பக்திவைராக்கியம் பற்றிய இத்தொடர் ஆக்கத்தின் இறுதிப்பகுதிக்கு இப்போது வந்திருக்கிறோம். இப்பாடத்தொடர் நம் அனைவரிலும் கிறிஸ்தவ வைராக்கியத்தை தக்கவைக்கவும் அதிகரிக்கவும் உதவியாயும் ஊக்கப்படுத்துகிறதாயும் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பும் ஜெபமுமாகும். பக்திவைராக்கியம் பற்றிய இந்த முக்கியமான விளக்கங்களை எப்படி சிறந்த முறையில் முடிவுக்குக் கொண்டு வருவது என்பதற்காக நான் அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது. இரண்டு இறுதியான விஷயங்களோடு இதை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று தீர்மானித்தேன்.
1. கிறிஸ்தவ வைராக்கியத்தின் தெய்வீகத் தன்மை
வைராக்கியத்தை விளக்கும் பழைய ஏற்பாட்டு வார்த்தைகள், மனிதர்களாகிய நம்முடைய வைராக்கியத்தைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. ஜீவனுள்ள தேவனும் வைராக்கியம் கொண்டவர் என்பதைக் காட்டுகிறது. பழைய ஏற்பாட்டு வார்த்தைகள், கடவுளைக் குறித்து பேசுகிறபோது பெரும்பாலும் குறிப்பாக கடவுளுடைய பொறாமையையே சுட்டிக்காட்டுகின்றன. ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் மூன்று இடங்களில் கடவுளின் வைராக்கியம் பற்றி பொதுவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவற்றில் இரண்டு முக்கியமான பகுதியில் மட்டுமே நம்முடைய கவனத்தைச் செலுத்தப் போகிறோம். இந்தப் பகுதிகள் நாம் கொண்டிருக்க வேண்டிய பக்திவைராக்கியத்தின் தன்மையையும் நமக்கு விளங்கச் செய்கிறதாக இருக்கிறது. கடவுளைப் பிரதிபலிக்கிறவர்களாக உருவாக்கப்பட்ட நமக்கு, வைராக்கியத்திற்கான சிறந்த உதாரணமாகவும் கடவுளே இருக்கிறார்.
அ. ஏசாயா 9:6-7
6நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். 7தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
இந்த வார்த்தைகள் 2,700 வருடங்களுக்கு முன்பு ஏசாயாவினால் தெய்வீக உந்துதலினால் எழுதப்பட்டவைகள். இவ்வசனங்களில் கணிக்கப்பட்டு விவரிக்கப்பட்டிருக்கிற காரியங்களுக்காகவே கர்த்தருடைய வைராக்கியம் இன்றும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ 700 ஆண்டுகளாக கடவுள் இந்த பிள்ளை வர வேண்டிய யூத சந்ததியைப் பாதுகாத்து, தம்முடைய குமாரனுடைய வருகைக்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார். கடவுள், சிதறடிக்கப்பட்டிருந்த யூதர்களில் மீந்திருந்தவர்களை, இந்தப் பிள்ளை பிறக்க வேண்டிய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் மீண்டும் குடியேறும்படிச் செய்தார். பிறகு சுமார் 2,000 வருடகளுக்கு முன்பு வல்லமையுள்ள தேவனாகிய இந்தப் பிள்ளை மனித குழந்தையாக தாழ்வான நிலையில் விலங்குகளின் கொட்டகையில் பிறந்தார். அவர் மனிதனாக வளர்ந்தார். அவர் பரிபூரண வாழ்க்கையை வாழ்ந்தார். ரோமர்களின் சிலுவையில் ஒரு அப்பாவி மனிதனாக கொல்லப்பட்டார். மூன்றாம் நாள் உயிருடன் எழுந்தார். அவர் பரலோகத்திற்கு எழுந்தருளி, பிதாவாகிய தேவனுடைய வலது பாரிசத்தில் அமர்ந்தார். அன்றிலிருந்து தாவீதின் சந்ததியில் வந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ராஜாவாக ஆளுகை செய்து வருகிறார். தம்முடைய ராஜ்யத்தின் எல்லையை ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் இருதயங்களில் விரிவுபடுத்திக் கொண்டு வருகிறார். எனினும், இந்த வசனம் சொல்லுகிற சில காரியங்கள் இன்னும் நிறைவேற வேண்டியுள்ளன. இராஜாதி இராஜாவாக அவர் மறுபடியும் வருகிறபோது அவருடைய ராஜ்யம் எவ்வளவாக இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிற அளவுக்கு அவருடைய ராஜ்யம் இன்னும் அதிகரிக்கப்படவில்லை. பூமியில் முடிவில்லா சமாதானமும், நியாயத்தீர்ப்பும், நீதியும் காணப்படவில்லை. பொல்லாத மனிதர்கள் தொடர்ந்து கேடாக வாழ்ந்து, கிறிஸ்துவினுடைய ராஜ்யத்தின் நீதியுள்ள குடிமக்களை ஒடுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இவையாவும் கடவுளுடைய வைராக்கியத்தைப் பற்றி என்ன சொல்லுகின்றன? கடவுளுடைய வைராக்கியத்தின் நீளும் தன்மையைச் சுட்டிக்காட்டுகின்றன. ஏசாயாவில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட காரியங்கள் பல ஆயிரம் வருடங்களாக கடவுளுடைய வைராக்கியத்தினால் நிறைவேற்றிக்கொண்டு வருகிறது. அவருடைய வைராக்கியம் இவைகளை இன்றும் நிறைவேற்றிக்கொண்டு வருகிறது. அவருடைய வைராக்கியம் தேவகுமாரனுடைய நித்திய ராஜ்யத்தில் நித்தியத்திற்கும் இவைகளை நிறைவேற்றிக்கொண்டு வரும். கடவுளுடைய வைராக்கியம் நீண்டகாலமாக நம்முடைய இரட்சிப்பிற்காக செயல்பட்டுக்கொண்டு வருகிறது. அவருடைய வைராக்கியத்தின் இந்த நீண்டகால தன்மை நாம் பின்பற்றுவதற்கான உதாரணமாக இருக்கிறது.
வேதம் கிறிஸ்தவ வாழ்க்கையை ஒரு நீண்டதூரப் பந்தயமாக காட்டுகிறது. அதுபோல, இந்தப் பந்தயத்தில் ஓடுவதற்கான கிறிஸ்தவ வைராக்கியமும் நீண்டகாலத் தேவைகளையும் அக்கறையையும் கொண்டுள்ளது. புதிய ஏற்பாட்டில் காட்டப்பட்டுள்ள எரிகிற அல்லது கொதிக்கிற என்பது வைராக்கியத்தைப் பொறுத்தளவில், ஒரு குறுகிய காலம் மட்டுமே ஏற்படுகிற ஒன்று என்ற எண்ணத்தை ஏற்படுத்தலாம். பக்திவைராக்கியம் என்பது ஒரு சிறு வெடிப்புப் போன்றது என்றும் நினைக்க செய்யலாம். இது ஒரு தீவிரமான 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தைப் போன்றது என்றும் எண்ணத் தோன்றலாம். உண்மையில், நம்மை நாம் வெறுப்பதற்கும் சிலுவையை எடுத்துக்கொண்டு கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கும் தேவையான தீவிரமான குறுகிய கால வைராக்கியமும் ஆற்றலும் அவ்வப்போது அசாதாரண காலங்களில் ஏற்படலாம். ஆனால் இறுதியில், பக்திவைராக்கியம் என்பது நீண்ட காலம், விடாமுயற்சியுடன் தொடருவதாகும். இதுவரை நாம் பார்த்து வந்திருக்கிற பாடங்களில் இந்த உண்மை பலவிதங்களில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் ஏசாயா 9வது அதிகாரத்தில், கடவுளுடைய வைராக்கியத்தைக் குறித்து பார்க்கிற இந்த இடத்தில் இந்த உண்மை மிகவும் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாம் பக்திவைராக்கியத்தைக் கொண்டிருக்க வேண்டுமா? பூமியில் நாம் வாழும் மீதமுள்ள நாட்களிலும், நித்தியத்திலும் அத்தகைய வைராக்கியத்தை “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயும், ஆவியிலே அனலுள்ளவர்களாயும், கர்த்தருக்கு ஊழியம் செய்கிறவர்களாயும்” இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். கிறிஸ்தவ வைராக்கியம் என்பது கொஞ்சக்காலம் நிற்பதும் பிறகு மீண்டும் துவங்குவதுமான விஷயமல்ல. அது நீண்ட தூரம் தொடருகிற ஒன்று. ஆகவேதான், கடவுளின் உதவியோடு நம்முடைய வைராக்கியத்தைத் தொடர்ந்து தக்கவைப்பதும், தேவைக்கேற்ப தூண்டிவிடுவதும், அதிகரிப்பதுமாக இருக்க வேண்டும்.
மறுபுறம், முந்தைய ஆக்கத்தில், எலியாவில் பார்த்ததுபோல் மனச்சோர்வுக்கு எதிராக கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற தெளிவான கட்டளைகளைச் சரியாக பயன்படுத்துவதன் மூலம் நம்மை நாம் பாதுக்காத்துக்கொள்ளவும் வேண்டும். கிறிஸ்டோபர் ஆஷ் (Christopher Ash) எழுதிய “Zeal Without Burnout” என்ற புத்தகத்தில், அவர் சொல்லிய வார்த்தைகளைக் கேளுங்கள்:
கடந்த பத்து வருடங்களில் கிறிஸ்தவ ஊழியத்திற்காக வாலிப ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பயிற்சியளிப்பதில், சிறந்த ஊழியங்கள் பெரும்பாலும் நீண்டகால பணிகளைக் கொண்டது என்பதைப் புரியவைப்பதிலேயே நான் அதிக கவனம் காட்டியிருக்கிறேன். குறுகிய கால ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக அல்ல, நெடுந்தூர மாரத்தான் ஓட்டத்திற்கே அவர்களைத் தயார் செய்ய முயற்சித்தேன். வேறுவிதத்தில் சொல்லுவதானால், விரைவில் சோர்வுற்று மங்கிப்போகும் ஆற்றலைக் கொண்ட ஊழியத்தை அவர்கள் செய்வதைவிட வாழ்நாள் முழுவதும் தொடருகிற நிலைத்திருக்கும் தியாக ஊழியத்தைக் கொண்டிருக்கவே நான் உதவுகிறேன்.
கிறிஸ்தவ வைராக்கியம், நீண்டகால வைராக்கியம் என்பதை கடவுளின் உதாரணம் நமக்குக் காட்டுகிறது. எனினும், மற்றொரு ஏசாயாவின் பகுதி, வைராக்கியத்தின் தன்மையைக் குறித்த சமநிலைப்படுத்தும் உண்மையை நம் முன் எடுத்துரைக்கிறது.
ஆ. ஏசாயா 42:13-17
13கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார். 14நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன். 15நான் மலைகளையும் குன்றுகளையும் பாழாக்கி, அவைகளிலுள்ள பூண்டுகளையெல்லாம் வாடப்பண்ணி, ஆறுகளைத் திட்டுகளாக்கி, ஏரிகளை வற்றிப்போகப்பண்ணுவேன். 16குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன். 17சித்திரவேலையான விக்கிரகங்களைநம்பி, வார்ப்பிக்கப்பட்ட சுரூபங்களை நோக்கி: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று சொல்லுகிறவர்கள் பின்னிடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்.
இந்த அதிகாரத்தின் முதல் பாகத்தில், வசனங்கள் 1 முதல் 9 வரை, புறஜாதிகளுக்கும் இரட்சிப்பைக் கொண்டு வருகிற மேசியாவின் வருகையைப் பற்றி கர்த்தர் முன்னறிவிக்கிறார். இப்போது 13 முதல் 17 வரையுள்ள வசனங்களில், அந்த இரட்சிப்பை ஆவிக்குரிய குருடர்களாக இருக்கிறவர்களுக்கு எப்படித் தருகிறார் என்பதையும் அதேநேரம் அவிசுவாச விக்கிரக ஆராதனைக்காரரை எப்படி நியாயந்தீர்க்கிறார் என்பதையும் விவரிக்கிறார். 14வது வசனத்தில் தன்னை அடக்கிக் கொண்டிருக்கிறவராகவும் வெகு காலம் மவுனமாயிருக்கிறவராகவும் விவரித்துக் காட்டுகிறார். ஏசாயா 9:7ல் நாம் பார்த்த அதையே, அவருடைய இருதயம் நெடு நாட்களாக வைராக்கியம் கொண்டிருந்ததையே இங்கு இப்படி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால் இப்போது இங்கே கடவுளுடைய வைராக்கியத்தின் இன்னுமொரு பரிமாணத்தைக் கூடுதலாக பார்க்கலாம். வசனம் 13ல் தன்னுடைய எதிரிகளைப் போரில் சந்திக்க செல்லும் ஒரு போர்வீரனைப் போல் வைராக்கியங் கொண்டு தாம் எழுவதாக அவர் தம்மைப் பற்றிச் சொல்லுகிறார். புறஜாதியாரையும் இரட்சிக்கும் தம்முடைய இலக்கை நிறைவேற்றுவதற்காக கடவுள் தயாரானபோது, சிறப்பான வகையில் தம்முடைய வைராக்கியத்தை அவர் தூண்டிவிட்டு அதிகரிக்கச் செய்கிறார். அல்லது புதிய ஏற்பாட்டு மொழிநடையின்படி வைராக்கியத்தின் தீச்சுடரில் ஊதி இன்னும் அதிக சூடாக்குகிறார். இது கடவுளைப் பற்றிய விளக்கமாதலால், அவர் கொண்டிருந்த குறைந்தளவான வைராக்கியத்தைத் தூண்டிவிட்டு பெருமளவில் ஏற்படச் செய்வதென்பது ஒரு குறையோ பாவகரமானதோ அல்ல. மாறாக, ஒரு போர்வீரன் போருக்கு முன்பாக தன்னுடைய வைராக்கியத்தைத் தூண்டிவிட வேண்டியதாக இருக்கிறதுபோல, சில முக்கியமான சந்தர்ப்பங்களில், எதிர்கொள்ள வேண்டிய சவாலுக்கு ஏற்ப, நம்முடைய வைராக்கியத்தைத் தூண்டிவிட வேண்டியதையே இது சுட்டிக்காட்டுகிறது.
கடவுள் நம் முன் காட்டுகிற, சிறப்பான சவால்களை எதிர்கொள்வதற்கு நம்முடைய வைராக்கியத்தைத் தூண்டிவிடுதல் என்பது நமக்கு எந்தப் படிப்பினையையும் தரவில்லையா? ஒரு காரிலுள்ள பெட்ரோல் என்ஜினை சற்று நினைவுபடுத்திப் பார்ப்போம். இரண்டு வழி நெடுஞ்சாலையில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். அப்போது, உங்களுக்கு முன் செல்லுகிற கார் மெதுவாக சென்று கொண்டிருக்கிறது, அதை முந்திக்கொண்டு நீங்கள் செல்ல வேண்டும், அதேநேரம், தூரத்தில் எதிர்புறத்தில் ஒரு பெரிய லாரி வருகிறது. உங்களுக்கு முன்னுள்ள காரையும் முந்தவேண்டும், எதிரில் வருகிற லாரியையும் மோதாமல் செல்ல வேண்டும். என்ன செய்வீர்கள்? உங்களுடைய காரின் என்ஜின் வேகமாக செயல்படுவதற்காக, அதை அதிகமாக சூடாக்க, காரிலுள்ள ஆக்சிலேட்டரை நீங்கள் ஏற்கனவே செய்து வந்ததைவிட மேலும் அதிகமாக அழுத்த வேண்டும். அதுபோலவே நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலும் ஊழியத்திலும் செய்ய வேண்டும். சவாலான ஆலோசனையோ பிரசங்கமோ பண்ணும் சந்தர்ப்பத்தை எதிர்கொள்ளும்போதும், குடும்ப நெருக்கடியின்போதும், கிறிஸ்துவுக்கு உண்மையாக இருந்ததனால் உண்டாகும் துன்புறுத்தலை எதிர்கொள்ளும்போதும் ஜெபத்தின் மூலமாகவும் கடவுளுடைய வார்த்தையைத் தியானிக்கிறதன் மூலமாகவும் நம்மிலுள்ள வைராக்கியத்தின் ஆழத்தை தீவிரமாக தூண்டிவிட வேண்டியிருக்கிறது.
நாம் மண்ணில் உருவாக்கப்பட்ட, அழியும் சிருஷ்டிப்பாக இருப்பதனால், இத்தகைய தூண்டிவிடுதலில் தியாகங்களும் உள்ளடக்கமாக இருக்கும். அத்தகைய தியாகம் விலைமதிப்பில்லாதது. அது, “நம்முடைய வாழ்க்கையைச் சேதப்படுத்துகிறதாகவும் அல்லது அழிக்கிறதாகவும்” இருக்கலாம். நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், சில நேரங்களில் மனச்சோர்வடைவதும் மரணமேகூட ஏற்படுவதும் தவிர்க்க முடியாது. இறுதியில், “நல்லது உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரன்” என்று உங்களைக் குறித்து கேள்விப்பட வேண்டுமானால் தொடர்ந்து உண்மையாக இருங்கள்.
சுருக்கமாக, கடவுளுடைய உதாரணத்திலிருந்து, பக்திவைராக்கியத்தின் தன்மையில், நீண்ட காலம் விடாமுயற்சியுடன் இருப்பதும், நமக்கு முன்னிருக்கிற விசேஷ சவால்களை எதிர்கொள்ள வைராக்கியத்தின் அசாதாரண தூண்டுதலின் பல பரிமாணங்களும் உள்ளடக்கியிருக்கிறது என்பதை நாம் கற்றுக்கொள்ளுகிறோம். பக்திவைராக்கியத்தில் இவை இரண்டும் இருக்கின்றன.
2. இழப்பிற்கான சாத்தியமும் கிறிஸ்தவ வைராக்கியத்தின் தீயை தொடர்ந்து தக்கவைத்தலும்
நாம் மனந்தளராமல் இருக்கும்படி புதிய ஏற்பாட்டின் அநேக வேதப்பகுதிகள் நம்மை வற்புறுத்துகிறது. நாம் வைராக்கியத்தை விட்டுவிடக் கூடாது என்பதைதான் இப்படிச் சொல்லுகிறார்கள். நாம் தொடர்ந்து வைராக்கியத்தோடு இருக்க வேண்டியதற்கான ஏராளமான காரணங்களை இந்தப் பகுதிகள் இதன் சந்தர்ப்பதின் அடிப்படையில் நமக்குத் தருகின்றன. நம்முடைய தொடர்ச்சியான வைராக்கியம் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் அவைகள் நமக்குப் போதிக்கின்றன. பக்திவைராக்கியத்தையும் ஜெபத்தையும் பற்றிப் படிக்கிறபோது இதுபோன்ற ஒரு பகுதியை நாம் படித்தோம்.
லூக்கா 18:1
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
இதுபோன்று இன்னும் சில வசனங்களையும் புதிய ஏற்பாட்டில் நாம் பார்க்கலாம்.
எபேசியர் 3:13
ஆகையால் உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாயிருக்கிறதே.
2 தெசலோனிக்கேயர் 3:13
சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்.
எனினும், நாம் மனந்தளரக் கூடாது என்ற கருப்பொருளை விளக்கும் புதிய ஏற்பாட்டின் வேறு இரண்டு பகுதிகளோடு இந்தப் பாடத்தை நான் முடிக்க விரும்புகிறேன். ஒவ்வொரு பகுதியிலும் மூன்று கேள்விகளுக்கான பதிலைப் பார்க்கவிருக்கிறோம். மனந்தளராமல் இருப்பதைக் குறித்த பகுதிகளோடு பக்திவைராக்கியத்தின் அக்கினி நம்முடைய இருதயங்களில் கொழுந்துவிட்டு எரிவதற்கு உதவும் என்று நான் நம்புகிற அற்புதமான வாக்குத்தத்தங்களை இணைத்துப் பார்க்கப் போகிறோம். மனந்தளராதிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் முதலாவது வசனப்பகுதியைப் பார்க்கலாம்.
அ. கலாத்தியர் 6:9-10
9நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். 10ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.
கேள்வி 1: நாம் ஏன் மனந்தளரக் கூடும்?
ஏனென்றால் நன்மைசெய்வதில் நாம் தளர்ந்து போய்விடுவோம். சரீரத்திலும் ஆவியிலுமாக இரண்டிலும் மற்றவர்களுக்கு அன்போடு ஊழியம் செய்வது மிகவும் கடினமானது. மேலும், நன்மைசெய்ய நாடுகிறபோது பெரும்பாலும் ஏமாற்றங்களே உண்டாகிறது. நம்முடைய இருதயத்தை ஊற்றி கடவுளுடைய வார்த்தையில் ஊழியம் செய்கிறபோது பெரும்பாலும் தொடர்ந்து கடினமான இருதயத்தையும் எந்த பதிலும் தராத இருதயத்தையுமே பார்க்க நேரிடுகிறது. நம்முடைய உழைப்பின் மூலமாக சிறிதளவோ அல்லது கனியற்ற நிலையையே பார்க்க நேரிடுகிறது. கடவுளுடைய மக்களே, அதாவது யாருக்கு நாம் ஊழியம் செய்கிறோமோ, அவர்களே, நம்முடைய உழைப்பைப் பாராட்டாதபோதும், நன்றியற்றவர்களும் குறைகாணுகிறவர்களுமாக இருக்கிறபோதும் நம்முடைய மனம் தளர்ந்து போகிறது. சில நேரங்களில் பவுலைப் போல் நாமும் உணருவோம். நாம் அவர்களை அதிகமாக நேசித்தும் அவர்களால் குறைவாக நேசிக்கப்பட்டிருப்போம்.
2 கொரிந்தியர் 12:15
ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்.
கேள்வி 2: இத்தகைய களைப்பையும் ஊக்கமின்மையையும் எதிர்கொள்ளும்போது, ஏன் நம்முடைய மனம் தளரக் கூடாது?
இதற்கான பல காரணங்களைப் பார்க்க முடியும்.
கலாத்தியர் 6:9ல் பவுல் ஒரு காரணத்தைத் தெளிவாக காட்டுகிறார்.
கலாத்தியர் 6:9
நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.
மனந்தளராமல், தொடர்ந்து உண்மையுடன் விதைத்தால், அறுப்பின் நாள் நிச்சயம் வரும். நம்முடைய உழைப்புகளிலிருந்து மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் கிறிஸ்தவர்களாக நம்முடைய சொந்த வளர்ச்சியிலும் கனிகளைப் காண்போம். கிறிஸ்துவின் ராஜ்யம் முன்னேறுகிறபோது அவர் உயர்த்தப்படுகையில் கனிகளை நாம் பார்ப்போம். எனினும், கர்த்தருடைய அந்த இறுதிநாள் வரை அதிகமான கனிகளை நாம் பார்க்க முடியாமல் இருக்கலாம். இந்த ஊக்கப்படுத்தும் உண்மை அடிக்கோடிட்டுக் காட்டும் மற்றொரு அற்புதமான வாக்குத்தத்தத்தைக் கவனியுங்கள்.
1 கொரிந்தியர் 15:58
ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.
இங்கு கிறிஸ்தவ வைராக்கியம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. கர்த்தருடைய வேலையில் எப்போதும் நாம் அதிகமாக ஈடுபட வேண்டுமென்று வற்புறுத்தப்படுகிறோம். கிறிஸ்துவுக்கு நாம் உண்மையுள்ளவர்களாக இருந்து நிலைத்திருக்கிறபோது இப்படிச் செய்ய வேண்டியது ஏன்? ஏனென்றால் கர்த்தருக்குள்ளான நம்முடைய உழைப்பு வீண் போகாது. நாம் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறோம், ஒரு முட்டாளின் வேலையை அல்ல. ஆகவே நாம் மனந்தளரக் கூடாது.
ஏன் கர்த்தருடைய சேனையிலுள்ள சோர்வுற்ற வீரர்கள் மனந்தரளக் கூடாது என்பதற்கான மேலும் இரண்டு காரணங்களைப் பார்ப்போம்.
வேதத்தின் ஏனைய பகுதியில், சோர்வுற்றிருக்கிற உண்மையுள்ள சுவிசேஷ ஊழியர்களுக்கு இளைப்பாறுதல் வந்துகொண்டிருக்கிறது என்று ஊக்கப்படுத்தப்படுகிறோம்.
வெளிப்படுத்தின விசேஷம் 14:13
பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம் பற்றுகிறார் என்று சொல்லிற்று.
மரணத்தோடு இந்த சோர்வுறச் செய்யும் வேலைகளுக்கு முடிவு வருகிறது. விசுவாசிகளுக்கு மரணம் என்பது அவர்களுடைய வேலைகளிலிருந்து ஓய்வு பெறுவதாகும். மேலும், கிறிஸ்துவின் வருகை, உண்மையான சுவிசேஷ ஊழியர்களுக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்தி துன்பப்படுத்துகிற கேடான விரோதிகளிடமிருந்து நிரந்தர ஓய்வைப் பெற்றுத் தருகிறது.
2 தெசலோனிக்கேயர் 1:6-8
6உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே. 7தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, 8கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
அன்பார்ந்த சோர்வுற்றிருக்கிற சகோதர சகோதரிகளே, மனந்தளர வேண்டாம். ஓய்வு சீக்கிரமாக வருகிறது.
உண்மையுள்ள சுவிசேஷ வேலையாட்களுக்கு நித்திய வெகுமதி இருக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் 14:13ல் சற்று முன் நாம் என்ன வாசித்தோம் என்பதை நினைவுகூருங்கள். உண்மையுள்ள பரிசுத்தவான்களின் வேலைகள் அவர்களுடைய மரணத்திலும் பின்தொடரும். கடவுள் அவருக்கும் அவருடைய பரிசுத்தவான்களுக்கும் நீங்கள் செய்த பணிகளை நினைவுகூருவார்.
எபிரெயர் 6:10
ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியுஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே.
அத்தோடு, அங்கு வெகுமதியும் இருக்கிறது.
1 பேதுரு 5:4
அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.
1 கொரிந்தியர் 9:25
பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.
2 தீமோத்தேயு 4:7-8
7நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். 8இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்துவுக்கும் அவருடைய இராஜ்யத்திற்குமாக நாம் செய்கிற யாவும், நாம் செய்ய வேண்டிய நம்முடைய கடமையே என்பதை நினைவில் கொண்டிருக்க வேண்டும். மேலும், நாம் செய்கிற எதைவும் கிறிஸ்துவின் உதவியினால்தான் செய்கிறோம். இருப்பினும், கடவுளுடைய அற்புதமான கிருபையின் காரணமாக, சகோதரரே நம்முடைய உண்மையுள்ள ஊழியத்திற்கான வெகுமதிகளைப் பெறுகிறோம். எனவே மனந்தளர வேண்டாம்.
கேள்வி 3: இத்தகைய ஊக்கப்படுத்தலுக்கு நம்முடைய பதில் நடவடிக்கை என்ன?
கலாத்தியர் 6:10
ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.
இவ்வசனம் இதற்கான பதிலை நமக்குத் தரவில்லையா? நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கிறபோதெல்லாம் எல்லாருக்கும் விசேஷமாக கடவுளின் பிள்ளைகளுக்கு நன்மைகளைச் செய்வதைத் தொடர வேண்டும். நம்முடைய உழைப்பிற்கான பலனைப் பார்க்க முடியாவிட்டாலும் முழு இருதயத்தோடு உழைக்கிறவர்களாக இருக்க வேண்டும். நாம் சோர்வுற்றிருக்கிறபோதும், நம்முடைய முயற்சிகளை ஒருவரும் பாராட்டாதபோதும், அறுவடை நாள் வந்துகொண்டிருக்கிறது என்பதை நினைவில் வைத்திருங்கள். அதாவது, ஓய்வு வந்துகொண்டிருக்கிறது; வெகுமதிகள் வந்துகொண்டிருக்கிறது; கிறிஸ்து வந்துகொண்டிருக்கிறார்!
ஆனால் இந்த இடத்தில் “மனந்தளரக் கூடாது” என்பதை மிக உறுதியாக நமக்குக் காட்டும் இறுதியான இரண்டு வசனப்பகுதிகளை அவைகளின் சந்தர்ப்ப சூழலின் அடிப்படையில் பார்க்கலாம்.
ஆ. 2 கொரிந்தியர் 4:1,16
1இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம்பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை.
16ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
கேள்வி 1: நாம் ஏன் மனந்தரளக் கூடும்?
சுவிசேஷ ஊழியர்கள் ஏன் மனந்தளரக் கூடும் என்பதை இந்த வசனங்களின் சந்தர்ப்ப சூழலின் அடிப்படையில் மூன்று காரணங்களை இங்கு நாம் பார்க்கலாம்.
நாம் ஊழியம் செய்கிறவர்களின் குருட்டுத்தனமும், இருதய கடினமுமே நாம் மனந்தரள காரணம்.
2 கொரிந்தியர் 4:3-4
3எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். 4தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
2 கொரிந்தியர் 3:14-15
14அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது. 15மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே.
கடுமையான சோதனைகளையும் உபத்திரவங்களையும் நாம் அனுபவித்துக் கொண்டிருப்பதே நாம் மனந்தரள காரணம். ஊழியத்தில் உண்மையாயிருப்பதனால் வருகிற உபத்திரவங்களும் இந்த சோதனைகளில் அடங்கும்.
2 கொரிந்தியர் 4:8-12
8நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; 9துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை. 10கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம். 11எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். 12இப்படி மரணமானது எங்களிடத்திலும், ஜீவனானது உங்களிடத்திலும் பெலன்செய்கிறது.
2 கொரிந்தியர் 4:17
மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகள் நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.
2 கொரிந்தியர் 1:3-11
3நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். 4தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர். 5எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது. 6ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது. 7நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல, எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம். 8ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று. 9நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம். 10அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம். 11அநேகர்மூலமாய் எங்களுக்கு உண்டான தயவுக்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும்பொருட்டு, நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.
வயது முதிர்ந்து, மரணத்தை நெருங்குகிற மனித உடலின் சரீரத் தோற்றத்தின் சரிவும் காரணம்.
2 கொரிந்தியர் 4:7, 16
7இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.
16ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
2 கொரிந்தியர் 5:1, 4, 8
1பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.
4இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம்.
8நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்.
கேள்வி 2: பவுல் ஏன் மனந்தளரவில்லை?
இந்த சந்தர்ப்பதின் அடிப்படையில் பவுல் இதற்கு குறைந்தது ஐந்து காரணங்களைத் தருகிறார்.
(1) ஏனென்றால் அவரும் அவருடைய ஊழியத்திற்கு விசுவாசத்தோடு கீழ்ப்படிந்தவர்களும் கடவுளிடமிருந்து வந்த இரக்கத்தைப் பெற்றார்கள்.
2 கொரிந்தியர் 4:6, 12
6 இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.
12 இப்படி மரணமானது எங்களிடத்திலும், ஜீவனானது உங்களிடத்திலும் பெலன்செய்கிறது.
2 கொரிந்தியர் 3:16 – 4:1
16 அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம். 17 கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. 18 நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.
1 இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம்பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை.
கடவுளுடைய இரட்சிப்பின் ஆசீர்வாதங்களைத் தனிப்பட்ட விதத்தில் அனுபவித்தது மட்டுமல்லாமல், மற்றவர்களிலும் அதைப் பார்த்தார். மற்றவர்களுக்கு இத்தகைய ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் ஊழியம் தனக்குக் கொடுக்கப்பட்டதை, தனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதினார்.
எபேசியர் 3:6-8
6 இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை. 7 தேவனுடைய பலத்த சத்துவத்தால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்திற்கு ஊழியக்காரனானேன். 8 பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
(2) ஏனென்றால் கடவுள் புறம்பான மனிதனை அழித்தும் உள்ளான மனிதனை நாளுக்கு நாள் புதுப்பிக்கிறார்.
2 கொரிந்தியர் 4:16
ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
(3) ஏனென்றால் இப்போதிருக்கிற உபத்திரவங்கள் அவருக்கு நித்திய கனமகிமையைக் கொண்டு வருகின்றன. மீண்டும் வெகுமதியைப்பற்றிய வாக்குத்தத்தத்தைக் கவனியுங்கள்.
2 கொரிந்தியர் 4:17
மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகள் நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.
(4) ஏனென்றால் மரணமானது அவருடைய அற்புதமான இரட்சகரோடு இருப்பதாகும்.
2 கொரிந்தியர் 5:6-8
6 நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். 7 இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம். 8 நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்.
(5) ஏனென்றால் மரிக்கும் அவருடைய சரீரம் புது வாழ்விற்கென்று உயிர்ப்பிக்கப்படும்.
2 கொரிந்தியர் 4:13-14
13 விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம். 14 கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம்.
2 கொரிந்தியர் 5:1-4
1 பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். 2 ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்; 3 தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாய்க் காணப்படமாட்டோம். 4 இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம்.
கேள்வி 3: இதற்கான பதில் நடவடிக்கையாக பவுல் என்ன செய்தார்?
விசுவாசத்தோடு கடவுளுடைய வார்த்தையை வெளிப்படையாகவும் உண்மையாகவும் தொடர்ந்து பிரசங்கித்தார்.
2 கொரிந்தியர் 4:2, 5, 13
2 வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.
5 நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.
13 விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்.
2 கொரிந்தியர் 1:12-13
12 மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும் விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது. 13 ஏனென்றால், நீங்கள் வாசித்தும் ஒத்துக்கொண்டுமிருக்கிற காரியங்களையேயன்றி, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுபரியந்தமும் அப்படியே ஒத்துக்கொள்வீர்களென்று நம்பியிருக்கிறேன்.
2 கொரிந்தியர் 2:17
அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.
அவர் ஏன் இதை செய்தார்?
2 கொரிந்தியர் 4:18
ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.
ஏனென்றால் நம்முடைய சரீரப்பிரகாரமான கண்களால் எதைப் பார்க்கிறோமோ அது உண்மையானதல்ல. காணப்படாத உண்மைகளே நித்தியமானவைகள். நடைமுறையில் இது நமக்கு எதை விளக்குகிறது?
2 கொரிந்தியர் 5:7
இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம்.
சகோதரர்களே, விசுவாசத்தின் மூலமாக நாம் உழைக்க வேண்டுமே தவிர, பார்ப்பதின்படியல்ல. விசுவாசத்தின் மூலமாக மிகுந்த வைராக்கியத்தோடு நடக்கவும் உழைக்கவும் கடவுள் நமக்கு உதவுவாராக.
முடிவாக, நான் வயது முதிர்ந்து வருகிறதனால் எனக்கு மிகவும் பிடித்தமான, அற்புதமான பகுதியாக தெரிகிற ஒரு இறுதி வசனப்பகுதியோடு இப்பாடத்தொடரை நான் முடிக்க விரும்புகிறேன்.
சங்கீதம் 73:23-26
23 ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர். 24 உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர். 25 பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. 26 என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.
நாம் ஏன் முழுமையான வைராக்கியம் கொண்டிருக்க வேண்டும்? ஏனென்றால் எல்லாவற்றையும்விட மிகுந்த விலைமதிப்பற்ற பொக்கிஷம் நம்மிடம் இருக்கிறது. நம்முடைய உண்மையுள்ள, கிருபையுள்ள, அன்புள்ள கடவுளை நாம் கொண்டிருக்கிறோம். அவரிடமிருந்தே நம்முடைய இருதயங்களில் எல்லா வல்லமையும் வைராக்கியமும் உருவாகின்றன, என்றென்றும் தொடருகிறவையாகவும் இருக்கிறது. சகோதரர்களே இவையனைத்தும் நம்மைப் பற்றியதல்ல. இது நம்முடைய வைராக்கியமுள்ள கடவுளைப் பற்றியது. அவருக்கே எல்லா புகழும் மகிமையும் உண்டாவதாக. ஆமென்.