மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும்

மனந்திரும்பாமல் எவரும் பாவமன்னிப்பை அடையமுடியாது என்கிறது வேதம் (அப்போஸ்தலர் 3:19). மனந்திரும்புதல் என்ற வார்த்தையின் கிரேக்க மூலத்திற்கு அடிப்படை அர்த்தம் ‘மனதில் ஒரு விஷயத்தைப்பற்றிய கருத்தை மாற்றிக்கொள்ளுவது’ (change of heart) என்பதாகும். இதுவே அடிப்படை அர்த்தமாக இருந்தபோதும், இந்த அர்த்தத்தின் அடிப்படையில் மட்டும் மனந்திரும்புதலை விளங்கிக்கொள்ள முடியாது. இவென்ஜெலிக்கள் கிறிஸ்தவ பிரிவுகளில் பெரும்பாலானோர் இந்த அர்த்தத்தில் மட்டும் மனந்திரும்புதலை விளக்கி, மனந்திரும்புதல் என்பது மனத்தளவில் பழைய வாழ்க்கையைப்பற்றிய எண்ணத்தை மாற்றிக்கொண்டு இயேசுவைப்பற்றிய புதிய எண்ணத்தைக் கொண்டிருப்பது என்று விளக்குகிறார்கள். சார்ள்ஸ் ரைரி (Charles Ryrie), சேன் ஹொட்ஜஸ் (Zane C Hodges) போன்றோர் இதையே செய்திருக்கிறார்கள். இந்த அடிப்படையிலேயே இன்று பெரும்பாலும் சுவிசேஷமும் பிரசங்கிக்கப்படுகிறது. அதனால் மனந்திரும்புதல் என்பது மனிதன் சுயத்தில், பாவநிலையில் மாம்சத்தில் இருந்து இயேசுவைப்பற்றிய தன்னுடைய கருத்தை மனத்தளவில் மாற்றிக்கொள்ளுவது என்று மட்டும் விளக்கப்பட்டு வருகிறது. ஆகவே, இவர்களைப் பொறுத்தவரையில் மனந்திரும்புதல் மனிதனுடைய கிரியையாகிவிடுகிறது. இதுவே செமி-பெலேஜியனிச, ஆர்மீனியனிசப் போதனை. இதன்படி மனிதன்தானே சுயமாக மனந்திரும்பி பாவமன்னிப்பை அடையக்கூடியவனாக இருக்கிறான்; பிடிக்காதபோது அதை உதறிவிடக்கூடியவனாகவும் இருக்கிறான். ஆனால், இதுவல்ல மனந்திரும்புதலுக்கு வேதம் தருகின்ற விளக்கம்.

மனந்திரும்புவது மனிதனின் கடமை

மனந்திரும்புவது மனிதனின் கடமை (duty) என்கிறது வேதம். கடவுள் மனிதனுக்காக மனந்திரும்ப முடியாது. அதேவேளை மனந்திரும்புதல் மனிதனின் கிரியை (work) அல்ல. கிரியையின் மூலம் இரட்சிப்பு ஒருபோதும் கிடைக்காது என்கிறது வேதம் (எபேசியர் 2:8-10). கடமைக்கும் கிரியைக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது; இரண்டும் ஒன்றல்ல. நாம் சுயத்தில், மாம்சத்தில், பாவநிலையில் இருந்து செய்வது கிரியை; நாம் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ நம்முடைய பொறுப்பாக இருப்பது கடமை. மனந்திரும்புதல் அந்தவிதத்தில் நம்முடைய கடமையாக இருக்கிறது.

மறுபிறப்பும் மனந்திரும்புதலும்

மனந்திரும்புதல் மனிதனுடைய கடமையாக இருந்தபோதும், அவனால் பாவநிலையில் சுயமாக மனந்திரும்ப முடியாது. அப்படியானால் மனிதனின் மனந்திரும்புதலுக்கு எது மூலமாக இருக்கிறது? இறையியல் அடிப்படையில் தத்துவார்த்தமாக இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கைத் திரும்பிப் பார்ப்போமானால், மறுபிறப்பே மனிதனின் விசுவாசத்திற்கும், மனந்திரும்புதலுக்கும் அடித்தளமாக இருக்கிறது என்கிறது வேதம் (தீத்து 3:5; 1 யோவான் 3:9; 2 கொரிந்தியர் 5:17; யோவான் 3:5). மனிதன் சுயமாக செய்யும் கிரியையாக இல்லாமல் அவனுக்குப் புறத்தில் இருந்து பரிசுத்தஆவியானவர் அவனுக்குள் கிருபையால் விதைக்கின்ற புதிய ஜீவனாக இருக்கிறது மறுபிறப்பு; அது கடவுள் அவனுக்குள் செய்யும் செயல். விசுவாசமும், மனந்திரும்புதலும் மறுபிறப்பு பெற்றெடுக்கும் ஒட்டிப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள். இவற்றை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கமுடியாது; ஆனால் இரண்டும் தனித்தன்மையுடைய கிருபைகள்.

மனந்திரும்புவதால் மன்னிப்பா அல்லது மன்னிக்கப்படுவதால் மனந்திரும்புகிறோமா?

மனந்திரும்புவதால் பாவம் மன்னிக்கப்படுகிறதா? பாவம் மன்னிக்கப்படுவதால் மனந்திரும்புகிறோமா? என்ற கேள்வியை இறையியல் வல்லுனர்கள் அடிக்கடி கேட்டு வந்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் கேள்வி கேட்பது அவசியமா, அநாவசியக்கேள்விகள் என்று சிலர் நினைக்கக்கூடும். உண்மையில் இது அநாவசியமான கேள்வியல்ல. இப்படி இறையியல் வல்லுனர்கள் கேட்டிருப்பதற்குக் காரணம் தீவிரமாக சத்தியத்தை ஆராய்ந்து போலிப்போதனைகளை அடையாளங்கண்டு அவற்றில் சிக்கிவிடாமல் இருக்கவும், அவற்றை இனங்காட்டி ஆத்துமாக்களைக் காப்பதற்குமாகத்தான். இதன் காரணமாகத்தான் சபை வரலாற்றில் சத்தியத்தைப் பாதுகாப்பதற்காக வினாவிடைப்போதனைகளும், விசுவாச அறிக்கைகளும் எழுதப்பட்டன. அவை சத்தியத்தை மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் ஆழமாகத் தெளிவாக விளக்குபவையாக இருக்கின்றன. சத்தியப்பற்றில்லாதவர்களுக்கும், ஞானம் குறைந்தவர்களுக்கும் இவை சலிப்பூட்டினாலும் மெய்க்கிறிஸ்தவர்களுக்கு இவை பாதுகாப்பு அரண். இறையியல் ரீதியாக அவசியம் நேருகிறபோது ஆழமாகவும் தெளிவாகவும் சிந்திக்க மறுத்தால் போலிப்போதனைகளில் இலகுவாக சிக்கிவிடுவோம். எதையும் மேலெழுந்தவாரியாகப் படிக்கிற வழக்கம் இருக்கிறவர்களுக்கு சத்தியத்தையோ, போலிப்போதனையையோ இனங்கண்டுகொள்ள முடியாது.

வேதம், மனந்திரும்பாமல் பாவமன்னிப்பில்லை என்கிறது. அப்படி விளக்கும் அநேக வசனங்களை வேதத்தில் வாசிக்கிறோம் (அப்போஸ்தலர் 2:38). அதில் எந்த வாக்குவாதத்திற்கும் இடமில்லை. ஆனால், இந்த உண்மையை சரிவர விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது, பாவமன்னிப்புக்கு மனந்திரும்புதல் அவசியம் (necessary) என்கிறது வேதம். இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், மனந்திரும்புதல் இல்லாத இடத்தில் பாவமன்னிப்பைக் காணமுடியாது என்று இதற்கு அர்த்தம். இதனால், ஒருவருடைய மனந்திரும்புதலாகிய செயலின் மூலமாக அவர் பாவமன்னிப்பை அடைகிறார் என்று அர்த்தமல்ல. ஒன்றின் காரணமாக இன்னொன்று நிகழ்வதற்கும் (cause – மூலம்), ஒன்றில்லாமல் இன்னொன்றிருக்க முடியாது (necessity – இன்றியமையாதது) என்று சொல்லுவதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது. மனந்திரும்பாமல் பாவமன்னிப்பில்லை என்பதற்கு அர்த்தம் பாவமன்னிப்புக்கு மனந்திரும்புதல் இன்றியமையாதது, அவசியமானது என்பதுதான்.

மனந்திரும்புதல் பாவமன்னிப்புக்கு இன்றியமையாததாக (necessity) இருந்தபோதும், பாவமன்னிப்புக்கு அது ஆதாரம் அல்ல. நீதிமானாக்குதலே அதற்கு ஆதாரமாக (source or ground) இருக்கிறது. ஒருவன் நீதிமானாகிறபோதே அவனுடைய பாவங்களுக்கு மன்னிப்பு கிடைத்து அவன் குற்றவாளி இல்லை என்ற நிலையைக் கடவுளுக்கு முன் அடைகிறான். அந்த நீதிமானாகுதலை ஒருவன் விசுவாசத்தின் மூலம் மட்டுமே அடைய முடியும் (Faith alone). நீதிமான் என்ற தகுதியை நமக்களிக்கின்ற கிருபையின் கருவியாக (instrumental means) இருப்பதே விசுவாசம். அதேநேரம் விசுவாசத்திற்கு ஆதாரம் (ground) கிறிஸ்துவின் பலியும் அவர் நிறைவேற்றிய நீதியுமே. விசுவாசத்தின் மூலம் நீதிமானாகிற ஒருவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அந்தப் பாவமன்னிப்புக்கு மனந்திரும்புதல் இன்றியமையாததாக இருக்கிறது என்கிறது வேதம். இறையியல் ரீதியாக விசுவாசத்தையும் மனந்திரும்புதலையும் ஆராய்ந்தால், தத்துவார்த்தமாக மனந்திரும்புதல் விசுவாசத்தில் இருந்து புறப்படுவதாக இருக்கிறது. அதாவது, மனந்திரும்புதல் விசுவாசத்திற்கு முன் நிகழ்வதில்லை; விசுவாசத்தின் பின்வருவதாக இருக்கிறது. இதில் எந்தக் குழப்பத்துக்கும் இடமில்லை. இந்த உண்மையைத்தான் 19ம் நூற்றாண்டு சீர்திருத்த பிரசங்கியும் போதகருமான ஜோன் கல்ஹூன் (John Colquhoun) தன்னுடைய ‘இவென்ஜலிக்கள் மனந்திரும்புதல்’ என்ற நூலில் இரண்டு அதிகாரங்களில் (6ம், 7ம்) மிகவும் அருமையாகவும், கவனத்தோடும் விளக்கியிருக்கிறார். சிக்கலானதாகத் தெரியும் உண்மையை அவர் அவசியம் காரணமாக நுணுக்கமாக விளக்கியிருக்கிறார். இதே விளக்கத்தை பியூரிட்டன் பெரியவரான தொமஸ் போஸ்டனும் தந்திருக்கிறார். இந்தவிதத்தில் மனந்திரும்புதலை விளங்கிக்கொள்ளுவது அதை மனிதனுடைய மாம்சத்தின் கிரியையாகப் பார்க்கும் தவறைச் செய்யாமலிருக்க உதவும்.

மனந்திரும்பி பாவமன்னிப்பை அடையுங்கள் என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே, அப்படியானால் மனந்திரும்புதலுக்கு பின்புதானே பாவமன்னிப்பு வரவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். இந்த சத்தியத்தை மெலெழுந்தவாரியாகப் பார்க்கிறபோது அப்படித்தான் தெரியும். இதில் சரி, பிழை என்பதற்கு இடமில்லை. இதை இறையியல்ரீதியில் சரியாகப் புரிந்துகொள்ளுவதுதான் அவசியம். மனந்திரும்பாமல் பாவமன்னிப்பை நாம் அடைவதில்லை என்று ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். அந்தப் பாவமன்னிப்பு கிறிஸ்துவின் நீதிமானாக்குதலின் மூலம் விசுவாசிக்கு பெறப்பட்டிருக்கிறது. அப்படிக் கிறிஸ்துவால் பெறப்பட்டிருப்பதையே, கிறிஸ்துவை விசுவாசித்து மனந்திரும்புவதின் மூலம் ஒருவன் அடைகிறான். அந்தவகையில் பாவமன்னிப்புக்கு மனந்திரும்புதல் இன்றியமையாததாக இருக்கிறது.

கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற எவரும் கிறிஸ்துவிடமிருந்து இரட்சிப்பை உடனடியாக ஒரே தடவை (instantly at once) அடைகிறார்கள். அந்த இரட்சிப்பு, அதோடு தொடர்புடைய அத்தனை ஆசீர்வாதங்களையும் ஒருவருக்குக் கொண்டுவருகிறது. இரட்சிப்பு, பகுதி பகுதியாக, துண்டு துண்டாக வருவதில்லை. இரட்சிப்பை அடைகிறவர்கள் இரட்சிப்பின் சகல ஆசீர்வாதங்களையும் ஒரே நேரத்தில் அடைகிறார்கள். இது அசைக்கமுடியாத, மறுக்க வழியில்லாத சத்தியமாக இருந்தபோதும் பிதாவும், குமாரனும் உன்னதத்தில் தாங்கள் முன்குறித்துத் தெரிந்தெடுத்தவர்களை இரட்சிக்கும் திட்டத்தையும் (The plan of salvation), அந்தத் திட்டத்தின் மூலம் இரட்சிப்புக்குரியவர்கள் அடையும் ஆசீர்வாதங்களை (The blessings of salvation) அவசியத்தின் காரணமாக வேத இறையியல் அடிப்படையில் தத்துவார்த்தமாகப் படிமுறையாகப் பிரித்து ஆராய்ந்து பார்க்கும்போது, ஒரே நேரத்தில் ஒருவர் அடைகின்ற இரட்சிப்பில் காணப்படும் ஒவ்வொரு ஆசீர்வாதங்களும் ஒன்றிற்குப் பிறகு இன்னொன்று வருகிறது என்பதாகக் காண்கிறோம். அந்த முறையில்தான் அந்தப் படிமுறையின்படி தத்துவரீதியில் மனந்திரும்புதலுக்குப் பிறகு பாவமன்னிப்பு வருகின்றதாக இருக்கிறது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s