மறுபடியும் இந்த இதழோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பல்வேறு வேலைகளுக்கு மத்தியில் இந்த இதழைத் தயாரித்து நேரத்தோடு உங்களுக்கு அனுப்பிவைக்க கர்த்தர் கிருபை பாராட்டியிருக்கிறார். இதழின் நடுப்பகுதியில் நாம் வெளியிட்டிருக்கும் நூல்களின் பட்டியலை நீங்கள் காணலாம். அவற்றை சென்னை, சீர்திருத்த வெளியீடுகளோடு தொடர்புகொண்டு நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து எழுத்துப் பணிக்காகவும், நூல் வெளியீட்டிற்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள். தற்காலத்திற்கு அவசியமான நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிடுவதே எங்கள் நோக்கம். திருச்சபைப் பணிக்கு அவை துணைபோக வேண்டும் என்பதை எங்கள் ஜெபம்.
இந்த இதழில் ஆர்தர் பிங்க் எழுதிய ஆக்கத்தின் மொழிபெயர்ப்பை நீங்கள் வாசிக்கலாம். அது வேதவிளக்க விதிகள் தொடர்பானது. தொடர்ந்து இது குறித்த ஆக்கங்கள் இதழில் வரும். வேதவிளக்க விதிகள் இருப்பதே தெரியாது அநேகர் போதகர்களாக இருந்து வருகிறார்கள். அவர்களுக்கும் வாசகர்களுக்கும் உதவுமுகமாகவே இவற்றை இதழில் வெளியிடுகிறோம்.
போதகர் டேவிட் மெரேக்கின் பக்திவைராக்கியம் பற்றிய தொடர் ஆக்கங்களின் இறுதிப்பகுதி இந்த இதழில் வந்திருக்கிறது. இந்த ஆக்கங்களின் தொகுப்பு வெகுவிரைவில் நூலாக வெளிவரவிருக்கிறது.
வினாவிடைப் போதனை முறையைப் பயன்படுத்தி ஆத்துமாக்கள் ஆத்தும விருத்தியடையச் செய்யும் பணியைத் திருச்சபை ஆரம்பத்தில் இருந்தே செய்து வந்திருக்கிறது. சீர்திருத்தவாதிகளின் காலத்திலும், பியூரிட்டன் பெரியவர்களின் காலத்திலும் அது பரவலாகவே திருச்சபைகளில் இருந்திருக்கிறது. 19ம் நூற்றாண்டிலிருந்து அது மறைய ஆரம்பித்து உப்புச் சப்பற்ற ஊழியப்பணிகளையே திருச்சபை கண்டு வந்திருக்கிறது. மறுபடியும் சீர்திருத்தவாத போதனைகள் உயிர்பெற்று சபைகள் நிறுவப்பட்டபோது வினாவிடைப் போதனை முறையும் தலைதூக்கி மேலைத் தேசத்து திருச்சபைகளில் இருந்து வருகின்றன. அதன் அவசியத்தைப் பற்றிய இரு ஆக்கங்களை இந்த இதழில் எழுதியிருக்கிறேன். இவை மேலும் தொடரும்.
இந்த இதழும் அதன் ஆக்கங்களும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க கர்த்தர் உதவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும், ஜெபமும். – ஆர்