அன்பு வணக்கங்கள்!
மறுபடியும் இந்த இதழோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்விதழில் முக்கியமான ஆக்கங்கள் வந்திருக்கின்றன. அத்தநேசியஸ் என்ற ஆதிசபையின் முக்கிய தலைவரைப் பற்றி டேவிட் மெரெக் எழுதிய ஆக்கத்தின் முதலாவது பகுதியை இதில் தந்திருக்கிறேன். அத்தநேசியஸ் எந்தளவுக்கு சபை வரலாற்றில் முக்கியமானவர் என்பதை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அறிந்துவைத்திருக்கவில்லை. சத்தியத்தின் நிமித்தம் அவர் எடுத்த நடவடிக்கைகள் அவரைப் பலதடவைகள் சிறைவாசம் அனுபவிக்கவைத்திருக்கிறது. கர்த்தரின் கிருபையே உயிராபத்து ஏற்பட்ட ஒவ்வொரு தடவையும் அவரைப் பாதுகாத்திருக்கிறது. அந்தளவுக்கு சத்தியத்திற்காக உயிரைப் பணயம் வைக்கிறவர்கள் இன்று எங்கிருக்கிறார்கள். அத்தநேசியஸின் சத்திய வைராக்கியமே திரித்துவம் பற்றிய ஆணித்தரமான விளக்கத்தைத் தரும் வரலாற்று சிறப்புப் பெற்ற நைசீன் ஆவணத்தை நமக்குத் தந்திருக்கிறது. இவ்வாக்கத்தை வாசித்துப் பயனடையுங்கள்.
அடுத்ததாக அதிகாரத்தைப் பற்றியும் அதற்கு அடங்கி நடக்கவேண்டிய அவசியத்தைப்பற்றிய ஆக்கமொன்றை இதில் நான் எழுதியிருக்கிறேன். அதிகாரத்தை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் ‘லிபரலிசம்’ இன்று எங்கும் கொடிகட்டிப் பறக்கிறது. கிறிஸ்தவர்கள் அதிகாரத்துக்கு மதிப்புக்கொடுத்து நடக்கவேண்டும்; அதை எதிர்ப்பது கர்த்தரையே எதிர்ப்பதாகும். அத்தோடு கடைசிக்கால சத்தியங்களை விளக்கும் தொடராக்கமும் இதில் வந்திருக்கிறது.
டேவிட் மெரெக் எழுதிவந்திருக்கும் ஆவிக்குரிய வைராக்கியம் பற்றிய ஆக்கத்தையும் இதில் வாசித்துப் பயன்பெறலாம். வாசகர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. இனி திருமறைத்தீபத்தை இந்திய வாசகர்கள் நன்மை கருதி தமிழகத்திலேயே வெளியிடத் தீர்மானித்திருக்கிறோம். எந்தவிதத்திலும் இதழின் தரம் குறையாமல் அச்சிட்டு வெளியிடவும், அதனை உங்களுக்குத் தொடர்ந்து அனுப்பவும் வசதிகளை செய்து வருகிறோம். அதற்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். அதுபற்றிய விபரங்கள் அடுத்த இதழில் வரும். இந்த இதழும் அதன் ஆக்கங்களும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க கர்த்தர் உதவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும், ஜெபமும். – ஆர்