எது பக்திவைராக்கியம்? – டேவிட் மெரெக் –

முந்தைய இதழில் வந்திருந்த பக்தி வைராக்கியம் பற்றிய முதலாவது ஆக்கத்தில் இந்த பாடத்திற்கான முக்கிய வசனமாகிய தீத்து 2:13-14ஐ ஆராய்ந்திருந்தோம். இந்த வசனங்களிலும், வேதத்தின் ஏனைய வசனங்களிலிருந்தும் நாம், பக்தி வைராக்கியம் கடவுளிடமிருந்து வருகிறது என்பதைப் பார்த்தோம். இது சிலுவையில் கிறிஸ்து செய்த செயலின் மூலம் நமக்குக் கிடைக்கிறது. இது பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயத்தில் செய்யும் செயலின் மூலம் நிகழ்கிறது. ஆகவே, நாம் பக்தி வைராக்கியத்தில் அதிகரிக்கவும் மேலும் உறுதிப்படவும் வேண்டுமானால் கடவுள் தம்முடைய ஆவியின் நிறைவை நம்மில் அதிகமாகத் தரவேண்டுமென்று நாம் கடவுளிடம் கேட்க வேண்டும். கடவுள் பக்தி வைராக்கியத்தை நமக்கு அதிகமாகத் தரவும் அதில் நீடித்திருக்கவும் கிருபை காட்டும்படி நாம் கடவுளிடம் மேலும் வலியுறுத்திக் கேட்க வேண்டும். இந்த ஆக்கத்தில் பக்தி வைராக்கியத்தைப் பற்றிய இரண்டாவது முக்கிய வசனத்தைப் படிக்கப்போகிறோம். அந்த வசனம் ரோமர் 12:11. இந்த வசனம் நமக்குக் கிறிஸ்தவ வைராக்கியம் என்ற இந்த முக்கியமான விஷயத்தித்தைப் பற்றிய முழுமையானதும் சமநிலையான பார்வையையும் தருகிறது. இந்த வசனத்தை இது அமைந்திருக்கும் வசனப் பகுதியின் அடிப்படையில் வாசித்து விளங்கிக்கொள்வோம்.

வசனம் 11ல் நம்முடைய கவனத்தை செலுத்துவதற்கு முன், வைராக்கியத்தைப் பற்றிய இந்த முக்கியமான வசனம் ஒரு பரந்த சூழலின் அடிப்படையில் இருக்கிறது என்பதை நீங்கள் நினைவுகூர வேண்டுமென்பதை வலியுறுத்துகிறேன். பக்திக்குரிய கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதைப் பற்றிய ஒரு பரந்த பார்வையிலான நடைமுறைக் காரியங்களை விளக்குகிறதாக இந்த வசனம் இருக்கிறது. இந்தப் பகுதி 12:1ல் ஆரம்பித்து 15:13வரை தொடர்கிறது. 12வது அதிகாரம் பக்திக்குரிய கிறிஸ்தவ வாழ்க்கை பற்றிய பல அம்சங்களை சுட்டிக்காட்டுகிறது. இதில் வரும் அநேக காரியங்கள் மறுபடியும் மறுபடியும் சொல்லப்படுகிறதாகவும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறதாகவும் இருக்கிறது. வேறுவிதமாக சொல்லவேண்டுமானால், வசனம் 11ல் பவுல் பக்தி வைராக்கியத்தைப் பற்றிக் கையாளும் முறை பக்திக்குரிய வாழ்க்கையின் முதன்மையான அங்கமாக இருப்பதைக் காட்டுகிறது. ஆகவே, மெய்யான பக்திவைராக்கியத்தை அடைவது என்பது ரோமர் நிருபத்தின் இந்தப் பகுதியில் சொல்லப்பட்டிருக்கும் பக்திக்குரிய வாழ்க்கையின் அம்சங்களோடு தொடர்புடையதாக இருக்கிறது. நமக்கு பக்தி வைராக்கியம் வேண்டுமானால், பக்திக்குரிய வாழ்க்கை பற்றிய இந்த அம்சங்களின் முக்கியமான தன்மைகளை நாம் கண்டறிய முயற்சிக்க வேண்டும்.

இந்த ஆக்கத்தில் நம்முடைய கவனம் முழுவதையும் 11வது வசனத்தில் செலுத்தப்போகிறோம். கிறிஸ்தவ வைராக்கியத்தைப்பற்றி குறைந்தது 5 விஷயங்களை இந்த வசனம் நமக்கு விளக்குகின்றது.

1. பக்தி வைராக்கியம் எத்தகையது?

தீத்து 2:14வது வசனத்தை நாம் ஆராய்ந்தபோது, பக்திவைராக்கியம் என்பது ‘எரிகின்றதாக’ அல்லது ‘கொதிக்கின்றதாக’ விளக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். அதுமட்டுமல்லாமல், அது ஒன்றை அல்லது ஒருவரை ஆர்வங்கொண்டு அல்லது தீவிர விருப்பத்துடன் சார்ந்திருந்து பின்பற்றுவது என்ற கருத்தும் அதில் இருப்பதைக் கவனித்தோம். இங்கே ரோமர் 12:11ல், “அனலாயிருங்கள்” என்று கிரேக்கத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை தீத்து 2:14ல் சொல்லப்பட்டுள்ள “வைராக்கியமான” என்ற அதே வார்த்தைக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆகவே பவுல் இங்கே ரோமர் 12:11ல் “அனலாயிருங்கள்” என்று சொல்லுகிறபோது, எரிகிற அல்லது கொதிக்கிற என்ற அந்த அர்த்தத்தையே இங்கும் இந்தப் பதத்தில் காண்கிறோம்.

2. இந்த பக்தி வைராக்கியம் எங்கு நிலைகொண்டிருக்கிறது?

பவுல் சொல்லுகிறார், இந்த வைராக்கியம் நம்முடைய ஆவியில் இருக்கிறது என்று. “ஆவியில் அனலாயிருங்கள்” என்கிறார் பவுல். இங்கே ஆவியானது நம்முடைய சரீரத்திலிருந்து பிரித்துக்காட்டப்பட்டிருக்கிறது. வேறுவிதமாகச் சொல்லுவதானால், ஒரு மனிதனில் இருக்கின்ற இரண்டு முக்கிய பகுதியில் ஒன்று, ஆவியாகும். இந்த வசனத்தின்படி, பக்தி வைராக்கியம் என்பது ஆவியில் குடிகொண்டிருக்கிறது. இதே உண்மையை, அப்போஸ்தலர் 18:25ல், லூக்கா அப்பொல்லோவை “ஆவியில் அனலுள்ளவன்” என்று இதே வார்த்தையைப் பயன்படுத்தி விளக்குவதிலும் காண்கிறோம்.

“ஆவியில் அனலாயிருத்தல்” என்ற இந்த மொழிநடை வேதத்தில் வேறொரு முக்கிய பகுதியிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உபாகமம் 6:4-5 வசனங்களைக் கவனியுங்கள். இது யூதர்கள் அடிக்கடி நினைவுறுத்துகிற ஒரு மிகமுக்கியமான பழைய ஏற்பாட்டுப் பகுதி. இதன் முக்கியத்துவத்தை இயேசுவும் பின்னால் சுட்டியிருக்கிறார். அவர் இந்த வேதப்பகுதியின் 5வது வசனத்தைத்தான் முதலாவதும் எல்லா கட்டளைகளிலும் பிரதானமானது என்று அடையாளம் காட்டியிருக்கிறார். ஆனால் இப்பொழுது அறிமுகமாக இந்த பகுதியிலுள்ள 3 முக்கிய காரியங்களை நாம் பார்க்கலாம்.

முதலாவது, 5வது வசனத்தில் வைராக்கியத்தோடிருக்க வேண்டும் என்பது தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடவுளிடம் நாம் முழுமையாக அன்புகாட்ட வேண்டும் என்கிறது இந்த வசனம். மூன்றுவித அம்சங்கள் இதில் வலியுறுத்தப்படுகிறது. பின்பு மறுபடியும் ஒவ்வொரு அம்சமும் மீண்டும் மீண்டும், தனித் தனியாக, ஆர்வத்தோடு முழுமையாக செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. கடவுள், நம்முடைய முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், பலத்தோடும் தன்மீது அன்புகாட்டுங்கள் என்று சொல்லவில்லை. மாறாக, மூலமொழியில் எழுத்துப்பூர்வமாக இந்தவசனம் எப்படியிருக்கிறதென்றால், முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் அன்புகாட்டும்படி கடவுள் கட்டளையிட்டிருக்கிறார். அதாவது ஒவ்வொரு முறையும் “முழு” என்ற வார்த்தை மறுபடியும் பயன்படுத்தப்பட்டு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகுந்த ஆர்வத்தோடு, தீவிரமாக கடவுள் மீது நாம் அன்புகாட்ட வேண்டும் என்பது தெளிவாக உணர்த்தப்பட்டிருக்கிறது.

இரண்டாவதாக, 5வது வசனத்தில் வைராக்கியம் என்பது உள்ளான மனதோடு தொடர்புடையதாகக் காட்டப்பட்டுள்ளது. இது இருதயம் மற்றும் ஆத்துமாவாகிய மனிதனின் உள்ளான இரண்டு அம்சங்களைக் குறிக்கிறது. எனினும், இந்த இரண்டு வார்த்தைகளும் வேதாகமத்தில் வெவ்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இங்கு “இருதயம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை, பழைய ஏற்பாட்டில் சில சந்தர்ப்பங்களில் மட்டும் மனிதனுடைய சரீரப்பிரகாரமான இருதயத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், பொதுவாக இந்த வார்த்தை மனிதனுடைய உள்ளான மனதைக் குறிக்கிறதாக அதாவது, நம்முடைய உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் விருப்பங்களைக் குறிக்கிறதாகவே இருக்கிறது.

இங்கு “ஆத்துமா” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை, விரிவான அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில், இந்த வார்த்தை பெரும்பாலும் ஒரு முழுமையான மனிதனை (மற்றும் மனிதனைத் தவிர்த்த உயிரினங்களின் முழுமையையும்) குறிக்கிறதாக இருக்கிறது. இது மனிதர்கள் மற்றும் மிருகங்களின் சரீரப்பிரகாரமான வாழ்க்கையைக் குறிக்கிறதாகவும் இருக்கிறது. (சில சந்தர்ப்பங்களில் இந்த வார்த்தை இறந்த மனிதர்கள் அல்லது மிருகங்களையும் குறிக்கிறது. உதா: லேவியராகமம் 22:4). அதேவேளை, மனிதனுடைய உள்ளான மனதோடு தொடர்புடைய உணர்வுகள், ஆசை விருப்பங்களைக் குறிப்பதாகவும் இது பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடவுள், அவரது சொந்த ஆத்துமாவை குறிப்பிடவும் இந்த வார்த்தையை சிலவேளைகளில் பயன்படுத்தியிருக்கிறார் (லேவியராகமம் 26:11).

சுருக்கமாகச் சொல்லுவதானால், “இருதயம்” மற்றும் “ஆத்துமா” என்ற இரு வார்த்தைகளும் பெரும்பாலும் நம்முடைய உள்மனதைக் குறிப்பிடவே வேதத்தில் பயன்படுத்தப்படுகின்றன. முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கடவுளிடம் அன்புகாட்டுங்கள் என்று ஆண்டவர் கட்டளையிடுவது, மனிதனின் உள்மனதைக் குறிக்கிற அர்த்தத்தில்தான் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இரண்டிற்கும் வெவ்வேறுவிதமான அர்த்தங்கள் இருந்தாலும், இருதயமும் ஆத்துமாவும், மனிதனின் ஆவியைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிற இரண்டு வார்த்தைகள். இருதயம், ஆத்துமா, ஆவி ஆகிய மூன்று வார்த்தைகளும் ஒரே அர்த்தங்கொண்ட மூன்று வார்த்தைகள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆகவே உபாகமம் 6:5, நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் அன்புகாட்டுங்கள் என்று சொல்லுகிறபோது, நம்முடைய உள்ளான மனதோடுகூடிய ஆர்வத்தையே சுட்டிக்காட்டுகிறது என்பது தெளிவாகிறது. எனினும், நம்முடைய மனிதத் தன்மையின் மற்றொரு அம்சமும் இந்த கட்டளையில் இருப்பதை நாம் பார்க்கலாம். அது இந்த மாபெரும் கட்டளை விளக்கும் மூன்றாவது அம்சத்திற்கு நம்மை வழிநடத்துகிறது.

மூன்றாவதாக, 5வது வசனத்தில் வைராக்கியம் என்பது பெலத்தோடு தொடர்புபடுத்திச் சொல்லப்பட்டுள்ளது. நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் நாம் முழு பெலத்தோடு அன்புகூர வேண்டுமென்றும் கட்டளையிடப்பட்டிருக்கிறது. இதில் சுவாரஸ்யமான விஷயமென்னவென்றால், இந்தப் பகுதி வெறுமனே வைராக்கியத்தை பெலத்தோடு சேர்த்துச் சொல்லவில்லை. உபாகமம் 6:5, பக்தி வைராக்கியத்திற்கும் பெலத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தையும் சுட்டிக்காட்டுகிறது. நாம் பெலமுள்ளவர்களாக இருந்தும் அந்த பெலத்தை ஆர்வத்தோடு கடவுள் மீது அன்புகாட்டுவதில் செலுத்துவதில்லை என்பதையும் இந்த வசனம் மறைமுகமாகக் குறிப்பிட்டுக்காட்டுகிறது.

இந்த உண்மையின் அடிப்படையில், பெலத்திற்கும் வைராக்கியத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு என்ன? ஒரு புறம், பெலம் என்பது ஒன்றைச் செய்யக்கூடிய வலிமையைக் குறிக்கிறது. மறுபுறம், வைராக்கியம் என்பது உத்வேகத்தைக் குறிக்கிறது, அதாவது நம்முடைய வேலையைச் செய்வதற்கு, அதற்கான திறனைச் செலுத்துவதற்கு நம்மை உந்தித்தள்ளும் செயலைக் குறிக்கிறது. வேறுவிதத்தில் சொல்லுவதானால், ஒரு வேலையைச் செய்ய செலுத்தப்படும் திறனே வைராக்கியமாகும். பெட்ரோல் எஞ்சினை நினைத்துப் பாருங்கள். பெட்ரோலில் அதற்கான வலிமை அல்லது சக்தி ஏற்கனவே இருக்கிறது, அது பெட்ரோல் டேங்கிலிருந்து குழாயின் வழியாக எஞ்சினை வந்தடைகிறது. பெட்ரோல் தொடர்ச்சியாக எரிவதன் மூலம் எஞ்சினிலுள்ள சிலிண்டர்களை உந்தித்தள்ளி மேலும் கீழுமாக செயல்பட வைத்து எஞ்சினை இயக்குகிறது. எஞ்சினில் செயல்படும் உந்துசக்தியைப் போல்தான் வைராக்கியமும். அதிலுண்டாகும் வெப்பம் அதை இயக்குகிறது. அந்த வைராக்கியமும் ஆர்வமுமே நம்முடைய வலிமையைப் பயன்படுத்திச் செயல்பட வைக்கிறது.

பெலனுக்கும் வைராக்கியத்திற்கும் இடையேயுள்ள உறவில் நாம் கவனிக்க வேண்டியதொன்றிருக்கிறது. அது வைராக்கியத்தினுடைய இடத்தைப் பற்றியது. ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம், வைராக்கியம் என்பது நம்முடைய உள்மனதோடு தொடர்புடையது என்று (வெளிப்புற செயல்பாடும் அதில் இருக்கிறது என்பதும் உண்மைதான்). எனினும் வேதம் சொல்லுகிறது, பெலன் என்பது நம்முடைய ஆவி (சங்கீதம் 73.26) மற்றும் சரீரம் (சங்கீதம் 71:9, ஏசாயா 40.30-31) ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது என்று.

இதுவரை நாம் பக்தி வைராக்கியம் எப்படிப்பட்டது, அது எங்கிருக்கிறது என்பதைப் பார்த்திருக்கிறோம். இப்போது மூன்றாவது கேள்வியைப் பார்ப்போம்.

3. பக்தி வைராக்கியம் நம்மில் எப்படி வெளிப்படுகிறது?

எனக்கு பக்தி வைராக்கியம் இருக்கிறது என்பதை நான் எவ்வாறு அறிந்துகொள்ளுவது? இந்த ஆக்கத்தின் முக்கிய வசனத்தின் முதற்பகுதியில் இதற்கான பதிலைக் காண்கிறோம். ரோமர் 12:11, “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்”. இந்த சிறிய வாக்கியத்திலுள்ள வார்த்தைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

முதலாவதாக, இந்த வாக்கியத்தின் மைய வார்த்தை “ஜாக்கிரதையாயிருங்கள்” என்பதாகும். இந்த வார்த்தையில் கவனமாக இருத்தல் என்பதும் அடங்கியுள்ளது. இது, கடவுள் நாம் செய்யும்படி சொல்லியிருக்கிற காரியங்களில் நாம் ஆர்வத்தோடு ஈடுபட வேண்டும் என்ற அர்த்தத்தையும் உள்ளடக்கியுள்ளது.

இரண்டாவதாக, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற பொறுப்புகளில் நாம் “அசதியாயிருக்கக் கூடாது” என்பதும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வேறுவிதத்தில் சொல்லுவதானால், கடவுள் நாம் செய்யும்படி சொல்லியிருக்கிற காரியங்களில் ஜாக்கிரதையாக இல்லாமல், மெதுவாகவோ, தயங்கிய நிலையிலோ, தாமதப்படுத்தும்படியாகவோ, சோம்பலாகவோ நாம் இருக்கக்கூடாது. பக்தி வைராக்கியம் எப்படி நம்மில் வெளிப்படுகிறது என்பதற்கு பதில் இதுவே. இப்போது நாம் ரோமர் 12:11லிருந்து வரும் நான்காவது கேள்விக்குப் போகலாம்.

4. பக்தி வைராக்கியம் முக்கியமாகத் தன்னில் எவற்றைக் கொண்டுள்ளன?

ரோமர் 12:11 வசனத்தின் கடைசிப்பகுதி, இந்த கேள்விக்கு வேதமளிக்கும் பதிலை நமக்குத் தருகிறது. பவுல் எழுதுகிறார் “கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்”. இந்த வார்த்தைப் பிரயோகங்கள் நாம் கொண்டிருக்கும் வைராக்கியம் கடவுளுக்குரியதா இல்லையா என்பதற்கான பதிலை அறிவதில் நமக்கு உதவுகிற முக்கியமான ஒன்றை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. அதுவே நம்முடைய வைராக்கியத்தின் இறுதி நோக்கம். எதை அல்லது யாரை நம்முடைய வைராக்கியம் மையப்படுத்துகிறது? பக்தி வைராக்கியம் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையே மையமாக, இறுதி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நோக்கம், இயேசு யார் என்பதிலும் அவரோடு நமக்குள்ள உறவைப் பற்றிய புரிதலிலும் பிரதிபலிக்கிறது.

நமக்கு பக்தி வைராக்கியம் இருந்தால், கர்த்தராகிய இயேசுவை நாம் யாராகப் பார்ப்போம்? நாம் அவரை நம்முடைய கடவுளாக, எஜமானாக, படைத்தவராக, இரட்சகராகப் பார்ப்போம். அவர் நமக்கான கட்டளைகளைத் தருகிறவராக இருக்கிறார். நாம் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு விளக்கக்கூடியவராக இருக்கிறார் என்பதை நம்முடைய வார்த்தையின் மூலமும் வாழ்க்கையின் மூலமும் ஒப்புக்கொள்ளுகிறவர்களாக இருப்போம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணிநேரமும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லும் உரிமையுடையவர் இயேசுவே. அவர் ஆராதனைக்கும் நம்முடைய சேவைக்கும் உரியவர். இந்த உண்மையின் அடிப்படையில், இயேசுவோடு கொண்டுள்ள உறவின்படி நம்மை யாராக நாம் பார்க்க வேண்டும்? நாம் அவரது வேலைக்காரர்கள்; அவரது அடிமைகள். நமக்கு பக்தி வைராக்கியம் இருக்குமானால், நம்முடைய நேச இரட்சகருக்கு சேவை செய்யும் வேலைக்காரராக, அவரை பிரியப்படுத்துகிறவராக, அவருக்குக் கீழ்ப்படிகிறவராக, அவரை வழிபடுகிறவராக இருப்போம்.

பக்தி வைராக்கியத்தில் இருக்கும் முக்கியமான அம்சங்களை, ரோமர் 12:11ல் விளக்கிய பவுல் இன்னும் இரண்டு பகுதிகளிலும் இதுபற்றி எழுதியிருப்பது என் நினைவுக்கு வருகிறது.

பவுல் சாட்சியிடுகிறார், பிலிப்பியர் 1:21, “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.”

பவுல் அறிவுறுத்துகிறார், 2 கொரிந்தியர் 5:14-15, ‘கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்; பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.’

பக்தி வைராக்கியம் கர்த்தராகிய இயேசுவுக்கு சேவை செய்வதில் தங்கியிருக்கிறது. அது நமக்காக மரித்து உயிர்த்தெழுந்த அவருக்காக வாழ்வதில் தங்கியிருக்கிறது. அவருக்கு நன்றியுள்ள, ஆர்வமுள்ள ஊழியனாக என்ன செய்யவேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ அதைச் செய்வது பக்திவிருத்தியாகும். அது அவரை மட்டுமே வணங்குவதாகும்.

பக்தி வைராக்கியத்தை சரியான வகையில் அடையாளங் காணும்போது பக்தியற்ற வைராக்கியத்தை நாம் அடையாளம் கண்டுகொள்ளலாம், இல்லையா? பக்தி வைராக்கியம் என்பது கிறிஸ்துவுக்காக வாழுவதென்றால், பக்தியற்ற வைராக்கியம் என்பது வேறு கடவுள்களுக்காகவோ அல்லது விக்கிரகங்களுக்காகவோ வாழுவதாகும். நமக்காக மட்டும் வாழுவதாகவும் இருக்கலாம். பணத்திற்காக வாழுவதாகவும் இருக்கலாம். முடிவில் அது நம்மை ஊழலுக்கு வழி நடத்தும் (சபையிலும் கூட). பக்தியற்ற வைராக்கியம் என்பது உலகப் பொருளுக்காக வாழுவதாகும். உலகரீதியான சந்தோஷம், கஷ்டப்படாமல் வாழுதல், பாலியல் இச்சை கொண்டிருத்தல், உணவாசை, சுய பாதுகாப்பு, அதிகார வெறி என்று எத்தனையோ உலகத்தைச் சார்ந்த விஷயங்களை அடுக்கடுக்காகச் சொல்லலாம்.

5. பக்தி வைராக்கியம் பற்றிய இந்த விஷயத்தை நாம் எப்படி பார்ப்பது?

முந்தைய ஆக்கத்தில் தீத்து 2:14 வசனத்தை ஆராய்ந்தபோது நாம் செய்தது போல, ரோமர் 12:11 வசனத்தின் முழுப் போதனையைக் குறித்தும் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன், தீத்து 2:14ன் போதனை, பக்தி வைராக்கியம் என்பது கடவுளிடமிருந்தே வருகிறது என்பதாகும். ரோமர் 12:11ன் போதனை என்ன தெரியுமா? வைராக்கியம் என்பது நம்முடைய சொந்த, தனிப்பட்ட. நம்மைச்சார்ந்த பொறுப்பாக இருக்கிறது என்பதுதான்.

வைராக்கியம் என்பது நம்முடைய சொந்த, தனிப்பட்ட பொறுப்பாக இருக்கிறது என்ற உண்மையை ஏற்பது கொஞ்சம் கடினமாக இருக்கலாம். ஏனெனில், ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம், கடவுளுக்காக வைராக்கியம் கொள்ளுவது என்பது கடவுளிடமிருந்து வருகிறது என்று. நம்முடைய இருதயத்தில் வைராக்கியத் தீ இருப்பதென்பது கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்றே அறிந்துகொண்டிருக்கிறோம். இது உண்மையானால், கிறிஸ்துவுக்காக சேவை செய்வதில் மந்தநிலையில், வலிமையற்ற வைராக்கியத்தைக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்லுவது? கர்த்தருடைய வார்த்தை என்ன சொல்லுகிறது தெரியுமா? சரியான பக்தி வைராக்கியம் கொண்டிருப்பது நம்முடைய தனிப்பட்ட பொறுப்பாக இருப்பதால் அதில் மந்த நிலையில் இருப்பதற்கும் நாமே காரணமென்று.

அப்படியானால், இந்த விஷயத்தில் நான் என்ன செய்ய வேண்டும்? எப்படி நான் இந்த பக்தி வைராக்கியத்தையும் பேரார்வத்தையும் என்னுடைய இருதயத்தில் தூண்டிவிடுவது? ஒருவேளை நான் கர்த்தருக்காக ஆர்வமற்றிருந்தால் அந்த நிலைமை மாறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? முந்தைய ஆக்கத்தில் இதற்கான பதிலை நாம் பார்த்திருக்கிறோம்.

நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான வைராக்கியத்தைக் கொடுக்கக்கூடிய கடவுளிடம் இதற்காகத் தீவிரமாக ஜெபத்தில் நாம் கேட்கிறவர்களாக இருக்க வேண்டும். பக்தி வைராக்கியத்தைப் பெற்றுக்கொள்ளுவதற்காக நம்முடைய கடமையை, பொறுப்பை இதன் மூலம் நாம் நிறைவேற்றுகிறோம். அதேவேளை, பக்தி வைராக்கியத்திற்குக் கடவுளே ஊற்றும் காரணமுமாக இருக்கிறார் என்பதையும் அறிகிறோம். வைராக்கியத்தைத் தருவது கடவுள்; வைராக்கியத்திற்காக கடவுளிடம் கேட்பது நம்முடைய பொறுப்பு.

இந்த நேரத்தில், பக்தி வைராக்கியத்தை நம்முடைய இருதயத்தில் தூண்டிவிடுவதற்கான வேறு இரண்டு வழிகளையும் காண்கிறோம். அவை என்ன தெரியுமா? நம்முடைய இருதயத்தில் பக்தி வைராக்கியத்தைத் தூண்டிவிடுவதற்கு, கிறிஸ்து யார் என்பதையும் அவரோடு நமக்குள்ள உறவைப் பற்றியும் சரியான கண்ணோட்டத்தை நாம் கொண்டிருப்பதோடு, ஜெபத்தில் அதைப் புதுப்பிக்கவும் வேண்டும். சுயத்துக்காக வாழுவதும் இந்த உலகக் கடவுள்களுக்காக வாழுவதும் பக்தி வைராக்கியத்தை சிதைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும். கடவுளின் உதவியோடு அவருடைய வார்த்தையின் மூலமாக நம்முடைய கண்ணோட்டத்தை சரிசெய்தால் என்ன நடக்கும் தெரியுமா? நம்முடைய அருமையான மகிமையுள்ள ஆண்டவராகிய இரட்சகரைப் பற்றிய சரியான பார்வையோடு வளர்ந்தால் என்னவாகும் தெரியுமா? நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய அவருக்கு நன்றியுடன் தாழ்மையுள்ள சேவகனாக நம்மைப் பார்க்கும் பார்வை மாறினால் எப்படியிருக்கும்? இந்தவிதமான சரியான கண்ணோட்டம் நம்மில் பக்தி வைராக்கியத்தை தூண்டிவிடாதா என்ன. கர்த்தராகிய இயேசுவைத் தவிர வேறு யாருக்கோ அல்லது எதற்கோ நான் சேவை செய்கிறவனாக இருப்பேனானால், நான் நிச்சயமாக மனந்திரும்ப வேண்டியவனாக இருக்கிறேன். கர்த்தருக்குப் பணிபுரியும் வாழ்க்கைக்கு நான் திரும்ப வேண்டும்.

இறுதியாக, நம்முடைய இருதயத்தில் பக்தி வைராக்கியத்தை தூண்டிவிடுவதற்கு, நாம் என்ன செய்ய வேண்டும் என்றும், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்றும் நம்முடைய கர்த்தர் சொல்லியிருப்பதை நாம் ஜெபத்தோடு தேடி அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முற்பட வேண்டும். ஒருவேளை, என்னுடைய வாழ்க்கையின் சில அம்சங்களில் கடவுள் நான் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறார் என்பதைப் பற்றி தெளிவற்றவனாக இருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுவோம். அல்லது, கடவுள் இதைத்தான் நான் செய்ய வேண்டுமென்று விரும்புகிறார் என்று அறிந்திருந்த போதும் அதை எப்படிச் செய்வது என்பதைப் பற்றி நான் அறியாதிருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுவோம். உண்மையில் இப்படியான நிச்சயமற்ற நிலை என்பது பக்தி வைராக்கியத்திற்கேற்பட்டிருக்கும் பக்கவாதம் போன்றதாகும். இப்படியான வேளையில் நான் என்ன செய்ய வேண்டும்? தாழ்மையோடு கடவுளுக்குக் கீழ்ப்படிகிற எண்ணத்தோடு இதைச் சரிசெய்யும்படி கடவுளிடம் நான் கேட்க வேண்டும். அவர் குறித்திருக்கிற நேரத்தில் நான் எதைச் செய்ய வேண்டும் என்றும் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்றும் அவரிடம் ஜெபத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதை அவர் செய்வதாக வாக்களித்திருக்கிறார். (என்னுடைய தனிப்பட்ட அனுபவத்திலும் அதை உணர்ந்திருக்கிறேன்). அதுமட்டுமல்லாமல், நாம் அவருடைய சித்தத்தின்படி நடக்கிற சேவகர்களாக நமக்குத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ள, நாம் செய்து கொண்டிருக்கும் பணிகளை நாம் பொறுமையோடும் ஆர்வத்தோடும் பொறுப்போடும் தொடர்ந்து செய்து வரவேண்டும். அவர் தெளிவாகச் செய்யச் சொல்லியிருக்கிற சில விஷயங்கள் உள்ளன. அவற்றை நாம் தொடர்ந்து பொறுப்போடு செய்து வரவேண்டும். நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், பேதுரு தன் வேலையில் உண்மையுள்ளவனாக மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதுதான் அவனை ஆண்டவர் மனிதர்களைப் பிடிக்கும்படி அழைத்தார். மனிதர்களைப் பிடிக்கும்படி ஆண்டவர் அவனை அழைக்கும்வரை அவர் ஒன்றும் செய்யாமலிருக்கவில்லை. தான் செய்ய வேண்டியவற்றை அவன் கடமைப்பாட்டோடு செய்து கொண்டிருக்கும்போதே ஆண்டவரின் அழைப்பு அவனுக்கு வந்தது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s