கலங்கரை விளக்கு
வருடங்கள் உருண்டோடி விட்டன
வாய்க்காலில் பாய்ந்திறங்கும் வயல் நீரைப்போல . . .
இருபது ஆண்டுகளில் எத்தனை அனுபவங்கள்
எண்ணிப் பார்த்தால் வியக்க வைக்கும் வரலாறு
இன்றுபோல் தெரிகிறது அன்றொரு நாள்
நாம் ஆரம்பித்த இந்த அதிசய ஊழியம்
எங்கு போகிறோம் என்றெல்லாம் தெரியாது
இந்தப் பாதைதான் சரியான தென்றுணர்ந்து
எளிமையாய் ஆரம்பித்தது திருமறைத்தீபம்
ஏற்ற இறக்கங்களை சட்டை செய்யாமல்
எத்தனையெத்தனை அனுபவங்கள்தான்
இத்தனை வருடங்கள் கற்றுத் தந்தன
சொல்லி மாளாது சொல்ல ஆரம்பித்தால்
இதற்குத்தான் இதுவரைக் காத்திருந்தே னென்றோரும்
இவ்வினியதமிழ் எங்கு கற்றீரென்று வியந்தோரும்
சத்தியத்தை சத்தியமாய்த் தந்ததற்கு நன்றி நல்கியோரும்
சத்தியத்தைக் கலந்தெழுதென்று பக்குவமாய்ப் பகர்ந்தோரும்
பணிய மறுக்கிறானே என்று பயமுறுத்தப் பார்த்தோரும்
எரித்துவிடவேண்டு மிதையென்று இறுமாப்பு கொண்டோரும்
இருதயம் தொடப்பட்டு மனமிளகி வாழ்த்தியோரும்
உங்களோடுதான் நானென்று நெஞ்சுரத்தோடு நின்றோரும்
சத்தியத்தால் உந்தப்பட்டு சத்தியமாய்வாழ முனைந்தோரும்
பரிசுத்த வாழ்க்கையைப் பக்குவமாய் வாழும்
பாதை அறிந்துகொண்டேன் என்று பதமாய் எழுதியோரும்
ஊழியத்தை ஊழியமாய்ச் செய்ய உதவியதற்கு
உயிருள்ளவரை நன்றி உங்களுக்கென்றோரும்
நினைக்க நினைக்க மலைத்துப் போகுமளவுக்கு
நீங்காமல் நிற்கின்றன நித்தமும் இந்நினைவுகள்
பத்தோடு பதினொன்றாய்ப் பட்டியலில் சேராமல்
சத்தான முத்துக்களை நித்தமும் கோர்த்தெழுதி
சீர்திருத்த வரலாற்றுப் பாதையை முன்வைத்து
தமிழினம் சீர்பெற உழைப்பதையே இலக்காக
இருதயத்தில் தாங்கி இருபது வருடங்கள்
உறங்காது, தளராது, உதைகள்பல பெற்று
விழுந்தாலும் நிமிர்ந்துவிடும் தஞ்சாவூர் பொம்மைபோல்
தியாகங்கள் பலசெய்து திட்டுக்களும் வாங்கி
வாழ்கின்ற காலத்தில் நம்மினம் வளமாக
வளர்கின்ற வாலிபரே எதிர்காலத் தலைமுறையென
சீராக அவர்களுக்கு தேவசித்தத்தைப் போதித்து
கர்த்தரில் மட்டுமே கடைசிவரைத் தங்கி
காலமெல்லாம் அவர்புகழ் கானத்தோடு பாடி
கலங்கரை விளக்காக, தமிழினத்து திருச்சபைகள்
தலையுயர உழைக்கும் மரமாக நிற்கும் திருமறைத்தீபம்
– சுபி
உணர்வாய் உண்மை நிறைவுதனை
வருந்தும் பாரம் வதைத்திட்டால்
வாரீர் இயேசு இரட்சிப்பார்
பொருந்தும் பலியோ காணிக்கைப்
பொருளோ எதுவும் வேண்டாமே
நொருங்கும் மனதைக் கொடுத்துவிடு
நோவு பாரம் நீக்கியுன்
சுருங்கும் வாழ்வை வளமுடனே
சுகிக்க வழியாய் பலமாவார்
வாழத் தகுந்த வாழ்வுதனை
வழியாம் இயேசு விளம்பினதால்
ஆழக் கடலின் முத்தினைப்போல்
ஆண்டவர் தந்த சத்தியத்தை
பாலப் பருவ மனந்திறந்து
பருகி நீயவ் வழிநடந்தால்,
காலன் வரினும் கலக்கமின்றிக்
களிப்போ டமைதி கண்டிடுவாய்
கர்த்தர் இயேசு இரட்சிப்பின்
கலத்தை ஏந்தி அழைக்கின்றார்
முற்றாய் மனதை ஒப்புவித்தால்
முழுதாய் வாழ்வு புதிதாகும்
வற்றா இருளின் காலமிது
வல்ல தேவன் ஒளியாவார்
உற்றால் உந்தன் இரட்சிப்பை
உணர்வாய் உண்மை நிறைவுதனை!
– ஜெயதீஸ்
(Paris, France)