வணக்கம் வாசகர்களே! இருபத்தி ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்து புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது இதழ். அதிலும் மூன்று மாதங்கள் உருண்டோடிவிட்டன. மறுபடியும் இதழ் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன். இந்த இதழ் கொஞ்சம் வித்தியாசமாக வெளிவருகிறது. இரண்டு புதிய ஆக்கங்களைத்தவிர, இதழ் ஆரம்பித்த காலத்தில் இருந்து 2015ம் ஆண்டுக்கு முன்பிருந்த இதழ்களில் வெளிவந்துள்ள நல்ல சில ஆக்கங்களைத் தெரிவுசெய்து இந்த இதழில் மறுவெளியீடு செய்திருக்கிறோம். அதற்குக் காரணம் உண்டு.
இந்த இருபத்தி ஐந்து வருடங்களில் நூற்றுக்கணக்கான புதிய வாசகர்கள் இதழை வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். நேரடியாக இதழைப் பெறுகிறவர்கள் மட்டுமல்லாமல் இணைய தளத்தில் அதை வாசிக்கிறவர்களும் அநேகர். எல்லோருக்கும் இதழ் தொகுப்புகளை வாங்கக் கூடிய வசதியும் இருக்காது. அதனால், இந்த மறுவெளியீடுகள் அவர்களுக்கும், உங்களுக்கும்கூட பயனளிக்கும்.
நம்மினத்தில் எவரும் எந்த ஆக்கத்தையும் நூலையும் ஒருதடவை மட்டும் வாசிப்பதே வழக்கம். மீண்டும் மீண்டும் ஒரே நூலை வாசிக்கும் வழக்கம் பெரும்பாலும் கிடையாது. இதெல்லாம் தகுந்த வாசிப்புப் பயிற்சி இல்லாததனால் வந்திருக்கும் பிரச்சனை. நல்ல நூல்களையும், நல்ல ஆக்கங்களையும் நாம் பல தடவைகள் வாசிப்பது அவசியம். அதுவே என்னுடைய வழக்கம். அது பற்றி இந்த இதழிலும், ஒரு நூலிலும் விளக்கியிருக்கிறேன். அதன் மூலம் வாசிக்கும் விஷயங்கள் ஓடிப்போய்விடாதபடி நம் மனதில் தங்கியிருக்கும். கிறிஸ்தவர்கள் இதைச் செய்வது மிகவும் அவசியம். வேதத்தை ஒரு தடவை வாசிப்பதோடு மட்டுமா நிறுத்திவிடுகிறோம்? ஆகவே இந்த இதழில் வந்திருக்கும் ஆக்கங்கள் மீண்டும் வாசித்து சிந்திக்கவேண்டியவை.
மறுவெளியீடு செய்யப்பட்டிருக்கும் ஆக்கங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் பரிசுத்தத்தின் அவசியத்தையும், திருச்சபை இருக்கவேண்டிய நிலையையும், சத்தியத்தில் வளரவேண்டியதன் அவசியத்தையும், சுவிசேஷத்தைக் கேட்டு இரட்சிப்படைவதற்கு அவசியமானதொரு அடிப்படை சத்தியத்தையும் விளக்குவதாக இருக்கின்றன.
இதுவரை வெளிவந்திருக்கும் இதழ்களைப்போல இதுவும் உங்கள் வாழ்க்கையில் பயனுள்ளதாக இருக்க கர்த்தர் இதைப் பயன்படுத்துவாராக. – ஆர்