வணக்கம் வாசகர்களே! மறுபடியும் இந்த இதழோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். திருமறைத்தீபம் தொடர்ந்து உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்து வருகிறது என்று நம்புகிறேன். கோவிட்-19 தொடர்ந்து உலகத்தை பயமுறுத்தி வரும் இந்நாட்களில் கர்த்தரின் கிருபையால் நம் பணிகளை நாம் ஜெபத்தோடு தொடரமுடிகிறது. கர்த்தர் நம்மைப் பாதுகாப்பார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
இந்த இதழின் முதலிரு ஆக்கங்களும் பியூரிட்டன் பெரியவரான ஜோன் பனியனின் மோட்சப் பயணம் என்ற காலத்தால் வெல்ல முடியாத இலக்கியப் படைப்பின் தமிழ் மொழியாக்க வரலாறு பற்றியது. அத்தகைய வரலாற்றுக் குறிப்புகளை விளக்கும் படைப்புகள் எதுவும் நம்மத்தியில் இல்லாதது ஒரு பெருங்குறை. அந்தக் குறையை நிறைவுசெய்யும் முயற்சியாக இந்த இரு ஆக்கங்களையும் வரைந்துள்ளேன்; இது தொடர்ந்து நீளுகின்ற படைப்பாக இருக்கப்போகின்றது. சீர்திருத்த பியூரிட்டன் காலத்தையும், அக்காலத்தில் மலர்ந்த இறைபோதனைகளையும் பற்றிப் பேசுகின்றவர்கள்கூட மோட்சப் பயணத்தின் அருமை தெரியாமல் இருந்து வருகிறார்கள். தமிழினத்து திருச்சபைகள் இதை வாசித்து அனுபவித்து ஆனந்தப்பட வழியில்லாத நிலையில் இருந்துவருகின்றன. அந்தக் குறை நீங்க ஆண்டவர் மட்டுமே துணை செய்யமுடியும்.
இதை அடுத்து பழைய ஏற்பாட்டு 2 இராஜாக்கள் நூலில் இருந்து ஒரு பிரசங்கத்தை எழுத்தில் தந்திருக்கிறேன். இது தமிழில் பிரசங்கிக்கப்பட்டு திருமறைத்தீபம் யூடியூப் செனலில் பதிவாகியிருக்கின்றது. இதுவும் உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இவ்விதழில் இறுதி ஆக்கமாக ரால்ப் வென்னிங்கின் பாவத்தின் பாவம் என்ற நூலின் ஒரு பகுதி மொழியாக்கம் செய்யப்பட்டுப் பதிவாகியிருக்கின்றது. பாவத்தின் தன்மை பற்றிய அந்த அருமைப் பியூரிட்டனின் விளக்கங்களை இன்று நம்மினத்துப் பிரசங்கிகளிடமும், திருச்சபையிலும் எதிர்பார்க்க முடியாத நிலையில் இருக்கிறோம். பாவத்தை வெறும் பலவீனமாக மட்டும் அநேகர் கருதி வருகின்ற இந்த நவீன காலத்தில் ரால்ப் வென்னிங்கின் வேத விளக்கங்கள் நமக்குப் பெரும் ஆறுதலை அளித்து, பாவத்தைக் குறித்த எச்சரிக்கையையும் ஆணித்தரமாகத் தந்து வருகின்றது. இவ்விதழ் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்க கர்த்தர் உதவட்டும். – ஆர்