கடந்த இதழில் இந்த வருடம் சீர்திருத்த வரலாறு ஆரம்பமான 500வது வருடம் என்பதை நினைவுபடுத்தியிருந்தேன். அதன் காரணமாக அது பற்றிய இரண்டு ஆக்கங்கள் இதில் வந்திருக்கின்றன. 1517ம் ஆண்டு உலகத்தைச் சார்ந்தவர்களுக்கு பொருளற்ற, எல்லா வருடங்களையும் போன்ற சாதாரண வருடமாகத் தெரியலாம். கிறிஸ்தவர்களுக்கு அது அப்படிப்பட்டதல்ல. திருச்சபைக்கு அது மிகச்சிறப்பான வருடம். கிறிஸ்தவத்தையும், கிறிஸ்தவ சத்தியங்களையும் மறுபடியும் பகிரங்கமாக நிலைநாட்டிய வருடம். சீர்திருத்த வரலாற்றை வாசிக்காதவர்களும், அதுபற்றிய சிறப்பை உணராதவர்களும் மட்டுமே இந்த வருடத்தை உதாசீனம் செய்வார்கள். நாம் வெளியிட்டிருக்கும் கிறிஸ்தவ வரலாறு, இரண்டாம் பாகத்தை வாங்கி வாசியுங்கள். சீர்திருத்த வரலாற்றுக்காலத்தைப் பற்றிய உண்மைகளை விளங்கிக்கொள்ள அது துணை செய்யும். நம் வரலாற்றைப்பற்றிய உண்மைகள் தெரியாமல் வாழ்வதைப் போன்ற ஆபத்து எதுவுமில்லை.
சீர்திருத்தவாத வரலாறு நமக்கு இன்னொன்றையும் நினைவுபடுத்துகிறது. அதாவது, சத்தியம் நமக்கு வெறும் ‘லேபலாக’ இருந்துவிடக்கூடாது என்பதுதான். சத்தியத்தை அறிந்துகொள்ளுகிற ஆர்வமிருக்கின்ற அளவுக்கு பலருக்கு அதில் ஆழ்ந்த அசைக்கமுடியாத நம்பிக்கை இல்லாதிருப்பதை நான் காண்கிறேன். பச்சோந்தி தன் நிறத்தை அடிக்கடி மாற்றிக்கொள்ளுவதுபோல் சத்தியத்தில் நாம் மாற்றங்களைக் கொண்டுவரக்கூடாது. சத்தியம் எப்போதும் ஒன்றே (எபே. 4). திருச்சபை சத்தியத்துக்கு தூணாக, ஆதரவாக, பாதுகாப்பாக இருக்கவேண்டும். அதனால் பிரசங்கிகளும், போதகர்களும் சத்தியத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கவேண்டும். அதை விளக்குகின்ற ‘இறையியல் பச்சோந்திகள்’ என்ற ஆக்கத்தை இதில் நீங்கள் வாசிக்கலாம்.
கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அவசியமான தேவபயத்தையும், பக்திவைராக்கியத்தையும் வலியுறுத்தி அதுபற்றிய தொடர் ஆக்கங்களை போதகர்கள் அல்பர்ட் என் மார்டினும், டேவிட் மெரேக்கும் இந்த இதழில் எழுதி வருகிறார்கள். இதுவரை வந்துள்ள இதழ்களைப்போல இதுவும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க கர்த்தர் உதவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும், ஜெபமும். இந்த இதழை நல்ல முறையில் தயாரித்து உங்கள் கரத்தை வந்தடையத் துணை செய்த அனைவருக்கும் எங்கள் நன்றி கலந்த வணக்கங்கள். – ஆர்