Holiness, J C Ryle

Holiness, J C Ryle – Evangelical Press, Darlington DL3 0PH. UK

Holiness, J C Ryle – The Banner of Truth, Edinburgh, UK

Holiness - 3dபரிசுத்தத்தைப் (Holiness) பற்றி எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான ஆங்கில நூல்கள் இருக்கின்றன. அவற்றில் எத்தனையோ நூல்கள் அருமையானவை. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பட்டியலில் பத்துக்கு மேல் சட்டென்று பெயர் சொல்லக்கூடிய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் முதலிடத்தைப் பிடிக்கக்கூடிய நூல் எது என்று சிந்திக்க ஆரம்பித்தால் அது கொஞ்சம் தலைசுற்றக்கூடிய விஷயந்தான். அந்தளவுக்கு நல்ல நூல்கள் இருக்கின்றன. இவற்றில் பழைய எழுத்தாளர்களும், புதியவர்களும் எழுதிய நூல்கள் அடங்கும்.

இருந்தபோதும், இந்த ஆவிக்குரிய விஷயத்தில் என் கண்முன் எப்போதும் நிற்கின்ற ஒரு நூல் ஜே. சி. ரைல் என்பவரால் எழுதப்பட்ட பரிசுத்தம்தான் (Holiness). முதலில் ரைலைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறேன். இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆங்கிலிக்கன் பிரிவைச் சேர்ந்த சபையின் போதகராக இருந்தார். அந்தக்காலத்தில் ஆங்கிலிக்கன் பிரிவு திருச்சபை வேதத்திற்கு முரணான வித்தியாசமான பாதையில் போக ஆரம்பித்திருந்தது. அதற்கு மத்தியில் தெளிவான சுவிசேஷ விசுவாசத்தோடு வேதசத்தியங்களை மட்டும் விசுவாசித்து பிரசங்கித்து தனியொருவராக இக்கட்டுகளுக்கு மத்தியில் பணிபுரிந்திருந்தவர் ஜே. சி. ரைல். ஒவ்வொரு காலப்பகுதியிலும் திருச்சபை வெவ்வேறான சத்தியப்போராட்டங்களைச் சந்திக்க நேரிடும். அந்தவகையில் ரைலும் அத்தகைய போராட்டங்களைச் சந்திக்க நேர்ந்தது. ஒரு சீர்திருத்த பாப்திஸ்து என்ற முறையில் ரைலின் சபைக் கோட்பாடுகளில் நமக்கு ஒத்த கருத்து இல்லாவிட்டாலும் இரட்சிப்பு மற்றும் பரிசுத்த வாழ்க்கை பற்றிய வேதரீதியிலான சீர்திருத்த, பியூரிட்டன் போதனைகளின் அடிப்படையில் ரைல் ஸ்பர்ஜனைப்போன்ற நம்பிக்கைகளைக் கொண்டிருந்ததால் அவரை நம்மவர்களில் ஒருவராகத்தான் நினைக்கிறேன்.

jcryle2பரிசுத்தம் (Holiness) என்ற இந்த நூலை ரைல் எழுதுவதற்கு காரணங்கள் இருந்தன. அதை ரைலே நூலின் முன்னுரையில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். பரிசுத்தத்தைப் பற்றி இந்நூலை ரைல் எழுதுவதற்கு இறையியல் காரணங்களும், நடைமுறைக் காரணங்களும் இருந்தன. அத்தகைய ஏழு இறையியல் காரணங்களை அவர் விளக்கியிருக்கிறார். ஒருவருடைய இறையியல் நம்பிக்கைகளைப் பொறுத்தே அவருடைய நடைமுறை வாழ்க்கையும், நடவடிக்கைகளும் அமையும். அதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. அந்தவகையில் ரைலினுடைய காலத்தில் பரிசுத்தம் பற்றிய விஷயத்தில் காணப்பட்ட தவறான இறையியல் கோட்பாடுகளே அது பற்றி ரைலை எழுத வைத்தன. இதுவரையிலும் சீர்திருத்த, பியூரிட்டன் பெரியவர்களிடம் காணப்படாத புதிய போதனைகள் பரிசுத்தமாக்குதல் பற்றி உருவாகியிருப்பதை அடையாளங்கண்ட ரைல் கிறிஸ்தவர்கள் அவற்றைப் பின்பற்றித் தவறான வழியில் போய்விடக்கூடாது என்ன ஆதங்கத்துடனும், ஆவிக்குரிய போதக வாஞ்சையோடும் இந்த நூலை எழுதியிருக்கிறார். அப்படி ரைல் கவனித்த அந்த மாறுபாடான கருத்துக்கள் என்ன?

பரிசுத்தமாக்குதலை அடைவதற்கு விசுவாசம் மட்டும் போதுமானது என்று அன்று பரவலாகப் போதிக்கப்பட்டது. எந்தவித விளக்கத்தையும் கொடுக்காமல் ‘விசுவாசம் மட்டுமே’ பரிசுத்தமாக்குதலுக்கு தேவையானது என்று கிளிப்பிள்ளைபோல் கூறுவது வேதபோதனைகளுக்கு முரணானது என்று ரைல் கண்டார். கிறிஸ்துவை அடைய விசுவாசம் மட்டுமே தேவை என்பது சரியானது; ஆனால், பரிசுத்தமாக்குதலுக்கு விசுவாசம் மட்டுமே தேவை என்பது வேத போதனையல்ல. நீதிமானாக்குதலுக்கு விசுவாசம் மட்டுமே தேவை என்று கூறும் வேதம் விசுவாசத்தினால் பரிசுத்தமாக்கப்படுகிறோம் என்று ஓரிடத்திலும் போதிக்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தவிதத்தில் கிறிஸ்தவ வாழ்க்கை பற்றிய தவறான கருத்துக்கள் எழுந்தன. இந்தக் கருத்துக்கள் அடிப்படையில் வேதமும், வரலாற்றுக் கிறிஸ்தவமும் போதிக்கும் கிறிஸ்தவத்தை ஒத்து அமைந்திருக்கவில்லை. இதுபற்றி விளக்குகின்ற தற்காலத்துப் போதகரான மொரிஸ் ரொபட்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

ROBERTS-Maurice_1“நீதிமானாக்குதல் விசுவாசத்தினால் மட்டும் கிடைக்கிறது. ஆனால், பரிசுத்தமாகுதல் விசுவாசத்தோடும், நம்முடைய கிரியைகளோடும் தொடர்புடையது. கிருபையில் வளருவதும், பரிசுத்தமாகுதலும், பரிசுத்தமாகுதலுக்கான நடவடிக்கைகளும் விசுவாசத்தினால் மட்டும் நிகழ்வதில்லை. இது கெஸ்ஸிக் இயக்கம் (Keswick movement) நூறுவருடங்களுக்கு முன்புவிட்ட தவறாக இருக்கிறது. அந்தக் காலத்தில் பிரபல்யமாக இருந்த கெஸ்ஸிக் ஆவிக்குரிய கூட்டங்களில் ஒரு தவறான நம்பிக்கை பின்பற்றப்பட்டது. அதாவது, நாம் விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாகிறோம், அதேபோல் விசுவாசத்தினால் மட்டுமே பரிசுத்தமாகுதலையும் அடைகிறோம் என்பதே அது. கெஸ்ஸிக் கூட்டங்களில் பேசிய சில பிரசங்கிகள் ஒன்றைச் செய்தார்கள். பிரசங்கிக்கப் போகிறவர் தன் கைகள் ஒவ்வொன்றிலும் நாணயத்தை வைத்திருப்பார். அவர் ஒரு கரத்தை முன்னால் நீட்டி விரித்துச் சொல்லுவார், ‘இதோ இருக்கிறது உன்னுடைய நீதிமானாக்குதல். அதை உன்னுடைய விசுவாசத்தினால் மட்டும் வந்து எடுத்துக்கொள். இது இலவசமான கிருபை. இதுதான் உன்னுடைய நீதிமானாக்குதல்’ என்பார். அதேபோல் அவர் மற்ற கையையும் நீட்டி விரித்து சொல்லுவார், ‘இதோ இருக்கிறது உன்னுடைய பரிசுத்தமாகுதல். அதை உன்னுடைய விசுவாசத்தினால் மட்டும் வந்து எடுத்துக்கொள்’ என்பார். இவர் சொன்னதில் முதவாவது சரியானது, ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், இரண்டாவது முழுத்தவறு, ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கமல்ல. நம்முடைய தனிப்பட்ட விசுவாசத்தின் மூலமாக மட்டும் நாம் பரிசுத்தமாகுதலை அடைவதில்லை. விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்படுகிறோம். ஆனால், பரிசுத்தமாகுதல் நம்மில் தொடர்ச்சியாக நிகழ்கின்ற கிருபை. தொடர்ச்சியான பரிசுத்தமாகுதலின் ஒரு பகுதியாக தேவனுடைய வார்த்தையில் விளக்கப்பட்டிருக்கும் ஒழுக்க நியதிக் கட்டளைகளுக்கு அடிபணிந்து அவற்றைப் பின்பற்ற நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.”

விசுவாசத்தைப் பற்றிய ரைலின் காலத்து இந்தப் புதிய விளக்கமே வேறு தவறான போதனைகளுக்கும் வழிகோளியது. அவற்றையும் ரைல் விளக்கியிருக்கிறார். விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்கப்படுவதைப்போலவே சடுதியாக பரிசுத்தமாகுதலும் நிகழ்கிறது என்ற தவறான போதனை, பரிசுத்தமாகுதலில் விசுவாசிக்கு எந்தப் பொறுப்புமில்லை என்றும் அவன் பரிசுத்தமாகுதலுக்கு தன்னைக் கிறிஸ்துவிடம் முழுதாக அர்ப்பணிக்க வேண்டியது மட்டுமே தேவையாக இருக்கின்றது என்று விளக்கங்கொடுப்பதற்கு இடங்கொடுத்தது. இதெல்லாம் வரலாற்றுக் கிறிஸ்தவ விளக்கங்களைவிட அடிப்படையிலேயே மாறுபட்டவை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் காணப்பட்ட இத்தகைய விளக்கங்களே பிற்காலத்தில் பெந்தகொஸ்தே போதனைகள் உருவாகவும் வழிகோளியது. ரைல் இந்தத் தவறான போதனைகளின் ரூபத்தைத் தோலுரித்துக் காட்டி பரிசுத்தம் (Holiness), பரிசுத்தமாக்குதல் (Sanctification) என்றால் உண்மையில் என்ன என்பதைத் தெளிவாகத் தன் நூலில் விளக்கியிருக்கிறார்.

இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழும் நாம் ரைல் சந்தித்த அதே தவறான போதனைகளைத்தான் தொடர்ந்தும் எதிர்கொண்டு வருகிறோம். சீர்திருத்த, பியூரிட்டன் போதனைகளே இந்தத் தவறான போதனைகளை நாம் வேதபூர்வமாக இனங்கண்டுகொள்ள உதவுகின்றன. நீதிமானாக்குதலைப் பற்றியும், பரிசுத்தமாகுதலைப் பற்றியும் தெளிவாகப் புரிந்துகொள்ளாவிட்டால் கிறிஸ்தவ வாழ்க்கையில் தவறான நடைமுறைகளைக் கைக்கொண்டு ஆவிக்குரிய சந்தோஷமில்லாமல்தான் வாழ நேரிடும். ரைலின் காலத்தைப் போலவே இன்றும் ‘பாவத்தோடு போராடி, அதை நம்மில் தொடர்ச்சியாக அழித்து, அதற்கு விலகி நின்று வாழ வேண்டும்’ என்ற சத்தியத்திற்கு ஆபத்து இருந்துவருகிறது. சுலபமாக, பொறுப்புகள் எதுவுமில்லாமல், விசுவாசத்தின் மூலம் மட்டும் ஜெபித்து நம்மைக் கர்த்தருக்கு அர்ப்பணஞ் செய்து வந்தால் பரிசுத்தமாகி விடலாம் என்ற தவறான கருத்து பரவலாக இருந்துவருகின்றது. ஒழுக்க நியதிக் கட்டளைகளைப் (பத்துக் கட்டளைகள்) பின்பற்றிப் பாவத்தை வெறுத்தொதுக்கி வாழவேண்டும் என்ற போதனைகளுக்கு எதிர்ப்பும் இருக்கின்றது. ரைல் தன்காலத்துப் பிரச்சனைகளை மட்டும் அணுகவில்லை; பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே நம் காலத்துப் பிரச்சனைகளுக்குத் தகுந்த பதிலளித்திருக்கிறார். இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு மரித்த மார்டின் லொயிட் ஜோன்ஸ் என்ற வேல்ஸைச் சேர்ந்த போதகர் ரைலின் இந்நூலின் ஒரு பதிப்பிற்கு முன்னுரை வழங்கி தன் காலத்தில் இதன் தேவையைப் பெரிதாகச் சொல்லியிருக்கிறார். அந்தளவுக்கு காலங்களைக் கடந்து தொடர்ந்து இந்நூலின் பயன்பாடு இருந்து வருகிறது.

பரிசுத்தம் (Holiness) என்ற இந்த நூலில் அதன் இருபத்தியோரு அதிகாரங்களில் ரைல் சீர்திருத்தவாத, பியூரிட்டன் வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் போதனைகளைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். இந்த நூல் போதிக்கும் வகையில் வேதபூர்வமான பரிச்சுத்தத்தைத் தன்னில் கொண்டிராத எவருடைய விசுவாசமும் மெய்யான விசுவாசமாக இருக்க முடியாது. இன்றைய காலப்பகுதியில் மேலைத்தேய கிறிஸ்தவம் ரைலின் இந்த விளக்கங்களுக்கு மாறான ஒரு பரிசுத்தமாகுதலை அமைத்துக்கொள்ளப் பார்க்கிறது. அதன் விளைவுகளையும் அது சந்தித்து வருகிறது. ரைலின் போதனைகள் இன்றைக்கு மேலைத்தேய கிறிஸ்தவ சபைகளில் ஆணித்தரமாகப் போதிக்கப்பட வேண்டும். போதகர்கள் தைரியமாக மனித பயமில்லாமல் அதைச் செய்ய வேண்டும். என் நண்பரான ஜிம் சவாஸ்தியோ (Jim Savastio) தன் சபையில் இந்த முழு நூலின் அதிகாரங்களிலும் இருந்து பிரசங்கங்களை அளித்திருக்கிறார். அதைக் கேட்டு வளரும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் அந்த சபை மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

பரிசுத்தமாகுதல் பற்றிய சீர்திருத்த விசுவாசத்தைப் பெருமளவுக்கு அறிந்திராத கீழைத்தேய கிறிஸ்தவத்திற்கு இன்று ரைலின் இந்தப் போதனைகள் தேவை. இவை பொறுமையோடும் கருத்தோடும் சிந்தித்துப் படிக்கவேண்டிய போதனைகள். இவற்றின் முதல் ஏழு அதிகாரங்களிலும் வேத அடிப்படையில் சீர்திருத்த, பியூரிட்டன் விசுவாசத்தின் பரிசுத்தம் பற்றிய போதனைகளை ரைல் அருமையாக விளக்கியிருக்கிறார். ரைல் எப்போதுமே எளிமையாக எழுதுபவர். அது அவரில் காணப்பட்ட ஒரு சிறப்புத்தன்மை. அதேவிதத்தில்தான் அவர் பிரசங்கமும் செய்திருக்கிறார். அதனால் ஆங்கிலத்தில் இருக்கும் இந்நூலை வாசிப்பதில் பலருக்கும் தடையிருக்காது. இந்நூல் பல பதிப்புகள் வெளிவந்து நீண்டகாலம் அச்சில் இருந்து வருகின்றது. பதினைந்துக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் இதனைப் பதிப்பித்து வந்திருக்கின்றன. பிரிட்டனில் இவெஞ்சலிக்கள் பிரஸ் பதிப்பகம் இதை வெளியிட்டது. என்னுடைய சபைப் புத்தக நிலையத்தில் அந்தப் பதிப்பையே விற்பனைக்கு வைத்திருக்கிறோம். இது சுருக்கப்பதிப்பாகவும் வெளிவந்திருக்கிறது. இருந்தபோதும் மூலப் பதிப்பை வாசிப்பதுபோலிருக்காது சுருக்கப்பதிப்புகள். சுருக்கப்பதிப்புகளை வாசிக்கின்றவர்கள் மூலப்பதிப்பை வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்.

ஆங்கில மூலம் அந்தளவுக்கு கடுமையான ஆங்கிலம் அல்ல. பொறுமையோடு வாசிக்கிறவர்கள் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் போதனைகள் இருக்கின்றன. வேத சத்தியங்களான நீதிமானாக்குதல், பரிசுத்தமாகுதல், இரட்சிப்பின் நிச்சயம் போன்றவற்றில் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு அந்த சத்தியங்ளைத் கற்றுக்கொள்ளாததால் நூல் சிறிது கடினமாகத் தெரியுமே தவிர அதன் மொழிநடையில் கடினம் இல்லை.

Dr.-D.-Martyn-Lloyd-Jonesமார்டின் லொயிட் ஜோன்ஸ் 1930ம் ஆண்டில் பழைய புத்தகங்களை விற்கும் ஒரு புத்தகக் கடையில் ரைலின் பரிசுத்தம் நூலைக் கண்டெடுத்தார். அதை வாசித்த அவர், ‘இதற்கு முன்பில்லாததொரு ஆவிக்குரிய திருப்தி இதை வாசித்தபோது எனக்கேற்பட்டது’ என்று கூறியதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து, ‘ரைல் எப்போதுமே வேத அடிப்படையில் விளக்கமளித்து எழுதுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார். அவர் ஒருபோதும் ஒரு கருத்தை உருவாக்கிக்கொண்டு அந்தக் கருத்தை நிரூபிக்க வேதத்தில் அதற்கு ஆதரவளிக்கும் வசனங்களைத் தேடி அலைவதில்லை. அவர் வேதபகுதிகளை எடுத்து அவற்றிற்கு நேரடியாக விளக்கமளிப்பதையே இலக்காகக் கொண்டிருக்கிறார். அவருடைய விளக்கங்கள் சிறப்பானவையும், உயர்தரமானவையுமாகும். அவை எப்போதுமே தெளிவாகவும், தத்துவரீதியாகவும், வேதசத்தியங்களுக்கு விளக்கங்கொடுத்து வழிநடத்துபவையாகவும் இருக்கின்றன. அவருடைய எழுத்துக்கள் எப்போதுமே பலமானவையாக அமைந்து வெறும் உணர்ச்சிபூர்வமான தியான சிந்தனைகள் என்று தள்ளிவிடமுடியாதபடி அமைந்திருக்கும். ரைல் பதினேழாம் நூற்றாண்டு பியூரிட்டன்களின் எழுத்துக் கிணற்றில் அதிகமாகத் தாகந்தீர்த்துக் கொண்டிருந்திருப்பதைக் காண்கிறோம். அவருடைய எழுத்துக்களெல்லாம் பியூரிட்டன் போதனைகளை நவீன வாசகர்களுக்கு நல்ல முறையில் செதுக்கித் தந்தவையாக இருக்கின்றன என்று சொல்லுவது மிகையாகாது’ என்று கூறியிருக்கிறார்.

ரைலின் இந்நூல் ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவசியம் வாசித்துப் பயன்பெற வேண்டிய நூல். இது உங்களுடைய டெப்லெட்டிலோ அல்லது ஐ பேட்டிலோ இறக்கி வாசிக்கக்கூடிய விதத்தில் ‘கின்டில்’ பதிப்பாகவும் வந்திருக்கிறது.

ரைலின் பரிசுத்தம் (Holiness) நூலை வாங்கி உடனே வாசிக்க ஆரம்பியுங்கள். உங்களுடைய பரிசுத்த வாழ்க்கை நிச்சயம் மேம்படும்.

One thought on “Holiness, J C Ryle

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s