யார் மெய்யான கிறிஸ்தவன்?

யார் மெய்யான கிறிஸ்தவன்?

– ஜெரமி வோக்கர் –

Jeremy BW“பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை” (ஏசாயா 45:22) எனும் இயேசு கிறிஸ்துவின் கிருபையுள்ள கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவனே கிறிஸ்தவன். அவன் ஒருகாலத்தில் காணாமல்போயிருந்து, திசை தெரியாமல் பாவியாக அலைந்துகொண் டிருந்து பின்னால் கிறிஸ்துவில் விசுவாசத்தைக்கொண்டு, கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாக மாற்றப்பட்டு, கர்த்தரின் மெய்யான சீடனாக, பழையவைகள் ஒழிந்து எல்லாம் புதிதாகி இருக்கிறவன் (2 கொரிந்தியர் 5:17).

நீங்கள் மெய்யான கிறிஸ்தவன்தான் என்பதை எப்படி சொல்லுவீர்கள்? நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள் என்பதை எப்படி அறிவீர்கள்? ஒருவன் கிறிஸ்துவுக்குள் புதிதாகக்கப்பட்ட சிருஷ்டி என்பதற்கு உறுதியான சான்றுகள் என்ன? இந்தக் கேள்விக்கான பதிலைத்தான் இந்த ஆக்கத்தில் பார்க்கப் போகிறோம்.

மறுபிறப்பையும் அதற்கான சான்றுகளையும்பற்றி அப்போஸ்தலனாகிய யோவான் தெரிவித்திருக்கிறார். இயேசுவே கிறிஸ்து என்றும் அவரை விசுவாசிப்பதின் மூலம் இரட்சிக்கப்படுவோம் என்பதை நாம் அறிந்துகொள்ளுபடியாக யோவான் தன் சுவிசேஷத்தை எழுதியிருக்கிறார் (யோவான் 20:31). அதற்குப் பிறகு, அவர் தன்னுடைய முதல் நிருபத்தை, விசுவாசிகள் “தங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் தொடர்ந்து விசுவாசமாயிருக்கவும்” (1 யோவான் 5:13) எழுதினார். “யார் மெய்யான கிறிஸ்தவன்?” என்கிற இந்த முக்கியமான கேள்விக்கு பதில் காண யோவானின் முதல் நிருபம் நமக்கு உதவியாக இருக்கிறது.

இந்த உலகத்தாரும், வெளிப்பிரகாரமாக மட்டும் தங்களை பக்தி யுள்ளவர்களாகக் காட்டிக்கொள்ளுகிறவர்களும், சில குறிப்பிட்ட அடையாளங்களை மெய்க்கிறிஸ்தவத்திற்கு அறிகுறியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவைகள், அவர்கள் மெய்யான விசுவாசிகளாக இல்லாதிருந்தும், விசுவாசிகள் என்று தங்களைத் தவறாகக் கற்பனை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளுகின்றன. அநேக கிறிஸ்தவர்களும் தங்களுடைய இரட்சிப்பின் நிச்சயத்திற்காக இவற்றில் நம்பிக்கை வைக்கிறார்கள். இவை உறுதியான அடித்தளத்தைப் போடமுடியாத அறிகுறிகளாக இருப்பதால் தங்களுக்குத் தேவையான நேரத்தில் இவை தங்களைக் கைவிட்டுவிடுவதை அறிந்துகொள்ளுகிறார்கள்.

The Distinguishing Traits of a Christian-1‘கிறிஸ்தவனின் சிறப்பான குணாதிசயங்கள்’ (The Distinguishing Traits of Christian Character) என்ற கார்டினர் ஸ்பிரிங் (Gardiner Spring) எழுதிய அருமையான நூல், ஒருவன் மெய்யான கிறிஸ்தவனா இல்லையா என்பதை அறிந்துகொள்ளுவதற்கு உறுதியான அறிகுறிகளாகக் கருத முடியாத ஏழு காரணிகளைச் சுட்டிக்காட்டுகின்றது.

முதலாவது, வெளிப்பிரகாரமான ஒழுக்கமுள்ள வாழ்க்கை – வெளிப்பிரகாரமான நேர்மையான ஒழுக்க நடவடிக்கைகள் ஒருவன் கடவுளை நேசிக்கிறான் என்பதற்கான உறுதியான அறிகுறிகள் இல்லை. அத்தகைய வெளிப்புறமான வாழ்க்கை ஒருவனுடைய இருதயத்தில் காணப்படும் மெய்யான நீதிக்கு அறிகுறி அல்ல (1 சாமு 16:7). அநேகர், நித்திய ஜீவனை அடையாமலும், இயேசுகிறிஸ்துவைப்போல இருப்பதற்கான வளர்ச்சிக்குரிய எந்த அடை யாளங்களும் இல்லாமலும் வெறும் ஒழுக்கமுள்ள வாழ்க்கையைக் கொண்டிருந்துவிடலாம்.

Gardiner_Springஇரண்டாவது, வெறும் அறிவு – (ஜீவனில்லாத அறிவு) சத்தியத்தை ஆவிக்குரியவிதத்தில் அறிந்துகொள்ளுவதற்கு எதிர்மாறானது இந்த ஜீவனில்லாத வெறும் புத்தியோடு மட்டும் சம்பந்தமான அறிவு (ரோமர் 1:21, 2:17-20, யாக்கோபு 2:19, 1 கொரிந்தியர் 2:14). ஆவிக்குரியவிதத்தில் கிறிஸ்துவை அறிந்துகொள்ளாமல் அவரைப் பற்றிய அறிவை மட்டும் பெரியளவில் கொண்டிருந்துவிட முடியும். வேதத்தின் தேவனுக்குத் தலைபணிந்து ஆராதிக்க மறுத்து வேதத்தில் இருந்து மேலதிகமான அறிவை ஒரு மனிதனால் கொண்டிருந்துவிட முடியும்.

மூன்றாவது, வெளிப்புறமான பக்தி நிலை – அநேகர் தேவபக்தியின் வேஷத்தை அணிந்து மெய்யான பக்திவிருத்தியைக் கொண்டிராமல் இருப்பார்கள். அது தேவவல்லமையில்லாத வெளித்தோற்றம் மட்டுமே. (2 தீமோத்தேயு 3:5, மத்தேயு 25:1-12, ஏசாயா 58:2-3. பரிசேயர்களே இப்படியானவர்களுக்கு முக்கியமான உதாரணம். அவர்கள் சிறந்த பக்திமான்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டபோதும் அவர்களுடைய இருதயம் கடவுளைவிட்டு வெகுதூரத்தில் இருந்தது.

நான்காவது, பிரகாசமான தாலந்துகள் – சிலர் லாவகமாகவும், நெடுநேரமும் பேசக்கூடிய அரிய தாலந்தை பிறப்பிலிருந்தே கொண்டிருப்பார்கள். இப்படியானவர்கள் பக்திக்குரிய காரியங்களைப்பற்றிப் பெரிதாகப் பேசுகிறபோது அதை அவர்களுடைய இருதயத்தில் கடவுள் இருப்பதற்கான அறிகுறியாகவும், அவர்களுடைய பேச்சை அவர்களுடைய பக்திக்கு அடையாளமாகவும் பலரும் தவறாகக் கருதிவிடுகின்ற நிலை இருக்கிறது. பிலேயாமும் சவுலும் தீர்க்கதரிசனம் பேசும் திறனைக் கொண்டவர்களாக இருந்தும் கடவுளின் இராஜ்யத்தை அடையாதவர்களாக இருந்திருக்கிறார்கள் (மத்தேயு 7:22-23). மெய்யான விசுவாசியாக வருவதற்கு முன்பாக ஜோன் பனியன் பக்திரீதியான காரியங்களைப் பேசுகிறதில் மிகத் திறமையானவராக இருந்திருக்கிறார். அவரெழுதிய மோட்சப் பயணம் நூலில் இத்தகைய தன்மை கொண்ட சில நபர்களை அவர் வர்ணித்திருக்கிறார்.

ஐந்தாவது, பாவத்தை இருதயத்தில் உணர்தல் – இந்த விஷயத்தை நாம் கவனமாக சிந்திக்கவேண்டும்; புரிந்துகொள்ள வேண்டும். ஒருவன் இரட்சிப்பை அடைவதற்கு பாவத்தை இருதயத்தில் ஓரளவுக்கு உணர்வது மிகவும் அவசியம். பாவத்தை இருதயத்தில் உணர்வது இரட்சிப்பை அடைவதற்கு மிகவும் அவசியமானது, ஆனால் அத்தகைய பாவ உணர்தல் இரட்சிப்போடு இணைந்ததல்ல. அநேக கிறிஸ்தவர்கள் இரட்சிப்படைவதற்கு முன்பிருந்ததைவிட இரட்சிப்படைந்தபின்பே பாவத்தை அதிகமாகவும், ஆழமாகவும் தங்களில் உணர்ந்திருக்கிறார்கள். கிறிஸ்தவ குடும்பங்களில் பிறந்து வளர்ந்து சிறு வயதிலேயே மனந்திரும்பியவர்கள் பாவத்தைப்பற்றிப் பெரியளவில் அறிந்திராமலும், பாவஉணர்வை அதிகளவுக்கு ஆழமாகக் கொண்டிராமலும் இருந்துவிடலாம். அதேவேளை பாவத்தைப் பற்றிய உணர்வு இருப்பது மட்டுமே (மிக ஆழமான உணர்வுகூட) இரட்சிப்பு அடைந்ததற்கு அடையாளமாகிவிடாது. பாவத்தைப் பற்றிய உணர்வைக்கொண்டிருப்பதற்கும், பாவத்தில் இருந்து மனந்திரும்புவதற்கும் இடையில் பெரும் வேறுபாடு உண்டு. பாவத்தைப்பற்றிய விழிப்புணர்வும், அதுபற்றிய குற்றவுணர்வும் மட்டும் இருந்துவிட்டால் ஒரு மனிதன் மனந்திரும்பிவிட்டான் அல்லது மனந்திரும்பி விடுவான் என்று அர்த்தமல்ல. (யூதா 14-15). சவுலிலும், ஆகாபிலும், யூதாசிலும் இது இருந்தும் அவர்கள் இரட்சிப்பைப் பெற்றிருக்கவில்லை.

ஆறாவது, உறுதியான நிச்சயம் – இரட்சிப்படைந்திருக்கிறேன் என்று நம்புவதற்கும், கிறிஸ்துவை விசுவாசித்து அதன்காரணமாக தொடர்ச்சியாக இரட்சிப்படைந்து வருவதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது. ஒருவன் கடவுளை உண்மையில் அறியாமல் இருந்தும், அவரை அறிந்திருக்கிறேன் என்று தீவிரமாக நம்பி வாழ்ந்துவிட முடியும் (மத்தேயு 3:7-9).

ஏழாவது, ஒருவருடைய மனமாற்றம் நிகழ்ந்த நேரம் அல்லது அது நிகழ்ந்த முறை – ஒருவருடைய அசாதாரண அனுபவமோ அல்லது தனித்துவமானதொரு அனுபவமோ, மனமாற்றமடைந்த குறிப்பிட்ட நேரமோ அவருடைய இரட்சிப்பின் அனுபவம் மெய்யானது என்பதற்கு அடையாளமில்லை. மெய்யான ஆவிக்குரிய வாழ்க்கையை ஒருபோதும் அறியாமல், உள்ளார்ந்ததொரு உணர்வையோ அல்லது ஒரு கூட்டத்தில் கொடுக்கப்பட்ட சுவிசேஷ அழைப்பைக்கேட்டுக் கையைத்தூக்கி முன்னால் நடந்துபோனதையோ மட்டும் நம்பி வாழ்ந்து மெய்யான மனமாற்றமில்லாமல் மடிந்த அநேகர் இருந்திருக்கிறார்கள்.

இரட்சிப்பை அடையாமலே, அதை அடைந்துவிட்டதாகக் கற்பனை செய்து வாழ்வதைப்போன்ற ஆபத்தானது வேறொன்றுமில்லை. தான் வாசம் செய்பவர்களில் கிரியை செய்யும் பரிசுத்த ஆவியானவர் பகரும் சாட்சியை இருதயத்தில் அறிகின்ற உறுதியான அத்திவாரத்தைக் கொண்டிருந்து, தான் கிறிஸ்தவன் என்பதை அறிந்துணர்ந்திருப்பதைப் போன்ற ஆசீர்வாதத்திற்கு இணையானதொன்றில்லை. இதுவரை நாம் பார்த்து வந்திருக்கின்ற நிலையற்ற அறிகுறிகளை அறிந்து உணர்ந்திருப்பது, மெய்யான விசுவாசியை மாறுதலடையும் வெறும் உணர்ச்சிவசப்படுதலின் ஆளுகையில் இருந்து விடுவித்து, நீங்களும், நானும் இன்னும் அநேகரும் நம்முடைய நம்பிக்கைக்காகத் தங்கியிருந்துவிடுகின்ற தவறானதும் அழுகிப்போனதுமான போலிக்காரணிகளை நம்மில் இருந்து அடியோடு தூக்கியெறிந்துவிட துணைபுரிகின்றது.

அப்படியானால், ஒரு பாவியின் இருதயத்தில் மெய்யான கிருபையின் கிரியை நிகழ்ந்திருக்கின்றது என்பதற்கான வேபூர்வமான அடையாளங்கள் என்ன? யோவான் தன் நிருபத்தை எழுதுகிறபோது, அதை மிகவும் திட்டமிட்டு எழுதுகிறார். ஒரு விமானம் தான் பறக்கின்ற இடத்தையே சுற்றிச் சுற்றி வருவதுபோல் யோவானும் தான் சொல்ல வருகின்ற விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லுகிறார். யோவானுடைய நிருபத்தை நாம் வாசிக்கிறபோது மெய்க்கிறிஸ்தவத்தைப்பற்றிய நான்கு தவிர்க்கமுடியாத அறிகுறிகளை அவர் தெளிவாக விளக்குவதை நாம் அறியமுடிகிறது.

முதலாவது அறிகுறி – பாவத்தைப்பற்றிக் கடவுள் விளக்கியிருக்கின்ற உண்மைகளையும், அதிலிருந்து விடுபடுவதற்காக அவர் ஏற்படுத்தியிருக்கின்ற வழிமுறையையும் தாழ்மையோடும் முழுமனதோடும் ஏற்றுக்கொள்ளுதல். (1 யோவான் 1:7-2:2; 2:12-14; 3:5, 6, 23; 4:2, 9-10, 13-16; 5:1, 5, 10-13, 20). ஒரு கிறிஸ்தவன் தன்னைக் குறித்து நிதானித்து அறிந்துகொண்டவனாக, பாவத்தைச் செய்கின்ற பாவியாகப் பார்ப்பான். பரிசுத்தமான கடவுளுடைய நீதியான நியாயத்தீர்ப்பை அவன் ஏற்றுக்கொள்ளுவான். (சங்கீதம் 51:4; லூக்கா 15:18, 18:13). பரிசுத்த ஆவியானவரால் ஏற்படும், இந்த பாவத்தைப் பற்றிய உறுத்துதல் அவனைத் தன்னுடைய இருதயத்தின் கடவுளுக்கு விரோதமான நிலையை உணரவைத்து மெய்யான மனந்திரும்புதலை நோக்கி வழிநடத்துகிறது. அதனால் அவன் தன்னுடைய பாவ நிலையை உணர்ந்து, அது கடவுளைக் காயப்படுத்துவதால் அதை வெறுத்து, அதற்கு புறமுதுகுகாட்டி விலகியோடுகிறான். (1 யோவான் 2:12-13). தாழ்மையும், கருணையும்கொண்டவரான இயேசு கிறிஸ்து வல்லமையோடு சுவிசேஷத்தில் வெளிப்படுத்தப்படுவதால் அவனுடைய மனந்திரும்புதலோடு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசமும் இணைந்து அவனில் காணப்படுகிறது. விசுவாசம் இயேசுவை இருகரம் நீட்டி வரவேற்று, அவரை நோக்கி ஓடி, அவரைப் பற்றி, அவரிலேயே தங்கியிருக்கும். இந்த உண்மைதான் இனி நான் விளக்கப்போகும் அனைத்திற்கும் காரணமாக இருக்கிறதென்பதை நாம் மறந்துவிடக்கூடாது. சிலுவையில் மரித்த மனந்திரும்பிய கள்வன் இனி நான் விளக்கவிருக்கும் இரட்சிக்கும் விசுவாசத்தை வெளிப்படுத்தும் மூன்று காரியங்களையும் தன் வாழ்க்கையில் வெளிப்படுத்தும் வாய்ப்பைக் கொண்டிருக்கவில்லை. (அவன் உயிரோடிருந்திருந்தால் அவற்றை நிச்சயம் வெளிப்படுத்தியிருப்பான்.) இருந்தும் இயேசு அவனைப்பார்த்து, “இன்று நீ என்னோடுகூட பரலோகத்தில் இருப்பாய்” என்று உறுதியளித்தார். (லூக்கா 23:43). இயேசுவை யார் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் அவரை விசுவாசித்த அடுத்த நிமிடமே மரித்தாலும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் கடவுளுக்கேற்ற ஜீவனுண்டு.

இரண்டாவது அறிகுறி – கடவுளையும் அவருடைய மகிமையையும் நோக்கமாகக் கொண்ட தாழ்மையோடுகூடிய பயபக்தியும், மகிழ்ச்சியான அர்ப்பணிப்பும். (1 யோவான் 1:3-5; 2:12-15; 3:1-2; 4:12-13, 9; 5:1-2). இரட்சிக்கப்பட்டிருப்பவனில் அவனுக்கு எது முக்கியமானது என்பதில் தீவிரமான தலைகீழ் மாற்றமேற்பட்டிருக்கிறது. அவனுடைய இருதயத்தில் சுயம் வீழ்த்தப்பட்டு கடவுள் ஆளத்தொடங்கியிருக்கிறார். அவனில் கடவுளுக்கு எதிரியாக இதுவரை இருந்துவந்துள்ள இருதயம் (ரோமர் 8:7) அகற்றப்பட்டு அவரை நேசிக்கின்ற இருதயம் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது (லூக்கா 10:37). சுயத்திற்காக மட்டும் இதுவரை வாழ்ந்தவன் ஜீவனுள்ள பலியாகத் தன்னைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து வாழத் தொடங்கியிருக்கிறான். (ரோமர் 12:1-2). அவன் மகிமையின் கர்த்தருக்கு மகிழ்ச்சியோடு ஆராதனை செய்து தான் பெற்றிருக்கிற கிருபைக்கு நன்றியையும் கடவுளுக்குள் தன் சந்தோஷத்தையும் வெளிப்படுத்துகிறான். கடவுளின் சிறப்பான மகிமையை அவன் நம்புவதால், அதனிமித்தம் கடவுள் மகிமைக்குப் பாத்திரர் என்பதை அங்கீகரித்து, அவரால் அழைக்கப்படுவானால் எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காது அவருக்குப் பணிசெய்வான். ரோமர் 11:36ல் சொல்லப்பட்டிருப்பது அவனுக்கு முற்றிலும் பிரியமானதும் ஏற்றதுமாகக் காணப்படுகிறது. ஏனென்றால், இப்போது கிறிஸ்துவுக்குள்ளாக கடவுளே அவனுடைய வாழ்க்கையின் உச்சமாக சிந்தனையிலும் உணர்விலும் செயலிலும் இருக்கிறார். “பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூமியில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; ஆனால் தேவனே என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்” என்பதாக அவனுடைய சாட்சி இருக்கிறது. (சங்கீதம் 73:25-26). அவன் அதை விசுவாசிக்கிறான், அறிந்திருக்கிறான், பின்பற்றுகிறான். புது வலிமையோடு மனந்திரும்புவதன் மூலம் தான் அதை அறிந்திருப்பதையும், உணருவதையும் நிருபித்துக்காட்டுகிறான். கடவுளின் பெயரைப் பற்றியும் கடவுளின் மக்களைப் பற்றியுமே அவன் அக்கறைகொண்டிருப்பதால் தன்னுடைய நேரம், ஆற்றல், நயம், தாலந்துகள், திறமைகள், முயற்சிகள் அனைத்தையும் தான் செய்யும் ஆச்சரியத்துக்குரிய செயல்களின் மூலம் அல்லது சாதாரண செயல்கள் மூலம் அவருக்கே அர்ப்பணிக்கிறான். (1 கொரிந்தியர் 10:31). இன்றும் என்றென்றும் கடவுளை மகிமைப்படுத்துவதும் அவரை அனுபவிப்பதுமே அவனுடைய வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளும் பெரும்  மகிழ்ச்சியுமாயிருக்கிறது. கிறிஸ்துவுக்குள் கடவுளே அவனுடைய வாழ்க்கையில்  அனைத்துமாக இருக்கிறார். அதை மேன்மேலும் அறிவதும் உணர்வதும் நிருபிப்பதுமே அவனுடைய வாழ்க்கையின் ஏங்கலாக இருக்கிறது.

மூன்றாவது அறிகுறி – பரிசுத்தத்தை அதிகமாக அடைவதற்காக திட்ட மிட்ட நடவடிக்கைகளோடு பரிசுத்தத்தில் முன்னேறுதல். (1 யோவான் 2:3-8,  15-16, 19, 29; 3:3, 6, 10, 24; 4:13; 5:2-5, 21). மாய்மாலக்காரர்கள் பரிசுத்தத்தின் மூலம் வருகின்ற மதிப்பையும் மரியாதையையும் விரும்புகிறார்கள். ஆனால் கடவுளின் மெய்யான பிள்ளையோ பரிசுத்தத்தின் மெய்த்தன்மையில் மட்டுமே திருப்திகொள்ளுவான். அவன் தன் வழிகளை ஆராய்ந்து பார்த்து, கடவுளின் சாட்சிகளிடம் தன் நடையைத் திருப்புகிறான் (சங்கீதம் 119:59). உலகம் முன்பு அவனுக்கு பிரகாசமாக இருந்ததுபோல் இப்போது இல்லை. அதன்மீதான அவனுடைய ஈர்ப்பும் நேசமும் இப்போது அடிப்படையிலேயே மாறிவிட்டது. தன்னை அழைத்த கடவுள் பரிசுத்தராக இருப்பதுபோல் தானும் பரிசுத்தமாக வாழ அழைக்கப்பட்டவன் என்பதை உணர்ந்து இப்போது கடவுளுக்காகவே அவன் வாழுகிறான்  (1 பேதுரு 1:16). அவன் கிறிஸ்துவோடு இணைந்திருக்கிறதினால், அவனுக்கு பாவத்தோடு இருந்த தொடர்பு உடைத்தெறியப்பட்டிருப்பதோடு, பாவத்தில் தொடர்ந்திருக்கும் பழக்கமும் தகர்த்தெறியப்பட்டிருக்கிறது. புது வேர் புதுக் கனிகளைப் பிறப்பிக்கிறது (மத்தேயு 7:20, 12:33-35). அவனுடைய கீழ்ப்படிவு பூரணமானதாக இல்லாதிருந்தாலும் முழுமையானதாக இருக்கும். அது தொடர்ந்து சீராக முன்னேறுகிறதாக இருக்கும்; கட்டாயத்தினால் அல்ல விருப்பத்தோடும் முழுமனதோடும் செய்கிறதாக இருக்கும்; விடாமுயற்சியோடு இறுதிவரை தொடருகிற கீழ்ப்படிவாக இருக்கும். அவன் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் சீடனாகத் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு அனுதினமும் அவரைப் பின்தொடருகிறான் (மத்தேயு 16:24-25). கிறிஸ்துவைப்போல் இருப்பதை இலக்காக வைத்து அவரைப் பின்தொடருகிறான். அதுவே அவனுடைய தனிப்பட்டதும், பொதுவானதுமான ஜெபமுமாக இருக்கிறது. அவன் ஆவியின் கனிகளை மேன்மேலும் வெளிப்படுத்துகிறான் (கலாத்தியர் 5:22-23). உலகத்தின்மீது அவனுக்கு நேசமில்லை (யாக்கோபு 4:4). முன்பு உலகத்துக்கேற்றதும், உலகத்தோடும் சமரசமுமாக இருந்த வாழ்க்கை முறை இப்போது முடிவுற்றுவிட்டது. (2 தீமோத்தேயு 3:4; 1 கொரிந்தியர் 16:33). இது பாவமற்ற பூரணபரிசுத்தநிலையல்ல, அதை அடைவதற்கான கடும் முயற்சியாக இருக்கிறது. கிறிஸ்தவன் தன் வாழ்வில் எந்தவித போராட்டத்தையும் எதிர்கொள்வதில்லை என்றில்லை, மாறாக அவன் பெரும் போராட்டங்களை எதிர்கொள்கிறான்; தீவிரமாக பொங்கி எழும் துர்க்குணத்தோடும், தீயசக்திகளோடும் எதிர்த்துப் போராடுகிறவனாக இருக்கிறான். (ரோமர் 7:13-25). சில வேளைகளில் அவன் அலைந்து திரிகிறான், சில வேளைகளில் அவனில் முன்றேற்றமில்லை, சில வேளைகளில் துக்கப்படுமளவுக்கு பின்மாற்றமும் அடைகிறான். இருப்பினும் அவனுடைய வாழ்க்கையின் நோக்கமும், போக்கும் முன்னோக்கிச் செல்வதாக  இருக்கிறது. காலம் போகப்போக அவனுடைய வாழ்க்கை முன்னேற்றப் பாதையாகவே இருக்கிறது. அவனுடைய ஆவிக்குரிய வரைபடத்தில் காணப்படும் புள்ளிகள் எப்போதும் நேர்கோடாக உயரப்போவதாகக் காணப் படாமல் வளைந்தும், பல மலைகளை வழியில் சந்திப்பதாகவும் இருக்கிறது. இருப்பினும் அதில் பாவம் அழிக்கப்பட்டு தேவபக்தி வளருவதற்கு அறிகுறியான விடாமுயற்சி தொடர்ந்திருப்பதையும் காண முடியும்.

நான்காவது அறிகுறி & கடவுளால் மீட்கப்பட்டுள்ள மக்களோடிருக்கும் அன்பும், இணைப்பும். இதைப்பற்றி யோவான் தன் நிருபங்களில் விளக்குகிறார் (1 யோவான் 2:9-11, 3:10-18, 23; 4:7-11, 4:20 – 5:2). இது, ‘அவர்களை எனக்குப் பிடிக்கும்’ என்று சொல்லுகின்ற இயற்கையான அன்பைவிடவும், கூலிக்காக மாரடிப்பதால் உண்டாகிற சுயநலமான இணைப்பைவிடவும், இவர்கள் தங்களுடைய கட்சி என்ற எண்ணத்தில் கூடிவருவதைவிடவும், வெறும் கடமைக்காக இருந்திருந்து கூட்டங்கூடுவதைவிடவும் மேலான ஆழ்ந்த அன்பும், இணைப்புமாகும். மெய்யான கிறிஸ்தவன் கடவுளின் பிள்ளைகளை, அவர்கள் கடவுளின் பிள்ளைகள் என்ற ஒரே காரணத்திற்காக நேசிக்கிறான். அவர்கள் பார்ப்பதற்கு அன்பு பாராட்டக்கூடாதவர்களாகக் கண்களுக்குத் தென்பட்டாலும் அவன் அவர்களை நேசிக்கிறான். அவர்களை நேசிப்பதற்கு அவனுக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தபோதும் இந்த ஒரு காரணத்தைத் தவிர அவனுக்கு வேறு காரணங்கள் தேவையில்லை. அவர்களைக் கடவுள் நேசிப்பதாலும், கிறிஸ்துவின் மூலம் அவர்கள் இரட்சிக்கப்பட்டிருப்பதாலும், அவர்களை நேசிப்பது கடவுளைப்போல அவர்களை நேசிப்பதற்கு ஒப்பானதாலும் அவன் அவர்களை நேசிக்கிறான். கடவுளின் சாயலுக்கும், தான் நேசிக்கும் இயேசுவின் சாயலுக்கும் ஒப்பாக வளர்ந்து வருகின்ற தன்மை அவர்களில் காணப்படுகின்ற காரணத்தால் அவன் அவர்களை நேசிக்கின்றான். இயேசு இரட்சித்து, இறையாண்மையுள்ள தலைவனாக இருந்து வருகின்ற அவருடைய சரீரமாகிய சபையில் அவர்கள் தன்னோடு இணை அங்கத்தவர்களாக இருக்கின்ற காரணத்தினால் அவன் அவர்களை நேசிக்கிறான். (1 கொரிந்தியர் 12:12-14, 26-27). அவன் தன் அன்பை வார்த்தையால் மட்டும் காட்டாமல் எண்ணங்களாலும், நடத்தையாலும் காட்டுகிறான். (எபேசியர் 4:1-6, 12-16, 25-32). அவன் மெய்யான சபைக்கோட்பாட்டாளியாக (Churchman) இருக்கிறான். அதாவது சபையை நேசித்துத் தன் பொறுப்புக்களையெல்லாம் தவறாது செய்கிறவனாக இருக்கிறான். வெறுமனே அவன் சபைக்கு கடமைக்காகப் போய்வருகிறவனாக இல்லாமல், ஒவ்வொரு அங்கத்தவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து அந்நியோன்யத்துடன் உறவாடி, அவர்களோடு சபையாக நேசத்தோடும், அர்ப்பணிப்போடும் கூடிவந்து சபைக்காகப் பணிசெய்கிறவனாக இருக்கிறான். அவன் வெறும் பார்வையானனைப்போல நடந்து சபைமூலம் தனக்கு என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல், சபைக்குத் தன்னால் என்ன செய்யமுடியும் என்ற எண்ணத்தோடு பணிசெய்கிறான்

இந்த நான்கு அறிகுறிகளும் மெய்யான கடவுளுடைய பிள்ளைகளிடம் நிச்சயம் காணப்படும். மகிமையை அவர்கள் அடையும்வரை இந்த அறிகுறிகள் பூரணப்படாது; ஆனால் இங்கு வாழும்வரையிலும் அவை அவர்களில் காணப்படும்.

இரட்சிப்பை அடையாத நிலையில் இருக்கும்போது அதை அடைந்திருக்கிறோம் என்று தவறாகக் கற்பனைசெய்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது. இவ்வாறு நினைத்து வாழ்வது மிகவும் ஆபத்தான, பேரழிவை ஏற்படுத்தக்கூடிய நிலையாகும். ஆவிக்குரிய விஷயத்தில் எப்போதும் சந்தேகத்துடனோ அல்லது தவறான நம்பிக்கையுடனோ குழப்பத்தோடு இருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோமா இல்லையா என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியும். நாம் இரட்சிக்கப்பட்டிருப்பதை நிச்சயத்தோடு உணர்ந்து நித்தியவாழ்க்கையை அனுபவிக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளுவதற்காகவே யோவான் தன்னுடைய நிருபத்தை எழுதியிருக்கிறார்.

இதுவரை நான் விளக்கிய தவிர்க்கமுடியாத, விசுவாசிக்குரிய அறிகுறிகள் உங்களுடைய இருதயத்தில் காணப்படாவிட்டால் நீங்கள் விசுவாசியல்ல (கிறிஸ்தவனல்ல). உங்களைப்பற்றி நீங்கள் என்ன கற்பனைகளை வளர்த்துக்கொண்டிருந்தாலும், கிறிஸ்துவின் வழிகளின்படி நடக்காமல் அவருடைய பெயரை மட்டும் சூட்டிக்கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றி, கிறிஸ்துவையும் நிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்.  கிறிஸ்துவின் கிருபையின் வல்லமையையும், இரட்சிக்கும் ஞானத்தையும் வாழ்க்கையில் அறியாமல் விசுவாசிக்கு மட்டுமே சொந்தமான பெயரை உங்களுக்கு சூட்டிக்கொண்டு, கிறிஸ்துவை தூஷித்து அவருக்கு இகழ்ச்சியை ஏற்படுத்துகிறீர்கள். மாய்மாலக்காரன் தன்னிடம் இல்லாததை இருப்பதாகக்காட்டிப் போலிவேஷம் தரித்து, அவிசுவாசிகள் மெய்க்கிறிஸ்தவத்தைக் கேலிசெய்யவும், இகழவும் வழியெற்படுத்துகிறான். கிறிஸ்தவ சபையாக தங்களை இனங்காட்டிக்கொள்கிறவர்கள் சத்தியத்தைப் புறக்கணித்து, தங்களுடைய சொந்தக் கருத்துக்களைப் போதித்து, பக்திவிருத்தியில்லாமல் வாழ்ந்து மற்றவர்கள் தூஷிப்பதற்கு இடங்கொடுக்கும்போது இதனை நாம் பெரியளவில் பார்க்க நேரிடுகிறது. இதுவா கிறிஸ்தவம்? இல்லை! அறவே இல்லை! இது கிறிஸ்தவம் அல்ல. பாவிகள் கிறிஸ்துவை ஏளனம் செய்வதற்கு இடங்கொடுக்கவும், இயேசுவின் மீது நம்பிக்கையற்றுப்போகவும் வைக்கும் போலித்தனம் இது. இதிலிருந்து நீங்கள் விடுபடாவிட்டால் அவர்களுடைய இரத்தப்பலி உங்கள்மீதிருந்து உங்களை இறுதியில் அழித்துவிடும். கிறிஸ்துவுக்குள் இருப்பதாக நீங்கள் போலித்தனமாக நினைத்துக்கொண்டிருப்பதைவிட அவரில்லாமல் அவிசுவாசியாக இருப்பது மேலானது. எனவே, நீங்கள் இயேசுவிடம் ஓடிவந்து, அவர் உங்களுக்குத் தேவையாக இருக்கிறார் என்பதை அவர் முன் அறிவித்து, பாவத்தில் இருந்து உடனடியாக மனந்திரும்பி இரட்சகரான இயேசுவை விசுவாசியுங்கள்.

இதுவரை நான் மேலே விளக்கி வந்திருக்கும் நான்கு இலக்கணங்களும் உங்களில் இருக்குமானால் நிச்சயம் நீங்கள் கிறிஸ்தவர்தான். அது உண்மையாக இருக்கும்போது உங்களில் இருக்கும் கிருபைக்கு காரண மானவரான கிறிஸ்துவை நீங்கள் ஒருபோதும் நிராகரித்து நித்திக்கக்கூடாது. சந்தேகத்தோடும் பயத்தோடும் வாழும் சில மெய்க்கிறிஸ்தவர்கள், தங்களில் இல்லாதிருக்கும் கிறிஸ்துவைத் தாங்கள் இருப்பதாகக் காட்டிக் கொள்கிறோமோ என்ற நடுக்கத்தோடும் பயத்தோடும், சந்தோஷத்தை இழந்து உள்ளுக்குள் எந்த ஆசீர்வாதமும் இல்லாமல் மற்றவர்களுக்கும் பயனில்லாமல் நிழலிலோ, இருட்டிலோ வாழ்வதைப்போல வாழ்ந்து வருகிறார்கள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் – நான் இதுவரை விளக்கி வந்திருக்கும் இலக்கணங்கள் அவிசுவாசியின் இருதயத்தில் இருக்க வழியேயில்லை. கிறிஸ்தவ சாட்சியில்லாமல் அவற்றைக் கொண்டிருப்ப தென்பது தேவராஜ்யத்தின் சிறப்புரிமைகளைப்பற்றி மட்டும் தெரிந்து வைத்திருந்து அதற்குரிய ஆடையை அணிந்திராமல் இருப்பதுபோலாகும். அது கிருபையின் கனிகள் பாவஇருதயத்தில் வளரலாம் என்பதுபோன்ற தோற்றத்தைக் கொடுத்துவிடலாம்; மனந்திரும்பாத மனிதர்கள் மெய்யான பக்திவிருத்தியையும், கிறிஸ்தவ ஒழுக்கத்தையும் அடையலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடலாம். இது கடவுளின் ஆவியானவரின் கிரியையை இழிவுபடுத்திவிடும். வேறுசிலர், இரட்சிப்பை அடையாமலே ஒருவன் பரிசுத்தத்திற்கான மெய்யான அறிகுறிகளை வெளிப்படுத்திவிடலாம் என்று கற்பனை செய்து அதனால் மிகவும் மனத்தளர்ச்சியுற்று, ‘நான் அவருக்கு சொந்தமானவன், அவர் எனக்கு சொந்தமானவர்’ என்று கிறிஸ்துவைப்பற்றி சொல்ல முடியாமல் போய்விடுமோ என்று ஏங்கித்தவிப்பார்கள். நண்பனே! இதுவரை நான் விளக்கியுள்ள நான்கு அறிகுறிகளும் உன்னில் காணப்படுமானால், கடவுளால் இரட்சிப்பை அடைந்திருக்கிறாய் என்பதை உணர்ந்து, நீ இரட்சிப்படையும்படி அவற்றை உன்னில் வைத்த கடவுளை மகிமைப்படுத்தி அதற்கேற்றபடி வாழ்ந்து வா.

“தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” (சங்கீதம் 139:24-25). உங்களுக்கு இயேசு தேவையானால், இப்போதே அவரிடம் போங்கள், அவர் உங்களை இரட்சிப்பார். உங்களில் இயேசு இருந்தால் – அவரில் நீங்கள் இருப்பீர்களானால் – அவரைப் பற்றி, அவரை நேசித்து, அவரில் ஆனந்தமடைந்து, அவருக்குப் பணிசெய்யுங்கள். நீங்கள் தேவனுடைய பிள்ளையாயிருப்பதால், அவர் உங்களைக் கடைசிவரைக் காத்து, உங்களில் அவர் ஆரம்பித்த கிரியையை அவர் பூரணமடையச்செய்வார்.

2 thoughts on “யார் மெய்யான கிறிஸ்தவன்?

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s