நீதிமானாக்குதல் விசுவாசத்தினால் மட்டும் கிடைக்கிறது. ஆனால், பரிசுத்தமாகுதல் விசுவாசத்தோடும், நம்முடைய கிரியைகளோடும் தொடர்புடையது. கிருபையில் வளருவதும், பரிசுத்தமாகுதலும், பரிசுத்தமாகுதலுக்கான நடவடிக்கைகளும் விசுவாசத்தினால் மட்டும் நிகழ்வதில்லை. இது கெஸ்ஸிக் இயக்கம் (Keswick movement) நூறுவருடங்களுக்கு முன்புவிட்ட தவறாக இருக்கிறது. அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் பிரபல்யமாக இருந்த “கெஸ்ஸிக் ஆவிக்குரிய கூட்டங்களில்” ஒரு தவறான நம்பிக்கை பின்பற்றப்பட்டது. அதாவது, நாம் விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாகிறோம், அதேபோல் விசுவாசத்தினால் மட்டுமே பரிசுத்தமாகுதலையும் அடைகிறோம் என்பதே அது. கெஸ்ஸிக் கூட்டங்களில் பேசிய சில பிரசங்கிகள் ஒன்றைச் செய்தார்கள். பிரசங்கிக்கப் போகிறவர் தன் கைகள் ஒவ்வொன்றிலும் ஒரு நாணயத்தை வைத்திருப்பார். அவர் ஒரு கரத்தை முன்னால் நீட்டி விரித்துச் சொல்லுவார், ‘இதோ இருக்கிறது உன்னுடைய நீதிமானாக்குதல். அதை உன்னுடைய விசுவாசத்தினால் மட்டும் வந்து எடுத்துக்கொள். இது இலவசமான கிருபை. இதுதான் உன்னுடைய நீதிமானாக்குதல்’ என்பார். அதேபோல் அவர் மற்ற கையையும் நீட்டி விரித்து சொல்லுவார், ‘இதோ இருக்கிறது உன்னுடைய பரிசுத்தமாகுதல். அதை உன்னுடைய விசுவாசத்தினால் மட்டும் வந்து எடுத்துக்கொள்’ என்பார். இவர் சொன்னதில் முதவாவது சரியானது, ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், இரண்டாவது முழுத்தவறு, அது ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கமல்ல. நம்முடைய தனிப்பட்ட விசுவாசத்தின் மூலமாக மட்டும் நாம் பரிசுத்தமாகுதலை அடைவதில்லை. விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்படுகிறோம். ஆனால், பரிசுத்தமாகுதல் நம்மில் தொடர்ச்சியாக நிகழ்கின்ற கிருபை. தொடர்ச்சியான பரிசுத்தமாகுதலின் ஒரு பகுதியாக தேவனுடைய வார்த்தையில் விளக்கப்பட்டிருக்கும் ஒழுக்க நியதிக் கட்டளைகளுக்கு அடிபணிந்து அவற்றைப் பின்பற்ற நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
[மேலே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த விளக்கத்தை ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த மொரிஸ் ரொபட்ஸ் பல வருடங்களுக்கு முன் தன்னுடைய நியூசிலாந்து வருகையின்போது ஒழுக்க நியதிக் கோட்பாடுகள் பற்றிக் கொடுத்த பிரசங்கங்களில் ஒன்றின் பகுதியாகும். – ஆர்]