில் சொன்ன கருத்தையே மாற்றிவிடுகிறது.
யோவான் 2:4ல் தன் தாயான மேரியைப் பார்த்து இயேசு, ‘பெண்ணே’ (ஸ்திரீயே) என்று அழைத்தார். Woman என்றே ஆங்கிலத்திலும் இருக்கிறது. மூல மொழியான கிரேக்கத்தில் பெண் என்றிருப்பதை இம்மொழிபெயர்ப்பு ‘அம்மா’ என்று மாற்றியிருக்கிறது. அடிக்குறிப்பில் ‘தாய் என்ற பொருளில் அல்ல பெண்களை மதிப்புடன் குறிக்கும் பொருளில் கையாளப்பட்டுள்ளது’ என்று விளக்கப்பட்டிருக்கிறது. இது அநாவசியச் செயல். மொழிபெயர்ப்பாளரின் வேலையல்ல இது; வாசகன் ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டியது. மொழிபெயர்ப்பில் ‘பெண்ணே’ என்றே இருந்திருக்க வேண்டும். அதை மொழிபெயர்ப்பாளன் தான் புரிந்துகொண்டிருக்கும் விதத்தில் மரியாதை வார்த்தையாக மாற்ற உரிமையில்லை. அது வேதத்தை பலவீனப்படுத்தும் செயல்.
1 கொரிந்தியர் 7:1ல். ‘ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது’ என்று நாம் பயன்படுத்துகிற வேதத்தில் இருக்கிறது. அதிலிருக்கும் ‘மனுஷனுக்கு’ என்ற வார்த்தையை இந்த மொழிபெயர்ப்பு கைவிட்டுவிட்டது. நிச்சயமாக அது ஆண்களைத்தான் குறித்துச் சொல்லப்படுகிறது என்பதை அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிற பகுதியை வாசிக்கும்போது புரிந்துகொள்ளுகிறோம். இருந்தபோதும் இந்த வார்த்தை இந்த இடத்தில் தவிர்க்கப்பட்டிருக்கக்கூடாது. மூல மொழியில் காணப்படும் இந்த வார்த்தையை, அதுவும் இந்தப் பகுதி போதிக்கும் விஷயத்துக்கு அவசியமான வார்த்தையைத் தவிர்த்த காரணமென்ன?
1 கொரிந்தியர் 7:9ல், உணர்ச்சிகளால் எரிவதைவிட (than to burn) என்ற அர்த்தத்தில் காணப்படும் வார்த்தைகளை ‘காமத்தீயால்’ உருகுவதைவிட என்ற வார்த்தைகள் மூலம் தெளிபொருள் விளக்கம் (Dynamic equivalence) கொடுக்கப்பட்டுள்ளது. இது அவசியமில்லாதது. அந்தப் பகுதி இதைத்தான் விளக்குகிறது என்ற முடிவுக்கு வரவேண்டியது வாசிக்கிறவர்களே தவிர மொழிபெயர்ப்பாளனல்ல.
மத்தேயு 5:2ல், ‘அவர் தம் வாயைத்திறந்து அவர்களுக்கு உபதேசித்து சொன்னது’ என்று மூலமொழியிலும் ஆங்கிலத்திலும் இருப்பது சரியாகவே நாம் தற்போது பயன்படுத்தி வருகிற மொழிபெயர்ப்பில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதை இந்த மொழிபெயர்ப்பு ‘அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை’ என்று மாற்றியிருக்கிறது. இதில் என்ன தவறு? நன்றாய்த்தானே இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். வாசிப்பதற்கு நல்ல இலக்கியநடைதான். ஆனால், இங்கு இலக்கிய நடைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதுதான் தவறு. ‘வாயைத் திறந்து’ என்பதற்கும் ‘திருவாய் மலர்ந்து’ என்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. வேதம் வாய் என்ற பதத்தை மட்டுமே பயன்படுத்தியிருக்க, பேசியவர் இயேசு என்பதற்காக ‘திருவாய்’ என்று மாற்றியிருப்பது சரியல்ல. இது வழக்கமாக இந்து தெய்வங்களுக்கும், இந்துப் பெரியவர்களுக்கும் பயன்படுத்தப்படும் வார்த்தை. கிறிஸ்தவ வேதத்தில் ஆண்டவராகிய இயேசுவைக்குறித்து இந்த வார்த்தையைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அத்தோடு இதெல்லாம் சாதாரணமாக செய்யுள் அல்லது கவிதை எழுத உதவும்; வேதமொழிபெயர்ப்புக்கு உதவாது. அடுத்ததாக ‘மலர்ந்து’ என்ற வார்த்தை ‘திறந்து’ என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு இல்லை. பூ மலர்ந்தது என்றால், அதற்கு ‘பூ பூத்தது’, ‘பூ விரிந்தது’ என்றெல்லாம் பொருள்கொள்ளலாம். ‘மலர்ந்து’ என்ற வார்த்தை தெளிவான அர்த்தத்தைக் கொடுப்பதாக இல்லை. வாயைத் திறந்து, என்று மூல மொழியில் காரணத்தோடுதான் எழுதப்பட்டிருக்கிறது. அதாவது, அவர் குரலை உயர்த்திப் பிரசங்கம் செய்தார் என்பதை அது உணர்த்துகிறது. அந்த நோக்கத்தைப் புரிந்துகொள்ள ‘மலர்ந்து’ என்ற வார்த்தை உதவவில்லை. இந்த இலக்கிய நடை வேதமொழிபெயர்ப்பில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
மத்தேயு 6ல், ஆண்டவருடைய ஜெபத்தில் ‘எங்கள் கடனாளிகளுக்கு’ என்றிருந்ததை ‘எங்களுக்கு எதிராக குற்றஞ் செய்தோரை’ என்று இந்த மொழிபெயர்ப்பு மாற்றியிருக்கிறது. ஆங்கிலத்தில் இந்த வார்த்தை debt என்றிருக்கிறது. இதற்கு ‘கடன்’ என்பதே பொருள். இதை இந்தப் பொதுமொழிபெயர்ப்பு ‘குற்றம்’ என்று தேவையில்லாமல் மாற்றியிருக்கிறது. கடனுக்கும் குற்றத்துக்கும் வித்தியாசம் தெரியாமலா மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்? தெளிபொருள் மொழிபெயர்ப்பு இவர்களை இந்தளவுக்கு வேதத்தை மாற்றி எழுத வழிநடத்தியிருக்கிறது. மத்தேயு 5:13ம் வசனத்தில் ‘தீமை’ என்றிருந்ததை அநாவசியத்துக்கு ‘தீயோன்’ என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
நாம் பயன்படுத்தி வரும் தமிழ் வேதத்தில் ஆதியாகமம் 2:24ல், ‘இதனிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு,’ என்றிருக்கிறது. இங்கே ‘புருஷன்’ என்ற வடமொழி வார்த்தைக்கு ‘மனுஷன்’ என்பதே பொருள். ஒருவனை ‘சௌந்தர்யபுருஷன்’ என்றால் அவன் அழகானவன் என்று அர்த்தம். புருஷன் என்பதற்கு வழக்கில் கணவன் என்ற அர்த்தமும் உண்டு. இருந்தாலும் மூலமொழியான கிரேக்கத்தில் ‘Man’ என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பொதுமொழிபெயர்ப்பு அதைக் ‘கணவன்’ என்று தவறாக மொழிபெயர்த்திருக்கிறது. இது அவசியமற்றது. காரணத்தோடுதான் மூலமொழியில் அது மனிதன் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இருபாலாருக்குமான பொதுவான வார்த்தைகள் மாற்றப்பட்டிருக்கின்றன
ஆண், பெண் வித்தியாசமில்லாமல் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகள் வேதத்தில் இருக்கின்றன. அவை முக்கியமான காரணங்களுக்காகப் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதை முற்றாக ஒதுக்கிவைத்துவிட்டு இந்தப் புதியமொழிபெயர்ப்பு Inclusive language அல்லது Gender-inclusive language எனும் முறையைப் பின்பற்றுகிறது. உதாரணத்திற்கு கலாத்தியர் 6:1, ‘சகோதரரே’ என்றிருக்கிறது. இது பொதுவான வார்த்தை; ஆண், பெண் இருபாலாரையும் குறிக்கும் வார்த்தை. ஆங்கில வேதத்தில் Brethren என்றிருக்கும். இந்த மொழிபெயர்ப்பு இதை ‘சகோதரரே, சகோதரியே’ என்று மாற்றியிருக்கிறது. இதுவும் வேத மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரையில் அநாவசியமானது. ஏன் தெரியுமா? வேதத்தை உள்ளது உள்ளபடி எழுத்துபூர்வமாக மொழிபெயர்ப்பதே (translation) மொழிபெயர்ப்பாளனின் கடமை. அதை நமக்கு விளக்குவதல்ல (interpretation). மொழிபெயர்ப்பாளன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மொழிபெயர்ப்பை மட்டுமே செய்யவேண்டும். வேதத்தை வாசிக்கிறவர்களுடைய பணியே அதற்குரிய விளக்கத்தை ஆராய்ந்து பார்த்து பெற்றுக்கொள்ளுவது. மொழிபெயர்ப்பு வியாக்கியானமாகவோ, பொழிப்புரையாகவோ மாறினால் அது வேதமாக இருக்காது. அந்தத் தவற்றை இந்த மொழிபெயர்ப்பில் எங்கும் பார்க்க முடிகிறது.
இதில் மிகவும் ஆபத்தான மொழிபெயர்ப்பை ஆதியாகமத்தில் காண்கிறோம். ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்கள் (1-3) கர்த்தருடைய படைப்பின் செயல்களை விளக்குகின்றன. படைப்பில் (Creation) கர்த்தர் செய்த காரியங்களில் அரும்பெரும் இறையியல் அம்சங்கள் பொதிந்து காணப்படுகின்றன. வேதத்தின் ஏனைய பகுதிகளில் தரப்பட்டுள்ள மனித குலம் மற்றும் ஆண், பெண் பற்றிய போதனைகள் எப்போதும் ஆதியாகமம் முதல் மூன்று அதிகாரங்களில் படைப்பில் கர்த்தர் ஏற்படுத்தியுள்ள வழிமுறைகளை ஆதாரமாகக் கொண்டே விளக்கமளிக்கின்றன. இந்தப் புதிய மொழிபெயர்ப்பு ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்களில் மொழிபெயர்ப்பை மாற்றியமைத்திருக்கிறது. இது பலவிதமான இறையியல் கோளாறுகளுக்கு இடங்கொடுத்துவிடுகிறது. மொழிபெயர்ப்பாளர்கள் இதைத் தெரிந்தே செய்திருக்கிறார்கள். பெண்ணியவாதிகளைத் (Feminism) திருப்திப்படுத்தும் நோக்குடனும், ஆண், பெண் சமத்துவம் கருதியும் தற்காலப் பண்பாட்டுப் போக்கின் அடிப்படையில் மூலமொழியில் இருந்தவற்றை மாற்றி மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு, மனிதனைக் கர்த்தர் படைத்தவிதத்தை ஆதியாகமம் 1:26-27லும், 2:7-8லும், 2:15-27லும், 5:1-2லும் காண்கிறோம். இந்தப் பகுதிகளில் ஆதியாகமம் 1:26-27லும், 5:1-2லும் இதுவரையிலும் ‘தேவன் மனுஷனை சிருஷ்டித்தார்’ என்றே இருந்தது. அதுவே சரியான மொழிபெயர்ப்பு. மூலமொழியில் அவ்வாறே இருக்கிறது. மனுஷன் என்பதற்கு ‘ஆதாம்’ என்ற எபிரெய வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மனுஷன் என்று இந்த வார்த்தை இருந்தபோதும் இது மனிதகுலத்தைக் குறிக்கின்ற வார்த்தை என்பதை அந்த இருபகுதிகளும் சுட்டிக்காட்டுகின்றன. உதாரணமாக, ஆதி 1:27ல், ‘தேவன் மனுஷனைச் சிருஷ்டித்தார். அவனை தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும், பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார்’ என்றிருக்கிறது. இதேமுறையில்தான் ஆதி 5:1-2ம் விளக்குகிறது. ‘தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாகவே உண்டாக்கினார். அவர்களை ஆணும், பெண்ணுமாகச் சிருஷ்டித்து . . .’ என்றிருக்கிறது. இது சரியான மொழிபெயர்ப்பு; காரணத்தோடுதான் இந்தவிதத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. பொதுமொழிபெயர்ப்பு இந்த இடங்களிலெல்லாம் மனுஷனை (Man-Adam) என்பதை ‘மானுடரை’ என்று ஆதி 1:26-27லும், ‘மானிடரை’ என்று 5:1-2லும், ஒருமையில் இதுவரை இருந்ததைப் பன்மையில் மாற்றியிருக்கிறது. இதை இவர்கள் செய்திருப்பதற்கான காரணம் பெண்ணிய சார்பும், ஆண், பெண் சமத்துவக் கோட்பாடுந்தான். அது இந்தப் பொதுமொழிபெயர்ப்புத் தத்துவத்திலேயே விளக்கப்பட்டிருக்கிறது. ‘இருபாலார்க்கும் பொதுவான கருத்துகள் மூல நூலில் ஆண்பால் விகுதிபெற்று வந்தாலும் இருபாலார்க்கும் பொருந்தும் முறையில் (Inclusive language) தமிழ் விவிலியத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு மூலமொழியிலும், தமிழ் மொழியிலும் காணப்படும் பண்பாட்டு ஏற்றத்தாழ்வு களையப்பட்டு, சமத்துவ உணர்வு வெளிப்படுகிறது’ என்கிறது இந்தப் பொது மொழிபெயர்ப்புத் தத்துவம் (தமிழ் விவிலியம், விக்கிப்பீடியா). இந்தக்கூற்றில் முக்கியமானதொன்றைக் கவனிக்க வேண்டும். ‘மூலமொழியில் காணப்படும் பண்பாட்டு ஏற்றத்தாழ்வுகள் களையப்பட்டு’ என்றிருப்பதைக் கவனியுங்கள். ஆகவே, இவர்களே ஒத்துக்கொள்கிறார்கள், இது மொழிபெயர்ப்பு மட்டுமல்ல; மூலமொழியில் இருப்பதை இஷ்டத்துக்கு மாற்றியிருக்கிறார்கள் என்பதை. கலாச்சார மாற்றத்துக்கேற்றவகையில் மூலமொழியில் இருப்பது அடியோடு மாற்றப்பட்டிருக்கிறது. இது வேதமொழிபெயர்ப்புத் தத்துவங்களுக்கெல்லாம் முற்றிலும் விரோதமானது; கர்த்தரின் வேதத்திலேயே குறைகாணும் அடிப்படை முரண்பாட்டை இதில் காண்கிறோம். வேதத்தில் மூலமொழிகளில் இருப்பவற்றைக் காலத்துக்கு ஒத்துவரவில்லை என்று மாற்றும்போது அது தொடர்ந்து கர்த்தரின் வேதமாக இருக்க வழியில்லை. ஆங்கிலத்தில் பல வேத நூல்களில் இன்றைக்கு கடவுளையே ஆணும், பெண்ணுமாக வர்ணிக்கும் அளவுக்குப் போயிருக்கின்றன.
ஆதியாகமம் 1:26-27லும், 5:1-2லும் காணப்படும் ‘மனிதன்’ என்ற பதத்தை ‘மானிடர்’ என்று மாற்றியதில் என்ன தவறு? முதலில், ஏற்கனவே நான் விளக்கியபடி மூலமொழியிலுள்ளதை மாற்றியிருப்பது முதல் தவறு. இரண்டாவது, மிகப்பெரிய இறையியல் தவறுக்கு இது வழிகோலியிருக்கிறது. ஆதியாகமத்தில் இந்த இரண்டு பகுதிகளும் படைப்பில் கர்த்தர் மனிதனைப் (ஆணும், பெண்ணுமாக) படைத்தபோது அவர்களுக்கு எத்தகைய சமுதாயப் பங்கை அளித்தார் என்பதை விளக்குகின்றன. படைப்பிலேயே அது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. குடும்பத்தில் ஆண் தலைவனாக இருந்து வழிகாட்ட வேண்டிய முக்கிய பொறுப்பை படைப்பு நிர்ணயித்திருக்கிறது. இதற்கான ஆதாரங்களை நாம் ஆதியாகமத்திலேயே காண்கிறோம். (அ) ஆணே முதலில் படைக்கப்பட்டு பெண் பின்னால் படைக்கப்பட்டாள். (ஆ) ஆணின் விலா எலும்பில் இருந்து பெண் படைக்கப்பட்டாள். (இ) கர்த்தர் ஆதாமோடேயே பேசுகிறார். (ஈ) பெண் ஆணுக்குத் துணையாக இருக்கப் படைக்கப்பட்டாள். (உ) ஆதாமே பெண்ணுக்குப் பெயர் சூட்டுகிறான். இதெல்லாம் ஆணுக்கு ஒரு விசேஷ பொறுப்பையும், பெண்ணுக்கு வித்தியாசமான பொறுப்பையும் படைப்பில் கர்த்தர் நியமித்திருப்பதைக் காட்டுகின்றன. இவற்றை வெளிப்படுத்துமுகமாகத்தான் ஆதி 1:26-27லும், 5:1-2லும் ‘மனுஷன்’ (மனிதன்) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. படைப்பில் ஆணுக்கும், பெண்ணுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற இந்த வேறுபட்ட பொறுப்புக்களின் காரணமாகத்தான் புதிய ஏற்பாட்டில் பவுல் குடும்பத்திலும், சபையிலும் ஆண், பெண் இருபாலாரின் பொறுப்புக்களைப் பற்றி விளக்கும்போது ஆதியாகமத்தையே எப்போதும் சுட்டிக்காட்டி விளக்கியிருக்கிறார். ஆணின்மேல் பெண் அதிகாரம் செலுத்தக்கூடாது என்பதை விளக்கும் பவுல் 1 தீமோ 2:11-15 வரையுள்ள வசனங்களில் படைப்பில் ஏற்படுத்தப்பட்ட ஒழுங்கையே உதாரணங்காட்டி விளக்குகிறார். 1 கொரி 11:1-16 வரையுள்ள வசனங்களிலும் இதேவிதமாக படைப்பில் நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்கையே பவுல் உதாரணங்காட்டுகிறார். ஆதியாகமத்தில் மனுஷனை ‘மானிடர்’ என்று பொது மொழிபெயர்ப்பில் மாற்றியிருப்பது வேதத்தின் அத்திவாரமானதோர் இறையியல் போதனையை சமூக மாற்றங்களின் அடிப்படையில் அழித்துவிடுகின்றதாக இருக்கின்றது. இது மொழிபெயர்ப்பில் அனுமதிக்கமுடியாத தவறு.
ஏனைய குறைபாடுகள்
நீட்டளளவைகளும், நிறுவைகளும் தற்கால மெட்ரிக் முறையில் தரப்பட்டுள்ளன. இதுவும் அவசியமற்றது. இப்படியே காலத்துக்குக் காலம் காலமாற்றங்களுக்கேற்ப இவற்றை மாற்றிக்கொண்டு போனால் வேதம் வாசிக்கிறவர்களுக்கு உண்மையில் கர்த்தர் ஆரம்பத்தில் எதைச் சொல்லியிருந்தார் என்பதே தெரியாமல் போகும். நீட்டளளவைகளும், நிறுவைகளும் மாற்றப்பட வேண்டிய அவசியமில்லை. வாசகனே அந்த அளவைகளை வேதத்தை ஆராயந்து புரிந்துகொள்ள வேண்டிய கடமையைக் கொண்டிருக்கிறான்.
தமிழினத்து மரியாதைப் பண்பிற்கேற்றவிதத்தில் அவன், இவன் என்றிருந்ததெல்லாம் அவர், இவர் என்று பொதுமொழிபெயர்ப்பில் மாற்றப்பட்டிருக்கிறது. இதுவும் அநாவசியமானது; குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியது. இன்றைக்கு தமிழில் நாம் வாசிக்கும் எதிலும் மரியாதைப் பண்பு வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தி எழுதுவதில்லை. பேச்சிலும் தமிழகத்தில் ஏரியாவுக்கு ஏரியா இது வேறுபடும். காலம் மாறிப்போய் சமுதாயப் பேச்சுமுறை வித்தியாசமாக மாறினால் மறுபடியும் இதை மாற்றி எழுதப்போகிறார்களா? காலப்போக்குக்கு ஏற்ப வேதத்தை மாற்றும் இந்தப்போக்கு மிக மிக ஆபத்தானது.
முடிவாக
இலகுவான தமிழ் நடையில் தமிழ் வேதம் (வேதாகமம்) அவசியந்தான். இன்றைய சூழ்நிலையில் அது மிகவும் அவசியம் என்றாலும் இந்தப் பொதுமொழிபெயர்ப்பு அந்த நோக்கத்தை நிறைவேற்றவில்லை. இது கிறிஸ்தவ வேதமொழிபெயர்ப்புக்கான அடிப்படை அம்சங்களுக்கெல்லாம் முற்றிலும் முரண்பாடானவிதத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மூலமொழியில் இருப்பதை இஷ்டத்துக்கு இது மாற்றியிருக்கிறது; இல்லாமலாக்கியிருக்கிறது. அநேக இறையியல் தவறுகளுக்கும் இடங்கொடுத்திருக்கிறது. கர்த்தரின் வேதமாக நம்பி வாசிக்கக்கூடியதல்ல இந்த மொழிபெயர்ப்பு. கிறிஸ்தவ வேதமொழிபெயர்ப்புப் பணியில் கத்தோலிக்க மதத்தின் பங்கு ஒருபோதும் இருந்திருக்கக்கூடாது.
தனித்தமிழ் நடை, இயல்பான மக்கள் பேசும் மொழி என்றெல்லாம் இது பறைசாற்றிக்கொண்டாலும், தமிழ்நடை சாதாரண வாசகர்களுக்கு புரிவதாக இல்லை. இலக்கிய நடையையே காண்கிறோம். கவிதைப் பாங்குக்கு இதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இலக்கிய நடையும், வார்த்தைத் தெரிவும், மூல மொழியிலுள்ள வார்த்தைகளின் அர்த்தத்திற்கும், இறையியலுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் வேதத்தைத் தமிழ் இலக்கியமாக்குவதையே நோக்கமாகக் கொண்டிருந்திருக்கின்றன. வேதத்தை வாசிப்பது போன்ற உணர்வையே இது எனக்குத் தரவில்லை.
இதுவரை நான் ஆராய்ந்து கவனித்த பல முக்கியமான தவறுகளை இந்த ஆக்கத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இது எத்தகைய மொழிபெயர்ப்பு என்பதை எடுத்துக்காட்ட இவையே போதுமென்றாலும், ஆராய்ந்து, சிந்தித்து வாசிக்கிறவர்கள் நிச்சயம் இன்னும் அநேக குறைபாடுகளைக் கண்டுகொள்ளுவார்கள். என்னைப் பொறுத்தவரையில் இந்த மொழிபெயர்ப்பைக் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ திருச்சபைகளும் பயன்படுத்துவது தகாது. இது தனித்தியானத்துக்கும், ஆராதனைக்கும் பயன்படக்கூடியதல்ல. பிரசங்கம் செய்கிறவர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது. வேத மொழிபெயர்ப்பு என்பது சாதாரணமான விஷயமல்ல; பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகளை மொழிபெயர்க்கும் ஆவிக்குரிய பணி அது. அந்தப் பணியில் இந்த மொழிபெயர்ப்பு தற்கால சமுதாய சிந்தனைப் போக்குக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கர்த்தரைக் கைவிட்டிருக்கிறது. பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் மாறின கதைதான் இந்தப் பொதுமொழிபெயர்ப்பு. ஜெயமோகனின் வார்த்தைகளிலேயே சொல்லப்போனால், ‘பைபிளை ஆண்டவரின் நேரடி வார்த்தை என்று கண்மூடித்தனமாக நம்புகிற’ என் போன்றவர்களுக்கு இந்தப் பொதுமொழிபெயர்ப்பு சீற்றம் கொடுப்பதாகத்தான் இருக்கிறது.
ஆதாரங்கள்:
- விவிலியம், புதிய மொழியாக்கம், ஜெயமோகன், நவம்பர் 26, 2008 (ஜெயமோகன் இணையதளம்).
- தமிழ் விவிலியம், விக்கிப்பீடியா (இணையதளம்).
- திருவிவிலியம், பொது மொழிபெயர்ப்பு, இந்திய வேதாகமச் சங்கம், பெங்களூரு, 1995.
- பரிசுத்த வேதாகமம், Tamil OV, இந்திய வேதாகமச் சங்கம், பெங்களூரு.
ஐயா நாங்கள் உங்கள் கட்டுரையை படித்தோம். நீங்கள் கூறிய குறிப்புகள் மிக அவசியமானதும் அவசரமானதும் மாகும். நாங்களும் திருவிவிலியம் வேண்டாம் என்று கடுமையாக எங்கள் ஆயரிடமும் பிஷப்பிடமும் ஒரு வருடமாக போராடிக்கொண்டு வருகிறோம். மேலும் குறிப்புகள் எங்களுக்கு தேவைப்பட்டால் உங்களை அணுக விரும்புகிறோம்.
பிராங்கிளின்
9500005542
LikeLike
நன்றி! உங்கள் பிஷப்புக்கு இந்தத் தவறான மொழிபெயர்ப்பு பற்றிய உண்மைகள் தெரியவில்லை; அல்லது தெரிந்துகொள்ள விரும்பவில்லை. அதில் எனக்கு ஆச்சரியமில்லை. இதுபற்றி மேலும் பேச விரும்பினால் தொடர்புகொள்ளவும். வட்செப் எண் +64 225012446.
LikeLike
முற்றிலும் உண்மை. மொழி பெயர்ப்போர் இறைத்தொண்டாற்றுபவரா இல்லை மொழித்தொண்டாற்றுபவரா என்று நான் அதிகம் வியந்ததுண்டு.
ஆகவே நல்ல பக்தியுள்ளோர் ஒன்று சேர்ந்து வேதப் பேருண்மையும், புனிதமும் கெடாத ஒரு நல்ல ஆவிக்குரிய வேதாகம மொழியாக்கம் கொண்டு வந்தால் நலமாயிருக்கும்.
பழைய தமிழ் வேதாகமத்தில் உள்ள வழக்கொழிந்தச் சொற்கள் ( உம்பிளிக்கை, பரிச்சேதம், சன்னதம், பேர்வழி, பேர் டாப் இன்னும் எண்ணற்ற பழைய தலைமுறைக்கே புரியாத வார்த்தைகள்)
பொருள்படா சொல்லாடல்கள், தவறான மொழியாக்கங்கள் ( ஏசாயா 10/27……அபிஷேகத்தின் சுகம் முறியும்) போன்றவற்றை மட்டும் திருத்தி வெளியிடுதல் இக்காலத்தின் கட்டாயத் தேவை.
சி.எம் சுந்தர்ராஜ்.
LikeLike