ஆசிரியருரை:

“இறையியல்” (Theology) என்ற வார்த்தை காதில் பட்டவுடனேயே தலைதெரிக்க ஓடும் கூட்டம் கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிகமாகவே இருப்பது நமக்குத் தெரியும். நான் போதகராக இருக்கும் சபைக்கு புதிதாக வந்த ஒரு ஆத்துமா தான் அதுவரை போய்க் கொண்டிருந்த சபையின் போதகர் ஒருமுறை தன் சபை மக்களைப் பார்த்து, “நான் உங்களுக்கு இறையியல் போதிக்கமாட்டேன்; கிறிஸ்துவையே போதிப்பேன்” என்று பெருமையோடு கூறியதாகக் குறிப்பிட்டார். அப்போதகரைப் பொறுத்தவரை இறையியலுக்கும் கிறிஸ்துவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவ்வாறு இறையியலற்ற ஒரு கிறிஸ்துவைப் பிரசங்கித்து ஆத்துமாக்களை அழித்துக் கொண்டிருக்கும் போதகர்களும், பிரசங்கிகளும்தான் எத்தனைபேர்! இவ்வாறு இறையியலுக்கும், வேதத்திற்கும் முதலிடம் கொடுக்காததால்தான் இன்று பெனிஹின், ஹாவார்ட் பிரவுன், கென்னத் கேப்லன்ட், போல் யொங்கி சோ போன்றோர் அநேக ஆத்துமாக்களை ஏமாற்றிப் பணம் பறித்து மாடமாளிகைகளைக் கட்டி வாழமுடிகின்றது, என்று கிறிஸ்தவ சபை வேதத்தையும், இறையியலையும் அலட்சியப்படுத்தத் தொடங்கியதோ அன்றே கெரிஸ்மெட்டிக் கூட்டத்தாரின் தோற்றத்திற்கும் வித்திடப்பட்டது; வேத இறையியலின் சோதனைக்குட்படாத வெறும் அனுபவத்தை மட்டும் நாடி அலையும் கூட்டமும் தலையெடுத்தது. இதனாலேயே இன்று இவர்கள் மத்தியில் வேதபூர்வமான பிரசங்கத்தையும் காணமுடிவதில்லை. வேத வசனங்களைக் கண்மூடித்தனமாக பயன்படுத்தும் வழக்கத்தையும் காண முடிகின்றது.

மெய் கிறிஸ்தவம் தழைத்தோங்க வேதபூர்வமான தெளிவான இறையியல் கோட்பாடுகளைப் பின்பற்றுவது அவசியம். இறையியல் என்பது போதகர்களுக்கும், பிரசங்கிகளுக்கும் மட்டும் சொந்தமானதல்ல. ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒருவிதத்தில் இறையியல் அறிஞனாக இருக்க வேண்டும். ஏனெனில் இறையியல் என்பது கடவுளைப் பற்றிய கோட்பாடு. கடவுளைப்பற்றி சரியாகத் தெரிந்து கொள்ளாமல் மெய் கிறிஸ்தவனாக இருக்க முடியாது. இதனைக் கருத்தில் கொண்டே இவ்விதழில் கிறிஸ்தவ இறையியல் பாடத்தை ஆரம்பிக்கிறோம். வாசித்து கர்த்தரின் அறிவில் வளர்ச்சியடையுங்கள்.

மறுமொழி தருக