இவை எவ்வாறு ஒன்றோடொன்று பொருந்திப் போகின்றன?
- இரண்டுமே கர்த்தரின் இலவச கிருபையின் காரணமாக விசுவாசிகளை வந்தடைகின்றன.
- இவை இரண்டுமே கிறிஸ்துவின் கிரியைகளினால் நிறைவேறியவை. அதன் மூலம் நீதிமானாக்கும் பாவமன்னிப்பும், பரிசுத்தப்படுத்தும் பரிசுத்தமும் கிடைக்கின்றன.
- இவை இரண்டுமே ஒரு விசுவாசியில் காணப்படுகின்றன; நீதிமானாக்கப்படுகின்றவன் எப்போதும் பரிசுத்தமாக்கப்படுகிறான், பரிசுத்தமாக்கப்படுகிறவன் எப்போதும் நீதிமானாகக் காணப்படுகிறான்.
- இவை இரண்டும் ஒரே நேரத்தில் ஆரம்பமாகின்றன. எந்த வேளையில் ஒருவன் நீதிமானாக்குதலுக்கு உள்ளாகிறானோ அதேவேளை அவன் பரிசுத்தமாகுதலுக்கும் உள்ளாகிறான்.
- இவை இரண்டுமே இரட்சிப்புக்கு அவசியமானவை. பாவமன்னிப்பைப் பெற்று, பரிசுத்தத்தையும் தன்னில் கொண்டிராமல் எவரும் பரலோகத்தை அடைய முடியாது.
இவை எவ்வாறு வேறுபடுகின்றன?
- கிறிஸ்துவுக்காக ஒருவரை நீதியானவராகக் கருதுவதே நீதிமானாக்குதல். இது விசுவாசிக்காக செய்யப்படுவது. ஆனால், பரிசுத்தமாக்குதலோ ஒருவர் தனக்குள் நீதியுள்ளவராக இருக்கும்படி பரிசுத்த ஆவியானவர் அவருக்குள் செய்கின்ற கிரியை. இது விசுவாசியில் செய்யப்படுகிறது.
- நீதிமானாக்குதல் மூலம் விசுவாசிகள் பெற்றிருக்கும் நீதி கிறிஸ்துவுடையதே தவிர அவர்களுடையதல்ல. ஆனால், பரிசுத்தமாகுதலின் மூலம் கிடைக்கும் நீதி விசுவாசிகளினுடையது.
- நீதிமானாக்குதலைப் பொறுத்தவரையில் நாம் செய்கின்ற மதக் கிரியைகளினால் எந்தப் பயனுமில்லை. கிறிஸ்துவில் வைக்கின்ற விசுவாசம் மட்டுமே அவசியமாயிருக்கின்றது. ஆனால், பரிசுத்தமாகுதலில் நாம் கிரியை செய்கிறோம்; நாம் போராடுகிறோம், நாம் ஜாக்கிரதையாயிருக்கிறோம், நாம் ஜெபிக்கிறோம், நாம் உழைக்கிறோம்!
- நீதிமானாக்குதல் முடிந்து நிறைவேறியதாக இருக்கிறது. ஆனால், நாம் பரலோகம் அடையும்வரை பரிசுத்தமாகுதல் நிறைவடையாது.
- நீதிமானாக்குதல் வளரவோ, அதிகரிக்கவோ செய்யாது. ஒருவன் முதல் தடவையாக விசுவாசித்த நேரத்தில் அடைந்த நீதிமானாக்குதலே எப்போதும் தொடர்ந்து அதேபோல் இருக்கும். ஆனால், பரிசுத்தமாகுதல் நம்முடைய ஆவியில் ஏற்படும் அசைவாகும்; அது வளர்ந்து இவ்வுலக வாழ்நாள் முழுவதும் அதிகரிக்கும்.
- கர்த்தருக்கு முன்பாக அவரால் நாம் எவ்வாறு கணிக்கப்படுகிறோம் என்பதைக் குறித்தது நீதிமானாக்குதல். பரிசுத்தமாகுதலோ நம்முடைய ஆவி இருக்கும் தன்மையைக் குறித்தது.
- பரலோகத்தை அடைவதற்கான அதிகாரத்தை நமக்குத் தருகிறது நீதிமானாக்குதல்; பரலோக வாழ்க்கையை அனுபவிக்க நம்மைத் தயாராக்குகிறது பரிசுத்தமாகுதல்.
- நமக்கு வெளியில் இருந்து நமக்காக கர்த்தர் செய்வது நீதிமானாக்குதல்; மற்றவர்களுடைய கண்களுக்கு அது புலனாகாது. கர்த்தர் நமக்குள் செய்வது பரிசுத்தமாகுதல்; நம்மைச் சுற்றி இருப்பவர்களால் அதைக் கண்டுகொள்ள முடியும்.
இந்த வேறுபாடுகளை வாசகர்கள் புரிந்துகொள்வது நல்லது. இந்த இரண்டு பதங்களையும் குறித்து குழப்பமடையாமலும், அவற்றின் வேறுபட்ட தன்மைகளை மறந்துவிடாமலும் இருங்கள். இவை இரண்டும் வெவ்வேறானவை; இருந்தபோதும் இவற்றில் ஒன்றைக் கொண்டிருப்பவர் மற்றதையும் கொண்டிருப்பார்.
[இது ஜே. சீ. ரைலின் ‘பரிசுத்தத்தன்மை’ என்ற மூல நூலின் சுருக்கவெளியீடான ‘பரிசுத்தத்தன்மையின் அம்சங்கள்’ என்ற கிருபை வெளியீடுகளின் (Grace Publications, UK) ஆங்கில நூலில் உள்ள இரண்டாம் அதிகாரத்தின் ஒரு பகுதியின் தமிழாக்கம். இந்தத் தமிழாக்கத்தை ஆசிரியரே செய்திருக்கிறார்.]