கர்த்தரின் கிருபையால் இன்னுமொரு இதழை நேரத்தோடு முடித்து அனுப்ப முடிந்திருக்கிறது. இந்த இதழை சரிபார்த்து வெளியிட பலர் உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் என்னுடைய மனமார்ந்த நன்றி. ஆவியானவரின் வழிநடத்தல் இல்லாமல் எந்தப்பணியும் நிறைவேற முடியாது. அவருடைய வழிநடத்துதலை இந்த இதழைத் தயார் செய்யும்போது அனுபவித்திருக்கிறோம். கர்த்தருக்கே சகல மகிமையும் சேர வேண்டும்.
இவ்விதழில் தமிழ் வேத மொழிபெயர்ப்பு ஒன்றை ஆய்வு செய்திருக்கிறோம். திருவிவிலியம் என்ற பெயரோடு 1995ம் ஆண்டில் வெளிவந்த அந்த மொழிபெயர்ப்பை பல கிறிஸ்தவ நிறுவனங்கள் கத்தோலிக்க நிறுவனத்தோடு இணைந்து தமிழகத்தில் வெளியிட்டன. பொதுமொழிபெயர்ப்பு என்ற பெயரோடு அது வெளிவந்தது. கத்தோலிக்கர்களுக்காக அறுபத்தாறு வேதநூல்களோடு தள்ளுபடி ஆகமங்கள் என்று அழைக்கப்படும் நூல்களை இணைத்தும், கிறிஸ்தவர்களுக்குத் தனியாக தள்ளுபடி ஆகமங்களை இணைக்காமலும் இந்நிறுவனங்கள் இந்த மொழிபெயர்ப்பை வெளியிட்டன. கர்த்தரின் கிருபையால் இந்த மொழிபெயர்ப்பை எல்லோரும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தபோதும் இதைப் பயன்படுத்துகிறவர்கள் இல்லாமலில்லை. கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் இந்த மொழிபெயர்ப்பை ஆய்வு செய்து என்னுடைய கருத்துக்களை வெளியிட்டிருக்கிறேன். இந்த மொழிபெயர்ப்பை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும் ஒரு மொழிபெயர்ப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதையும், நாம் எந்த மொழிபெயர்ப்பிலும் என்னென்ன அம்சங்களைக் கருத்தோடு கவனித்து ஆராயவேண்டும் என்பதையும் அறிந்துகொள்ள இந்த ஆக்கம் உதவும் என்று நம்புகிறேன்.
இந்த இதழில் வந்திருக்கின்ற ஏனைய ஆக்கங்களும் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்க கர்த்தர் துணை செய்யட்டும். ஒவ்வொரு இதழையும் கவனத்தோடும், ஜெபத்தோடும் தயாரித்து வெளியிட பெருமுயற்சிகள் எடுக்கிறோம். இருந்தபோதும் எதாவது குறைபாடுகள் இருப்பின் வாசகர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். திருமறைத்தீப இதழைப் பெற்றுக்கொள்ள விரும¢புகிறவர்கள் இந்த இதழின் கடைசிப்பக்கங்களில் தரப்பட்டிருக்கும் முகவரிகளோடு தொடர்பு கொண்டு அதைப் பெற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து இந்த இலக்கியப் பணிக்காகவும், எங்களுக்காகவும் ஜெபியுங்கள். நன்றி!
– ஆசிரியர்.