ஜெர்மானிய நாட்டிலிருந்து
தென் தமிழகம் வந்திறங்கி
தரங்கம்பாடியில் தங்கியிருந்து
நற்றமிழை நலமுறக் கற்று
நெல்லையெங்கும் நடைநடந்து
திகட்டாத சுவிசேஷத்தைத்
தீந்தமிழில் பிரசங்கித்துப்,
பிராமணன், நாடார், பள்ளர் என்ற
பண்பாட்டுச் சாதிப் பேதத்தை
வீர்கொண்டு விரட்டியடித்து,
இயேசுவே தேவன் என்று
சிரம் தாழ்த்தி மனந்திரும்பி,
முகங்குப்புற வணங்கிவாழ்ந்த
சிலைகளைச் சிதைத்தெறிந்து
மன்னன் இயேசுவை விசுவாசித்த
மாந்தருக்கு ஞானஸ்நானமளித்து,
நெல்லையெங்கும் நிறுவினார்
சபைகள் நூற்றுக்கணக்கில்
போதக இறையறிஞர் ரேனியஸ்.
எதிரிகளாம் எத்தர்கள்
கோபத்தோ டெள்ளி நகையாட
எரிநெருப்பில் வீடிழந்து
வீதியே கதியென்றிருந்த
நல்விசுவாசிகளுக்கு நலமோடு
கிறிஸ்தவ கிராமங்களை
நெல்லை மாவட்டமெங்கும்
நேசத்தோடமைத்து,
படிப்பதற்குப் பல நூறு
பள்ளிகளையும், கற்றுத்தரத்
தரமான நல்லாசிரியரையும்
அக்கறையோ டமர்த்திப் பணியில்,
இத்தனைக்கும் மேலாக இனி
என்ன இருக்கிறது செய்வதற்கென்ற
எண்ணத்திற் கிடங்கொடாமல்,
தமிழுக்குப் பலநூறு பக்கங்களில்
தீந்தமிழில் இலக்கண மிசைத்து,
வாசிக்கத் தடையற்ற நடையில்
எளிதாக, இனிதாக வேதத்தைத்
தரமாக மொழியாக்கம் செய்து,
இறையியல் போதனையின்றி
இருக்கமுடியாது திருச்சபையென்ற
ஆழ்ந்த நம்பிக்கை உந்தித்தள்ள
அறுநூறு பக்கங்களுக்கு மேலாக
அருமையாய் இறையியலை
ஆழமாய்த், தெளிவாய்,
அருவியோடும் நளினத்தோடும்
தமிழுலகே புகழும் தரத்தோடும்
வார்த்து வையம் வியக்க
கிறிஸ்தவ நற்பணியாற்றி,
நெல்லை அப்போஸ்தலன்
நிகரானவன் யார் இவருக்கு?
என்று பாரே சொல்லவைத்தார்
சீர்திருத்த அருட்பணி அறிஞர்
சார்ள்ஸ் தியோபீலஸ் ரேனியஸ்.
– சுபி