அன்பு வணக்கங்கள்!
இந்த இதழில் தொடர்ந்து ‘தேவபயம்’ மற்றும் ‘பக்தி வைராக்கியம்’ பற்றிய ஆக்கங்கள் வந்திருக்கின்றன. இவை ஆவிக்குரிய வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக வாசகர்கள் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள். தேவபயம் பற்றிய அல்பர்ட் என் மார்டினின் ஆக்கங்கள் இந்த இதழோடு முடிவுக்கு வருகின்றன. கூடிய விரைவில் அது நூலாக வெளிவரவிருக்கிறது.
திருச்சபையின் கிறிஸ்தவ தலைமைபற்றி ஒரு ஆக்கத்தை இந்த இதழில் தந்திருக்கிறேன். கிறிஸ்தவ தலைமை இருக்கவேண்டிய நிலையில் இன்று இல்லை என்பதை எவர் மறுக்கமுடியும். சுயநல நோக்கங்களோடு அந்தப் பணியை செய்கிறவர்களே நம்மினத்தில் அதிகம். தீமோத்தேயு, தீத்து ஆகிய நூல்களும் வேதத்தின் எனைய பகுதிகளும் கிறிஸ்தவ தலைமை பற்றித் தரும் விளக்கங்களை ஒருவரும் சட்டை செய்வதில்லை. இந்த ஆக்கம் உங்களை சிந்திக்க வைக்கவேண்டும்.
பொதுவாக உலகில் நிகழும் விஷயங்களை நாம் அலட்சியப்படுத்திவிடக்கூடாது. இந்த உலகம் கர்த்தருடையது தானே! உலகத்தில் எது நடந்தாலும் அதற்குப் பின்னால் இருந்து உலகை இயக்கி வருகிறவர் கர்த்தரே. உலகம் தன் சுயநல நோக்கில் செய்துவருகிற காரியங்களைக் கர்த்தர் தன்னுடைய இறுதி நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளுகிறார். அனைத்தையும் தன் மகிமைக்காக நடத்திச் செல்லுகிறார். இந்த வருடத்தில் நிகழ்ந்திருக்கும் இரு முக்கிய நிகழ்ச்சிகளை விபரித்து கிறிஸ்தவ பார்வையில் அதுபற்றி எழுதியிருக்கிறேன். அமெரிக்க தூதரகம் எருசலேமுக்கு மாற்றப்பட்டதும், மலேசியாவில் ஆளும் கட்சி ஆட்சியிழந்து எதிர்க்கட்சிகள் பதவிக்கு வந்ததுமே அந்த இரு நிகழ்வுகளும். இவையிரண்டும் வரலாறு காணாத நிகழ்வுகள்.
வெளிப்படுத்தல் விசேஷம் நூலின் 20ம் அதிகாரம் விளக்கும் ஆயிரம் வருட அரசாட்சிபற்றி கிறிஸ்தவ இறையியலுலகில் இருந்து வருகின்ற கோட்பாடுகளை விளக்கி இந்த இதழில் ஒரு ஆக்கம் வந்திருக்கிறது. இது தொடராக்கம்; அடுத்த இதழில் முடிவுக்குவரும்.
வாசகர்கள் பத்திரிகையைக் கையில் பெற்றும் வலைத்தளத்தில் வாசித்தும் தொடர்ந்து பயனடைவதோடு எங்களையும் இப்பணியில் ஊக்குவித்து வருவதற்காக என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். இந்த இதழும் அதன் ஆக்கங்களும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க கர்த்தர் உதவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும், ஜெபமும். – ஆர்