அக்டோபர் 31, 1517

தலபான் (Talaban) தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் புத்தமத சமய, வரலாற்றுச் சின்னங்களை சின்னாப்பின்னமாக்கினார்கள். அதையே பின்பு ஐசில் தீவிரவாத குழுவும் சிரியாவில் தான் கைப்பற்றிய இடங்களில் செய்தது. இவர்களெல்லாம் வரலாற்றின் ஒருபகுதி தங்களுடைய சிந்தனாவாதத்திற்கு எதிராக இருப்பதாகக் கருதி அதை அடியோடு இல்லாமலாக்கினால் மக்கள் நினைவிலிருந்து அதை அகற்றிவிடலாம் என்பதற்காகவும், தங்களுடைய சிந்தனாவாதத்தை சமுதாயத்தில் ஆணித்தரமாகப் பதிக்கவும் அதைச் செய்தார்கள். இன்று அமெரிக்காவில் ஒபாமாவின் லிபரல் போக்கைப் பின்பற்றும் சமுதாயத்தில் ஒரு பகுதி கொன்பெடரேட் (Confederate) தலைவர்களின் நினைவுச்சின்னங்களை இல்லாமலாக்கவேண்டும் என்ற குறுகிய நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. இதைச் செய்தால் தங்களுடைய குறுகிய கோரமான லிபரல் மனப்பான்மையை சமுதாயத்தில் ஆழப்பதித்து பாரம்பரிய, கன்ஷர்வெட்டிவ் (Conservative) சிந்தனை வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று இவர்கள் கனாக் காண்கிறார்கள். ரொபட் ஈ லீ, சாமுவேல் ஜாக்சன் போன்ற தலைசிறந்த கன்ஷர்வெட்டிவ் கிறிஸ்தவ தலைவர்கள் நினைவுச் சின்னங்களை அகற்றத் துணிந்திருக்கும் இந்தக் குறுகிய நோக்கம் கொண்ட விஷமிகளுக்கு வரலாற்றின் அருமையோ, அதுபோதிக்கும் பாடங்களைப்பற்றியோ எந்தக் கவலையும் இல்லை. குறுகிய நோக்கத்தோடு தற்காலத்துக்காகவும், சுயலாபத்துக்காகவும் மட்டுமே அராஜகத்தில் ஈடுபடும் இந்த விஷமிகள் வரலாறு தங்களுடைய நோக்கங்களுக்கும், இச்சைகளுக்கும் ஆபத்தாக இருப்பதாகக் கருதுகிறார்கள்.

வரலாறு அருமையானது; அது நல்லதையும் கெட்டதையும் சேர்த்தே விளக்குகிறது. வரலாற்றை வாசிக்கின்றபோது கெட்டதைப் பின்பற்றாமல் நல்லதைப் பாராட்ட வேண்டும். வரலாறு நமக்குப் போதிக்கும் பாடங்கள் எண்ணற்றவை. வரலாற்றை நாம் சமுதாயத்தீங்காகக் கருதக்கூடாது. அது சமுதாய நடப்பை வர்ணிக்கிறது. நமக்கு வரலாற்றின் எந்த அம்சமும் பிடிக்கவில்லை என்பதற்காக அதை அழிக்கமுனையக்கூடாது. அப்படிச்செய்வது குறுகிய மனப்பான்மையின் அடையாளம். இந்தியாவை பிரிட்டன் ஆண்டது வரலாறு. கீழைத்தேய நாடுகளின் பகுதிகளை போர்த்துக்கள், ஹாலாந்து, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் என்று பல தேசங்கள் ஆண்டிருக்கின்றன. இது வரலாறு; இது நமக்கு அவலட்சணத்தின் அடையாளமல்ல. அப்படிக் கருதுவது தவறு. வரலாறு, வீரம், கோழைத்தனம், தைரியம், அநீதி, நீதி, அராஜகம், சுதந்திர வேட்கை, ஆண்மை, போராட்டம், அமைதி, காதல் என்று எல்லாவற்றையும் விளக்கி நம்மை எதிர்காலத்தை நோக்கி வழிநடத்துகிறது. வரலாறு நமக்கு ஆசிரியன். அவனிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை அநேகம். வரலாற்றை துச்சமாக எண்ணாதீர்கள். வரலாற்றை நடந்து முடிந்த மானுட வாழ்க்கையின் தொகுப்பாகக் கணித்து பாடம் கற்றுக்கொள்ளப் பாருங்கள்.

வரலாற்றை துச்சமாக எண்ணும் சமுதாயம் தொலைநோக்குப் பார்வையற்றது. வரலாற்றைப் புறந்தள்ளும் சமுதாயம் வளர்ச்சியை நோக்கிப் போகமுடியாது. பிடிக்கிறதோ இல்லையோ வரலாறு நமக்கு வழிகாட்டி. கிறிஸ்தவன் வரலாற்றைப் புறக்கணிக்க முடியாது. நம் விசுவாசம் வரலாற்றோடு தொடர்புடையது. வேதமே இவ்வுலகில் கர்த்தரின் செய்கைகளின் வரலாறுதானே. முதல் நூற்றாண்டு திருச்சபை வரலாற்றை அப்போஸ்தல நடபடிகளில் வாசிக்காமல் நாம் திருச்சபை அமைக்கவோ, திருச்சபை வாழ்க்கையை இன்று வாழவோ முடியுமா? வரலாற்றில் ஆழமாகக் கால் பதித்திருக்கும் விசுவாசம் நம்முடையது. இந்தியாவின் தமிழகம், ஸ்ரீ லங்கா ஆகிய நாடுகளில் ஒரு சிறு தொகையினர் கிறிஸ்தவ வரலாற்றை வெள்ளையர்களின் காலனித்துவ ஆதிக்கமாகப் பார்க்கும் குறுகிய நோக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். குறுகிய சிந்தனைகொண்ட இவர்கள் வெகு சிலரே; அது நமக்கு சந்தோஷமே. இத்தகையவர்களின் வலைகளில் சிக்கிவிடாதீர்கள். 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதம், 17ம் நூற்றாண்டு பியூரிட்டன் பெரியவர்கள், 18ம் நூற்றாண்டு கிறிஸ்தவ தலைவர்களையெல்லாம் இவர்கள் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்களோ தெரியாது. இந்த வரலாற்றையெல்லாம் காலனித்துவ ஆதிக்கமாக இவர்கள் பார்ப்பார்களானால் இவர்களைவிட முழுமுட்டாள்கள் எவரும் இருக்கமுடியாது. கிறிஸ்தவனுக்கு குறுகிய மனப்பான்மை, இனத்துவேஷம், வட்டாரவீம்பு, பிரதேச ஆணவம் எதுவுமே இருக்கக் கூடாது. கிறிஸ்தவன் கிறிஸ்தவனாக மட்டுமே இருக்கவேண்டும்; கிறிஸ்தவ வேதப்பார்வையை மட்டுமே கொண்டிருக்கவேண்டும். கிறிஸ்துவின் சுவிசேஷம் சகல மதில் சுவர்களையும் தகர்த்து தெரிந்துகொள்ளப்பட்ட அனைவரையும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாக்கியிருக்கிறது; ஒரே சரீரத்தின் அங்கமாக்கியிருக்கிறது.

இங்குதான் என்னால் 16ம் நூற்றாண்டு திருச்சபை நிகழ்வுகளை எண்ணிப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதம் ஐரோப்பாவில் ஜெர்மனியில் ஆரம்பித்தபோதும் அது உலகம் தழுவிய திருச்சபை சீர்திருத்தம்; கிறிஸ்தவ சீர்திருத்தம். அக்டோபர் 31ல் 1517ம் ஆண்டு ஜெர்மனியில் நிகழ்ந்த நிகழ்ச்சிக்கும் கிறிஸ்தவர்களாகிய நமக்கும் பிரிக்க முடியாத பெருந்தொடர்பு உண்டு. அதற்குக் காரணம் அது இறையாண்மையுள்ள கர்த்தர் செய்த ஆத்மீக எழுப்புதல். எப்படி பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கும் நமக்கும் பிரிக்கமுடியாத தொடர்பிருக்கிறதோ, முதல் நூற்றாண்டு ஆதி சபையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கும் நமக்கும் இணைபிரியாத தொடர்பிருக்கின்றதோ அதேபோல் ஐரோப்பாவில் 16ம் நூற்றாண்டில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கும் நமக்கும் பிரிக்கமுடியாத தொடர்பிருக்கின்றது. வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த மார்டின் லூத்தர் (ஜெர்மனி), ஜோன் கல்வின் (பிரான்ஸ்), தியோடர் பீசா (பிரான்ஸ்), சுவிங்ளி (சுவிட்ஸர்லாந்து), ஜோன் நொக்ஸ் (ஸ்கொட்லாந்து) ஆகியோருக்கும் தமிழர்களாகிய நமக்கும் அத்தனை உறவு இருக்கின்றது. இவர்கள், ஆபிரகாம், மோசே போன்று நமக்கு முப்பாட்டர்கள். இவர்களுக்கும் நமக்கும் பிறப்பினால் உண்டாகும் இரத்த உறவுத்தொடர்பில்லாதிருந்தாலும், அதையெல்லாம்விட உறுதியான கிறிஸ்துவின் இரத்தவழித்தொடர்பு இவர்களோடு நமக்கிருக்கிறது. இவர்களுடைய இனம் வேறாயிருந்திருக்கலாம், நிறமும் மொழியும் வேறாயிருந்திருக்கலாம்; ஆனால், கிறிஸ்துவுக்குள் நாம் ஒன்றிணைந்திருக்கிறோம். ஆபிரகாமைப் பயன்படுத்திய அதே தேவன் இவர்களையும் தன்னுடைய ராஜ்ய விருத்திக்காக எழுப்பிப் பயன்படுத்தியிருக்கிறார். இவர்களையும் இவர்களுடைய வரலாற்றையும் உதறித்தள்ளுவது வேதத்தையே உதறித்தள்ளுவது போலாகிவிடும். இன்று நாம் சுதந்திரத்தோடு வேதத்தை வாசித்து விசுவாசிக்கக்கூடியதாக இருக்கின்ற விசுவாசத்தின் மூலம் மட்டுமே நீதிமானாக்குதல் போதனைக்கு உயிரூட்டி சுவிசேஷம் சுவிசேஷமாகத் தொடர்ந்து பிரசங்கிக்கப்பட இவர்கள் தங்கள் வாழ்வையே பணயம் வைத்து உழைத்திருக்கிறார்கள்.

1517ல்தான் சீர்திருத்தவாதி மார்டின் லூத்தர் மெய்யான சீர்திருத்த சத்தியப் போராட்டத்தை ஆரம்பித்து கத்தோலிக்க மதத்தின் போலித்தனத்தைத் தன்னுடைய 95 குறிப்புகளை வெளியிட்டுத் தோலுரித்துக்காட்டி சமுதாயத்தை சிந்திக்க வைத்தார். இதுபற்றி விருப்பமான எவரும் தன்னோடு விவாதத்தில் ஈடுபடலாம் என்று பகிரங்கமாக லூத்தர் அறிவித்திருந்தார். தன்னுடைய செயல் எந்தளவுக்கு அன்று ஐரோப்பாவை மட்டுமல்ல முழு உலகத்தையும் இன்றுவரை பாதித்து கிறிஸ்தவ எழுப்புதலை ஏற்படுத்தப்போகிறதென்பதெல்லாம் லூத்தர் அறியாதிருந்த உண்மைகள். போலிப்போதனையின் மூலம் மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்த கத்தோலிக்க மதத்தின் மெய்ரூபத்தைத் தோலுரித்துக்காட்டி சுவிசேஷத்தை மக்கள் அறிந்துகொள்ளுவதற்காகவே லூத்தர் அன்று இச்செயலில் ஈடுபட்டார். தன்னுடைய சொந்த மகனை கர்த்தரின் வார்த்தையைக் கேட்டு முழு விருப்பத்தோடு பலிகொடுக்க ஆபிரகாம் தயாராகி அதைச்செய்யத் துணிந்த அந்த வரலாற்றுச் செய்கையல்லவா இன்றைக்கும் இரட்சிக்கும் விசுவாசம் கிரியையோடு இணைந்து வரும் விசுவாசம் என்ற யாக்கோபுவின் போதனைக்கு உதாரணமாக இருந்து, கிறிஸ்தவர்களாகிய நாம் நற்கிரியைகளில் ஈடுபட வேண்டும் என்பதை இன்றும் வலியுறுத்திக்கொண்டிருக்கிறது. அதேபோல் சத்தியத்திற்கெதிரான எதையும் தோலுரித்துக்காட்டி சத்தியத்தை மேலோங்கச் செய்யவேண்டும் என்று ஆவியால் வழிநடத்தப்பட்டு லூத்தர் எடுத்த நடவடிக்கை ஆபிரகாமின் செயலைவிட எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல.

ஜெர்மனியில் அன்று நிகழ்ந்த சம்பவத்தின் காரணமாகவே இன்று நாம் வாசிக்கக்கூடியதாக வேதம் நம் கையில் இருக்கிறது. அதன் காரணமாகவே வேதம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது மட்டுமல்லாமல், வேதத்தை எப்படி விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்கான வரலாற்று, இலக்கண அடிப்படையிலான வேதவிளக்க விதிமுறை சீர்திருத்தவாதிகளால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றும் பயனுள்ளதாக இருந்துவருகிறது. திருச்சபை என்ற பெயரில் சிலைவணக்கத்திலும், தனி மனித வணக்கத்திலும் கர்த்தரின் பெயரில் கத்தோலிக்க மதம் ஈடுபட்டு வந்திருந்ததை அடியோடு மாற்றி, திருச்சபை வேதபூர்வமாக அமைந்து ஆராதனையில் எப்படி ஈடுபட வேண்டும் என்ற புதிய ஏற்பாட்டுப் போதனையின் அடிப்படையிலான திருச்சபையை 1517ம் ஆண்டு நிகழ்வு நமக்கு மறுபடியும் அறிமுகப்படுத்தியது. 1517ன் சீர்திருத்தவாதம் மாபெரும் சுவிசேஷ எழுப்புதல். சீகன்பால்கு, வில்லியம் கேரி போன்ற மிஷனரிகள் நம் தேசங்களுக்கு சுவிசேஷத்தைக் கொண்டுவந்தார்கள். ஹென்றி மார்டின் இன்றைய பங்களாதேசத்திற்கும், அடோனிராம் ஜட்சன் இன்றைய மியன்மாருக்கும் சுவிசேஷத்தைக் கொண்டு சென்றார்கள். இவர்களெல்லாம் மிஷனரிப் பணியில் ஈடுபட அவர்களைத் தூண்டி வழிநடத்தியது 16ம் நூற்றாண்டு திருச்சபை சீர்திருத்தமே. அன்று ஜெனீவாவில் இருந்து திருச்சபை மூலமாக ஜோன் கல்வின் செய்த மாபெரும் மிஷனரிப் பணியே சீர்திருத்தவாதத்தின் மிஷனரிப்பணிக்கெல்லாம் முன்னோடியாக இருந்து வருகிறது.

முடிந்துபோன வரலாறல்ல சீர்திருத்தவாதம்

16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதம் மறந்துவிடவோ அல்லது வருடத்தில் ஒரு தடவை மட்டும் நினைத்துப் பார்க்கவோ வேண்டிய வெறும் வரலாற்று நிகழ்வு அல்ல. அது திருச்சபையில் தொடர வேண்டிய சீர்திருத்தத்தை நினைவுபடுத்தும் தெய்வீக நிகழ்வு. வேதம் இன்று நம் கையில் இருக்கிறது; சுதந்திரமாக நம்மால் திருச்சபையில் கர்த்தரை ஆராதிக்க முடிகிறது. கத்தோலிக்கப் போப்பின் காட்டாட்சி இன்று நம்மீது இல்லை. இதெல்லாம் நடந்திருப்பதால் மட்டும் சீர்திருத்தவாதத்தை முடிந்துபோனதொன்றாகக் கருதமுடியாது. வேதம் கையில் இருந்தபோதும் வேதபூர்வமான வேதப்பிரசங்கம் இன்று நம்மினத்தில் அருகிக் காணப்படுகிறதே! மத சுதந்திரம் நமக்கிருந்தபோதும் வேதபூர்வமாக அமைந்த திருச்சபைகள் இல்லாமல் போலிப் போதகர்களின் கையில் சிக்கி ஆத்துமாக்கள் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கிறார்களே! தரமான இறையியல் போதனைகளை வழங்கும் நூல்கள் ஆங்கிலத்தில் ஏராளமாக இருந்தபோதும் சத்திய இறையியல் பஞ்சம் நம்மினத்தில் திருச்சபைகளிலும், இறையியல் கல்லூரிகளிலும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறதே! லூத்தரைப்போலவும், கல்வினைப்போலவும், நொக்ஸைப் போலவும், ஸ்பர்ஜனைப்போலவும் சத்திய வாஞ்சையோடு பிரசங்கித்து போதகப் பணிசெய்கிறவர்களைக் காணமுடியாமலிருக்கிறதே! உயிரே போனாலும் சத்தியம் மட்டுமே பெரிதென்று சீர்திருத்தத்தில் ஈடுபட்ட 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகளை நினைவுறுத்துகிற எவரையாவது எங்காவது இன்று காணமுடிகிறதா?

1517ஐ பின்னோக்கிப் பார்க்கவேண்டிய கடமை நமக்கிருந்தபோதும் அதோடு ஒரு ஆபத்தும் சேர்ந்து வருகிறது. அந்த ஆபத்து குருட்டார்வத்தில் மார்டின் லூத்தருக்கு பாராட்டு விழா வைத்துவிடுகின்ற ஆபத்துதான். நம்மினத்து அரசியல்வாதிகளுக்கு மாலைபோட்டு தோளில் பொன்னாடை போர்த்தி நாலு நல்ல வார்த்தைகள் சொல்லுவதுபோல் ஒரு விழா நடத்திவிடுகின்ற ஆபத்து இருக்கின்றது. அதைச் செய்யாமலிருக்கப் பார்த்துக்கொள்ளவேண்டும். அப்படிச் செய்வது இந்த ஆவிக்குரிய பெரிய மனிதர்களுக்கு நாம் செய்கிற துரோகம் மட்டுமல்ல, சீர்திருத்தவாதத்தையே அசிங்கப்படுத்துகிற செயலாகிவிடும்.

1517ஐ நாம் இன்று எந்தவிதத்தில் எண்ணிப்பார்க்க வேண்டும்? 16ம் நூற்றாண்டு இன்று நமக்கு தொடர வேண்டிய திருச்சபை சீர்திருத்தத்தை நினைவுறுத்துகிறது. அதாவது சீர்திருத்த வரலாற்றை முடிந்துபோனதொன்றாகக் கருதாமல் அது வெளிப்படுத்தியிருக்கும் சத்தியங்களின் அடிப்படையில் தனிப்பட்ட வாழ்க்கையில் கிறிஸ்தவன் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியவனாக இருக்கிறான்.

நீங்கள் கிறிஸ்தவராக இருப்பீர்களானால் பலரும் இரத்தம் சிந்தி உங்களுக்கு அளித்திருக்கின்ற வேதத்தில் நீங்கள் எந்தளவுக்கு அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். வேத அறிவை வளர்த்துக்கொள்ள என்ன செய்துவருகிறீர்கள் என்பதை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கை கர்த்தரை மகிமைப்படுத்தும்படியாக அன்றாடம் கிறிஸ்துவுக்கு தாழ்மையோடு கீழ்ப்படிந்து நடக்கின்றதாக இருக்கின்றதா என்பதை ஆராய்ந்து பாருங்கள். இதிலெல்லாம் மாற்றங்கள் இல்லாதிருக்குமானால் தேவையான மாற்றங்களை உடனடியாகக்கொண்டுவர மனத்தாழ்மையோடும் விசுவாசத்தோடும் நடவடிக்கை எடுப்பீர்களானால் அதுவே நீங்கள் இப்போது உடனடியாக உங்கள் வாழ்க்கையில் செய்யவேண்டிய அவசியமான சீர்திருத்தம்.

சீர்திருத்த வரலாறு திருச்சபையில் சீர்திருத்தம் தொடர வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. இரத்தம் சிந்தி சீர்திருத்தவாதிகளும் பியூரிட்டன் பெரியவர்களும் பெற்றுத்தந்திருக்கும் கிறிஸ்தவ சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும். அரசுக்கும், தனிமனிதனுக்கும், சுயத்துக்கும் அடிபணிந்து வாழ்வதாக திருச்சபை இருக்கக்கூடாது. 1900ங்களில் நடுப்பகுதியில் இந்திய பிரெஸ்பிடீரியன், மெத்தடிஸ்டு மற்றும் ஆங்கிலிக்கன் (சி. எஸ். ஐயும், சி. என். ஐயும்) திருச்சபைகள் இந்தியாவில் சத்தியத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு இணைந்து ஐக்கியத் திருச்சபைகள் ஸ்தாபனத்தை ஆரம்பித்தன. இது சத்திய விரோத லிபரலிசத்தை இத்திருச்சபை அமைப்புகளில் நிலைநிறுத்தின. இவற்றில் சீர்திருத்தத்தைக் கொண்டுவர முடியாதளவுக்கு பொய்யும் புரட்டும் ஆண்டுவருகின்றன. மறுபுறம் கெரிஸ்மெட்டிக் நிறுவனங்களும், திருச்சபைகளும் உணர்ச்சிக்கு அடிமையாகி வேதத்தை ஒதுக்கிவைத்திருக்கின்றன. இவைகளுக்கிடையில் சகோதரத்துவ சபைகள் சுவிசேஷ சபைகளாக இருந்தபோதும் காலக்கூறு கோட்பாட்டிற்கு கொடுக்கும் மரியாதையை வேதத்திற்கும், திருச்சபை பற்றிய வேதக்கோட்பாடுகளுக்கும் கொடுக்க மறுத்து நிற்கின்றன. சீர்திருத்தப் போதனைகளில் முக்கியமானவற்றிற்கு இவர்கள் எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள். இத்தகைய நம்மினத்துக் கிறிஸ்தவ சூழ்நிலையில் சீர்திருத்தத்தை எப்படித் தொடர்வது என்ற ஆதங்கமும், கேள்வியும் எழாமல் இருக்காது. இன்று சீர்திருத்தவாதம் தொடர வேண்டுமானால் வேத அடிப்படையிலான சபைகள் சீர்திருத்தவாத கோட்பாடுகளை நடைமுறையில் கொண்டு அமைவதைத் தவிர வேறு வழியில்லை.

தொடர்கின்ற திருச்சபை சீர்திருத்தத்தின் அடையாளமாக இருக்கும் 1517, இன்று நாம் வைராக்கியத்தோடு மனித பயமில்லாமல் பக்திவிருத்தியோடு உணர்வுபூர்வமாக ஜெபத்தோடு ஈடுபட வேண்டிய சீர்திருத்தத்தை நினைவுறுத்துகிறது. எவருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, எத்தனை பேர் பின்னால் வருகிறார்களோ இல்லையோ, வாழ்க்கை சுகங்களை இழந்து சத்தியத்தை மட்டும் அப்பட்டமாகப் பின்பற்றி வாழவேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். 1517 சுட்டி வழிகாட்டி நாம் தொடரும்படியாக வற்புறுத்துகின்ற சத்தியங்களில் முக்கியமானவை என்ன தெரியுமா? கிருபையினால் விசுவாசத்தின் மூலம் மட்டும் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறவர்களுக்கான இரட்சிப்பு, வேத இறையியலின்படி மட்டுமே அமைந்த தேர்ந்த சிறந்த வியாக்கியானப் பிரசங்கம், வேதவழிகளை மட்டுமே பின்பற்றுகிற கர்த்தர் ஏற்றுக்கொள்ளுகிற ஆராதனை, வேதவழிப்படி மட்டும் முறையான சபை அமைப்போடு அமைந்து இயங்கும் திருச்சபை, வேதவழிப்படி மட்டுமே கொடுக்கப்படும் கிருபையின் நியமங்கள், வேத வழிகளை மட்டுமே பின்பற்றும் சுவிசேஷப் பணி, வேதசத்தியத்தில் தேர்ந்த பக்திவிருத்தியுள்ள போதகப் பணி, சமுதாய அசிங்கங்களுக்கும், பண்பாட்டுச் சீரழிவுகளுக்கும் இடங்கொடுத்து அமையாத குடும்ப வாழ்க்கையும் பிள்ளை வளர்ப்பும் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். சமீபத்தில் நான் வேத ஆலோசனை கொடுத்த ஒரு குடும்பம். ‘ஐயா, இந்தப் போதனைகளையெல்லாம் நம்மினத்து மக்கள் கேட்டு வளர்ந்தால் எத்தனை நன்மையானதாக வாழ்க்கை இருக்கும், ஆனால் இப்படியெல்லாம் போதிக்கும் போதகர்களோ, சபைகளோ இல்லையே’ என்று பேராதங்கத்தோடு சொன்னார்கள். அதனால்தான் 1517 சீர்திருத்த வரலாறு நம்மினத்தில் இன்று அருகிக் காணப்படும் சீர்திருத்தத்தை, தொடரவேண்டிய சீர்திருத்தத்தை வற்புறுத்தி நினைவூட்டுகிறது. சீர்திருத்தவாத வரலாற்றை நினைத்துப்பார்ப்பதோடு நின்றுவிடாமல் அதற்காகத் தொடர்ந்து கர்த்தரின் துணையோடு உழைப்போம்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s