வணக்கம் வாசகர்களே! இந்த இதழோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இதழ் தொடர்ந்து உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்து வருகிறது என்று நம்புகிறேன். கோவிட்-19 தொடர்ந்து தன் கைவரிசையை உலகெங்கும் காட்டிவரும் இந்நாட்களில் கர்த்தரின் கிருபையால் நம் பணிகளை நாம் தொடரமுடிகிறது. தொடர்ந்தும் கர்த்தர் நம்மைப் பாதுகாப்பார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
இந்த இதழில் முதல் ஆக்கமாக ரால்ப் வென்னிங்கின் பாவத்தைப் பற்றிய ஆக்கம் வந்திருக்கிறது. அதையடுத்து சிந்தனையின் அவசியத்தை உணர்த்தும் ஜோன் ஸ்டொட்டின் நூலுக்கான அறிமுகத்தைத் தந்திருக்கிறேன்.
நூல் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கிறது. ஆங்கிலமறிந்தவர்கள் வாசிக்கவேண்டிய நூல். சிந்தனைக்கு இடங்கொடாது கிறிஸ்தவம் என்ற பெயரில் போலி மதமொன்று நம்மினத்தில் கிறிஸ்துவின் பெயரில் இருந்து வருகிறது. அதை 1970களில் ஸ்டொட் இனங்கண்டு நம்மை எச்சரித்து இந்நூலை எழுதியிருக்கிறார். வேதத்தைப் பயன்படுத்தி சிந்தித்து வேதசிந்தனைகள் மட்டுமே நம்மில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உணர்ச்சிகள் நம்மை ஆளக்கூடாது; உணர்ச்சிகளை வேதம் கட்டுப்படுத்தவேண்டும்.
இவற்றை அடுத்து கோவிட் கால நிகழ்வுகள் பற்றிய ஓர் ஆக்கமும், வாசிப்பு பற்றிய ஓர் ஆக்கமும் இவ்விதழில் வந்திருக்கிறது. நாம் வெளியிடும் நூல்களை வாசித்து வாசகர்கள் எழுதியனுப்பியிருக்கும் கருத்துரைகளையும் இதில் தந்திருக்கிறேன்.
மொழியாக்கம் செய்கிறவர்களுக்கு இருக்கவேண்டிய தகுதிகள் பற்றி ஏற்கனவே ஓரிதழில் எழுதியிருக்கிறேன். இந்த இதழில் மொழியாக்கத்தில் ஈடுபட்டு வரும் ஒரு முன்னாள் பேராசிரியையின் மொழியாக்க அனுபவங்களையும், அவர் தரும் ஆலோசனைகளையும் விளக்கமாகத் தந்திருக்கிறேன். இது நிச்சயம் வாசிக்கவேண்டியதொரு ஆக்கம். மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் மனப்பான்மை நமக்கு எப்போதுமே இருக்கவேண்டும்.
இதுவரை வந்துள்ள இதழ்களைப்போலவே இதுவும் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்து கர்த்தரின் கிருபையிலும், ஞானத்திலும் நீங்கள் தொடர்ந்து வளரத்துணைபுரிய வேண்டும் என்பதே எங்கள் ஜெபம். – ஆர்