1. கடவுள் பாவத்திற்கு எதிரான சாட்சியாக இருக்கிறார்.
அ. கேடான எந்தவொரு செயலும் கடவுளுக்கு எதிரானது என்பதை அவர் வெளிப்படையாகச் சொல்லாமல் இல்லை. நம்முடைய நலன்களில் கடவுள் அக்கறையுள்ளவராக இருப்பதால், பாவகரமான செயல்களைச் செய்வதற்கு எதிரான தடையை அவர் நமக்கு விதித்திருக்கிறார். நன்மையானவையும், நீதியானவையும், உண்மையானவையும், பரிசுத்தமானவையும் யாவை என்பதில் அவரே நமக்கு வழிகாட்டியாக இருக்கிறார். பாவகரமான செயல்கள் கடவுளால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், நமக்கு நன்மை உண்டாக்கக் கூடியதாகவும் இருந்திருந்தால், கடவுள் அவற்றைத் தடைசெய்திருக்க மாட்டார்.
ஆ. தீமையான செயல்களின் மூலமாக, நமக்கோ, மற்றவர்களுக்கோ, கடவுளுடைய பணிகளுக்கோ ஏதாவதொரு விதத்தில் நன்மை ஏற்படுமென்பதற்காக, அந்தத் தீமையான செயல் எத்தனை சிறியதாக இருந்தாலும், கடவுள் ஒருபோதும் அதை அனுமதிப்பதில்லை.
1. நமக்கு நன்மை ஏற்படுவதற்காக நாம் தீமைசெய்யக்கூடாது. பணக்காரர்களாக இருப்பதில் தவறில்லை; ஆனால் பாவகரமான செயல்களின் மூலம் பணக்காரர்களாவது தவறானது.
2. நம்முடைய நண்பனுக்கு நல்லது நடக்கவேண்டுமென்பதற்காகப் பொய் சொல்லக்கூடாது. தன்னுடைய இனத்தவர்கள் இரட்சிக்கப்படுவார்களானால், அவர்களுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லிய பவுல், அவர்களுக்காகத் தான் ஒருபோதும் பொய்சொல்ல முடியாது என்று சொல்லியிருக்கிறார் (ரோமர் 9:1-2).
3. நம்முடைய சில பாவகரமான செயல்கள், கடவுளுடைய செயல்களுக்குச் சாதகமாக அமையும் என்று நாம் நினைப்பது, கடவுள் பிசாசைச் சார்ந்திருப்பதாகச் சொல்லுவதாகிவிடும். அத்தகைய பாவம் கடவுளுக்கு இருமடங்கு எதிரான செயலாகும்.
இ. கடவுள், பாவத்திற்கு எதிரான தம்முடைய கோபத்தை, அவற்றிற்கு அவர் தரும் கடுமையான தண்டனையின் மூலம் தெரிவித்திருக்கிறார். கடவுள் ஆதாமிடம், “ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்” (ஆதியாகமம் 2:17). கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் போவது அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாமலிருந்திருந்தால், கடவுள் இப்படியான பயமுறுத்தலுடன் கூடிய எச்சரிப்பைத் தந்திருப்பாரா?
ஈ. “தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்” (சங்கீதம் 7:11). பாவம் தீமையானதாகவும் நன்மைக்கு எதிரானதாகவும் இல்லாமலிருந்திருந்தால், கடவுள் இந்தளவுக்குக் கோபங்கொண்டிருப்பாரா?
உ. நோவாவின் காலத்தில் உண்டான பெருவெள்ள நிகழ்வின்போது, மனிதர்களுடைய பொல்லாத செயல்களே, கர்த்தர் மனிதகுலத்தை உருவாக்கியதற்காக அவரை மனஸ்தாபப்பட வைத்தது (ஆதியாகமம் 6:5-6). படைப்பின்போது தம்முடைய படைப்புகளைக் கண்டு பூரித்துப்போன கடவுள், இப்போது இத்தகைய மனஸ்தாபத்தை வெளிப்படுத்தியிருப்பது, மனிதகுலத்தின் வீழ்ச்சியடைந்த தேவபக்தியற்ற கேடான செயல்களின் மீது அவருக்கு இருந்த கோபத்திற்கான வலிமையான அடையாளமாயிருக்கிறது. கடவுளுடைய கட்டளைகளுக்கு எதிரான தீமையான செயல்களை நாம் செய்கிறபோது, கடவுள் நமக்குச் செய்திருக்கிற நன்மையை எண்ணி அவர் மனஸ்தாபப்படுகிறார்.
ஊ. பாவகரமான மனிதர்கள்மீது கடவுள் கடுமையான பல தண்டனைகளை அனுப்பியிருக்கிறார் என்பதை வரலாறு தெரிவிக்கிறது. கேடான மனிதர்கள் மீது இத்தகைய தண்டனைகள் வருவதன் மூலமாக, பாவம் செய்வதென்பது சாதாரணமானதல்ல என்பதையே அவை நமக்குக் காட்டுகின்றன. ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமை என்ற பாவத்தின் காரணமாக ஏதேனிலிருந்து விரட்டப்பட்டார்கள்; ஆபேலைக் கொன்றதற்காக காயீன் தண்டிக்கப்பட்டான்; சபையார் முன் நின்று பொய் சொன்னதன் காரணமாக அனனியாவும், சப்பீராளும் தண்டிக்கப்பட்டார்கள் (ஆதியாகமம் 3, 4 மற்றும் அப்போஸ்தலர் 5:1-11). இருப்பினும், பாவகரமான எல்லாச் செயல்களுக்கும் கடவுள் தம்முடைய நியாயத்தீர்ப்பை உடனுக்குடன் தந்துவிடுவதில்லை.
1. பாவகரமான செயல்களுக்குக் கடவுள் உடனுக்குடன் தண்டனை வழங்காததால், கடவுள் பாவங்களைக் கண்டுகொள்ளுவதில்லை என்ற எண்ணம் நமக்கு ஏற்படலாம். ஆனால், கடவுள் மனிதர்களுடைய பாவச்செயல்களுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்குவதாக இருந்தால், இந்த உலகத்தில் ஒருவர்கூட மிஞ்சமாட்டார்கள். ஆகவே கடவுள் பாவகரமான செயல்களுக்கு இப்போது தண்டனை வழங்காவிட்டாலும், நிச்சயமாக இறுதியில் அவற்றைத் தண்டிக்காமல் விடமாட்டார்.
2. தேவனுடைய மக்களும், பாவம் செய்கிறபோது, தண்டிக்கப்படுகிறார்கள். உதாரணமாக, தாவீது விபச்சாரம் செய்து, கொலைசெய்வதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டபோது, அது அவனுக்கு மிகுந்த துக்கத்தையும் வேதனையையும் உண்டாக்கியது (2 சாமுவேல் 11, 12). இயேசுவை மறுதலித்தபோது, பேதுரு மனங்கசந்து அழுதார் (லூக்கா 23:54-62). ஆனால், விசுவாசிகளைப் பொருத்தவரையில், அவர்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகிறதோடு, அவர்கள் செய்த பாவங்களிலிருந்து அவர்கள் மனந்திரும்பவும் செய்கிறார்கள்.
3. கடவுள் தம்முடைய சொந்தக்குமாரனையும் தண்டனைக்குள்ளாக்கியிருக்கிறார். அவர் பாவமற்ற வாழ்க்கையை வாழ்ந்திருந்தபோதிலும், தன்னை விசுவாசிக்கிற தன்னுடைய மக்களுக்கான இடத்தை அவர் ஏற்றபோது, அவர்களுடைய பாவங்களுக்கான கடவுளுடைய தண்டனையை அவர் தன்மீது சுமந்தார்.
2. பாவத்தைக் கண்டனம் செய்யவே கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார்.
அ. பாவிகளுக்காக கிறிஸ்து பாடுகளை அனுபவித்தார் என்பதை வேதம் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.” (ரோமர் 5:8).
1. கிறிஸ்துவினுடைய மரணத்தைப் பாவிகளுக்கான “மீட்கும் கிரயம்” என்பதாகவே வேதம் விவரிக்கிறது. கிறிஸ்தவர்கள் விலை (கிரயம்) கொடுத்து வாங்கப்பட்டவர்கள். “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.” (1 பேதுரு 1:19).
2. பாவிகளுக்கான பலியாக கிறிஸ்து மரித்தார். “கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.” (கலாத்தியர் 3:13).
ஆ. கிறிஸ்து தன்னுடைய மக்களுக்காக மரித்தபோது, அவருடைய பாடுகளின் கோரம், பாவத்தின் பயங்கரத்தை நமக்குக் காட்டுகிறது. அவரைப்பற்றி வேதம் விளக்குகிறபோது, அவர் “துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்” (ஏசாயா 53:3) என்று சொல்லுகிறது. கிறிஸ்துவினுடைய பாடுகளின் கோரத்தை நாம் ஒருபோதும் முழுமையாக அறிய முடியாது. ஏனென்றால், நம்மீதுள்ள கடவுளுடைய கட்டுக்கடங்காத கோபத்தை, அவர் அனுபவித்தவிதமாக நாம் உணர்ந்ததில்லை.
1. எல்லாவிதமான பாடுகளையும் கிறிஸ்து அனுபவித்தார். அவர் பிறந்தவுடனேயே துன்புறுத்தல்களும் அவர்கூடவே வந்தன. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எதிர்ப்புகளை அவர் எதிர்கொண்டார். அவருடைய மரணத்தில் கொடூரமாக துன்புறுத்தப்பட்டார். தன்னுடைய உடலின் ஒவ்வொரு அங்கங்களிலும் அவர் பாடுகளை அனுபவித்தார். பசியோடும், தாகங்கொண்டும், சோர்வடைந்தும் இருந்தார். சவுக்கால் அடிக்கப்பட்டார். இறுதியில் சிலுவையில் கொல்லப்பட்டார்.
2. தன்னுடைய உணர்ச்சிகளிலும் அவர் பாடுபட்டார். அவருடைய எதிரிகள் கொஞ்சமும் பரிதாபங்காட்டவில்லை; அவரைக் கேலிசெய்தார்கள்.
3. தன்னுடைய ஆத்துமாவிலும் அவர் பாடுபட்டார். அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது, “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” (மத்தேயு 27:46) என்று கதறினார்.
4. பலதரப்பட்ட மனிதர்களால் அவர் துன்புறுத்தப்பட்டார். அவர் நன்மை செய்துவந்தார். ஆனால், யூதமதத் தலைவர்கள் அவரைக் கொல்லுவதற்குத் திட்டமிட்டனர். தன்னுடைய சொந்த ஜனங்களுக்கு அவர் போதனைகளை அளித்தார். அவர்களோ அவருக்குப் புறமுதுகு காட்டினார்கள். அவருடைய சொந்த குடும்பத்தினர்களும் அவரை விசுவாசிக்கவில்லை. அவருடைய சீஷர்களில் ஒருவர் அவரைக் காட்டிக்கொடுத்தார். மற்றொருவர் அவரை மறுதலித்தார். பிதாவின் சித்தத்தையே அவர் தொடர்ந்து செய்து வந்தார், ஆனால், பிசாசுக்கு ஊழியம் செய்கிறவர் என்று அவர் குற்றஞ்சாட்டப்பட்டார் (மத்தேயு 12:24).
5. எல்லாவிதமான அவமானங்களுக்குமுள்ளாகி அவர் பாடுகளை அனுபவித்தார். அவர் கடவுளுக்குச் சமமானவர், இருப்பினும் அவர் தன்னைத்தானே வெறுமையாக்கி, ஒரு வேலைக்காரனாக வாழ்ந்து வந்தார் (பிலிப்பியர் 2:6-7). பெண்களைப் படைத்த அவர், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தார் (கலாத்தியர் 4:4). பாவமற்ற அவர் நமக்காகப் பாவமானார் (2 கொரிந்தியர் 5:21), நமக்காகச் சாபமானார் (கலாத்தியர் 3:13). இன்னும் பலவிதங்களில் அவர் உபத்திரவங்களுக்குள்ளானார், அடுத்தக் குறிப்புக்குப் போகவேண்டியிருப்பதால், இதை இத்தோடு முடித்துக்கொள்ளுகிறேன்.
இ. கிறிஸ்துவினுடைய சகல பாடுகளின் கோரம், பாவத்தின் பயங்கரத்தை நமக்குக் காட்டுகிறது. கடவுள், தன்னுடைய பரிசுத்த குமாரனுடைய மரணத்தின் மூலமாக அல்லாமல் வேறு எந்த வழியையும் பாவத்திற்கு எதிரான அவருடைய பரிசுத்த நீதியை நிலைநாட்ட ஏற்றுக்கொள்ளவில்லை. கடவுள் பாவத்தை எந்தளவுக்கு வெறுக்கிறார் என்பதை இது நமக்கு உறுதியாகக் காட்டுகிறது.
3. தேவதூதர்கள் பாவத்திற்கு எதிரான சாட்சிகளாக இருக்கிறார்கள்
அ. நல்ல தேவதூதர்கள் – பரலோகத்தில், கடவுளுடைய பிரசன்னத்தில் நிற்கிற தேவதூதர்கள் பாவத்தை வெறுக்கிறார்கள் என்பதை வேதம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது (யூதா 9). கேடான மனிதர்கள், தண்ணீர் குடிப்பதுபோல் பாவத்தை மிகவும் சாதாரணமாகச் செய்துவருகிறார்கள். ஆனால் தேவதூதர்களுக்கு அது விஷத்தைப்போல் இருக்கிறது.
1. தேவதூதர்கள் பரிசுத்த தேவனுக்கு ஊழியஞ் செய்வதனால், அவர்கள் பாவம் செய்யமாட்டார்கள். இருந்தும், அவர்கள் பாவத்தை எதிர்க்கும் செயலில் முனைப்புடன் ஈடுபடுகிறவர்களாக இருக்கிறார்கள்.
2. இந்த தேவதூதர்கள்தான், நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்தார்கள் (கலாத்தியர் 3:19 – மோசே நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தபோதும் தேவதூதர்கள் அதற்குப் பின்னால் இருந்திருக்கிறார்கள் என்று பவுல் விளக்குகிறார்). அந்த நியாயப்பிரமாணத்திலுள்ள கட்டளைகள், அவற்றிக்குக் கீழ்ப்படிவதன் மூலமாகப் பாவத்தைத் தவிர்ப்பதற்காகவே கொடுக்கப்பட்டன.
3. இந்தப் பரிசுத்தமான தேவதூதர்கள், பிசாசை எதிர்த்துப் போரிட வேண்டியவர்களாக இருந்தாலும் பாவம் செய்யமாட்டார்கள். யூதா 9வது வசனம் சொல்லுகிறதைக் கவனியுங்கள், பிரதான தூதனாகிய மிகாவேல், பிசாசோடு எதிர்த்துத் தர்க்கம் செய்தபோது, அவனைத் தூஷணமாய் பேசவில்லை. ஏனென்றால், தூஷணமாகப் பேசுவது பாவகரமான செயல் என்பதனால்தான் அப்படிச் செய்யவில்லை. தீமைக்குத் தீமை செய்வது எளிது. ஆனால் தேவதூதர்கள் அப்படிச் செய்வதற்கு ஒருபோதும் துணிகரங் கொள்ளுகிறதில்லை.
4. அப்போஸ்தலனாகிய யோவான் ஒரு முறை தேவதூதனின் காலில் விழுந்து வணக்கஞ்செய்ய முற்பட்டார். உடனே அந்த தேவதூதன் என்ன சொன்னார், “இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள்” (வெளிப்படுத்தின விசேஷம் 19:10) என்று சொன்னார்.
5. தேவனுடைய மக்கள் பாவகரமான செயலில் ஈடுபடுகிறபோது, தேவதூதர்கள் அவர்களைக் கண்டித்திருக்கிறார்கள். ஆபிரகாமுடைய மனைவியின் செயலைக் கண்டித்திருக்கிறார்கள் (ஆதியாகமம் 18:12-15). உனக்கு ஒரு மகன் பிறப்பான் என்று சகரியாவிடம் தேவதூதன் சொல்லியதை, அவன் நம்பாமற் போனதினால், அவன் ஊமையாக இருக்கவேண்டிவந்தது (லூக்கா 1:13-20).
6. பாவியான ஒருவன் மனந்திரும்புகிறபோது, தேவதூதர்கள் அதைச் சந்தோஷத்துடன் பாடிக் கொண்டாடுகிறார்கள் (லூக்கா 15:7-10). கேடான மனிதன் பாவத்தில் திளைத்திருக்கிறபோது, அது தேவதூதர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த மனிதன் தன்னுடைய பாவ வழிகளைவிட்டு மனந்திரும்புகிறபோது, அது அவர்களுக்குச் சந்தோஷத்தைத் தருகிறது.
7. கேடான தூதர்களையும், கேடான மனிதர்களையும் தேவதூதர்கள் எதிர்க்கிறார்கள். தேவதூதர்கள் கிறிஸ்தவ விசுவாசிகளைக் காப்பாற்றுகிறார்கள் (சங்கீதம் 91:9-13), அவர்களுடைய தேவைகளில் அவர்களுக்கு உதவுகிறார்கள் (எபிரெயர் 1:14).
தேவதூதர்கள், கேடான மனிதர்கள் மீது கடவுளுடைய நியாயத்தீர்பை நிறைவேற்றுகிறார்கள். தேவதூதர்கள்தான், சோதோம் கொமோராவை அழித்தார்கள் (ஆதியாகமம் 19:12-13). உலகத்தின் முடிவிலும், அவர்களே சல்லடையில் சலிப்பதுபோல், மெய்யான விசுவாசிகளிடமிருந்து கேடானவர்களைப் பிரித்தெடுப்பார்கள் (மத்தேயு 13:49-50).
8. நல்ல தேவதூதர்கள் எப்படிப் பாவகரமான செயல்களுக்கு எதிரான சாட்சியங்களாக இருக்கிறார்கள் என்பதை விளக்குகிற இன்னும் பல உதாரணங்களை நான் உங்களுக்குத் தரக்கூடும். இருப்பினும், இவற்றோடு நான் நிறுத்திக்கொள்ளுகிறேன். ஆனால் ஒன்றை நினைவில் வைத்திருங்கள், ஆண்டவரை ஆராதிப்பதற்காக நாம் கூடுகிறபோது, தேவதூதர்களும் அங்கு இருக்கிறார்கள், அவர்கள் நம்முடைய நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் (1 கொரிந்தியர் 11:10). நம் செயல்களுக்கு அவர்களே சாட்சிகள். இறுதி நியாயத்தீர்ப்பில் நம்முடைய நடக்கையைப் பற்றி அவர்களே சாட்சிபகரக் கூடியவர்கள் (லூக்கா 12:8-9).
ஆ. கேடான தூதர்களும்கூட, அதாவது பிசாசும் அவனுடன் இருக்கிற ஆவிகளுங்கூட, பாவம் எவ்வளவு கேடானது என்பதைக் காட்டுகிறார்கள்.
1. கேடான தூதர்களும், கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நம்பி, பயந்து நடுங்குகின்றன (யாக்கோபு 2:19). ஏனென்றால், கடவுள் அவைகளின் தீமையான செயல்களுக்காக அவைகளைத் தண்டிப்பார் என்று அவை அறிந்திருக்கின்றன. “பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்தார்” (2 பேதுரு 2:4).
2. தங்கள் மீதுள்ள கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நீதியானது என்பது பிசாசுகளுக்குத் தெரியும் (மத்தேயு 8:29). பாவம் என்பது மெய்யாகவே பாவகரமானது என்பதையே இது காட்டுகிறது.
3. பிசாசுகள் மனிதர்களைப் பாவம் செய்யத்தூண்டுகின்றன. ஆகவே பாவம் கேடான பிசாசினிடத்திலிருந்து வருவதால், பிசாசுக்கு ஊழியம் செய்கிறவர்களாக, பிசாசின் செயலைக் கொண்டிருக்கிறவர்களும் கேடானவர்களே.
4. பிசாசு மனிதர்களை வஞ்சிக்க அவர்களுடைய நண்பனைப்போல் வேடமிட்டு வருகிறான். பாவகரமான காரியங்களைப் பலவர்ணக் கவர்ச்சியான விதங்களில் அவர்களுக்கு அவன் காட்டுகிறான். அவன் ஏவாளிடம், தான் கடவுளால் பரலோகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தூதர்களில் ஒருவன் என்று சொல்லியிருந்தால், ஏவாள் சோதனைக்குள்ளாகியிருந்திருக்க மாட்டாள் (ஆதியாகமம் 3:4-5). ஆனால் அவனோ, தன்னை தேவதூதன்போல் காட்டி, ஏவாளைக் கவர்ந்திழுக்கிற விதத்திலான இரையைத் தூண்டிலில் மாட்டியிருந்தான்.
5. கடவுள் பாடுகளை நமக்கு அனுமதித்து, அதன் மூலமாக நாம் அவருடைய மக்களாக வாழுவதற்கான படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளும்படிச் செய்கிறார். ஆனால் பிசாசோ, நம்முடைய பாடுகளைப் பயன்படுத்தி நம்மை கடவுளுக்கு எதிராக செயல்படவைக்க முயற்சிக்கிறான். சாத்தான, யோபுவைப் பாடுகளுக்கு உட்படுத்தியது, அவனுக்கு நன்மை செய்வதற்காக அல்ல, அதைப் பயன்படுத்தி எப்படியாவது யோபுவை, கடவுளை சபிக்கச் செய்யவேண்டும் என்பதே அவனுடைய நோக்கமாயிருந்தது (யோபு 2:4-5).
6. நாம் பாவம் செய்து, அதன்பிறகு, அதை உணருகிறபோது, பிசாசு, இனி நமக்கு வேறு வழியே இல்லை, இத்துடன் நம்முடைய கதை முடிந்தது என்று சொல்லி நம்முடைய துன்பத்தை அதிகரிக்க முற்படுவான். பாவம் செய்வதற்கு முன் பாவத்தை நமக்குக் கவர்ச்சிகரமாகக் காட்டுவான். ஆனால் பாவம் செய்தபிறகு, அதையே காரணமாகக்காட்டி நம்மில் அவநம்பிக்கையை ஏற்படுத்துவான். தேவனுடைய கிருபையும், கிறிஸ்துவின் நீதியும் நம்மை இரட்சிப்பதற்குப் போதுமானதல்ல என்று நம்மை நம்பவைக்க முயற்சிப்பான். உண்மையிலேயே பாவம் மிகவும் பயங்கரமானது.
7. பிசாசு, விசுவாசிகளைக் குற்றப்படுத்துகிறவன் என்று வேதம் சொல்லுகிறது. “இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான்” (வெளிப்படுத்தின விசேஷம் 12:10). கடவுள் யோபுவை ஆசீர்வதித்து வந்ததால்தான், யோபு கடவுளுக்கு விசுவாசமாக வாழ்ந்தார் என்று சாத்தான் குற்றஞ்சாட்டினான் (யோபு 1:9-11). விசுவாசிகளின் வீழ்ச்சியையும், முட்டாள்தனங்களையும் அவன் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வைத்திருக்கிறான். இதன் மூலமாகவும், பாவம் கடவுளுக்கு எதிரானது என்று அவனே தெரிவிக்கிறான்.
4. பாவம் தீங்கானது என்பதற்கு விசுவாசிகளும் சான்றாக இருக்கிறார்கள்.
அ. கிறிஸ்தவர்கள் மற்றவர்களுடைய பாவங்களுக்கு எதிரான சாட்சிகளாக இருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் பாவத்தைத் தடுக்கிறார்கள். இதில் அவர்கள் தோல்வியுற்றாலும், தொடர்ந்து மனிதர்களுடைய பாவத்தன்மையை உணர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
1. பாவத்தின் தாக்கத்தை மற்றவர்களிடம் காண்கிறபோது, விசுவாசிகள், பாவத்தின் பாதகங்களைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறார்கள். தாவீது தன்னுடைய மகனாகிய சாலொமோனிடம், “நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன்; நீ திடன் கொண்டு புருஷனாயிரு” என்று சொல்லி, கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறவைகளின்படி நடக்க வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார். அதுபோலவே, பேதுருவும், விசுவாசிகளைப் பாவங்களைவிட்டு விலகியிருக்கும்படி வலியுறுத்தியிருக்கிறார் (1 பேதுரு 2:11).
2. விசுவாசிகள், தாங்கள் சொல்லும் ஆலோசனைகளை மற்றவர்கள் நிராகரிக்கிறார்கள் என்பதை அறிகிறபோது, அவர்களைக் கடிந்துகொள்ளுகிறார்கள். கடவுளுடைய நியாயப்பிரமாணத்தைப் பற்றி அக்கறைகாட்டாத யூதமதத் தலைவர்களை, பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் அவ்வப்போது கடிந்து பேசியிருக்கிறார்கள். ஏரோது ராஜாவின் முறையற்ற திருமணத்தை யோவான்ஸ்நானன் கண்டித்தார் (லூக்கா 3:19). விசுவாசிகளுடனான ஐக்கியத்தில் ஒழுங்காக நடக்காத அப்போஸ்தலனாகிய பேதுருவை அப்போஸ்தலனாகிய பவுல் கண்டித்தார் (கலாத்தியர் 2:11).
3. ஞானமுள்ளவர்கள் மற்றவர்களுடைய பாவகரமான செயல்களைக் கண்டு வருத்தப்படுவதோடு, அவர்களிடத்திலிருந்து விலகியே இருப்பார்கள். இதன் மூலம், அவர்கள், பாவகரமான வாழ்க்கை கேடானது என்பதைக் காட்டுகிறார்கள். ஞானமுள்ள விசுவாசிகள், பாவம் செய்கிறவர்களுக்காக கடவுளிடத்தில் ஜெபிப்பார்கள். பாவகரமான செயல்களைச் செய்கிறவர்களுடைய பாவங்களை மன்னிக்கும்படி அவர்கள் கர்த்தரிடம் மன்றாடுவார்கள். சோதோம் கொமோராவின் மீது இரக்கம் காட்டும்படி ஆபிரகாம் கர்த்தரிடத்தில் மன்றாடினார் (ஆதியாகமம் 18:23-32). இஸ்ரவேல் மக்கள் பாவம் செய்தபோது, அவர்களுக்காக மோசே ஜெபித்தார் (யாத்திராகமம் 32:30-32). தன் மீது கல்லெறிந்தவர்களுக்காக ஸ்தேவான் ஜெபித்தார் (அப்போஸ்தலர் 7:60).
ஆ. கிறிஸ்தவர்கள் தங்களுடைய பாவத்திற்காக வருந்தி, அவற்றை எதிர்ப்பார்கள். கடவுளால் ஏற்றுக்கொள்ளத்தக்கவிதத்தில் வாழுவதற்காக, பாவத்தை முற்றாக நிராகரிக்கக் கூடுமானால், அதையும் விசுவாசிகள் செய்வார்கள். விசுவாசிகள், மற்றவர்கள் பாவகரமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று சொல்லுவதோடு நிற்காமல், அவர்களும் பாவத்திலிருந்து சீர்திருந்த விரும்புவார்கள்.
1. விசுவாசிகள், பாவம் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தாலும், பாவம் செய்யமாட்டார்கள். பழைய ஏற்பாட்டில், யோசேப்பு, போத்திபாருடைய மனைவியின் மூலமாக சோதனைக்குள்ளானபோது, அவர் சொல்லியதைக் கவனியுங்கள், “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்” (ஆதியாகமம் 39:7-9). சரியாக சிந்திக்கிற மனிதன், பாவம் செய்வதைக் காட்டிலும், பாடுகளை அனுபவிப்பதே மேலானது என்று கருதுவான். தானியேலின் மூன்று நண்பர்களை நினைத்துப் பாருங்கள். மெய்யான தேவனை வழிபடக்கூடாது, அப்படிச் செய்தால், நெருப்பில் வீசப்படுவீர்கள் என்று இராஜாவே கட்டளையிட்டிருந்தபோதிலும், அதை எதிர்த்து நின்றார்கள்.
2. மெய்க் கிறிஸ்தவர்கள், தங்களுடைய பாவகரமான செயல்களுக்கு, கிறிஸ்துவின் மூலமாக கடவுளுடைய கிருபையுள்ள மன்னிப்பு இருப்பதை அறிந்திருந்தபோதிலும், பாவம் செய்யமாட்டார்கள் (ரோமர் 6:1-2). அந்த மன்னிப்பு, பாவத்திற்கான எல்லா வழிகளையும் தவிர்க்க வேண்டிய கடமையையே வலியுறுத்துகிறது. நன்மை வரும்படி அவர்கள் தீமை செய்யமாட்டார்கள். மாறாக, பாவத்தைத் தவிர்ப்பதற்கான எல்லா வழிகளையும் அவர்கள் பயன்படுத்திக்கொள்ளுவார்கள். பாவத்தில் விழத்தள்ளும் சோதனைக்கு எதிராகப் போராடுவார்கள். தீமையிலிருந்து பாதுகாக்கும்படி ஒவ்வொருநாளும் ஜெபிப்பார்கள். இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படுகிறபோது, கிறிஸ்தவர்களான அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்துகொள்ளுவதற்கு, வேதபோதனைகளைக் கற்றுக்கொள்ளுவார்கள். பாவத்திற்கு அவர்களை வழிநடத்தக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்தையும் அவர்கள் தவிர்ப்பார்கள்.
இதுவரை நான் சுட்டிக்காட்டிய உதாரணங்கள், நல்ல மனிதர்கள் பாவத்திற்கு எதிரான தங்களுடைய செயல்களின் மூலமாக பாவம் கேடானது என்பதைத் தெரிவிக்கிற ஆதாரங்களாக இருக்கிறது. சிலர் சொல்லுவார்கள், தேவபக்தியுள்ள மனிதர்கள், பாவத்தைத் தவிர்ப்பதற்கான காரணம், அது அவர்களைத் துன்பப்படுத்துவதாலோ அல்லது அப்படிச்செய்வது அவர்களுக்கு சரியாகப்படவில்லை என்பதனால்தானே தவிர, கடவுளுடைய மகிமையைப் பற்றிய அக்கறையினால் அப்படிச் செய்வதில்லை என்று வாதிடுவார்கள். அப்படியான தவறான குற்றச்சாட்டுகளுக்கு, பின்வரும் விதங்களில் நான் பதிலளிப்பேன்.
முதலாவது,
1. கிறிஸ்தவர்கள் பாவம் செய்வதைத் தவிர்ப்பதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், பாவம் கடவுளுடைய சித்தத்திற்கு எதிரானது என்பதை அவர்கள் அறிந்திருப்பதுதான். தாவீது, பத்சேபாளுடன் பாவம் செய்த பிறகு, தேவனிடத்தில் அவர் செய்த அறிக்கையைக் கவனியுங்கள், “தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்தேன்” (சங்கீதம் 51:4) என்றார். உண்மையில், தாவீது, பத்சேபாளுக்கு எதிராகப் பாவம் செய்தார், அவளுடைய கணவனாகிய உரியாவுக்கு எதிராகப் பாவம் செய்தார், தனக்கெதிராகவும் பாவம் செய்தார். ஆனால், தாவீதின் பெரிய கவலையே, அவர் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறார் என்பதுதான். இதன் காரணமாகவே கிறிஸ்தவர்கள், தங்களிலோ அல்லது மற்றவர்களிலோ பாவகரமான செயல்கள் காணப்படுகிறபோது, அவற்றைக் கண்டிக்கிறார்கள். பாவம் எப்போதும் கடவுளுக்கு எதிரானது.
2. கிறிஸ்தவர்கள் எல்லா வகையான பாவங்களையும் வெறுக்கிறார்கள். எந்தவொரு பாவமும், அது பெரிதானாலும் சிறிதானாலும் என்மேல் பெலன்கொள்ளாதபடி செய்யும் என்பதுதான் ஒரு கிறிஸ்தவனுடைய ஜெபமாக இருக்கும். வெளிப்படையாகத் தெரிகிற பாவத்தை மட்டும் அவர்கள் வெறுப்பதில்லை, இரகசியமானதும், மறைந்திருக்கிறதுமான பாவங்களையும் வெறுக்கிறார்கள். மனித இருதயம் பலவிதமான உள்ளான இரகசிய எண்ணங்களைக் கொண்டிருக்கிறது. அவற்றின் மத்தியில் மறைந்திருக்கிற பாவத்தைக் கண்டறிவது என்பது இலேசானதல்ல (சங்கீதம் 19:12).
3. கிறிஸ்தவர்கள், பாவகரமான சிந்தனைகளையும் தவிர்க்கவே விரும்புவார்கள். வெளிப்பிரகாரமாக பாவம் செய்யக்கூடாது என்பதுமட்டும் அவர்களுடைய ஜெபமாக இருக்காது, பாவகரமான சிந்தனைகளும் தங்களில் எழக்கூடாது என்றே ஜெபிப்பார்கள் (யாக்கோபு 1:14-15).
4. இறுதியாக, கிறிஸ்தவர்கள் பாவம் செய்யாதபடி தவிர்ப்பதற்காக மட்டும் போராடாமல், நன்மை செய்வதையும் எப்போதும் நாடுவார்கள். தவறானதைத் தவிர்ப்பது நல்லது; அதைவிட மேலானது, நன்மை செய்வது. மெய் விசுவாசி, தீமை செய்வதைத் தவிர்ப்பதோடு மட்டுமல்லாமல், நன்மை செய்வதைத் தவிர்க்காமலும் இருக்கப்பார்ப்பான் (சங்கீதம் 19:13).
இரண்டாவது,
சிலர் கேட்பார்கள், “தேவபக்தியுள்ள மனிதர்கள் பாவத்தை இவ்வளவு தூரம் வெறுக்கிறவர்களாக இருந்தால், பிறகு அவர்களே ஏன் பாவத்தையும் செய்கிறார்கள்?” என்று. எல்லாரும் பாவிகள் என்பதும், எல்லாரும் பாவம் செய்கிறார்கள் என்பதும் உண்மைதான். இதை மறுத்தால், நாம் பாவமுள்ளவர்கள் என்று சொல்லும் கடவுளைப் பொய் சொல்லுகிறவராகக் குற்றப்படுத்துகிறோம் (1 யோவான் 1:8-10). இதற்கு நான் பதில் தரவேண்டும்.
1. ஒரு விசுவாசி, திட்டமிட்டுப் பாவம் செய்துவிடலாம் என்பது உண்மைதான், இதையே உரியாவின் விஷயத்தில் தாவீது செய்தான். இதைத் தவிர அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டுவிடாமல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான் என்கிறது வேதம் (1 இராஜாக்கள் 15:5). ஆனால் பெரும்பாலும் தேவ பக்தியுள்ளவர்கள் திட்டமிட்டுப் பாவம் செய்வதை வாழ்க்கையில் வழமையாகக் கொண்டிருக்கமாட்டார்கள். திட்டமிட்டுப் பாவம் செய்வதற்கு எதிரான இருதயத்தை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். (ரோமர் 7:23). பொதுவாக தேவ பக்தியுள்ளவர்களும் பாவம் செய்துவிடலாம் என்பது உண்மையானாலும், அவர்கள் சோதனைகளினால் கவர்ந்திழுக்கப்பட்டு அவற்றைச் செய்துவிடுகிறார்களே தவிர திட்டமிட்டுச் செய்வதில்லை. தேவபக்தியுள்ள மனிதர்கள் பாவத்தை வெறுக்கிறவர்களாக இருப்பார்கள் என்றுதான் நான் சொல்லுவேன்.
2. சிலவேளைகளில் கடவுள், விசுவாசிகளைப் பாவம் செய்யும்படி விட்டுவிடுகிறார். அதற்குக் காரணம், அதன் மூலம் அவர்கள் தங்களுடைய இருதயம் எந்தளவுக்கு நிலையற்றதும் கேடானதுமாக இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்துணர வேண்டும் என்பதற்காக விட்டுவிடுகிறார். சீஷனாகிய பேதுரு, இயேசுவை விட்டு ஓடிப்போவதையும், இயேசுவைத் தனக்குத் தெரியாது என்று மறுதலிப்பதையும் நம்பவே முடியவில்லை. ஆனால் அவரை அவர் போக்கிற்கு கடவுள் விட்டுவிட்டபோது, அவர் அப்படித்தான் நடந்துகொண்டார்.
தேவபக்தியுள்ளவர்கள் பாவம் செய்துவிடலாம் என்பது உண்மையானாலும், அவர்கள் பாவத்தை வெறுக்கிறவர்களாக இருப்பார்கள். கீழ்வரும் உண்மைகள் அதை விளக்குபவையாக இருக்கின்றன:
அ. தேவபக்தியுள்ள ஒரு மனிதன், தான் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்திருப்பதை உணருகிறபோது, அவனுடைய மனச்சாட்சி பெரியளவில் வேதனைக்குள்ளாகிறது (சங்கீதம் 73:21-22).
ஆ. ஒரு கிறிஸ்தவன், தன்னுடைய பாவம் மன்னிக்கப்பட்டு, தான் சுத்தமானதை மனத்தளவில் உணருகிறவரை, தன்னுடைய குற்றஉணர்வினால், அமைதியின்றி, ஒடுங்கிப் போகிறவனாக இருப்பான். ஒரு முறை தாவீது ஜெபித்திருப்பதைக் கவனியுங்கள், “தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.” (சங்கீதம் 51:1-2).
இ. கடவுள், ஒரு விசுவாசியினுடைய பாவச் செயல்களைக் கண்டித்து, சீர்படுத்துகிறபோது, அவர் நீதியும் உண்மையுமாய் செயல்படுகிறார் என்பதை ஒரு விசுவாசி ஒப்புக்கொள்ளுவான். தன்னுடைய பாவத்திற்காக கடவுள் தன்னைச் சிட்சிப்பது சரியானதே என்று எந்தவொரு விசுவாசியும் சொல்லுவான். அத்தோடு, தன்னுடைய பாவச் செயல்களைத் தானே கண்டிக்கவும் செய்வான்.
ஈ. பேதுரு, அவரை எனக்குத் தெரியாது என்று இயேசுவை மறுதலித்துவிட்டேன் என்பதை உணர்ந்தபோது மனங்கசந்து அழுதார். ஆனால் அதன் பிறகு, அவர் கிறிஸ்துவுக்காக மிகுந்த ஊக்கத்துடன் பலவிதங்களில் உழைத்தார். பேதுருவினுடைய அத்தகைய மனந்திரும்புதல், அவர் பாவத்தை எந்தளவுக்கு வெறுத்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.
உ. ஒரு விசுவாசியினுடைய மிகப் பெரிய விருப்பம் என்னவென்றால், பாவத்தை முற்றாக ஒழித்துவிட வேண்டும் என்பதுதான். ஆனால், மரணத்திற்குப் பிறகு, கிறிஸ்துவோடு இருக்கப்போகிறபோதுதான் அது சாத்தியம் என்பதை அவன் அறிந்திருக்கிறான். மரணத்திற்குப் பிறகு, தான் பாவம் செய்யப்போவதில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவன் மரணத்தை வரவேற்பான். அப்போஸ்தலனாகிய பவுல் விரும்பியதைப் போல், எந்தவொரு விசுவாசியும், கிறிஸ்துவோடு வாழப்போகிற அத்தகைய பாவமற்ற வாழ்க்கையையே பெரிதும் விரும்புவான் (2 கொரிந்தியர் 5:4).
Thank you pastor,
“பாவத்தின் பாவம்” நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பாவத்தைக் குறித்து மேலும் ஆழமான அறிவை அளித்து, அதிகமாக யோசிக்க வைக்கிறது.
பாவம் மெய்யாகவே மிக மிக கொடிது; மெய்யான இரட்சிப்பை அடைந்து, நீதிமானாக்கப்பட்டு, வேதத்திலிருந்து இத்தனை உறுதியான சாட்சிகளை பற்றி தெளிவாக அறிந்து, பாவம் நம் சரீரத்திலும், அறிவிலும், ஆத்துமாவிலும் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளை மெய்யாகவே அனுபவபூர்வமாக உணர்ந்து, நித்திய தண்டனையும் நரகத்தையும் குறித்த தீர்க்கமான எச்சரிப்பை அறிந்து, பரிசுத்தவனாகுதலில் மிகவும் வைராக்கியமாய் பாவத்தை அழித்து வாழ விரும்பும் விசுவாச இருதயத்தையும், பல வேளைகளில் வஞ்சித்து பாவத்தில் விழச்செய்து கர்த்தரை வேதனைப்படுத்தும்படிச் செய்து விடுகிறதே!!
மெய்யாகவே பாவம் மிகவும் கொடியது.
LikeLike
ரால்ப் வென்னிங்கினுடையதைப் போன்ற நூல்கள் நவீன உலகில் அரிது. பாவத்தைப் பற்றிப் பேசுவது ஆத்துமாக்களை சபைக்குக் கொண்டுவர உதவாது என்று போலி சுவிசேஷகர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். இதற்கு மாறாக பியூரிட்டன் பெரியவர்கள் ஆத்துமாக்களின் நலனை நாடி பாவத்தின் கோரத்தைப்பற்றி விளக்கி உதவியிருக்கிறார்கள். இன்றைய சபைகளில் பொதுவாகக் கேட்க முடியாத செய்திகளைப் பியூரிட்டன் பிரசங்கிகளின் எழுத்தின் மூலம்தான் பெற்றுக்கொள்ள முடிகிறது.
LikeLike