போதகர்கள் எப்போதும் வசனத்தை தெரிந்து கொள்ளவும், பிரசங்கத்தைத் தயார் செய்யவும் முயல வேண்டும். ஒரு மணி நேரத்தையாகிலும் வீணாக்கக்கூடாது. திங்கட்கிழமை காலை முதல் சனிக் கிழமை இரவு வரை ஏனோதானோவென்று காலத்தைக் கழித்துவிட்டு வாரத்தின் முடிவுக்கு இரண்டொரு மணி நேரத்திற்குமுன் ஒரு தூதன் வந்து வாக்கியத்தைக் கொடுப்பான் என்று நினைக்கிற பிரசங்கி தேவனை பரீட்சை செய்கிறான். அப்படிப்பட்டவன் ஓய்வு நாளில் ஊமையாய் நிற்கவே தகுதியுடையவன்.
போதகர்கள் இரவும் பகலும் காவலுக்கு நிற்கிற காவற்காரர்களைப்போல் இருக்க வேண்டியவர்களானபடியால் தங்கள் கடமை முடிந்தது; இனிச் சும்மாயிருக்கலாம் என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு விடுதலையுமில்லை. பிரசங்கம் ஆயத்தம் செய்வதே போதகரின் முதல் வேலையாக இருப்பதால் அவர் இதை அலட்சியம் செய்தால் தனக்கும் தனது ஊழியத்திற்கும் கேடு வருவித்துக் கொள்வார். தேனீக்கள் காலை தொடங்கி மாலைவரை தேன் சேகரிப்பதுபோல் போதகர்கள் தமது மக்களுக்காக ஓயாமல் ஞான ஆகாரத்தை சேகரிக்க வேண்டும். வாக்கியங்கள் பலமாய் நமது மனத்தில்படும்போது அவற்றைக் குறித்துக்கொள்ள ஒரு கைப் புத்தகத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.
“முதலாவது தன சொந்த இருதயத்துக்கே பிரசங்கியாதவன், மற்றவர்களுக்கு சரியாய் பிரசங்கிக்க முடியாது” என்று ஜோண் ஓவன் சொல்லியிருக்கிறார். தனக்குப் போதனை செய்வது மிகக் கடினம். நமது ஊழியம் பலன் தர வேண்டுமானால் நமது பக்தி விருத்தி அடைய வேண்டும். பக்தி சிறக்க வேண்டும். பக்தியில் பழக வேண்டும். போதகருடைய தேவபக்தியாகிய புத்துயிர் எவ்வளவு செழிக்கிறதோ, அவ்வளவுக்கு அவருடைய ஊழியம் செம்மையாக நடக்கும்.
(“ஸ்பர்ஜன் அறிவுரைகள்” நூலிலிருந்து – சுவிசேஷ ஊழிய நூல் நிலையம், சென்னை, தமிழ்நாடு)