வேதம் போதிக்கும் தேவபயம் – 7
– அல்பர்ட் என். மார்டின் –
முதலாவது அதிகாரத்தில், வேதம் தேவபயத்திற்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை விளக்கினேன். அதற்கு ஆதாரமாக வேதத்தின் பல முக்கியமான பகுதிகளைத் தெரிவு செய்து விளக்கியிருந்தேன். எனினும், இந்தப் புத்தகத்தின் இறுதியில் குறிப்பிட வேண்டும் என்பதற்காக, ஒரு பகுதியை நான் இதுவரை குறிப்பிடாமல் வைத்திருந்தேன். அந்தப்பகுதிதான் இந்தப் புத்தகம் எழுதப்பட்டதற்கான நோக்கத்தைத் தன்னில் கொண்டிருக்கிறது. அந்த வேதப்பகுதி எபிரெயர் 12:18-29. இந்தப்பகுதியில் குறிப்பாக 28-29 ஆகிய வசனங்களில்தான் நம்முடைய கவனத்தைச் செலுத்தப் போகிறோம். எனினும், வாசகர்களின் வசதிக்காக அந்த வேதப்பகுதி முழுவதையும் இங்கே தந்திருக்கிறேன்.
“18. அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும், மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும், 19. எக்காளமுழக்கத்தினிடத்திற்கும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடத்திற்கும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள். 20. ஏனெனில் ஒரு மிருகமாகிலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியுண்டு, அல்லது அம்பினால் எய்யுண்டு சாகவேண்டுமென்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமாட்டாதிருந்தார்கள். 21. மோசேயும்: நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாயிருந்தது. 22. நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், 23. பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், 24. புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள். 25. பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்? 26. அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று; இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ் செய்திருக்கிறார். 27. இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல மாறிப்போம் என்பதைக் குறிக்கிறது. 28. ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். 29. நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.”
எபிரெயர் புத்தகம் முழுவதும், தெளிவற்று இருந்த எபிரெய கிறிஸ்தவர்கள் விசுவாசத்திலும் கீழ்ப்படிவிலும் விடாமுயற்சியுடன் தொடருவதற்கு அவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் ஒரு போதகனின் பார்வையில் எழுதப்பட்டது. இந்நிருபத்தை எழுதியவர், இதை முடிவுக்குக் கொண்டு வருகிறபோது, மோசேயின் கீழாக கொடுக்கப்பட்ட பழைய உடன்படிக்கையின் சூழலையும் அதன் சாராம்சத்தையும் இயேசுவின் மூலமாக கொடுக்கப்பட்ட புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களுடைய சூழலையும் சாராம்சத்தையும் சுட்டிக்காட்டி அவைகளுக்கிடையே இருக்கும் வேறுபாட்டை மிகவும் தெளிவாக விளக்குகிறார். 19வது வசனத்தை 24வது வசனத்தோடு ஒப்பிட்டு, இந்த வேறுபாட்டைத் தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறார். 19வது வசனத்தில் “நீங்கள் வந்து சேரவில்லை” என்று சொல்லப்பட்டிருக்கிறது, ஆனால், 24வது வசனத்தில் “வந்து சேர்ந்தீர்கள்” என்று இருக்கிறது.
இதில், புதிய உடன்படிக்கையில் காட்டப்பட்டுள்ள இயேசுவையும் அவருடைய செயலையும் நிராகரிப்பதிலுள்ள ஆபத்துக்களை ஆசிரியர் இறுதி எச்சரிக்கையாக கொடுக்கிறார். 25-27 வசனங்களில் அந்த எச்சரிப்பு விவரிக்கப்பட்டுள்ளது. பிறகு, 28-29 வசனங்களில், மிக முக்கியமானதொரு ஒரு புத்திமதியைத் தருகிறார், “ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே”.
பழைய உடன்படிக்கை கொடுக்கப்பட்ட சூழல் மிகவும் பயங்கரமாக இருந்தது. மோசேயே, “நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன்” (வசனம் 21) என்று சொன்னார். இது பயங்கரத்தினாலும், திகிலினாலும் உண்டான பயம். புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்கள் இந்த பயத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது. எனினும், புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்கள், தேவபக்திக்கு ஆதாரமாகிய தேவபயத்தை இல்லாமலாக்கிவிடவில்லை. புதிய உடன்படிக்கையின் மூலமாக இந்த தேவபயமானது நம்முடைய இருதயங்களில் நாட்டப்படும் ஒரு ஆசீர்வாதமாகவே அடையாளங் காட்டப்பட்டுள்ளது. 28-29 வசனங்களின் அடிப்படையில், புதிய உடன்படிக்கையின் மூலமாக நமக்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்து ஆசீர்வாதங்களுக்கான நன்றியுணர்வானது, “நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே” என்ற விதத்திலேயே நம்மை வழிநடத்தும். இயேசு கிறிஸ்துவுக்குள் பாவிகளுக்கு வழங்கப்படும் இரட்சிப்பை நான் பெற்றிருக்கிறேன் என்று நீங்கள் சொல்லுவது, கடவுளைப் பயத்தோடும் பக்தியோடும் ஆராதிப்பதற்கான மனநிலையை உங்களில் ஏற்படுத்தாவிட்டால், உங்களுடைய எண்ணத்திலும், கடவுளுடைய கிருபையுள்ள இரட்சிப்பின் அனுபவத்திலும் ஏதோ கோளாறு உண்டு என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்நாட்களில், விசுவாசிகள் என்று சொல்லிக்கொள்ளுகிற அநேகர், ஆராதனை என்ற பெயரில் செய்கிறவைகளைப் பார்க்கிறபோது, கடவுள் இப்போது “பட்சிக்கிற அக்கினியாய் இருப்பதில்லை” என்ற தவறான முடிவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஆராதனையை நடத்துகிற அநேகர், கடவுளை மென்மையான, கொழுத்த, கட்டித் தழுவக்கூடிய, மெல்லிய பஞ்சினாலான ஒரு கரடி பொம்மையைப் போலத்தான் தோற்றமளிக்கிறார் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. எபிரெயர் நிருபத்தை எழுதியவர், கடவுளை புகையும், கொழுந்துவிட்டு எரியும் நெருப்பும், இடிமின்னல்களும் காணப்பட்ட சீனாய் மலையின் பட்சிக்கிற அக்கினி என்பதாக சொல்லவில்லை. மாறாக, புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை எடுத்துரைத்தபிறகு, கடவுள் “பட்சிக்கிற அக்கினியாய் இருக்கிறார்” என்று சொல்லியிருக்கிறார். இந்த உண்மையே, நாம் அவரை ஆராதிப்பதற்கும், அவருக்கு ஊழியம் செய்வதற்குமான எல்லையை வகுக்கிறதாக இருக்கிறது.
29வது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “இருக்கிறாரே” என்ற வார்த்தைப் பிரயோகம், 28 மற்றும் 29வது வசனங்களை ஒன்றிணைத்து, நம்முடைய ஆராதனையும் ஊழியமும் எப்படி அமைய வேண்டும் என்பது, நாம் ஆராதிக்கிற, ஊழியஞ்செய்கிற கடவுளுடைய தன்மையை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மேலும், புதிய உடன்படிக்கைக்குரியவர்களின் ஆராதனையானது, “பக்தியும் தேவபயமும்” கொண்ட சூழலில் இருக்க வேண்டும். அநேகர் “பயத்தோடும் பக்தியோடும்” என்பதை ஆரோக்கியமற்ற, வறண்ட, மந்தமான நிலைக்கான மாற்று வார்த்தை என்பதாக தவறாக விளங்கிக்கொள்ளுகிறார்கள்.
சங்கீதம் 47:1-2, ஆராதனைக்கு நம்மை தயார்படுத்தும் பரிசுத்த ஆவியானவருடைய நேரடி வார்த்தைகளைக் கவனியுங்கள், “சகல ஜனங்களே, கைகொட்டி, தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாய் ஆர்ப்பரியுங்கள். உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின்மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார்”. சங்கீதக்காரனுடைய இந்த வார்த்தைகளின்படி, தேவபயத்துடனான ஆராதனையானது, மகா ராஜாவை மிகுந்த ஆர்வத்துடன், ஆராதிக்கிறவர்களின் இருதயம், கை, மற்றும் குரல் ஆகிய அனைத்தோடும் ஈடுபடுவதாகும். 17வது நூற்றாண்டின் பாடலாசிரியரான மார்டின் ரின்கர்ட் (Martin Rinkart), சங்கீதம் 47:1-2 ஆகிய வசனங்களை அடிப்படையாக வைத்துதான், தன்னுடைய ஒரு பாடலின் முதல் வரியாக இப்படி எழுதியிருக்கிறார், “நாமனைவரும், நம்முடைய இருதயத்தோடும், கைகளோடும், குரலோடும், நம்முடைய தேவனுக்கு இப்போது நன்றி தெரிவிப்போம்”.
“பயத்தோடும் பக்தியோடும்” என்ற வார்த்தைப் பிரயோகம், ஒருபோதும் சாதாரணமான, விளையாட்டுத்தனமான, வேடிக்கையான என்ற வார்த்தைகளோடும் மற்றும் போலியான பகட்டோடும் எந்தவிதத் தொடர்பும் கொண்டதல்ல. மேலும், “பயத்தோடும் பக்தியோடும்” என்ற வார்த்தைகள், கடவுளைப் பற்றிய எந்தவிதமான எண்ணமும் அற்றதாக வெறும் உதட்டளவு வார்த்தைகளாக மட்டுமே இருக்கிற ஜெபத்தோடும் தொடர்புடையதல்ல. அதாவது நாம் ஜெபத்தை ஏறெடுக்கிற கடவுள், “பரலோகத்தில் இருக்கிற நம்முடைய பிதா” (மத்தேயு 6:9). ஏசாயா தீர்க்கதரிசி விவரித்திருப்பதுபோல் “நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர்.” ஏசாயா 6வது அதிகாரத்தில் சேராபீன்கள் தங்கள் முகங்களையும் கால்களையும் மூடிக்கொண்டு “சேனைகளின் கர்த்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” (ஏசாயா 6:3) என்று ஒருவரையொருவர் பார்த்து சொல்லிய அந்தக் காட்சி, எந்த தேவனிடத்தில் ஜெபிக்கிறோம் என்ற எண்ணமற்றவர்களாக ஜெபிக்கிறவர்களோடு தொடர்புள்ளதல்ல. “பயத்தோடும் பக்தியோடும்” ஆராதிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி ஜோன் ஓவன் சொல்லிய வார்த்தைகளை நாம் கவனிப்போம்.
இவ்வார்த்தைகள் எதைத் தடைசெய்கிறது என்று அறிந்துகொள்ளும் போதுதான் இவ்வார்த்தைகளை நாம் சரியாக அறிந்து உணர்ந்திருக்கிறோம் என்பதற்கு அறிகுறி. அதாவது,
கடவுளுடைய மகிமையையும் மகத்துவத்தையும் பற்றி உணர்வற்றிருப்பது.
நம்முடைய இழிவான நிலையைப் பற்றி உணர்வற்றிருப்பது.
ஆத்மீக கடமைகளை மாம்சீக தைரியத்தோடு செய்வது; இதை கடவுள் வெறுக்கிறார். ஆராதனையில் பயபக்தி என்பது, கடவுளுடைய மகத்துவத்தையும், நம்முடைய இழிவான நிலையையும் உணர்ந்தவர்களாக, நம்முடைய ஆத்துமாவைத் தாழ்த்துவதாகும். தேவபயம் என்பது கடவுளுக்கான ஆராதனையில் பாவகரமான காரியங்களை செய்துவிடுவதனால் உண்டாகும் பயங்கரத்தை அறிந்தவர்களாக, பரிசுத்த கடமைகளை ஆத்மீக பயத்துடன் செய்வதாகும்.
வேதத்திலுள்ள சாட்சியங்களின் அடிப்படையில், அப்போஸ்தலர்களுடைய காலத்திற்கே உரிய தனித்துவமான ஆவிக்குரிய வரங்கள் பலவற்றை கொரிந்துவிலிருந்த சபை பெற்றிருந்தது. இப்படியான வரங்களைப் பெற்றிருந்து, அப்போஸ்தலர்களுடைய வழிகாட்டுதலின்படி நடந்துவந்த சபையில், ஆராதனை மற்றும் ஊழியங்களில் ஒரு குறிப்பிட்ட ஆராதனை வழிகாட்டு முறைகளைப் பின்பற்றுவதென்பது கடினமான ஒன்றுதான். எனினும், பரிசுத்த ஆவியானவருடைய அசாதாரண வெளிப்படுத்தலின் சூழலிலும், பவுல் சொல்லுகிறார், இத்தகைய வரங்களின் மூலமாக கடவுள் எப்படிப்பட்டவர் என்பது வெளிப்படுத்தப்பட்டு, அங்கு வருகிற அவிசுவாசியான ஒருவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்கள் அதன் மூலம் அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டு, “அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்.” (1 கொரிந்தியர் 14:24-25). வேறுவிதமாக சொல்லுவதானால், அந்த நபருடைய மனமானது, இத்தகைய அசாதாரண வரங்களினால் ஒளியூட்டப்பட்டு, புதிய உடன்படிக்கையின்படி கூடிவருகிறவர்களாகிய இவர்கள் மத்தியில் இருக்கிற தேவனானவர், “பயத்தோடும் பக்தியோடும்” வழிபட வேண்டியவர் என்ற உண்மையை அவன் அறிந்துகொள்ளுகிறான். அந்த அவிசுவாசியானவன், முகங்குப்புற விழுந்து, தேவனைப் பணிந்துகொண்டான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்காலத்தில் அநேக நவீன சுவிசேஷ இயக்கங்களும், சீர்திருத்தத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிற சிலரும் காட்டுவதுபோல், கடவுள் கட்டிப்பிடித்து விளையாடும் ஒரு கரடி பொம்மையைப் போன்றவர் என்ற எண்ணத்தை அந்த சூழல் அந்த அவிசுவாசியான நபரில் ஏற்படுத்தவில்லை. மாறாக, இந்த தேவனை “பயத்தோடும் பக்தியோடும்” சேர வேண்டும் என்று உணர செய்தது.
வேதம் போதிக்கும் கிறிஸ்தவ அனுபவத்தின் மையமாக இருக்கிற தேவபயத்தைப் பற்றி ஒரு கிறிஸ்தவன் தீவிரமாக சிந்திக்கிறபோதுதான், அவர்கள் கூடிவந்து ஆராதிக்கிற, அந்த ஆராதனையானது, “தேவபக்தியும் தேவபயமும்” கொண்டதாக இருக்கும். அநேக மெய்யான கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையில் தேவபயமானது அதிகரிக்கவும், அது தொடரவும், தேவன்தாமே இந்தப் புத்தகங்களின் பக்கங்களைப் பயன்படுத்துவாராக.
இந்தப் புத்தகத்தை வாசித்த சிலர், சுவிசேஷத்தின் மூலமாக இலவசமாக வழங்கப்படுகிற இரட்சிப்பின் ஆசீர்வாதங்களைப் பற்றிய எந்தவிதமான அனுபவத்தையும் நீங்கள் அடையவில்லை என்பது உங்களில் முற்றிலும் தேவபயம் இல்லை என்பதற்கான மறுக்க முடியாத சான்றாக இருக்கிறது என்ற முடிவுக்கு நீங்கள் வந்திருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஜெபமாக இருக்கிறது. உங்களுக்கான என்னுடைய அன்பான ஆலோசனையும் புத்திமதியும் மிகவும் எளிமையானது. இந்தப் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவிடம் நேராக செல்லுங்கள். அவர், தமது மூலமாக தேவனிடத்தில் வருகிற யாவரையும் ஏற்றுக்கொண்டு, அந்த உடன்படிக்கையில் வாக்களிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் தன்னுடைய தேவையை உணர்ந்து வருகிற பாவிகளுக்குக் கொடுக்கிறார். ஏசாயா தீர்க்கதரிசியினுடைய வாக்கியங்களின்படி, நான் உங்களை வற்புறுத்திக் கேட்டுக்கொள்ளுவது என்னவென்றால்,
“கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்” (ஏசாயா 55:6-7).