கர்த்தர் தன்னுடைய பெருங்கிருபையால் இந்த வருடத்திற்கான கடைசி இதழை நல்லபடியாக முடித்து வெளியிட துணை செய்தார். தமிழகத்திற்கு வந்த ஐரிஷ் பெண்ணான ஏமி கார்மைக்கல் தென்னிந்திய டோனவூரில் குடியேறி நூற்றுக்கணக்கான சிறு குழந்தைகளை சமுதாய சீரழிவிலிருந்து காப்பாற்றி வளர்த்த அருஞ்செயலையும், அவருடைய பணிகள் பற்றிய ஆக்கபூர்வமான ஆய்வினையும் இந்த இதழில் வாசிக்கலாம். சுவிசேஷப் பணியையும், நற்பணிகளையும் இணைத்துக் குழப்பிக் கொள்ளாமல் இரண்டையும் சரிவரப் புரிந்துகொள்ள இந்த ஆக்கம் துணைசெய்யுமென்று நம்புகிறேன்.
கல்வினித்துவ ஐம்போதனைகளான கிருபையின் போதனைகள் நமக்கு இறையாண்மையின் அடிப்படையில் கிறிஸ்து நிறைவேற்றிய இரட்சிப்பின் பெருமையை உணர்த்துகின்றன. அப்போதனைகளைக் கிறிஸ்தவர்கள் அனைவரும் நன்கறிந்து தங்களுடைய இரட்சிப்பிற்காக வாழ்நாள் முழுதும் தேவனுக்கு நன்றிபாராட்டி வாழவேண்டும். இருந்தபோதும் இந்தக் கிருபையின் போதனைகளே சீர்திருத்த விசுவாசமாகி விடாது என்பதை விளக்கி ஆங்கிலத்தில் வந்திருக்கும் ஒரு புதிய நூலை அலசி அதைத் தமிழில் சுருக்கமாகத் தரத் தீர்மானித்திருக்கிறேன். அதன் முதல் ஆக்கம் ‘முழுமையான சீர்திருத்தத்தை நோக்கி’ என்ற தலைப்பில் இதில் வந்திருக்கிறது.
வாசிப்பின் அவசியத்தை விளக்கும் ஒரு புது நூல் சீக்கிரமே வெளிவரவிருக்கிறது. அதன் ஓர் அதிகாரத்தை ‘இன்றியமையாத வாசிப்பு’ என்ற தலைப்பில் இதில் தந்திருக்கிறேன். நூலை சென்னை, சீர்திருத்த வெளியீடுகள் பதிப்பகத்தார் வெளியிடுவார்கள். இருபது ஆண்டுகாலமாக வெளிவந்துள்ள திருமறைத்தீப இதழ்களையெல்லாம் தொகுத்து டிஜிட்டல் முறையில் மறுவடிவம்செய்து அழகாக, அருமையாக அச்சிட்டு வெளியிடும் பணியில் சீர்திருத்த வெளியீடுகள் பதிப்பகம் ஈடுபட்டு வருகிறது. ஐந்து வால்யூம்களாக வருகின்ற ஜனவரி மாதத்தில் இதன் முதல் பிரதி சிறப்புக்கூட்டமொன்றில் வெளியிடப்படும். வாசகர்கள் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள முன்கூட்டியே அவர்களோடு தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். பின் அட்டையில் இதற்கான விபரங்கள் தரப்பட்டிருக்கின்றன. புதிய வருடம் வெகு தொலைவில் இல்லை. தொடர்ந்து சளைக்காமல் அவருடைய மகிமைக்காகப் பணியாற்ற எங்களை உங்கள் ஜெபத்தில் நினைவுகூருங்கள். நன்றி! – ஆசிரியர்.