“பரிசுத்த வேதாகமம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வரலாறு”
– வால்டர் ஜெயபாலன்
சமீபத்தில் தமிழகம் போயிருந்தபோது வால்டர் ஜெயபாலன் எழுதி இம்மானுவேல் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருந்த ‘பரிசுத்த வேதாகமம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வரலாறு’ எனும் நூலை வாங்கினேன். வேத மொழிபெயர்ப்பு பற்றி தமிழில் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த சில நூல்களை வாசித்திருக்கிறேன். சபாபதி குலேந்திரனுடைய நூல் இந்நூல்களுக்கெல்லாம் தமிழில் ஆரம்ப நூலாக இருந்திருக்கிறது. வேத மொழிபெயர்ப்புபற்றி இக்காலத்தில் நான் அதிகம் சிந்தித்துக் கொண்டிருப்பதால் இந்நூலில் என்ன இருக்கிறது என்று அறிந்துகொள்ளும் ஆவலில் வாசித்தேன். பெங்களூர் ஈ. எல். எஸ். விற்பனையகத்தில் நூல் கிடைத்தது.
நூலாசிரியர் தமிழில் வேத மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட அறிவர் ராஜரீகம் என்பவரின் மகன். தந்தையும் மகனும் கிறிஸ்தவ ஊழியப்பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். ஆரம்பம் முதல் புத்தகத்தில் நூலாசிரியர் வேதமொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்தவரின் மகன் என்பதை அளவுக்கதிகமாக மிகைப்படுத்தி அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இது அடிக்கடி புத்தகத்தில் வருகிறது. ‘வேத மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்த ஒருவரின் மகன் வேதமொழிபெயர்ப்பில் தந்தைக்கு துணைசெய்ததும், வேதமொழிபெயர்ப்புபற்றி நூலெழுதியதும் உலகத்தில் எந்தப்பகுதியிலும் நடந்ததில்லை; இதுவே முதல் தடவை. அதுவும் இது தமிழகத்தில் மட்டும் நடந்திருக்கிறது’ என்று இந்த நூலின் ‘மகத்துவத்தை’ அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். நூலில் மட்டுமல்லாது, நூலை அறிமுகப்படுத்தி வாழ்த்துரை தந்திருக்கும் பலரும் இதையே பெரிதாக எழுதியிருக்கிறார்கள். மேலும், ‘சபாபதி குலேந்திரனுடைய நூலுக்குப்பிறகு மொழிபெயர்ப்புபற்றி வெளிவந்திருக்கும் நூல், அதுவும் தமிழகத்துப் போதகரால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கும் நூல் இதுமட்டுமே’ என்றும் பதிப்பாசிரியர் எழுதியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரையில் இதெல்லாம் மிகவும் கொச்சையானதும், சிறுபிள்ளைத்தனமானதுமாகும். நூலாய்வுகள் தமிழினத்தில் எந்தத் தரத்தில் இருக்கின்றன என்பதை இது சுட்டுகிறது. நிச்சயம் இந்தச் சின்ன விஷயத்துக்காகவெல்லாம் எவரும் எந்த நூல்களையும் வாங்கக்கூடாது. ஒரு நூலின் தரத்திற்கு இதெல்லாம் ஒருபோதும் அடையாளமல்ல.
உண்மையில் வேதமொழிபெயர்ப்புபற்றிய உண்மையான தகவல்களைத் தருகின்ற, நன்கு ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல்கள் தமிழில் இல்லை. மேலைத்தேய நாடுகளில் எழுதுகிறவர்களின் தரத்திற்கொப்பான ஆய்வுகள் நம்மினத்தில் நடப்பதில்லை. சபாபதி குலேந்திரன் எழுதியிருப்பதை ஆதாரமாக வைத்தே அதற்குப் பின்பு வந்த நூல்கள் எல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன. சபாபதி குலேந்திரனுடைய நூலிலும் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டிய அநேக விஷயங்களுக்கு விளக்கங்கள் இல்லை. இந்தக் குறைபாடுகள் இந்த நூலில் போக்கப்பட்டிருக்குமா என்ற எண்ணத்தோடு வாசிக்க ஆரம்பித்தவனுக்கு ஆரம்பத்திலேயே மேலே நான் குறிப்பிட்ட தனிநபர் துதிபாடல் கொதிக்கும் தோசைக்கல்லில் தண்ணீர் தெளித்ததுபோல் ஆகிவிட்டது. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூவே சர்க்கரை என்ற வகையிலேயே இந்நூலும் இருந்தது. இருந்தபோதும் ஒருசில விஷயங்களை இதில் அறிந்துகொண்டேன். முக்கியமாக நூலாசிரியரின் தந்தையான ராஜரீகம் அவர்களுடைய பணிகளைப்பற்றியும் அவருடைய மொழிபெயர்ப்புக் கோட்பாடுகளையும் அறிந்துகொள்ள முடிந்தது. 1995ல் வெளியிடப்பட்ட கத்தோலிக்க ‘திருவிவிலியம்’ என்ற மிக மோசமான வேத மொழிபெயர்ப்புபற்றி நான் ஏற்கனவே விபரமாக தீபஇதழில் எழுதியிருக்கிறேன். அந்த மொழிபெயர்ப்புக்கும் ராஜரீகம் அவர்களுக்கும் என்ன தொடர்பு என்பதுபற்றிய விஷயங்களை இந்நூலில் அறிந்துகொள்ள முடிந்தது.
நூலின் 7ம் பக்கத்தில் லத்தீன் மொழியில் மட்டும் இருந்த வேதத்தை ஜெர்மன் மொழியில் மார்டின் லூத்தர் மொழிபெயர்த்ததற்கான காரணத்தை விளக்கும் ஆசிரியர், ‘லூத்தருக்கு ரோமன் கத்தோலிக்க சபையின் சில கட்டுப்பாடுகளும் சடங்குகளும் பிடிக்கவில்லை, அதனால் 99 நியாயங்களை விட்டன்பேர்க் ஆலயக்கதவில் ஒட்டினார். (கத்தோலிக்க மதத்திற்கெதிரான லூத்தரின் நியாயங்கள் 95. நூலாசிரியருக்கு அது தெரிந்திருக்கவில்லையா அல்லது அச்சுப் பிழையா என்பது தெரியவில்லை.) சீர்திருத்த சபை பிறந்தது’ என்று உப்புச்சப்பற்ற முறையில் எழுதியிருக்கிறார். 16ம் நூற்றாண்டின் மகத்தான சீர்திருத்தம்பற்றிய தெளிவான ஞானமில்லாமலும், அதன் தாற்பரியத்தை உணராமலும் லூத்தரின் பெயரைச்சூட்டிக்கொண்டிருக்கும் தமிழகத்து இவாஞ்சலிக்கள் லூத்தரன் திருச்சபை இருக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறது. நூலாசிரியரும் அவருடைய தந்தையும் இந்த சபைப்பிரிவைச் சேர்ந்தவர்கள். வேதம் வேற்றுமொழிகளில் மொழிபெயர்க்கப்படும் பணி ஆரம்பமானதற்கே கர்த்தர் எழுப்பிய இந்தச் திருச்சபை சீர்திருத்தம்தான் அடிப்படைக்காரணம். இலத்தீன் மொழியில்தவிர வேறு மொழிகளில் வேதம் இருக்கக்கூடாது என்று கத்தோலிக்க மதம் கட்டளையிட்டிருந்ததாகக் கூறும் நூலாசிரியர், அது ஏன்? என்பதை சிறிதும் விளக்கவில்லை. லூத்தர் ஏன் ஜெர்மன் மொழியில் வேதமொழிபெயர்ப்பில் ஈடுபட்டார் என்பதையும் விளக்கவில்லை. ‘லூத்தர் தவிர்க்கமுடியாத காரணத்தால் அதில் ஈடுபட்டதாக’ மட்டும் எழுதி நூலாசிரியர் உண்மைக்காரணத்தைப் பூசிமெழுகி விட்டிருக்கிறார். இது அப்பட்டமான கிறிஸ்தவ வரலாற்றுப் புறக்கணிப்பு.
லூத்தர், வில்லியம் டின்டேல், கவர்டேல் ஆகியோரின் மொழிபெயர்ப்புகளுக்கும், ஜெனீவா வேதாகமம் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டதற்கும் பின்புலமாக இருந்து ஐரோப்பாவையே உலுக்கியெடுத்த திருச்சபை சீர்திருத்த வரலாறும் அதன் முக்கியத்துவமும் நான்கு வரிகளில்கூட இந்த நூலில் சொல்லப்படவில்லை. ஆசிரியருக்கு அதுபற்றிய உணர்வில்லையா அல்லது வேண்டுமென்றே அந்த வரலாறு நூலில் மறைக்கப்பட்டிருக்கிறதா? என்பது தெரியவில்லை. ஒவ்வொரு காலப்பகுதியிலும் வேத மொழிபெயர்ப்பு யாரால், எங்கு நடந்தது என்ற விபரத்தை மட்டும் வரலாற்றில் நிகழ்ந்த அதிமுக்கிய இறையியல் மாற்றங்களுக்கு எந்த மதிப்போ இடமோ தராமல் உணர்ச்சியற்ற முறையில் நூல் எழுதப்பட்டிருக்கிறது. கத்தோலிக்கர்கள் கொலை செய்துவிடுவார்கள் என்று அஞ்சியதாலேயே அன்று மார்டின் லூத்தரை ஒருவருடம் ஜெர்மானிய இளவரசர்கள் கோட்டையொன்றில் இரகசியமாக வாழவைத்தார்கள். அந்தக் காலப்பகுதியிலேயே லூத்தர் வேதத்தை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார். கத்தோலிக்க மதத்திற்கு எதிராக சத்தியத்தை உலகுக்கு வெளிப்படுத்துவதற்காக ஆண்டவரால் ஏவப்பட்டு லூத்தர் இந்தப்பணியில் ஈடுபட்டார் என்பதை இந்நூல் விளக்கவில்லை. இந்திய வரலாற்றை எழுதுகிற ஒருவர் இந்தியாவுக்கு 1947ல் சுதந்திரம் கிடைத்தது என்பதை மறைத்து அதை எழுதமுடியுமா? அப்படித்தான் இருக்கிறது இந்த நூலில் தரப்பட்டுள்ள விபரங்களும்.
இதைவிட ஆபத்தானது நூலில் கிறிஸ்தவ வேத மொழிபெயர்ப்பாளர்களோடு ரோமன் கத்தோலிக்க மொழிபெயர்ப்புகளுக்கும் சரிசமமான இடத்தைக் கொடுத்துக் குறிப்பிட்டிருப்பது. இதிலிருந்து இறையியல் விளக்கம் எதுவும் தரப்படாமல் வேதமொழிபெயர்ப்புப் பணிகள் நூலில் எழுதப்பட்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளுவது அவசியம். ரோமன் கத்தோலிக்க மதம் வேதத்தை முற்றாகத் துறந்து திருச்சபையை நாசப்படுத்தி மக்கள் வேதத்தை வாசிக்க முடியாமல் செய்து வைத்திருந்தது என்பதும், அதற்கெதிராகக் கர்த்தரால் எழுப்பப்பட்டவர்களே வேதமொழிபெயர்ப்பில் ஈடுபட்டு கிறிஸ்தவ விசுவாசத்திற்கும், பரிசுத்த வாழ்க்கைக்கும் ஆதாரமான வேதத்தை மக்களுடைய மொழிகளில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார்கள் என்பதும் இந்நூலில் துப்புரவாக மறைக்கடிக்கப்பட்டிருக்கிறது. மார்டின் லூத்தர் வேத நூல்களைத் தவிர தள்ளுபடி ஆகமங்களையும் மொழிபெயர்த்தார் என்று ஆசிரியர் எழுதியிருக்கிறார். ஆனால், நடந்த உண்மையை அவர் விளக்கவில்லை. உண்மையில் லூத்தர், அதை மொழிபெயர்த்து தான் வெளியிட்ட வேதநூல்களோடு வெளியிட்டிருந்தாலும், தள்ளுபடி ஆகமங்கள் வேதநூல்களைப்போல ஆவியால் அருளப்படவில்லை என்றும், அவை பொதுவான விஷயங்களை அறிந்துகொள்ள மட்டுமே உதவும் என்று தெளிவாக விளக்கியிருந்தார். அதை இந்நூலாசிரியர் குறிப்பிடவில்லை. இது மார்டின் லூத்தரைத் தவறானவிதத்தில் சித்தரிப்பதாக அமைகிறது. கத்தோலிக்க மதமே தள்ளுபடி ஆகமங்களை வேதத்தோடு அதற்கு சமமானதாக இணைத்து வெளியிடுகிறது. கிறிஸ்தவ சீர்திருத்தவாதிகள் அவற்றை வேதமாக ஒருபோதும் மதித்ததில்லை.
சீர்திருத்த கிறிஸ்தவரான சீகன்பால்கின் மொழிபெயர்ப்புப் பணியும், வாழ்க்கையும் நூலில் விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் தமிழகத்து லூத்தரன் திருச்சபையை ஆரம்பித்தவர் என்று சொந்தம் கொண்டாடுவதைத் தவிர, நூலாசிரியர் அவரது அதிமுக்கியமான விசுவாசத்திற்கும், கோட்பாடுகளுக்கும் நூலில் எந்த விளக்கமும் தராதது வருத்தத்திற்குரியது. வீரமாமுனிவர் என்ற கத்தோலிக்கத் துறவியின் தமிழ்த்தொண்டை ஆசிரியர் பாராட்டி அவரை சீகன்பால்குக்கு இணையான தமிழ்த்தொண்டு புரிந்தவராகக் காட்டியிருக்கிறார். வீரமாமுனிவர் சீகன்பால்கை வெறுத்து அவரது தமிழை இகழ்ந்து பேசியிருப்பதை நூலாசிரியர் அறிந்திருக்கவில்லை. வீரமாமுனிவர் அப்பட்டமான கத்தோலிக்கத் துறவி, கிறிஸ்தவ விரோதி என்பதும், ஜெர்மானியரான சீகன்பால்கு ஆண்டவரை விசுவாசித்த, சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபட டென்மார்க்கினால் அனுப்பப்பட்டு தரங்கம்பாடி வந்த முதல் சீர்திருத்த கிறிஸ்தவர் என்ற மாபெரும் உண்மை இங்கே புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. அவர் வருவற்கு முன்பே லூத்தரன் மிஷன் பணிகள் அந்தப் பகுதியில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஆகவே, சீகன்பால்கு அதை ஆரம்பித்துவைத்தவராகக் கொண்டாடுவது தவறு. அது வரலாற்று உண்மையல்ல. சீகன்பால்கைப்பற்றிய மறுக்கமுடியாத உண்மை எது தெரியுமா? தமிழில் வேத மொழிபெயர்ப்பை ஆரம்பித்த முதல் ஊழியர் ஜெர்மானியரான சீகன்பால்கு; அதுவும் அவர் சீர்திருத்தக்கோட்பாடுகளை விசுவாசித்த அருட்பணியாளர் (Reformed Christian Missionary) என்பது சிறப்பானது.
கத்தோலிக்க மதத்தைப்பற்றிய வரலாற்றறிவு நம்மினத்தில் அநேகருக்கு இல்லை என்பது நாமறிந்ததே. இவெஞ்சலிக்கள் லூத்தரன் திருச்சபையைச் சார்ந்த ஊழியரான நூலாசிரியருக்கும் அம்மதம்பற்றித் தெரியாமல் இருந்திருப்பது ஆச்சரியமே. நூல் முழுவதும் கத்தோலிக்கர் செய்திருக்கும் மொழிபெயர்ப்புப் பணி, சரிசமமாக கிறிஸ்தவ திருச்சபையைச் சேர்ந்தவர்களுடைய பணிகளுடன் இணைத்து விளக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், கத்தோலிக்க மதத்தை கிறிஸ்தவத்தின் இன்னொரு பிரிவாக ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது அவரது அறியாமையை மட்டுமல்ல, கோட்பாடுகளைப்பற்றியும் கேள்வியெழுப்புகிறது. கத்தோலிக்க மதம் கிறிஸ்தவத்தோடு எந்தவிதத்திலும் தொடர்பற்ற உலகப்பிரகாரமான, கிரியைகளின் அடிப்படையில் ஆத்துமாக்களுக்கு ஆத்தும விடுதலை தேடித்தர முயலும் சத்தியவிரோதமான, பரிசேயத்தனமான ஒரு மதம் மட்டுமே என்பதை இவெஞ்சலிக்கள் லூத்தரன் சபையினர் அறிந்திருக்கிறார்களா? என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. இந்திய வேதாகம சங்கம் 1900களில் சகலரும் வாசிக்கக்கூடிய இலகு தமிழில் வேதமொழிபெயர்ப்பைக் கொண்டுவரும் பணியைத் தமிழகக் கத்தோலிக்க மதத்தினரிடம் கொடுத்ததாகவும், அதன் விளைவே ‘திருவிவிலியம்’ மொழிபெயர்ப்பு என்றும் ஆசிரியர் கூறுகிறார். இது இந்திய வேதாகம சங்கம் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் புலப்படுத்துகிறது.
‘தேவன்’ என்ற பதம் கடவுளைக் குறித்துப் பயன்படுத்தும் வகையில் இன்று தமிழ் வேதத்தில் இருப்பதற்குக் காரணம், பேர்சிவல் என்பவர் மொழிபெயர்ப்புப் பணியில் ஸ்ரீ லங்காவைச் சேர்ந்த ஆறுமுகநாவலரைப் பயன்படுத்தியதுதான் என்று நூலாசிரியர் விளக்குகிறார். தேவன் என்ற பதம் இந்துக்கள் பயன்படுத்தும் பதம் என்றும், அது ஆணையும் பெண்ணையும் குறிக்கும் விதத்தில் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதால் வேதத்தைக் கொச்சைப்படுத்துவதற்காக வேண்டுமென்றே ஆறுமுகநாவலர் அதைப் பயன்படுத்தியதாகவும், பேர்சிவல் அதை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடாதென்றும் அவர் விளக்குகிறார். இந்துவான நாவலர் கிறிஸ்தவத்தை அடியோடு வெறுத்தவர் என்றும், அதற்கான சான்றுகளாக அவருடைய எழுத்துக்களை உதாரணம் காட்டும் ஆசிரியர், ஆறுமுகநாவலரைக் கிறிஸ்தவ வேதத்தை மொழிபெயர்ப்பதில் பயன்படுத்திய பேர்சிவலின் ஞானத்தைக் குறைகூறுகிறார். தேவன் என்ற பதத்திற்குப் பதிலாக ‘பராபரன்’ என்ற பதமே உகந்தது என்று வாதிடுகிறார்.
ஆசிரியரின் தந்தையரான ராஜரீகத்தின் மொழிபெயர்ப்புக் கொள்கையாக, தற்காலத் தமிழில் மட்டுமல்லாது, தற்கால மொழிநடையின் அடிப்படையிலும் வேதம் இருக்கவேண்டும் என்பது இருந்திருக்கிறது. அதாவது, வார்த்தைக்கு வார்த்தைபடியிலான மொழிபெயர்ப்பாக அமைந்துவிடாமல், வேதவசனங்களின் அடிப்படைக் கருத்தை நடைமுறைத் தமிழில் கொண்டுவருவதே அவருடைய நோக்கமாக இருந்திருக்கிறது. அதுவும் வேதத்தில் தமிழக மக்களுக்குப் புரியாமல் இருக்கும் ‘பனி’ (snow) போன்ற வார்த்தைகளுக்கு, அதை விளக்குகின்ற முறையில் காணப்படும் மாற்று வார்த்தைகளையும் பயன்படுத்தவேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்திருக்கிறது. என்னைப் பொறுத்தளவில் இது ஆபத்தானது. நல்ல தமிழில் வேதமொழிபெயர்ப்பு இன்று அவசியம் என்பதை நான் நிச்சயம் ஆதரிக்கிறேன்; சுவிசேஷ ஊழியங்கள் பெருக அது அதிமுக்கியமானதாக இன்று இருக்கிறதென்பதையும் வலியுறுத்திக்கூற விரும்புகிறேன். ஆனால், நல்ல தமிழுக்காக அடிப்படை வேதவார்த்தைகளையும், சத்தியத்தையும் தாரைவார்த்துக் கொடுக்க நான் தயாராக இல்லை. வேதம் வேறெந்த மனித எழுத்துக்களையும்விட உயர்வானது, சிறப்பானது; அது கடவுளுடைய பரிசுத்தமான வார்த்தை. அந்த வார்த்தைகளை உள்ளது உள்ளபடியே காட்டுவதாக மொழிபெயர்ப்பு எப்போதும் இருக்கவேண்டும். அதுவே வேத மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக இருக்கவேண்டும். அதேநேரம் தமிழ் நடைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பினும், சத்தியத்தைத் தொலைத்துவிட்டு அழகான தமிழை மட்டும் வைத்திருப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. இந்தத் தவறைத்தான் இந்திய வேதாகம சங்கத்தின் அனுமதியுடன் தயாரிக்கப்பட்ட கத்தோலிக்கர்களின் ‘திருவிவிலியமும்’ செய்திருக்கிறது. ராஜரீகம் அவர்களின் மொழிபெயர்ப்பை இந்திய வேதாமக சங்கம் அச்சிடத் தவறிவிட்டது என்பதையும் நூலில் இருந்து அறிந்துகொள்ளுகிறோம். அந்த மொழிபெயர்ப்பு கிடைக்குமானால் அதன் சிறப்பையும், தவறுகளையும் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
இந்த நூலை வாசித்த பிறகு என்னுடைய மனதில் ஒரு வலியேற்பட்டதைத் தவிர நன்மைகள் எதையும் நான் அடையவில்லை. 1800களின் ஆரம்பத்தில் ஆரம்பமான தமிழ்மொழிபெயர்ப்பு அடுத்த நூறுவருடங்களுக்குப் பல பிரச்சனைகளுக்கு மத்தியில், காலம் போகப்போக திருத்தப்பட்டு இன்று நம்கையில் இருக்கிறது. அது சிறப்பான மொழிபெயர்ப்பாக அமையாமல் போனதற்கான காரணங்களே என் மனதில் வலியை உண்டாக்குகின்றன. ஒற்றுமையின்மையும், அசட்டுத்தனமான வாதங்களும், மெய்யான ஆவிக்குரிய வேதவைராக்கியமின்மையும், வேதமொழிபெயர்ப்பிற்கான தகுதியின்மையும், அளவுக்கு மீறிய தீவிர தமிழ்ப்பற்றும், சத்திய வேதம் நல்ல தமிழில், நம்பக்கூடிய மொழிபெயர்ப்புடன் இன்று நம் கையில் வரமுடியாதபடி செய்திருக்கின்றன; மனித குறைபாடுகள் அதற்குத் தடையாக இருந்திருக்கின்றன. இன்றும் தமிழில் ஒரு நல்ல வேதமொழிபெயர்ப்பில்லாமல், அதைச் செய்யத் தகுதியுள்ளவர்களும் இல்லாமல் தமிழினத்துக் கிறிஸ்தவம் தொடர்ந்தும் தள்ளாடிக்கொண்டிருக்கும் நிலையை எண்ணி வருத்தப்படாமல் இருக்கமுடியுமா? தமிழ் வேதம் வானத்தில் இருந்து விழுந்ததாக பலர் நம்மினத்தில் எண்ணிக்கொண்டிருப்பதாக ஆசிரியர் வருத்தம் தெரிவித்திருக்கிறார். அது உண்மைதான். வேதத்தின் தன்மையே தெரியாத சமுதாயமாக நம்மினம் இருந்துவருகிறது. அதேவேளை, வேதத்தை ஏனைய நூல்களைப்போலப் பாவித்து தமிழுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து அஜாக்கிரதையாக மொழிபெயர்ப்பதும் ஆண்டவருக்குத் துரோகம் செய்யும் பாதகமான செயல் என்பதையும் உணர்வது அவசியம். மொத்தத்தில் சில முக்கியமான விஷயங்களை இந்நூலில் இருந்து நான் அறிந்துகொண்டபோதும், நூலின் எண்ணற்ற குறைபாடுகள் அதன் பலவீனத்தை வெளிப்படுத்தி நூலைப் பயனற்றதாகச் செய்துவிடுகின்றன. இந்நூலை வாசிக்கிறவர்கள் அதிலுள்ள விபரங்களையெல்லாம் வேதவாக்காக எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் சரி.
[கத்தோலிக்க மதவரலாறு, வேதமொழிபெயர்ப்பு, திருச்சபை சீர்திருத்த வரலாறு ஆகியவைபற்றிய மெய்யான வரலாற்று உண்மைகளைத் தெரிந்துகொள்ள நாம் வெளியிட்டிருக்கும் ‘கிறிஸ்தவ திருச்சபை வரலாறு’ பாகம் 1ஐயும், 2ஐயும் வாங்கி வாசியுங்கள்.]