வணக்கம் வாசகர்களே! இந்த இதழின் சிறப்பு என்ன தெரியுமா? இந்த வருடத்தோடு திருமறைத்தீபம் இருபத்தைந்து வயதைப் பூர்த்தி செய்திருக்கிறது. இருபதைக் கடந்தது நேற்றுபோல் இருக்கிறது. இருபத்தைந்து வயதை ஒரு சபை வெளியிட்டு வரும் இதழ் கடந்திருப்பது என்பது சாதாரணமானதல்ல. அத்தனை வருடங்கள் சபைகள்கூட இந்தக்காலத்தில் நிலைத்திருப்பதில்லை; அதாவது சத்தியத்தில் நிலைத்திருப்பதில்லை. சத்தியத்தைவிட்டு விலகக்கூடாது என்பது இதழின் ஆரம்ப இலக்குகளில் ஒன்று. அதிலிருந்து விலகாமலிருக்க கர்த்தர் நிச்சயம் உதவியிருக்கிறார். பச்சோந்திப் பத்திரிகையாக திருமறைத்தீபம் இல்லாமலிருக்க கர்த்தரும் வாசகர்களும் நமக்கு ஊக்கமளித்து வருகிறார்கள்.
நம்மினத்தில் ஆவிக்குரிய, சத்தியவேதம் சார்ந்த பிரசங்கங்கள் இல்லாமலிருக்கும் குறை நமக்குத் தெரிந்ததுதான். ஊழியங்கள் ஈசல்கூட்டம்போல் பெருகிப் போயிருக்கின்றன; பிரசங்கங்கள் தண்ணீரையும், உணவையும் மாதக்கணக்கில் காணாத நகரத்துத் தெரு மாடுகளைப்போல மெலிந்துபோயிருக்கின்றன. கிறிஸ்தவர்களாகத் தங்களை இனங்காட்டிக்கொள்ளும் அநேகருக்கு பிரசங்கத்தைப்பற்றிய உணர்வே இல்லாமலிருப்பது எனக்கு எப்போதுமே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. பிரசங்கமே ஆராதனையில் முதன்மை பெறும் அம்சம். அந்தப் பிரசங்கம் வேதப்பிரசங்கமாக இருக்கவேண்டிய நிலையில் இல்லாமல் போனால் ஆத்துமாக்கள் கர்த்தரின் பிரசன்னத்தை அறிவதெப்படி? அதுபற்றிய ஆக்கமொன்றை இந்த இதழில் எழுதியிருக்கிறேன்.
ஜொசுவா ஹெரிஸின் வாழ்க்கையில் நிகழ்ந்திருப்பது மிகவும் கவலைக்குறிய விஷயம். அவர் யார் என்று கேட்கிறீர்களா? அவர் பற்றிய ஆக்கத்தை வாசித்துப் பாருங்கள். அத்தோடு பிசாசு ஆதியாகமத்தை எப்படியெல்லாம் தாக்கி அழிக்கப்பார்க்கிறான் என்பதையும் ஒரு ஆக்கத்தில் விளக்கியிருக்கிறேன். இவ்விதழின் இறுதி ஆக்கம் ஆர்த்தர் பிங்கின் நூலில் இருந்து வரும் ஒரு மொழிபெயர்ப்பு. வேதத்தை விளங்கிக்கொள்ள இன்றியமையாத அம்சங்கள் பற்றியது அது.
இருபத்தி ஐந்து வருடத்தை திருமறைத்தீபம் பூர்த்தி செய்ய நமக்கு உதவியிருக்கும் கர்த்தருக்கும், இதழால் தொடர்ந்து பயனடைந்து வரும் வாசகர்களுக்கும் இதழ்குழு சார்பாக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். – ஆர்