இந்த இதழின் எல்லா ஆக்கங்களையும் நானே எழுத கர்த்தர் துணை செய்தார். சில சமயங்களில் எப்படி இந்த இதழை முடிக்கப்போகிறோமோ என்ற ஏக்கம் எப்போதுமே எழும். இருந்தபோதும் குறிப்பிட்ட காலத்துக்குள் தரத்தில் எந்தவித குறைபாடும் இல்லாதபடி இதழ்களை நிறைவுசெய்ய கர்த்தர் துணை செய்திருக்கிறார்; தொடர்ந்தும் செய்கிறார். இந்த இதழ் நேரத்தோடு வெளிவர அநேகரின் ஒத்துழைப்பு இருந்திருக்கிறது. அவர்களெல்லோருக்கும் என் நன்றிகள்.
இறையியல் பயிற்சி பற்றி நம்மால் சிந்திக்காமல் இருக்க முடியாது. திருச்சபைக்கு போதக சமர்த்துள்ள போதகர்கள் தேவையெனில் அதற்குத் தகுதியுள்ளவர்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்தத் தகுதியை இன்றைய சூழ்நிலையில் எப்படிப் பெற்றுக்கொள்ளுவது? என்பது பற்றி இந்த இதழில் விளக்க முயன்றிருக்கிறேன். இது உங்களை சிந்திக்க வைக்கவேண்டும்.
இந்த இதழில் ‘கோபநிவாரணபலி’ பற்றிய ஆரம்ப ஆக்கத்தைத் தந்திருக்கிறேன். கிறிஸ்து நமக்காக சிலுவையில் செய்த தியாகப் பணி பற்றிய வேத சத்தியந்தான் ‘கோபநிவாரணபலி’. இந்த வார்த்தைக்கு தமிழ் வேதத்தில் ‘கிருபாதாரபலி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கோபநிவாரணபலி என்று அதை மாற்றி நான் விளக்கியிருப்பதற்கான காரணத்தை இந்த இதழில் நீங்கள் வாசிக்கலாம். இந்த சத்தியத்தில் நீங்கள் மேலும் தெளிவுபெற இது துணை செய்யும் என்று நம்புகிறேன். இதுபற்றி வரப்போகின்ற இதழ்களில் மேலும் எழுதவிருக்கிறேன்.
அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தை விரிவாக விளக்குகின்ற ஓர் ஆக்கமும் இதில் வந்திருக்கிறது. எப்படியெப்படியெல்லாமோ அதற்கு விளக்கங்கொடுத்து வருகிறவர்களை நாம் இன்று காண்கிறோம். வேதம் தெளிவானது; பொய்யுரைக்காது என்பது நிச்சயம். அதன்படி உண்மையில் வேதம் என்னதான் அந்த அதிகாரத்தில் விளக்குகிறது என்பதை வேதவிதிமுறைகளுக்கிணங்க விளக்கியிருக்கிறேன். அதையும் கர்த்தர் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கச் செய்வாராக. இதுவரை வந்துள்ள இதழ்களைப்போல இதையும் கர்த்தர் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கச் செய்ய வேண்டுமென்பதுதான் எங்கள் ஜெபம்.
– ஆசிரியர்.