வணக்கம் வாசகர்களே! இந்த இதழோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இதழ் தொடர்ந்து உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்து வருகிறது என்று நம்புகிறேன். நம் காலத்தில் கண்ணுக்குத் தெரியாத கோவிட்-19 தொடர்ந்து தன் கைவரிசையை உலகெங்கும் காட்டிவரும் இந்நாட்களில் கர்த்தரின் கிருபையால் நம் பணிகளை நாம் தொடரமுடிந்திருக்கிறது. தொடர்ந்தும் கர்த்தர் நம்மைப் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்த இதழில் மூன்று ஆக்கங்களை நான் எழுதியிருக்கிறேன். வேதமே நம் எண்ணங்களையும் வாழ்க்கையையும் ஆளவேண்டும்; சமூகமோ அதன் போக்குகளோ அல்ல என்பதை உணர்த்துவது முதலாவது ஆக்கம். என்னைப் பொறுத்தவரையில் இது மிகவும் முக்கியமானது. ஆலயத்துக்குப் போவதோடும், ஜெபிப்பதோடும் மட்டும் இருந்துவிடக்கூடாது கிறிஸ்தவம்; இந்த உலகத்துக் கண்ணோட்டத்திற்குள் சிக்கித்தவிக்காமல் கட்டளைகளைப் பின்பற்றிப் பரிசுத்தமாக வாழ்வதை கிறிஸ்தவன் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். நம்மினத்தில் அது இன்று பரவலாக இல்லாமல் இருக்கிறது. வேதவசனங்களைவிட உலகமே அநேகரில் ஆட்சிசெய்து வருகிறது என்பது வருந்தத்தக்கது. அது மாறவேண்டும்.
அடுத்த ஆக்கமான ‘மறுபடியும் அஞ்சரைப்பெட்டியில்’ என்பதில் என் படைப்புலக அனுபவங்களையும், வேறுதுறைகளில் இருக்கும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டு, முக்கியமாக வாலிபர்களைச் சிந்திக்குமாறு அறைகூவலிட்டிருக்கிறேன்.
மூன்றாவது ஆக்கமான ‘மொழியாக்க வறட்சி’ பற்றி எப்போதுமே சிந்தித்து வந்திருக்கிறேன். தடியெடுத்தவர்களெல்லாம் தண்டல்காரர்கள் ஆகிவிட முடியாது. மொழியாக்கத்தில் உள்ள நுணுக்கமான சிக்கல்களையும், சவால்களையும் இந்த ஆக்கத்தில் விளக்க முனைந்திருக்கிறேன்.
கடைசி ஆக்கம் ரால்ப் வென்னிங் அவர்களின் ‘பாவத்தின் பாவம்‘ என்ற நூலின் ஒரு பகுதியாகும். இதுவரை வந்துள்ள இதழ்களைப்போலவே இதுவும் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்து கர்த்தரின் கிருபையிலும், ஞானத்திலும் நீங்கள் தொடர்ந்து வளரத்துணைபுரிய வேண்டும் என்பதே எங்கள் ஜெபம். – ஆர்