பக்தி வைராக்கியம் – 9 – டேவிட் மெரெக்
[பக்தி வைராக்கியம் என்ற தலைப்பில் வந்துகொண்டிருக்கும் இந்தத் தொடர், போதகர்களுக்காக நடத்தப்பட்ட இறையியல் போதனை வகுப்புகளில் போதகர் டேவிட் மெரெக்கினால் கொடுக்கப்பட்டது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் M. ஜேம்ஸ்.]
இதுவரை நாம் படித்தவைகளை சற்றுத் திருப்பிப் பார்ப்போம். முதலில், இந்தத் தலைப்பு சம்மந்தமாக இரண்டு முக்கிய வேதப்பகுதிகளை நாம் கவனித்தோம், தீத்து 2:13-14 மற்றும் ரோமர் 12:11. தீத்து 2ல், நாம், பக்தி வைராக்கியம் கடவுளிடமிருந்தே வருகிறது என்பதைப் படித்தோம். ஆனால் ரோமர் 12:11ல், பக்தி வைராக்கியம் என்பது நம்முடைய தனிப்பட்ட சொந்தப் பொறுப்புகளையும் உள்ளடக்கியது என்ற உண்மையையும் கண்டோம். பிறகு ரோமர் 12:11வது வசனத்தைச் சுற்றியிருக்கும் வசனங்களுக்கான விளக்கத்தைப் பார்த்தோம். நடைமுறை விஷயங்களை விளக்கும் அந்த பெரிய வசனப்பகுதியானது, கிறிஸ்துவுக்காக வைராக்கியத்தோடு ஊழியம் செய்யும் அனலுள்ள இருதயத்தைப் பற்றி பவுல் 11 வது வசனத்தில் சொல்லியிருப்பதோடு பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கும் கிறிஸ்தவ வாழ்க்கையின் பல அம்சங்களை உள்ளடக்குகிறது. பிறகு, ரோமர் 12:11ல் இருக்கும் மூன்று சொற்றொடருக்கான விளக்கங்களைப் படித்தோம். முழு இருதயத்தோடு கர்த்தருக்கு ஊழியம் செய்வதற்கு எதிராக இருக்கும் பாவகரமான வைராக்கியத்தின் பல வடிவங்களைக் குறித்து முந்தைய அதிகாரத்தில் படித்தோம்.
இப்போது, பக்தி வைராக்கியம் பற்றிய நம்முடைய இந்த ஆய்வு படிப்பில் ஒரு வித்தியாசமான அணுகுமுறையைத் தொடங்கப் போகிறேன். இந்தப் புதிய அணுகுமுறை கிட்டத்தட்ட நம்முடைய இந்த ஆய்வின் முடிவு வரை தொடரப்போகிறது. ஒரு வரைபடம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்று சொல்லுவார்கள். வேதத்தில், பக்தி வைராக்கியத்தை விளக்கும் அதிரடி உதாரணங்கள் பல உள்ளன. அப்படிப்பட்ட உதாரணங்களிலேயே நம்முடைய கவனத்தை செலுத்தப் போகிறோம். அப்படிச் செய்வதன் மூலமாக, இந்த முக்கியமான தலைப்பைப் பற்றிய அதிகமான விஷயங்களை நாம் கற்றறியலாம். இதில், சுவிசேஷ ஊழியத்தில் பக்தி வைராக்கியத்தோடு செயல்பட்ட, புதிய ஏற்பாட்டிலுள்ள அநேக ஊழியர்களில் நம்முடைய கவனத்தை செலுத்தப் போகிறோம்.
- யோவான் ஸ்நானன்
யோவான் 5:33-35 – 33. நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்குச் சாட்சிகொடுத்தான். 34. நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன். 35. அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.
குறிப்பாக 35வது வசனத்தை கவனியுங்கள். அதில் இயேசு யோவான் ஸ்நானைப் பற்றி சொல்லிய வார்த்தைகளைப் பார்க்கலாம், “அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்”. இங்கு “எரிந்து” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை புதிய ஏற்பாட்டில் வைராக்கியத்திற்கு மிகவும் நெருக்கமான வார்த்தையாகும். வைராக்கியத்தை விளக்குகிற வார்த்தைகளில் எரிகிற அல்லது சூடாகுதல் என்பதன் பொருள் இருப்பதை நினைவுகூருங்கள். ஆகவே யோவான் ஸ்நானனை வைராக்கியமுள்ள விளக்கு என்று சொன்னால் அது மிகையாகாது. அவன் வைராக்கியத்தோடு எரிகிற வெளிச்சமாக, இருளிலிருந்த யூத தேசத்தில் பிரகாசித்தான். அவன் பிரகாசிக்கிற வெளிச்சமாக இருந்தான் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அப்படியென்றால் என்ன? பிரகாசித்தல் என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில், மனிதர்களால் பார்க்கக்கூடியதாக என்ற விதத்தில் ஏனைய இடங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆகவே பிரகாசிக்கிற விளக்கு என்பது பளிச்சென்று ஒளிருகிறதாக சுற்றியிருக்கிற எல்லாருக்கும் தெரிகிறதாக இருக்கும் என்பதாகும். ஒட்டுமொத்த இடத்தையும் ஒளிரவைக்கக் கூடிய பிரகாசமுள்ள விளக்கைப் போன்றது.
எந்தவிதத்தில் யோவான் ஸ்நானன் இத்தகைய விளக்காக இருந்தான்? வசனம் 33 சொல்லுகிறது, அவன் சத்தியத்திற்கு சாட்சிகொடுக்கும் விளக்காயிருந்தான் என்று. கடவுள் அவன் மூலமாக பேசுகிறார் என்பது எல்லாருக்கும் தெரிகிறவிதமாக, அவன் வைராக்கியத்தோடும் தெளிவாகவும் கடவுளுடைய வார்த்தைக்கான உண்மையுள்ள தீர்க்கதரிசியாக வெளிப்படையாக பேசினான்.
யோவான் ஸ்நானனுடைய வாழ்க்கை மற்றும் ஊழியத்தைப் பற்றி படிக்கிறபோது, கடவுளுடைய வார்த்தைக்கான யோவனுடைய சாட்சியத்தில், சுவிசேஷ சத்தியத்தின் இரண்டு முக்கியமான அம்சங்கள் அடங்கியிருந்ததை நாம் பார்க்கலாம்.
முதலாவது, யோவான், யூத மக்களுடைய பாவங்களின் மீது கடவுளுடைய வார்த்தையின் விளக்காக பிரகாசித்தான். அவன் அவர்களை மனந்திரும்புபடி அழைத்தான். அதுவே மத்தேயு, மாற்கு, மற்றும் லூக்கா சுவிசேஷங்களில் அவனைப் பற்றிய முக்கிய பதிவாக இருக்கிறது. வானந்திரத்தில் யோவான் பிரசங்கித்தபோது, அவனுடைய ஆரம்ப செய்தி என்ன? “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான்” (மத்தேயு 3:2). அவனை நாடி வந்தவர்கள் “தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்” (மத்தேயு 3:6). மாய்மால யூதத் தலைவர்கள் அவனிடம் வந்தபோது, அவர்கள் மெய்யான மனந்திரும்புதலோடு, மனந்திரும்புதலின் கனிகளைத் தரும்படி அவர்களிடம் எடுத்துச் சொன்னான் (மத்தேயு 3:7-10).
லூக்கா 3:10-14 – 10. அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். 11. அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான். 12. ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். 13. அதற்கு அவன்: உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான். 14. போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண் செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.
அவன் தனக்கு முன் நின்றிருந்தவர்களில் ஒவ்வொரு கூட்டத்தினரையும் பார்த்து, அவர்களின் பாவங்களை குறிப்பாக அடையாளங்காட்டி எடுத்துச் சொன்னான். மனந்திரும்புதலின் கனி எப்படியிருக்கும் என்பதையும் அவன் குறிப்பாக விளக்கினான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:4ல் பவுல், யோவான் மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானம் தந்ததாக அறிவித்தான். பிறகு, ஏரோது ராஜா தன் சகோதரனுடைய மனைவியை திருமணம் செய்து விபச்சாரத்தில் ஈடுபட்டபோது, அவன் அப்படிச் செய்தது நியாயமானதல்ல பாவகரமானது என்று நேரடியாகக் கண்டனம் பண்ணினான்.
மத்தேயு 14:3-4 – 3. ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான். 4. ஏனெனில்: நீர் அவளை வைத்துக் கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான்.
மனந்திரும்புங்கள் என்று சொல்லுகிறதோடு அவன் நிறுத்திக்கொள்ளவில்லை. வருகிற மேசியாவாகிய கர்த்தராகிய இயேசுவையும் மனிதர்களுக்கு சுட்டிக்காட்டினான். மத்தேயு 3வது அதிகாரத்தில் நாம் வாசிப்பது போல், வருகிற மேசியாவாகிய கர்த்தராகிய இயேசுவுக்கு வழியை ஆயத்தம்பண்ணுவதுதான் யோவானின் ஊழியமாக இருந்தது. தனக்கு பின் வருகிறவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் தருவார் என்று அவன் அறிவித்தான்.
மத்தேயு 14:11-12 – 11. மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். 12. தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
அவர் துன்மார்க்கரை அக்கினியால் நியாயந்தீர்ப்பார் என்றான். மனந்திரும்புகிற தம்முடைய மக்கள்மீது தம்முடைய ஆவியை அவர் ஊற்றி அவர்களைத் தமக்காக அவர் சேர்ப்பார் என்றான். லூக்கா 1:16ன்படி, யோவான் மனிதர்களின் இருதயங்களை அவர்களுடைய மேசியாவிடம் திருப்புகிறதன் மூலம் கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணினான். யோவான் இயேசுவைப் பார்த்தபோது, “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று அறிவித்தான்
யோவான் 1:26, 36
- யோவான் அவர்களுக்கு பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்.
- இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:4ல் பவுல் மறுபடியும் யோவானின் ஊழியத்தைக் குறித்துச் சொல்லுகிறபோது, “அவன் மனிதர்களிடம் தனக்குப் பின் வருகிறவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்று சொன்னதாக” குறிப்பிட்டிருக்கிறார். இது யோவானுடைய ஊழியத்தின் இரண்டாவது அம்சம். அதாவது அவன் கர்த்தராகிய இயேசுவுக்கு சாட்சியாக இருப்பது. யோவான் 5:35ல், இயேசு யோவானை எரிந்து பிரகாசிக்கிற விளக்கு என்று விவரித்தபோது, இதை மனதில் வைத்தே சொன்னார். யோவான் 5:35-36 வசனங்களை மறுபடியும் வாசியுங்கள் (கவனியுங்கள் அவனுடைய சாட்சி குறிப்பாக இயேசுவைப் பற்றியதாகவே இருந்தது).
இவையெல்லாவற்றிலும், சுவிசேஷ ஊழியர்களுக்கு பக்தி வைராக்கியத்திற்கான உதாரணமாகவே யோவான் இருக்கிறார். நம்மில் பக்தி வைராக்கியம் இருந்தால், நாமும் யோவான் இருந்தது போல் நம்மைச் சுற்றியுள்ள இருளான உலகத்தில் எரிகிற பிரகாசமுள்ள விளக்காகவே இருப்போம். பாவிகளுக்கு இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷ வெளிச்சத்தை ஆர்வத்தோடு பிரகாசிக்கச் செய்வதை நாடுகிறவர்களாக இருப்போம் (பிரகாசிக்கிற விளக்காக). யோவானில் நாம் பார்க்கிற சுவிசேஷத்தின் இந்த இரண்டு அம்சங்களையும் கவனத்தோடு பிரகாசிக்க செய்வோம். ஒன்று, மனிதர்களின் பாவங்களை உண்மையுடனும், தெளிவாகவும் வெளிப்படுத்திக்காட்டி மெய்யான மனந்திரும்புதலின் கனிகளைத் தரும்படி அழைப்போம். இரண்டாவது, கர்த்தராகிய இயேசுவை சுட்டிக்காட்டி, அவரில் விசுவாசம் வைக்கும்படி அவர்களை அறிவுறுத்துவோம்.
யோவான் ஸ்நானனின் வாழ்க்கையிலிருந்தும் ஊழியத்திலிருந்தும் இன்னும் அநேக காரியங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். சுவிசேஷ விளக்காக மற்றவர்களுக்கு முன் பிரகாசிப்பதற்கான அநேக வழிகளை அவர் நமக்கு சுட்டிக்காட்டுகிறார்.
சுய வெறுப்பின் மூலம் சுவிசேஷ விளக்காக நாம் பிரகாசிக்க வேண்டும். யோவான் தன்னந்தனியாக வனாந்தரத்தில் நல்ல உணவோ, உடையோ, தங்குவதற்கான இடமோ இல்லாமல் வாழ்ந்தார் என்பதை நினைவுகூருங்கள். யோவானுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் அப்படியே நாம் பின்பற்றும்படி வேதம் போதிக்கவில்லை. யோவானின் மூலமாகவும் குறிப்பாக நம்முடைய இரட்சகரின் மூலமாகவும், நம்மை நாம் வெறுத்து அனுதினமும் சிலுவையை எடுத்துக்கொண்டு கிறிஸ்துவை பின்பற்றும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம் (லூக்கா 9:23). நம்முடைய சுவிசேஷ வேலைகளும், நம்முடைய ஊழியத்தின் அனைத்து அம்சங்களும் இத்தகைய சுய வெறுப்பை வெளிப்படுத்துகிறதா?
தைரியமாகவும் துணிவுடனும் நாம் சுவிசேஷ விளக்காக பிரகாசிக்க வேண்டும். மதத் தலைவர்களாகவும் அரசாங்க ஊழியர்களாகவும் இருந்தபோதும் அவர்களுடைய பாவங்களை உண்மையுடன் அவர் எடுத்துச் சொன்னார். உண்மையுடன் அவர் வாழ்ந்தது அவருடைய உயிரையே பறித்தது. அவர்கள் யாராக இருந்தாலும் மனிதர்களுடைய இருதயத்தின் ஆவிக்குரிய நிலையை உள்ளபடி எடுத்துச் சொல்ல அவர் தயங்கியதில்லை. நாமும் தயங்கக் கூடாது.
கர்த்தராகிய இயேசுவின் தாழ்மையுள்ள ஊழியனாக சுவிசேஷ விளக்காக பிரகாசிக்க வேண்டும். வாசியுங்கள் யோவான் 1:19-20. தன்னை மேசியாவாக அடையாளம் காணுவதை யோவான் வெளிப்படையாக நிராகரித்தார்.
யோவான் 1:26-27 – 26. யோவான் அவர்களுக்கு பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார். 27. அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான்.
இங்கும் ஏனைய பகுதிகளிலும், யோவான் தன் தலைவனுடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் தான் தகுதியில்லாதவன் என்பதை பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
யோவான் 3:26-30 – 26. அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங் கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள். 27. யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். 28. நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள். 29. மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று. 30. அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
யோவான் தன்னுடைய ஊழியம் குறையவும் இயேசுவின் ஊழியம் வளரவும் ஆரம்பித்தபோது அவர் பொறாமைபடவில்லை. மாறாக, கடவுளிடமிருந்து தனக்கு தரப்பட்டாலொழிய பெரியளவிற்காக ஊழியங்களைத் தான் செய்ய முடியாது என்பதை தாழ்மையுடனும் கீழ்ப்படிதலோடும் ஏற்றுக்கொண்டார் (வசனம் 27). அத்தகைய சந்தர்ப்பங்களைத் தருகிறவரும் கடவுள்தான், அதை முடித்து வைக்கிறவரும் அவரே. பொறாமை கொள்ளுவதற்கு பதிலாக, தன்னுடைய இடத்தைப் பிடிக்கும் ஒருவரின் ஊழியம் சிறப்பான வகையில் வருவதை ஆனந்தத்தோடு அவர் வரவேற்றார் (வசனம் 29). தான் சிறுகவும் இயேசு பெருகவும் வேண்டிய உண்மையை அவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார் (வசனம் 30). நம்முடைய செல்வாக்கும் வெற்றியும் குறைவுபடுகிறபோது, மற்ற போதகர்களின் ஊழியங்களும் சபையும் வளருகிறபோது இந்தவிதமாக நாம் நடக்கிறோமா? அல்லது நம்முடைய இருதயத்தில் பொறாமை நிறைந்திருக்கிறதா? பொறாமை நிறைந்திருப்பது நிச்சயமாக சுவிசேஷ பிரசங்கியின் மனோபாவம் அல்ல.
வைராக்கியமுள்ள சுவிசேஷ ஊழியனாகிய யோவான்ஸ்நானனின் மாதிரியைபோல் நம்மால் ஒருபோதும் இருக்க முடியாது என்கிற அவநம்பிக்கை நம்மில் ஏற்படலாம். இப்படியான சோதனை நம்மில் எழுமானால், யோவான்ஸ்நானனைப் பற்றி வேறு பல விஷயங்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். யோவான் கர்த்தராகிய இயேசுவுக்கு ஊழியம் செய்தபோது தன்னில்தான் பெலவீனமுள்ள விளக்காகவும் இருந்திருக்கிறார்.
மத்தேயு 11:2-6 – 2. அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து: 3. வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான். 4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்; 5. குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. 6. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
தன்னுடைய உண்மையினிமித்தமாக அவர் சிறையில் இருந்தபோது, தன்னுடைய விசுவாசத்தோடு அவர் போராட வேண்டியிருந்தது. அவர் தன்னுடைய சீடர்களை அனுப்பி வருகிறவரான மேசியா நீர்தானா என்று கேட்கும்படி இயேசுவிடம் அனுப்பினார். முன்பு இந்த யோவான்தான், இயேசுவை உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டி என்று மிகுந்த நம்பிக்கையோடு அடையாளங்காட்டினார். யோவான் அசாதாரண மனிதன் அல்ல. நாமும் கூட.
நாமும் போதகர்களாக இயேசுவுக்கு ஊழியம் செய்ய முற்படுகிறபோது, நம்மில் நாமும் பெலவீனமான விளக்குகளாகவே இருப்போம். இயல்பாக நாம் மிகவும் பலவீனமுள்ளவர்கள். ஆகவே எளிதில் சோர்வுற்றுப் போவோம். எவ்வளவு விரைவாக நம்முடைய பக்தி வைராக்கியம் ஒரு தீப்பொறி கூட இல்லாதளவுக்கு வீழ்ச்சியடைகிறது. இந்த யோவான் ஸ்நானனும்கூட நமக்கான ஒரு ஊக்கமாகவே இருக்கிறார். நமக்கு ஏற்படுவதுபோன்ற போராட்டங்களை அவரும் அனுபவித்திருக்கிறார். இருந்தும், பிறகு இயேசு அவரை எரிகிற பிரகாசமுள்ள விளக்காக விவரிக்கிறார். எவ்வளவு கிருபையுள்ள இரட்சகர் அவர். இந்த கிருபையுள்ள இரட்சகர் யோவான் ஸ்நானனின் இரட்சகர் மட்டுமல்ல. நீங்கள் மனந்திரும்பி விசுவாசித்திருந்தால் அவர் உங்களுடைய இரட்சகரும் கூட. இதுவரை நீங்கள் மனந்திரும்பி அவரை விசுவாசியாதிருந்தால், இப்போது நீங்கள் மனந்திரும்பி அவரை விசுவாசித்தால் அவர் உங்கள் இரட்சகராவார்.
யோவான் ஸ்நானனுடைய சுவிசேஷ வைராக்கியமாகிய பாடத்தை முடிக்கிற வேளையில், நம்முடைய சுவிசேஷ அறிவிப்பில், யோவானுக்கு இருந்ததைப் போன்று நமக்கிருக்கும் சவால்களைக் கேளுங்கள்.
எரிகிற வீட்டை நீங்கள் கடந்து போகிறவர்களாக இருந்தால், அந்த வீட்டிலுள்ளவர்கள் தப்பிப்பதற்கான வழியை ஏற்படுத்தும்படி ஜன்னல் வழியாக உங்களை நோக்கி முறையிட்டால், எவ்வளவு ஆர்வத்துடன் அவர்களை விடுவிப்பதற்காகப் போராடுவீர்கள்! உங்களோடு இருப்பவர்களின் ஆத்துமாவை நித்திய அக்கினியிலிருந்து விடுவிப்பதற்கு குறைவான ஆர்வத்தோடா செயல்படுவீர்கள்? மற்றவர்கள் விசுவாசிக்கும்படி அறிவிக்கிற நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நியாயத்தீர்ப்பு, பரலோகமும், நரகமும் உண்டு என்று நீங்கள் நம்புகிறீர்களா? பரிதாபகரமான பாவிகள் எந்தவொரு நொடியிலும் முடிவற்ற நரகத்தில் விழ நேரிடலாம் என்று நம்புகிறீர்களா? பிறகு ஏன் நீங்கள் அவர்களுடைய இரட்சிப்பைப் பற்றி மிகவும் அக்கறையற்றவர்களாகவும் ஆர்வமற்றவர்களாகவும் இருக்கிறீர்கள்?
நம்மைச் சுற்றியுள்ள, அழிந்துகொண்டிருக்கும் ஆத்துமாவை புதுப்பிக்கவும் உயிர்ப்பிக்கவும், அவர்களை இயேசுவிடம் கொண்டுவரும்படியான வைராக்கியத்தை கடவுள் தாமே நம்மில் ஏற்படுத்துவாராக.
இப்போது நாம், பக்தி வைராக்கியத்திற்கு ஒரே பூரணமான மனித உதாரணமும், யோவான் குறிப்பிட்டுக் காட்டியவருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் படிக்கலாம்.
- கர்த்தராகிய இயேசு
பக்தி வைராக்கியத்திற்கான உதாரணமாக இயேசுவைப் பார்ப்பதற்கு அநேக விஷயங்கள் இருக்கிறது. உண்மையில் அவருடைய முழு வாழ்க்கையும் ஊழியமும் பக்தி வைராக்கியத்திற்கான உதாரணமாகவே இருக்கிறது. இந்த நேரத்தில் இயேசுவில் பக்தி வைராக்கியம் இருந்ததை குறிப்பாக விளக்குகிற ஒரேயொரு பகுதியை மட்டும் பார்க்கப் போகிறோம்.
யோவான் 2:13-18 (குறிப்பாக வசனம் 17) – 13. பின்பு யூதருடைய பஸ்கா பண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய், 14. தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, 15. கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு, 16. புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். 17. அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள். 18. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்.
இது இயேசுவினுடைய ஊழியத்தின் ஆரம்ப காலம். இயேசு வியாபாரிகளைத் தேவாலயத்தைவிட்டு முதல்முறையாக விரட்டியதை விவரிக்கும் பகுதி. இந்த வியாபாரிகள் தம்முடைய பிதாவின் வீட்டை வியாபார வீடாக மாற்றியிருந்தார்கள் என்று குறிப்பிடுகிறார். விற்பதற்கும் வாங்குவதற்குமான இடமாக அதை அவர்கள் மாற்றியிருந்தார்கள்.
இயேசுவின் இந்த நடவடிக்கைக்கான காரணங்களை, இரண்டாவது முறையாக அவர் இப்படி செய்ததை விவரிக்கும் பகுதியில் அதிகம் தெரிந்துகொள்ளலாம். அவர் சிலுவை மரணத்தை அடைவதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பாக எருசலேமுக்கு கடைசி முறையாக அவர் சென்றபோது தம்முடைய பிதாவின் வீட்டை சுத்திகரிக்கும் இந்த செயலைச் செய்தார்.
மாற்கு 11:15-18 – 15. அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து, 16. ஒருவனும் தேவாலயத்தின் வழியாக யாதொரு பண்டத்தையும் கொண்டுபோகவிடாமல்: 17. என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார். 18. அதை வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே அவருக்குப் பயந்திருந்தார்கள்.
இங்கு இயேசு, தேவாலயத்தை எப்படி சரியான முறையில் பயன்படுத்துவது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அது ஜெப வீடு. பலி செலுத்துவதற்கான மிருகங்களைக் கொண்டு வந்து விற்கிறவர்கள், வியாபாரிகள் போன்றவர்களின் நடவடிக்கையிலுள்ள பிரச்சனைகளையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் தங்களிடம் வியாபாரம் செய்ய வரும் மனிதர்களை ஏமாற்றுகிற திருடர்களாக இருந்தார்கள். ஆகவே ஜெப வீடாக இருப்பதற்கு பதிலாக, கடவுளை வழிபட வருகிறவர்களை ஏமாற்றித் திருடும் தந்திரமுள்ள வியாபார சந்தையாக தேவாலயம் இருந்தது. யூத மத தலைவர்களும் இந்த நடவடிக்கைகளில் இணைந்திருந்தார்கள் என்பதை நம்புவதற்கான சில சான்றுகளும் இருக்கிறது. இயேசு தேவாலயத்தை சுத்தம்செய்த இரண்டு முறையும் அவர்கள் எதிர்த்தனர். முதல் முறை, இதைச் செய்வதற்கான அதிகாரம் அவரிடம் இருப்பதை நிரூபிக்கும்படி சவால் விட்டனர். இரண்டாவது முறை அவரைக் கொல்லத் திட்டமிட்டனர்.
இந்த கட்டத்தில் நாம் மறுபடியும் யோவான் 2:17க்கு திரும்பிச் செல்லலாம். இயேசு அந்த திருடர்களை அவர்களுடைய மிருகங்களோடு சேர்த்து விரட்டியபோது அவருடைய நோக்கம் என்னவாக இருந்தது என்பது தெளிவாக இங்கு சொல்லப்பட்டுள்ளது. இப்படிச் செய்ய, தேவனுடைய வீட்டைப் பற்றிய வைராக்கியமே அவரை உந்தித்தள்ளியது. தேவனுடைய வீடு தூய்மையானதாக இருப்பதற்கான வைராக்கியங் கொண்டார். தேவாலயம், கடவுளை மகிமைப்படுத்தும் வழிபாட்டு ஸ்தலமாக, பாதுகாக்கப்பட வேண்டும் என்று வைராக்கியங் கொண்டார். இங்கு நம்முடைய கர்த்தருடைய வைராக்கியம் மிகவும் கடுமையாக இருந்தது. அது அவரை பட்சித்தது என்று சொல்லப்பட்டுள்ளது.
நாம் கவனிக்க வேண்டிய இன்னும் அநேக விஷயங்கள் இதில் இருக்கிறது.
“உம்முடைய வீட்டைக் குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது” (யோவான் 2:17) என்ற சொற்றொடர் பழைய ஏற்பாட்டிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அது சங்கீதம் 69:9லிருந்து குறிப்பிடப்பட்டுள்ளது.
சங்கீதம் 69:9 – உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்தி வைராக்கியம் என்னைப் பட்சித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.
இது தாவீதின் சங்கீதம் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த சங்கீதத்தில் தாவீது தன்னுடைய அறிவீனத்தையும் பாவத்தையும் பற்றிச் சொல்லியிருக்கிறார்.
சங்கீதம் 69:5 – தேவனே, நீர் என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என் குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.
ஆனால் இந்த சங்கீதத்தின் பிற்பகுதியில் வேறொருவரைப் பற்றி சொல்லப்பட்டிருப்பதை நாம் பார்க்கலாம்.
சங்கீதம் 69:19-21 (குறிப்பாக 21வது வசனம்) – 19. தேவரிர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர், என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள். 20. நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன். 21. என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.
இங்கு, தாவீதின் குமாரனும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாவுமாகிய அவரைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. வசனம் 21, இயேசுவின் சிலுவை அனுபவத்தைப் பற்றி முன்னுரைக்கிறது (மத்தேயு 27:34 வது வசனத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள் “கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்”). இச்சங்கீதத்தில், யோவான் 2ல் இயேசுவைப் பற்றி மேற்கோள் காட்டப்பட்ட சொற்றொடர் இருக்கிறது.
சங்கீதம் 69:7-9 – 7. உமதுநிமித்தம் நிந்தையைச் சகித்தேன்; இலச்சை என் முகத்தை மூடிற்று. 8. என் சகோதரருக்கு வேற்று மனுஷனும், என் தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன். 9. உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.
இந்த வசனங்கள் இயேசுவுக்கு தம்முடைய பிதாவின் வீட்டைக் குறித்து அவருக்கிருந்த வைராக்கியதைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. அத்தோடு, அதன் விளைவாக அவர் அவமானத்தையும், நிராகரிப்பையும், கண்டனத்தையுமே அனுபவிப்பார் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுவிசேஷப்பகுதிகள் இயேசு சந்தித்த எதிர்ப்புகளை அதிகமாக விவரித்துச் சொல்லுகிறது. அந்த எதிர்ப்புகள் இயேசுவின் உள்ளத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை இப்போது நாம் பார்க்கலாம். தம்முடைய பிதாவினிமித்தமாக அவர் அவமானத்தையும் கேலியையும் அனுபவித்தார். தம்முடைய குடும்பத்திடமிருந்தும் அவர் தனித்துவிடப்பட்டார். அவருடைய சொந்த சகோதரர்களும் ஆரம்பத்தில் அவரை விசுவாசிக்கவில்லை.
யோவான் 7:3-5 – 3. அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம். 4. பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். 5. அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்.
சங்கீதம் 69:20ல் நாம் பார்ப்பதுபோல், இந்த விஷயங்கள் அவருடைய இருதயத்தை நொறுக்கியது. அவர் மிகுந்த பாரத்தோடு இருந்தார். அவர்மீது அனுதாபம் காட்டவும் ஆறுதல் சொல்லவும் ஒருவரும் இல்லை. சிலுவையில் அவர் கொடிய வேதனைகளை அனுபவித்தபோதும், அவருக்குக் கிடைத்ததெல்லாம் கசப்பான காடிதான். இவையாவும் இயேசுவை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.
இயேசு ஏன் இப்படிச் செய்தார்? ஏன் அவர் முன்வந்து தேவாலயத்தை சுத்தம் பண்ணினார்? அவர் முதல் முறை அப்படிச் செய்தபோதே யூத மதத் தலைவர்கள் அவரை எதிர்த்தார்கள், பிறகு ஏன் அவர் இரண்டாம் முறையும் செய்தார்? ஏனென்றால், தம்முடைய பிதாவின் வீட்டைப்பற்றிய பக்தி வைராக்கியம் அவரை பட்சித்தது. இந்த சங்கீதம் மேலதிக விளக்கங்களை நமக்குத் தருகிறது.
சங்கீதம் 69:16 – அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
அவர் தம்முடைய பரலோக பிதாவில் நம்பிக்கை வைத்திருந்தபடியினால் அவர் என்ன செய்ய வேண்டுமோ அதையே செய்தார். பிதாவாகிய தேவன், தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களிடத்தில் அன்பையும் இரக்கத்தையும் காண்பிக்கிறவர் என்பதை அவர் விசுவாசித்தார்.
சங்கீதம் 69:34-36 – 34. வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிறயாவும் அவரைத் துதிக்கக்கடவது. 35. தேவன் சீயோனை இரட்சித்து, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். 36. அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்; அவருடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் அதில் வாசமாயிருப்பார்கள்.
கடவுளுடைய நாமத்தின்மீது அன்புள்ளவர்களுக்கும் அவருக்காக வைராக்கியங்கொள்ளுகிறவர்களுக்கும் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பதை நம்பியதால்தான் அவர் தொடர்ந்தும் வைராக்கியத்தோடு அப்படிச் செய்தார்.
இயேசுவின் வைராக்கியத்தைப் பற்றிப் பார்த்த நாம், நம்முடைய வாழ்க்கையில் அதை எப்படி பயன்படுத்துவது? குறிப்பாக, போதகர்களாக இவைகளை நம்முடைய வாழ்க்கையில் எப்படி செயல்படுத்துவது?
நம்மில் பக்தி வைராக்கியம் இருந்தால், நாம் கடவுளுடைய வீடாகிய திருச்சபையின் தூய்மைக்காக வைராக்கியம் கொள்ள வேண்டும். கடவுளை அவருடைய சபையில் எப்படி ஆராதிக்க வேண்டும் என்று அவர் கட்டளையிட்டிருக்கிறாரோ அதைக் கடைபிடிப்பதில் நாம் மிகுந்த அக்கறைக்காட்டுகிறவர்களாக இருக்க வேண்டும். திருச்சபையிலுள்ள பாவத்தை விலக்குவதிலும் உண்மையுடனும் அக்கறையுடனும் நாம் இருக்க வேண்டும். திருச்சபையிலுள்ள சகோதர சகோதரிகள் மனந்திரும்ப வேண்டிய காரியங்களை அன்போடு சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் அவர்கள் தொடர்ந்து மனந்திரும்ப மறுத்தால், பிறகு நாம் உண்மையுடன், வருத்தத்தோடு, அவர்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்தோடு மிகவும் வலியை ஏற்படுத்தும் நடவடிக்கையாகிய சபை ஒழுங்கு நடவடிக்கையைச் செய்ய வேண்டும்.
நாம் பக்தி வைராக்கியமுள்ளவர்களாக இருந்தால், உண்மையுள்ளவர்களாக இருப்பதற்கு எத்தகைய கடினமான விலையையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். பெரும்பாலும் அது நம்முடைய உணர்ச்சிகளின் விலையாக இருக்கலாம். இது மிகவும் வலிமையானது. திருச்சபையைப் பற்றியும், இன்னும் மனந்திரும்பாத அவிசுவாசமுள்ளவர்களைப் பற்றியுமான நம்முடைய கவலைகள் நம்முடைய தூக்கத்தைக் கெடுத்து நம்மையே விழுங்கக் கூடியது. ஆத்துமாக்களைப் பற்றிய பாரத்தோடு ஆண்டவரிடம் முறையிட வேண்டும். இத்தகைய வைராக்கியம் எப்போதும் எதிர்ப்பு, வீழ்ச்சி, கேலி, நிராகரிப்பையுமே கொண்டு வரும். சிலநேரங்களில் நமக்கு நெருக்கமானவர்களும், நாம் நேசிக்கிறவர்களுமே நமக்கு எதிரிகளாக இருப்பார்கள். நம்மில் பக்தி வைராக்கியம் இருக்க வேண்டுமானால், இத்தகைய விலை கொடுக்க நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இதை நாம் முதலில் யோவான் ஸ்நானனில் பார்த்தோம், இப்போது நம்முடைய ஆண்டவரிடத்திலும் பார்க்கிறோம்.
நாம் விசுவாசத்தோடு, கடவுளுடைய அன்பையும் இரக்கத்தையும் பற்றிக்கொண்டிருந்தால், நாமும் கடவுளுக்காகவும், அவருடைய சபைக்காகவும், அவருடைய ஆராதனைக்காகவும் இத்தகைய சிறப்பான பக்திவைராக்கியத்தை கொண்டிருக்க முடியும். நம்பிக்கையோடு நாம் அவரிடத்தில் தொடர்ந்து முறையிட்டால், அவருடைய வாக்குத்தத்தத்தின்படி நிச்சயமாக உங்களுக்கு உதவுவார்.
கர்த்தராகிய இயேசுவுக்கு ஆர்வத்தோடு ஊழியம் செய்யும் அனலுள்ள இருதயமே பக்தி வைராக்கியமாகிய கிருபையாகும். இது கடவுளிடமிருந்தே வருகிறதாக இருக்கிறது. ஆனாலும் அதைத் தூண்டிவிடுவதும் அத்தகைய வைராக்கியத்தை நம்முடைய வாழ்க்கையில் தக்கவைப்பதும் நம்முடைய பொறுப்பாகும். இதைச் செய்வதற்கு உதவியாகவும் பக்தி வைராக்கியம் என்றால் எப்படியிருக்கும் என்பதை பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கு உதவியாகவும் இதுவரை இரண்டு உதாரணங்களைப் படித்தோம். யோவான் ஸ்நானனும் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவுமே அந்த உதாரணங்கள். இப்போது, சுவிசேஷ ஊழியர்களில் பக்தி வைராக்கியமுள்ள மேலும் இரண்டு உதாரணங்களைப் படிக்கப் போகிறோம்.
- அப்போஸ்தலனாகிய பவுல்.
2 கொரிந்தியர் 11:1-4 (குறிப்பாக 2வது வசனம்) – 1. என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும்; என்னைச் சகித்துமிருக்கிறீர்களே. 2. நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன். 3. ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். 4. எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.
2வது வசனத்தில் ஆங்கில வேதத்தில் “jealous” (தமிழில் வேதத்தில் வைராக்கியம்) மற்றும் “jealousy” (தமிழில் வேதத்தில் தேவவைராக்கியம் godly jealousy) என்று பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு வார்த்தைகளும் பொதுவாக “வைராக்கியமாக இருத்தல்” என்றே மொழிபெயர்க்கப்படுகிறது. ஆனால் இந்த இடத்தில் குறிப்பாக பொறாமை என்பதன் அர்த்தம் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த பொறாமை பக்திக்குரிய பொறாமை (தேவவைராக்கியம்) என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. முன்பு நாம் குறிப்பிட்டவைகளையே, இவைகள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பக்திவைராக்கியம் என்பது முறையாக பொறாமையின் உணர்வை வலிமையாக வெளிப்படுத்துவதாகும்.
தேவவைராக்கியத்தில் எவையெல்லாம் உள்ளடக்கமாக இருக்கிறது என்பதை இப்பகுதி குறிப்பிடுகிறது. ஒரு ஆணுக்கு நிச்சயிக்கப்பட்டுள்ள ஒரு பெண்ணைப் பற்றி இங்குக் காண்கிறோம். திருமணம் நிச்சயம் செய்தல் என்பது அதாவது அவர்கள் இன்னும் கூடி வாழ ஆரம்பிக்காவிட்டாலும் யூதர்களுடைய கலாச்சாரத்தில் இது ஒரு முக்கியமான திருமண உறுதிப்பாடாகும். நம்முடைய சமுதாயத்தில் செய்யப்படும் நிச்சயதார்த்தத்தைவிட மிகவும் வலிமையானதாகும். ஒரு பெண் ஒரு ஆணுக்கு நியமிக்கப்பட்ட பிறகு, ஏதோவொரு வகையில் அவன் அவளுடைய கணவனாகவே பார்க்கப்படுவான் (வசனம் 2). மேலும் அத்தகைய நியமிக்கப்படுதலை முறித்துக்கொள்ள விவாகரத்துக்கு இணையான ஒரு நடவடிக்கை தேவை (மத்தேயு 1:18-19 – யோசேப்பு மரியாளுடைய திருமண நிச்சயத்தை ஒப்பிட்டுப் பாருங்கள், “18. இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. 19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.”)
இப்பகுதியில், கிறிஸ்து கணவனாக இருக்கிறார். கடவுளுடைய மக்களாகிய திருச்சபையே மணப்பெண். திருச்சபை கிறிஸ்துவுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. கரைதிரை ஒன்றுமில்லாமல் பரிசுத்த கன்னிகையாக கிறிஸ்துவுக்கு ஒருநாள் ஒப்படைக்கப்படுவாள். ஆனால் தற்போது அவள் பரலோகத்தில் இருக்கிற தன்னுடைய கர்த்தரோடு இருக்கவில்லை. ஆட்டுக்குட்டியானவரின் திருமண விருந்துடன் இன்னும் அந்தத் திருமணம் முழுமை பெறவில்லை.
அத்தகைய நியமிக்கப்பட்ட சூழ்நிலையில், பொதுவாக கணவனோ அல்லது அவனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணோ வைராக்கியத்துடன் அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். வைராக்கியங்கொண்ட கணவனே தன்னுடைய மனைவியோடுள்ள உறவைக் கவனத்துடன் பாதுகாக்கிறவனாக இருப்பான். அத்தகைய வைராக்கியமுள்ள கணவனே யாரேனும் அந்த உறவை உடைத்து, தன்னுடைய இடத்தைப் பிடிப்பதற்கு முயற்சிக்கிறதான சூழ்நிலையில், தீவிரமாக தன் ஆத்திரத்தை வெளிப்படுத்துவான். ஆனால் இங்கு வைராக்கியங் கொண்டது, கணவனோ அல்லது அவனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணோ அல்ல என்பதை நாம் கவனிக்க வேண்டும். சுவிசேஷ ஊழியனாகிய பவுல் இங்கு அனலுள்ள வைராக்கியங் கொண்டிருக்கிறார். சுவிசேஷ பிரசங்கத்தின் மூலமாக கொரிந்து விசுவாசிகளை கிறிஸ்துவுடன் திருமணம் நிகழ்த்தி வைக்க வேண்டிய பொறுப்பே பவுலினுடையது. சாத்தான் ஏமாற்று வேளையின் மூலமாக அவர்கள் இருவரின் உறவில் நுழைந்துவிடுவான் என்று அவர் பயப்படுகிறார். மெய்யான கிறிஸ்துவுக்கும் சுவிசேஷத்திற்கும் பதிலாக வேறொரு கிறிஸ்துவையும் சுவிசேஷத்தையும் பிரசங்கித்து சாத்தான் வெற்றியும் கண்டுவிடுவானோ என்கிற பயம் அவருக்கு இருந்தது. ஆகவே அதைத் தடுப்பதற்காக பவுல், 2 கொரிந்தியரில் தன்னாலான அனைத்தையும் செய்கிறார்.
கொரிந்து திருச்சபைக்கு பவுல் எழுதிய இரண்டாவது நிருபத்தில், தவறான போதனையாளர்கள் எழும்பி, தன்னுடைய ஊழியத்தை நிராகரிக்கவும், தன்னுடைய ஆவிக்குரிய பிள்ளைகளை தன்னைவிட்டு தூரமாக்கவும், முயற்சித்ததனால் பவுல் தன்னுடைய ஊழியத்தைப் பாதுகாக்கும்படி தள்ளப்பட்டார். ஆனால் இந்தப் பகுதியில், பவுலின் முதன்மையான கவலை தனிப்பட்ட முறையில் தன்னோடு அவர்களுக்கு இருந்த உறவைப் பற்றியதோ தன்னுடைய ஊழியத்திற்கு அவர்கள் சரியான மரியாதை தரவில்லை என்பதைப் பற்றியதோ அல்ல. அவருடைய கவலையெல்லாம் இந்தத் தவறான போதனையாளர்கள் கிறிஸ்துவுடனான அவர்களுடைய உறவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதுதான். இந்தக் காரணத்தினால்தான் பவுல் வைராக்கியத்தோடு தன்னுடைய ஊழியத்தைப் பாதுகாக்க வேண்டி வந்தது.
பவுலின் வைராக்கியம் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுத்தரவில்லையா? நாம் உண்மையுள்ள சுவிசேஷ ஊழியர்களாக, போதகர்களாக இருந்தால், நிச்சயமாக நமக்கு எதிர்ப்புகள் இருக்கும். நாம் தாக்கப்படுவோம். தவறான போதனையாளர்கள் எழும்புவார்கள். பிரிவினைவாத மனிதர்கள் நம்முடைய மதிப்பையும் நம்முடைய செய்திகளின் மதிப்பையும் குறைப்பதற்காக அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்பத் துவங்குவார்கள். தேவனுடைய மக்களிலும் சிலர் இதனால் பாதிக்கப்பட்டு நம்மைவிட்டு பிரிந்துபோயிருப்பார்கள். அப்படிப் பிரிந்துபோன சகோதர சகோதரிகளுக்காக நம்முடைய நேரத்தையும், இருதயத்தையும், பெலத்தையும் நாம் அதிகமாக பயன்படுத்தியிருக்கலாம். இப்படியான சூழ்நிலைகளில் நம்முடைய பதில் நடவடிக்கை எப்படியிருக்கிறது என்பதுதான் நம்மில் பக்தி வைராக்கியம் இருக்கிறதா இல்லையா என்பதற்கான பரீட்சையாக இருக்கிறது. நம்முடைய பதில் நடவடிக்கை, நாம் எப்படி கனவீனப்படுத்தப்பட்டோம், காயப்படுத்தப்பட்டோம் என்பதிலேயே நம்முடைய கவனமெல்லாம் இருக்கிறதா? நம்முடைய ஊழியத்தைப் பற்றி கேள்வி எழுப்புமளவுக்கு தைரியங்கொண்டார்கள் என்பதற்காக பாவகரமான கோபத்தை பதில் நடவடிக்கையாக செய்கிறோமா? நம்முடைய சொந்த மரியாதையையும் ஊழியத்தையும் நோக்கமாக கொண்ட பதில் நடவடிக்கையாக இருக்கிறதா? அல்லது பவுலுக்கு இருந்த அதே கவலை நம்முடைய முக்கிய கவலையாக இருக்கிறதா? நம்முடைய கண்காணிப்பையும் அவர்களுடைய பரலோக மணவாளனின் உரிமைகளையும் நம்பியிருக்கிற ஆடுகளின் ஆவிக்குரிய நல்ல நிலையே நம்முடைய முக்கிய கவலையாயிருக்கிறதா?
நம்மை நோக்கி வரும் இத்தகைய தாக்குதல்கள் வலியை ஏற்படுத்துகிறதாயிருக்கும். அவை நம்மை காயப்படுத்தும். ஆனால் நம்முடைய ஊழியங்கள் நம்மைப் பற்றியதல்ல என்பதையே பவுலின் உதாரணம் நமக்கு நினைவூட்டுகிறது. இது நம்மைப் பற்றியதாகவோ நம்மை மற்றவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பற்றியதாகவோ இருக்கக் கூடாது. போதகர்களிலுள்ள பக்தி வைராக்கியம் நம்மைப் பற்றியதல்ல. பக்தி வைராக்கியம் என்பது கிறிஸ்துவையும் அவருடைய ஆடுகளையும் பற்றியது. பக்தி வைராக்கியம் என்பது கிறிஸ்துவின் மணவாட்டி அவளுடைய மணவாளனிடமிருந்து தவறாக வழிநடத்தப்படக் கூடாது என்ற வைராக்கியத்தின் கவலையினால் ஊக்கப்படுத்தப்படுவதாகும். பக்தி வைராக்கியம் என்பது தம்முடைய மணவாட்டியை கற்புள்ள கன்னிகையாக ஏற்கும் கிறிஸ்துவில் நோக்கமாகக் கொண்டிருக்கும் வைராக்கியமாகும். பக்தி வைராக்கியம் என்பது கிறிஸ்துவின் மணவாட்டி பாதுகாப்பாக பரலோகம் செல்லுவதை நோக்கமாகக் கொண்டதாகும். நம்மை ஊக்கப்படுத்துவது எது? அதுவே பக்தியுள்ள போதக வைராக்கியத்திற்கான மெய்யான பரீட்சை. அந்த பரீட்சையில் வெற்றிபெற ஆண்டவர்தாமே நமக்கு உதவுவாராக.
- அப்பொல்லோ
அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:24-28 (குறிப்பாக 25வது வசனம்) – 24. அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்தவனும் சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ என்னும் பேர்கொண்ட ஒரு யூதன் எபேசுபட்டணத்துக்கு வந்தான். 25. அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தைமாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான். 26. அவன் ஜெப ஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக்காண்பித்தார்கள். 27. பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டுமென்றிருக்கையில், சீஷர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள். 28. அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேத வாக்கியங்களைக் கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான்.
இங்கே புதிய ஏற்பாட்டில் அப்பொல்லோ முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறார். வசனம் 25 தெளிவாக சொல்லுகிறது, இந்த அப்பொல்லோ ஆவியில் அனலுள்ளவனாக இருந்தான் என்று (இதே பதத்தை நாம் ரோமர் 12:11லும் பார்த்தோம்). மறுபடியும், “அனலுள்ள” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை சூடாகுதல் அல்லது எரிகிற என்ற உட்கருத்தைக் கொண்ட புதிய ஏற்பாட்டிலுள்ள வைராக்கியம் என்ற வார்த்தை குடும்பத்தைச் சேர்ந்ததாகும். ஆகவே அப்பொல்லோ அனலுள்ள இருதயம் கொண்ட மனிதன். இந்த நேரத்தில், அப்பொல்லோவின் உதாரணத்தின் மூலம் பக்தி வைராக்கியத்தைப் பற்றிய அநேக விஷயங்களை நாம் கற்றறியலாம். இந்த ஒவ்வொரு விஷயத்திலும் அப்பொல்லோ, போதகர்களாகிய நமக்கான உதாரணமாக இருக்கிறார்.
அ. பக்தி வைராக்கியம் என்பது கர்த்தருக்கு ஊழியம் செய்வதற்கு கடவுளால் கொடுக்கப்பட்ட வரங்கள், அறிவு, மற்றும் வாய்ப்புகளை நன்மைக்கு ஏதுவாக ஆர்வத்துடன் செயல்படுத்துவதாகும். அப்பொல்லோ சொல் வல்லமைமிக்க மனிதனாக இருந்தார். அவர் இந்த வரத்தை கிறிஸ்துவின் மகிமைக்காகவும் சுவிசேஷத்தின் வளர்ச்சிக்காகவும் ஆர்வத்துடன் பயன்படுத்தினார். ஆரம்பத்தில் அவருடைய அறிவு குறைந்தளவே இருந்தது. அவர் தானறிந்த சுவிசேஷத்தைப் பேசினார். அவர் தான் அறிந்த சத்தியத்தை பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டார். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற வரங்கள், அறிவு, மற்றும் வாய்ப்புகளை இப்படியே செயல்படுத்த வேண்டும். வரங்கள் மற்றும் திறமைகளைப் பொறுத்தளவில் நாம் ஒன்றோ அல்லது இரண்டோ வரங்களைக் கொண்டவர்களாக இருக்கலாம். கடவுளுடைய வார்த்தைகளை அதிகமாகவும் முழுமையாகவும் படித்தறிவதற்கான வாய்ப்புகள் நமக்கு குறைந்தளவு இருக்கலாம். போதகராக ஒரு சிறு கூட்டத்திற்கு, பெரிய அளவிலான முக்கியத்துவமற்ற இடத்திலுள்ள ஆண்டவருடைய மக்களுக்கு ஊழியம் செய்யும்படி ஆண்டவர் உங்களை வைத்திருக்கலாம். இந்த சூழ்நிலையில், நாம் என்ன செய்ய வேண்டும்?
2 கொரிந்தியர் 8:9-12 – 9. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே. 10. இதைக்குறித்து என் யோசனையை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இதைச் செய்கிறதற்கு மாத்திரமல்ல, செய்யவேண்டுமென்று உற்சாகப்படுகிறதற்கும் ஒரு வருஷமாய் ஆரம்பம்பண்ணின உங்களுக்கு இது தகுதியாயிருக்கும். 11. ஆகையால் அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக. 12. ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்.
கிறிஸ்து நமக்குக் கொடுத்திருப்பதைவிட அதிகமாக எதையும் எதிர்பார்க்கிறதில்லை. அவர் ஒரு கடுமையான, நியாயமற்ற தலைவனல்ல. நம்மைப் போல மனிதனாக வந்தவர். அவர் கிருபையும் இரக்கமுமுள்ளவர். எனவே அவரால் நம்முடைய வரையறைகளையும் பலவீனங்களையும் புரிந்து கொள்ள முடியும். மேலும், அவர் முன் வானத்தின் ஐசுவரியங்களை அனுபவித்தவராக இருந்தார். ஆனால் நமதுநிமித்தமாக, நம்மை ஐசுவரியவான்களாக்க, அவர் ஏழையானார். அவருடைய இந்த தியாக அன்பு நம்மிடமுள்ள எல்லாவற்றையும் அவருக்காக ஆர்வத்துடன் கொடுக்கும்படி நம்மை அழைக்கிறதில்லையா? இது அவருடைய ஊழியத்திற்காக நம்முடைய வரங்கள் மற்றும் அறிவை மனமுவந்து ஆர்வத்துடன் கொடுக்க நம்மை அழைக்கிறதில்லையா? இது நமக்கு அவர் கொடுத்திருக்கிற வாய்ப்புகளை, அது பார்வைக்கு சிறியதாகவும் பெரியளவில் இல்லாததாக இருந்தாலும், அதை பயன்படுத்திக்கொள்ளும்படி அழைக்கிறதில்லையா? இதுவே பக்தி வைராக்கியமுள்ளவனின் பதில் நடவடிக்கையாக இருக்கும். இதில் இன்னும் அநேக விஷயங்கள் இருக்கிறது.
ஆ. குறிப்பாக சுவிசேஷ ஊழியர்களில், பக்தி வைராக்கியம் தேவனுடைய வார்த்தைகளைத் துல்லியமாக, தைரியமாக, உறுதியுடன் பேசும் கனிகளை பிறப்பிக்கும். பாவிகள் நம்மை எதிர்க்கிறவர்களாக, தங்களுடைய பாவங்களில் தொடர்ந்திருக்கிறபோது அவர்களிடமும் இந்தவிதத்திலேயே தேவனுடைய வார்த்தைகளை எடுத்துரைக்கும். குறிப்பாக, கடவுள் தம்முடைய வார்த்தையைக் கொண்டு ஊழியம் செய்யும்படி நம்மை அழைத்திருந்தால், இங்கு அப்பொல்லோவில் வெளிப்பட்டது போல்தான் நம்முடைய வாழ்க்கையிலும் பக்தி வைராக்கியமானது வெளிப்படும். அது கடவுளுடைய வார்த்தையாக இருப்பதனால் அதை சரியான முறையில் கையாளுவதற்குத் தேவையான விதத்தில் உழைப்போம். மனிதர்களின் முகத்திற்குப் பயப்படாமல் அந்த வார்த்தையை அன்போடு அதேவேளை தைரியமாகவும் ஊக்கத்தோடும் பேசுகிறவர்களாக இருப்போம். இதை நாம் பாவிகளின் இரட்சிப்பிற்காகவும் பரிசுத்தவான்களுக்கு உதவும்படியாகவும் செய்வோம். இதனோடு நெருக்கமாக தொடர்புடைய இன்னொன்றையும் நாம் பார்க்கலாம்.
இ. பக்தி வைராக்கியம், நம்மில் கடவுளுடைய சத்தியத்தை தைரியமாக பேசும் கனியைக் கொண்டிருப்பதோடு, சுவிசேஷத்தினிமித்தமான தேவனுடைய வார்த்தையும் நம்முடைய இருதயத்தில் கொழுந்துவிட்டு எரிகிறதாக இருக்கச் செய்யும் வல்லமை கொண்டது. அப்பொல்லோவில் இதை நாம் தெளிவாக காணலாம். அவன் வேதாகமங்களில் வல்லவனும், கர்த்தருடைய உபதேசத்தில் போதிக்கப்பட்டவனும் என்று சொல்லியபிறகு அவன் ஆவியில் அனலுள்ளவன் என்று சொல்லப்பட்டது தற்செயலாக எழுதப்பட்டதல்ல. கடவுளுடைய வார்த்தையே அவரில் இத்தகைய வைராக்கிய நெருப்பை ஏற்றி வைத்தது. இந்த உண்மை கடவுளுடைய வார்த்தையின் ஏனைய பகுதிகளிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
லூக்கா 24:25-32 – 25. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, 26. கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, 27. மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். 28. அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார். 29. அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரைவருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார். 30. அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். 31. அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார். 32. அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு,
நாம் பக்தி வைராக்கியத்தைக் கொண்டிருக்க வேண்டுமானால், அதை நம்மில் தூண்டிவிடுவதற்கு தேவனுடைய வார்த்தையிலுள்ள கிறிஸ்துவைப் பற்றிய சத்தியம் நமக்குத் தேவையாக இருக்கிறது. ஆனால், மனஅழுத்தத்துடன் இருந்த அந்த இரண்டு சீடர்களின் இருதயங்களில் கிறிஸ்துவைப் பற்றிய தேவனுடைய வார்த்தை மட்டும் எரிந்துகொண்டிருக்கவில்லை. கிறிஸ்துவின் மூலமாக கிறிஸ்துவைப் பற்றிய சத்தியங்கள் அவர்களுடைய இருதயங்களில் கொண்டுவரப்பட்டது, அவைகள் அவர்களுடைய இருதயங்களில் எரிந்துகொண்டிருந்தது. “அவர் நம்முடனே பேசினபோது” மற்றும் “அவர் வேதவசனங்களை விளங்கக்காட்டினபொழுது” அவர்களுடைய இருதயம் எரிந்தது (வசனம் 32). இது நம்மிடத்திலும் இப்படியே செயல்படுகிறது. அந்த எம்மாவு பயணத்தின்போது, நாமும் அங்கிருந்து, கிறிஸ்து தம்மைப் பற்றி பழைய ஏற்பாட்டிலிருந்து நேரடியாக நம்மோடு பேசுவதை நாம் கேட்டிருந்தால் அருமையாக இருந்திருக்கும் என்று நாம் எதிர்பார்ப்போம். ஆனால் உண்மை என்னவென்றால், நம்முடைய இருதயங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக இன்றும் தம்முடைய வார்த்தைகளைக் கொண்டு கிறிஸ்து நம்மோடு நேரடியாக பேசிக்கொண்டுதான் இருக்கிறார். கிறிஸ்துவைப் பற்றிய அந்த வார்த்தைகளே கிறிஸ்துவினால் பரிசுத்த ஆவியின் மூலமாக நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவுக்கான பக்தி வைராக்கியத்தை ஏற்படுத்துகிறது.
எரேமியா 20:7-10 – 7. கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லாரும் என்னைப் பரிகாசம்பண்ணுகிறார்கள். 8. நான் பேசினது முதற்கொண்டு கதறுகிறேன்; கொடுமையென்றும் பாழ்க்கடிப்பென்றும் சத்தமிட்டுக்கூறுகிறேன்; நான் கூறின கர்த்தருடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும், பரிகாசமுமாயிற்று. 9. ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று. 10. அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன், பயஞ்சூழ்ந்திருந்தது; அறிவியுங்கள், அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள்; என்னோடே சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்படிக் காத்திருந்து: ஒருவேளை இணங்குவான், அப்பொழுது அவனை மேற்கொண்டு, அவனில் குரோதந்தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள்.
இங்கே முதலில், எரேமியா தீர்க்கதரிசி தனக்கு ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கர்த்தருடைய வார்த்தையை பேச மறுத்தார். எனினும், கடவுள் விரும்பியதை எரேமியாக செய்ய மறுத்தபோதும், கடவுளுடைய வார்த்தை எரிகிற நெருப்பாக அவருடைய எலும்புகளில் அடைபட்டிருந்தது. அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் பேச வேண்டி வந்தது. அவர் கடவுளுடைய தீர்க்கதரிசியாக கடவுளிடமிருந்து நேரடியாக கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டார். (இன்று மனிதர்களுக்கு அந்தவிதமாக கடவுளுடைய தவறிழைக்காத வார்த்தை நேரடியாக கொடுக்கப்படுவதாக நாம் நம்புவதில்லை). மேலும் எரேமியா கடவுளுடைய தீர்க்கதரிசியாக கடவுள் அவருக்கு வெளிப்படுத்தும் வார்த்தைகளை எடுத்துரைக்க வேண்டிய சிறப்பான பொறுப்பு அவருக்கு இருந்தது. ஆனால் இங்கே வார்த்தை என்பது அவருடைய உள் மனதில் எரிகிற நெருப்பாக கடவுள் விரும்பியதை செய்யும்படி அவரை வற்புறுத்தியது என்று விவரிக்கப்பட்டுள்ளது. தேவனுடைய ஆவியின் மூலமாக கடவுளுடைய வார்த்தை எப்படி நம்முடைய இருதயங்களில் பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் அறிவதற்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது. அதுவே நம்முடைய இருதயத்தில் வைராக்கியத்தின் நெருப்பை ஒளிர வைத்து நாம் செய்யும்படி கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறவைகளை செய்யும்படி நம்மை வற்புறுத்துகிறது. போதகர்களாகிய நாம், கடவுள் நாம் செய்ய வேண்டிய பொறுப்புக்களாக நமக்குக் கொடுத்திருப்பதை, அதற்கேற்ற சூழல் இருக்கிறபோது மட்டுமல்ல, அதற்கு எதிரான சூழலிலும் நாம் செய்ய வேண்டும்.
ஈ. பக்தி வைராக்கியம் என்பது நம்முடைய இருதயத்தில் ஆவியினால் பயன்படுத்தப்படும் கடவுளுடைய வார்த்தையின் கனி மட்டுமல்ல. இத்தகைய வைராக்கியம் ஏற்கனவே கடவுளுடைய வார்த்தையின் ஊழியத்தில் ஆர்வமாகவும் வெற்றிகரமாகவும் செயல்பட்டு வரும் ஒருவனை, மேலும் ஆர்வத்தோடும் தாழ்மையோடும் கடவுளுடைய வார்த்தையில் வளரவும், அதனிமித்தம் கடவுளுடைய வார்த்தையை இன்னும் அதிக துல்லியமாகப் பிரசங்கிக்கத் தகுதி பெறச் செய்கிறது. அவன் தனக்குக் கற்றுத் தருகிறவர் யாராக இருந்தாலும், அவரிடம் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளுகிறவனாக இருப்பான். இங்கே அப்பொல்லோ, போதகர்களாக இல்லாத சில விசுவாசிகளின் மூலமாக கடவுளுடைய வார்த்தை தனக்குப் போதிக்கப்பட்ட போது, அதைத் தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார். அவர்கள் மதத் தலைவர்களும் அல்ல. அவர்களில் ஒருவர் பெண். பிரிசில்லாவிடமிருந்து கடவுளுடைய வார்த்தையைக் கற்பதா என்று சொல்லி அதை மறுக்கிறவனாக, பெருமை கொண்டவனாக அப்பொல்லோ ஒருபோதும் இருக்கவில்லை. கர்த்தருக்கு ஆர்வத்தோடு ஊழியம் செய்ய அவன் வைராக்கியம் கொண்டிருந்தார். ஆகவே மேலும் நன்றாகச் செய்வதற்கு எதெல்லாம் உதவுமோ அதையெல்லாம் செய்வதற்கு அவர் தயாராக இருந்தார்.
அதேவேளை, அப்பொல்லோ எப்போதும் தன்னுடைய தனித்துவத்தின்படி வாழ்கிறவனாக இருந்தான். கண்மூடித்தனமாக யாரையும் பின்பற்றுகிறவனாக அவன் இருக்கவில்லை – அது அப்போஸ்தலர்களாக இருந்தாலும்கூட.
1 கொரிந்தியர் 16:12 – சகோதரனாகிய அப்பொல்லோவைக் குறித்தோவெனில், சகோதரரோடேகூட உங்களிடத்தில் வரும்படிக்கு அவனை மிகவும் வேண்டிக்கொண்டேன்; ஆகிலும் இப்பொழுது வர அவனுக்கு மனதில்லை; அவனுக்கு நற்சமயம் உண்டாயிருக்கும்போது வருவான்.
இங்கே ஒரு அற்புதமான சமநிலை உள்ளது. பவுல் ஒரு அப்போஸ்தலனாக இருந்தபோதும், கடவுளால் ஏற்படுத்தப்படாத ஒன்றை மற்றவர்கள் மீது அவர் திணிக்கவில்லை. கடவுளுடைய பணியில் சக ஊழியனாகிய அப்பொல்லோவை அவர் மதித்தார்.
1 கொரிந்தியர் 3:4-6 – 4. ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களல்லவா? 5. பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே. 6. நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.
பவுல் இங்கே அப்பொல்லோவை ஒரு மெய்யான சமநிலையில் நடத்தினார். பவுல், அனுபவம் குறைந்தவர்களையும் இன்னும் வளர வேண்டியிருக்கிற சகோதரர்களையும் பயமுறுத்தாமல் தன்னோடு இணைந்து வளருகிறவர்களாக பார்க்கும் நபராக அவர் இருந்தார். இந்தவிதத்தில் பவுல் நடப்பதற்கு, நிச்சயமாக அப்பொல்லோவும் அதற்கு ஏற்றபடி நடந்திருப்பார் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், அப்பொல்லோ மனிதர்களுடைய விருப்பப்படியல்லாமல், கடவுளுடைய வார்த்தையின்படி தன்னைக் கட்டுப்படுத்தி தாழ்த்தினார். கடவுளுடைய வார்த்தையையே தனக்கான இறுதி அதிகாரமாக கருதினார். எங்கிருந்து வருகிறதாக இருந்தாலும் ஆர்வத்தோடு அதைக் கற்றுக்கொள்ளுகிறவராக இருந்தார். அவ்வாறே நாமும் செய்ய வேண்டும்.
உ. மற்றவர்களிடமுள்ள பக்தி வைராக்கியமும் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட வேண்டும். இதை நாம் எபேசுவிலுள்ள சகோதரர்கள் அகாயாவிலுள்ள சகோதரர்களுக்கு அப்பொல்லோவைப் பாராட்டி எழுதியதிலிருந்து காணலாம். மீட்பருடைய கரத்திலுள்ள இந்த அற்புதமான கருவியை சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ளும்படி அவர்களை வலியுறுத்தினார்கள். அகாயாவிலுள்ள சகோதரர்கள் வெளிப்படையாக அந்த புத்திமதிகளை தங்கள் இருதயத்தில் ஏற்று நடந்தனர். எபேசு கிறிஸ்தவர்களின் இந்த நடவடிக்கை நாமும் அப்படிச் செய்யும்படி நம்மை அழைக்கிறது. நம்மைவிட அதிக வைராக்கியமுள்ளவர்களால் நாம் பயமுறுத்தப்படக் கூடாது. அத்தகைய வைராக்கியமுள்ள சகோதர சகோதரிகளை குறைகாணும் முயற்சியாக நம்முடைய தோல்விகள் பெலவீனங்கள் மத்தியில் அவர்கள் தங்களைப் பெருமையுள்ளவர்களாகக் காட்டிக்கொள்ளுகிறார்கள் என்று சொல்லக் கூடாது. அப்படியானவர்களை நாம் பாராட்ட வேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும், வாழ்த்த வேண்டும். அத்தகைய ஆர்வமுள்ள தனிநபர்களின் நல்ல உதாரணங்கள், அன்பிற்கும் நற்கிரியைக்கும் நம்மை தூண்ட வேண்டும். எபிரெயர் 10:24 – “மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து”.
ஊ. பக்தி வைராக்கியம், கிருபையினால் விசுவாசிகளானவர்களுக்கு ஆவிக்குரிய நன்மைகளைச் செய்கிறதாக இருக்கும். வசனம் 27 சொல்லுகிறது, அப்பொல்லோ அகாயாவில் வந்தபோது, அவிசுவாசிகளான யூதர்களின் தவறுகளை வெளிப்படையாக சுட்டிக்காட்டுகிறதன் மூலம் விசுவாசிகளுக்கு பெரிய நன்மைகளைச் செய்தார். யூதர்களின் பழைய ஏற்பாட்டில் வாக்களிக்கப்பட்டுள்ள மேசியா இயேசுவே என்று வேதத்திலிருந்து அவர்களுக்கு எடுத்துக்காட்டுகிறதன் மூலம் உதவினார். கர்த்தருக்கு ஊழியஞ் செய்கிற அனலுள்ள இருதயத்தின் இயற்கையான செயல்பாடு தேவையிலுள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு நன்மையைச் செய்கிறதாக இருந்தது. இந்தவிதமாக நாம் செய்ய, கடவுள் தாமே நமக்கு உதவுவாராக. அப்பொல்லோவைப் போன்று வைராக்கியங்கொள்ள கடவுள் தாமே நமக்கு உதவுவாராக.