வணக்கம் வாசகர்களே! மறுபடியும் ஒரு புதிய இதழை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இதழாசிரியரான என்னோடு, இதழ் பணியில் இணைந்து உழைப்பவர்களுக்கு என் நன்றிகள். கர்த்தரின் கிருபையால் இந்த இதழையும் தரமான ஆக்கங்களுடன் தயாரித்து வழங்க முடிந்திருக்கிறது.
இதில் இரண்டு ஆக்கங்கள் 2 இராஜாக்கள் நூலின் 14ம், 15 அதிகாரத்தின் பகுதிகளுக்கான வியாக்கியானப் பிரசங்கங்களாக வந்திருக்கின்றன. வேதத்தின் ஒரு பகுதியான பழைய ஏற்பாட்டு நூலைப் பக்குவத்தோடு அணுக வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. புதிய ஏற்பாடுபோல் வௌ¤ப்படையாக சத்தியங்களை அது விளக்காதபோதும், புதிய ஏற்பாட்டைப் பயன்படுத்தி அதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.
கர்த்தருடைய நாள், கிறிஸ்தவ சபத்து நாளாகப் புதிய உடன்படிக்கைக் காலத்தில் தொடர்கிறது என்ற ஆதிசபை உட்பட சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும் நம்பி விசுவாசித்த போதனைக்கு 19ம் நூற்றாண்டுக்குப் பிறகு ஆபத்து ஏற்பட்டு, இன்று அதை தைரியத்தோடு நிராகரிக்கும் நிலைக்கு சுவிசேஷ கிறிஸ்தவம் வந்திருக்கிறது. அது பற்றிய அவசியமான ஓர் ஆக்கத்தை இதில் தந்திருக்கிறேன். சத்தியத்தைப் பலர் மறுத்தாலும், மறைத்தாலும், வெறுத்தாலும், வேரோடு சாய்க்க முயன்றாலும் சத்தியம் தொடர்ந்து சத்தியமாகத்தான் இருக்கும்.
மனந்திரும்புதலின் ஒரு பகுதியான தவறை உணர்ந்து, மன்னிப்புக்கேட்டு, அதைச் சரிசெய்து அவசியமானபோது அதற்கு ஈடுசெய்யவேண்டிய அவசியத்தைப் பற்றிய ஓர் ஆக்கம் இதில் வந்திருக்கிறது. அது பற்றிய குழப்பமான சிந்தனைகளைச் சரிசெய்துகொள்ள இது துணைபுரியும். சுவிசேஷ கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்த விஷயத்தில் கிரியைவாதம் தலைதூக்கியிருப்பதை நான் அவதானித்திருக்கிறேன்.
நம் சம்பாஷனை பற்றி நாம் அக்கறை காட்டுவதில்லை; அது பொருளுள்ளதாக, விஷயஞானமுள்ளதாக இருக்க நாம் முயற்சி செய்வதில்லை. அந்தத் தவறைச் சுட்டி, அதோடு பிரசங்கங்களில் காணப்படும் பிதற்றல்களையும் உணர்த்தி அவற்றைக் காரணகாரியங்களோடு அலசி, நிவர்த்திக்கான தீர்வுகளையும் சுட்டும் ஓர் ஆக்கமும் இதில் வந்திருக்கிறது.
இதுவரை வந்திருக்கும் இதழ்களைப்போல இந்த இதழும் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்க கர்த்தர் உதவட்டும். – ஆசிரியர்.