வார்த்தைக்கு வார்த்தை தெய்வீக வெளிப்படுத்தல்

இது என்ன, என்று கேட்கிறீர்களா? பொறுங்கள் விளக்கமளிக்கிறேன். நாம் நம்பிப் பயன்படுத்துகிற வேதாகமத்தைப்பற்றியதொரு அவசியமான உண்மையைத்தான் இப்போது விளக்கப்போகிறேன். வேதம் கர்த்தரின் வெளிப்படுத்தல் என்றும் அதன் மூலமே கர்த்தர் இன்று நம்மோடு பேசி வருகிறார் என்பதும் நாமறிந்த உண்மையே. அதிலும் பலருக்கு சந்தேகமிருந்து வருகிறது. இருந்தாலும் சீர்திருத்த கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் வேதம் கர்த்தரின் முடிவான சித்தத்தின் வெளிப்படுத்தல் என்பதில் உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த உண்மையில் மேலும் ஆழமான அம்சங்கள் அடங்கிக் காணப்படுகின்றன.

வேதம் மட்டுமே கர்த்தரின் சித்தம், அது நம்பிக்கைக்குரியது என்று சொல்லும்போது அதற்குள் அடங்கிக்காணப்படும் அம்சங்களை நாம் அறியாமலும், உணராமலும் இருக்கமுடியாது. முக்கியமாக இந்த 21ம் நூற்றாண்டில் வேதம் பற்றிய சத்தியங்களில் நமக்கு ஆழமான அறிவும், நம்பிக்கையும் இருக்கவேண்டியது அவசியம். என்றுமில்லாதவகையில் வேதத்திற்கு இந்தக் காலங்களில் ஆபத்து உண்டாகியிருக்கிறது. அந்த ஆபத்து சபைக்குள்ளும், சபைக்கு வெளியிலும் காணப்படுகிறது. எதிரிகள் வேதத்தை சூழந்து நின்று அதை அழிப்பதற்கு முயற்சி செய்துவருகிறார்கள். இதை நம் காலத்து சமுதாயம் போகிற பாதையில் இருந்து தெரிந்துகொள்ளுகிறோம்.

இன்றைய மேலை நாட்டு சமுதாயம் சோதோம் காலத்தை நோக்கி வீறுநடை போட்டுப் போய்க்கொண்டிருப்பதை உணராத ஒருவன் கிறிஸ்தவன் என்று தன்னை அழைத்துக்கொள்ளுவதில் எந்தப் பயனுமில்லை. அந்தளவுக்கு சமுதாய இயந்திரத்தைப் பயன்படுத்தி கர்த்தரின் படைப்பை மாற்றி அமைக்கும் முயற்சியில் தாராளவாத சமுதாயம் முழுமூச்சோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. சகல அதிகாரங்களையும் எதிர்த்து, தன்னிச்சையாகத் தான் சுதந்திரமாக சிந்திக்கவும் நடந்துகொள்ளவும் மனிதன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறான். ஆண், பெண் பேதங்களை அடியோடு நீக்கவும், ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மனம்போன போக்கில் மாறவும், நன்மை, தீமை என்ற வேறுபாட்டை இல்லாமலாக்கவும், ஒழுக்கம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை மாற்றவும், தனியொருவனுக்குத் தன்னுரிமை, சமுதாய சீர்திருத்தம் என்ற பெயரில் வேதத்தில் கைவைக்கவும் மனிதன் துணிந்து இயங்கி வருகிறான். இதன் தாக்கங்கள் கீழைத்தேய நாடுகளில் இன்று தீவிரமாக இல்லாதிருந்தபோதும், அத்தாக்கங்கள் இந்நாடுகளில் தலைதூக்கப்போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பது தெரிகிறது. நம்மினத்துக் கிறிஸ்தவம் இதையெல்லாம் உணர்ந்து செயல்படுவதாக எனக்குத் தெரியவில்லை. தீக்கோழி மண்ணில் தன் தலையைப் புதைத்துக்கொண்டு, எனக்கு ஆபத்து இல்லை என்று எண்ணி சந்தோஷப்பட்டுக்கொள்வதைப் போல திருச்சபை இன்று அமைதி காத்து வருகிறது. வேதத்தின் அதிகாரத்தில் நம்மினத்துக் கிறிஸ்தவம் தீவிர நம்பிக்கைவைத்து இயங்கி வருவதாக எனக்குத் தெரியவில்லை. வேத நம்பிக்கையைவிட வேத அறியாமையே தமிழினத்துக் கிறிஸ்தவத்தை ஆழமாக ஆண்டுவருவதாக நான் உணருகிறேன்.

வேதமொழிபெயர்ப்புகள்

வேதம் மட்டுமே நம்மை ஆளும் கர்த்தரின் அதிகாரமாக இருக்கிறது என்பது மார்டின் லூத்தர், ஜோன் கல்வின், ஜோன் நொக்ஸ் போன்ற சீர்திருத்தவாதிகளினதும், அதற்குப் பின்வந்த 17ம் நூற்றாண்டு பியூரிட்டன்களினதும் நம்பிக்கை. அதன் காரணமாக வேதம் மொழிபெயர்க்கப்பட்ட ஆரம்பக்காலத்தில் இருந்தே அதைத் துல்லியமாக மொழிபெயர்க்கும் முயற்சியில் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். எபிரெய, கிரேக்க மூல மொழிகளில் இருந்து கவனத்தோடு வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கிறிஸ்தவர்கள் நம்பிக்கையோடு பயன்படுத்தக்கூடிய மொழிபெயர்ப்புகளை வெளியிட்டு வந்திருக்கின்றனர். அதனால் ஆங்கிலத்தில் நாம் நம்பிப் பயன்படுத்தக்கூடிய நல்ல ஆங்கில மொழிபெயர்ப்புகள் காணப்படுகின்றன. அதே நிலை வேறு மொழிகளில் காணப்படுகிறதா? என்று கேட்கிறபோதே பிரச்சனை உருவாகிவிடுகிறது. அநேக உலக மொழிகளில் இன்று வேதம் மொழிபெயர்க்கப்பட்டிருந்தபோதும், நம்பக்கூடிய துல்லியமான மொழிபெயர்ப்புகளாக அவை இல்லை என்பதை நான் வேற்று மொழி பேசும் கிறிஸ்தவர்களிடம் இருந்து அறிந்துகொண்டிருக்கிறேன். இதேநிலைதான் நம் தமிழ் வேதாகமத்தைப் பொறுத்தளவிலும் என்பதை நான் பலமுறை இந்த இதழில் குறிப்பிட்டு வந்திருக்கிறேன்.

வேதமொழிபெயர்ப்புகளில் மேலைத்தேய மொழிபெயர்ப்பாளர்கள் தீவிர கவனத்தோடு ஈடுபட்டு வந்திருப்பதற்குக் காரணம் என்ன? அவர்கள் வேதத்தின் அதிகாரத்தில் நம்பிக்கை வைத்திருந்தது மட்டுமல்ல, அந்த வேதம் கர்த்தரால் அளிக்கப்பட்டிருந்த தெய்வீகத்தன்மை பற்றிய உண்மைகளிலும் நம்பிக்கை வைத்திருந்ததுதான். அதாவது, வேதத்தின் உயர்தன்மைக்கும், அதிகாரத்திற்கும் காரணம் கர்த்தர், அதனை நேரடியாக ஊதி வெளிப்படுத்தி (God-breathed), அதை எழுதியவர்கள் மூலம் அதில் எந்தக் குறைபாடும் ஏற்பட்டுவிடாதபடி பூரணமான வெளிப்படுத்தலாக அது இருக்கும்படி பரிசுத்த ஆவியானவரால் அவர்களை வழிநடத்தி எழுத்தில் வார்த்துத் தந்ததுதான். இதுவே வேதத்தைத் தெய்வீகமானதாகவும், கர்த்தரின் அதிகாரமுள்ள சித்தத்தின் வெளிப்படுத்தலாகவும் சீர்திருத்த கிறிஸ்தவர்கள் கருதுவதற்குக் காரணம். இதை மனதில் வைத்தே மேலைத்தேய மொழிபெயர்ப்பாளர்கள் கவனத்தோடு வேதத்தை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அத்தோடு ஆரம்பத்தில் மொழிபெயர்க்கப்பட்ட மொழிபெயர்ப்பை மட்டும் நம்பியிருந்துவிடாமல், காலத்துக்குக் காலம், தங்களுடைய அறிவும், ஞானமும், ஆற்றலும் அதிகரிப்பதற்கு ஏற்ப புதிய நல்ல மொழிபெயர்ப்புகளையும் உருவாக்கியுள்ளனர். அத்தகையவையாக ஆங்கிலத்தில் நான் கருதும் மொழிபெயர்ப்புகள் King James Version 1611, New King James Version, New American Standard Bible, English Standard Version ஆகியவையாகும். இவை அனைத்துமே எழுத்துபூர்வமான மொழிபெயர்ப்புகள் (Literal translations). அதாவது, மூலமொழிகளைத் தழுவி வார்த்தைக்கு வார்த்தை எழுத்துபூர்வமானதாக இருக்கும்படி இவை மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஏனைய மொழிபெயர்ப்புகள் அத்தகைய துல்லியமான எழுத்துபூர்வமான மொழிபெயர்ப்புகளாகக் காணப்படவில்லை.

எழுத்துபூர்வமாக துல்லியமாக மூலத்தைத் தழுவியவையாக இல்லாத மொழிபெயர்ப்புகள், மூலமொழிகளில் காணப்படுபவை இலகுவாக மக்கள் வாசிக்கும்படியாக இருக்கவேண்டும் என்ற ஒரே காரணத்தால், மொழிபெயர்ப்பில் மூலத்தின் வார்த்தைகளுக்கு இணையான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் அவற்றின் அர்த்தத்தை மட்டும் இலகு மொழியில் விளக்கும் செயலைச் செய்கின்றன. இதனால் எழுத்துபூர்வமாக மொழிபெயர்ப்பு அமையாமல் வேதத்தை விளக்கும் மொழிபெயர்ப்புகளாக (paraphrase) அவை அமைந்துவிடுகின்றன. இது தற்செயலாக நிகழ்ந்ததாக அல்லாமல் காரணத்தோடேயே செய்யப்பட்ட காரியம். வாசிக்கிறவர்களுக்கு வேதம் விளங்க வேண்டும் என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட செயல்.

இத்தகைய விளக்க மொழிபெயர்ப்புகளால் ஏற்படும் ஆபத்து என்ன? முதலில், அவை மூலமொழிகளில் இருந்து வேதத்தைவிட்டு விலகிவிடுகின்றன. இரண்டாவது, வேதத்தை நாம் நேரடியாக வாசித்து ஆராய்ந்து அதன் மெய்ப்பொருளை அறிந்துகொள்ள முடியாதபடி செய்துவிடுகின்றன. மூன்றாவதாக, அவை வேதத்திற்கு விளக்கம் கொடுக்கும் வியாக்கியான விளக்க நூல்களாக (Exposition) அமைந்துவிடுகின்றன.

வேதத்திற்கு விளக்கம் கொடுப்பது மொழிபெயர்ப்பாளனது பணியல்ல. அதை வாசிக்கின்ற ஆத்துமாவின் பணி அது. போதகர்களும், பிரசங்கிகளும், இறையியலறிஞர்களும் செய்யவேண்டிய பணி அது. மொழிபெயர்ப்பாளன் மூலத்தில் இருப்பதை அதில் இருப்பதுபோலவே சற்றும் அதைவிட்டு விலகாமல் மொழிபெயர்க்கவேண்டும். அவ்வாறு செய்யாமல் போனால் அது வார்த்தைக்கு வார்த்தை துல்லியமான வேதமொழிபெயர்ப்பு என்ற பெயரை அடைய முடியாது; வெறும் விளக்கமொழிபெயர்ப்பு மட்டுமே.

வார்த்தைக்கு வார்த்தை தெய்வீக வெளிப்படுத்தல்

இந்த இடத்தில்தான் நான் வார்த்தைக்கு வார்த்தை தெய்வீக வெளிப்படுத்தல் என்ற வேதம் பற்றிய உண்மையை விளக்குவது அவசியமாகிறது. அதாவது வேதம் கர்த்தரின் பூரண சித்தத்தின் மொத்த உருவாக, நாம் அறிந்துகொள்ளும்படியாக அவர் வெளிப்படுத்திய சித்தமாக இருப்பதால் அதன் வரலாற்று அம்சங்களும், அனைத்துவிதமான போதனைகளும் மட்டுமல்லாமல் அதன் ஒவ்வொரு வார்த்தையும் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டு எழுதியவர்கள் தெரிந்தெடுத்து எழுதியவையாக, இருக்கின்றன. வேதத்தைப் பாதுகாத்து கர்த்தர் நமக்கு அளித்துள்ள எபிரெயம், மற்றும் கிரேக்க மூலமொழிகளில் காணப்படும் பிரதிகளில் வேதம் வார்த்தைக்கு வார்த்தை தெய்வீக வெளிப்படுத்தலாக காணப்படுகின்றன. இந்தத் தெய்வீக வழிநடத்தலை ஆங்கிலத்தில் Verbal Plenary Inspiration என்று அழைப்பார்கள். தமிழில் இதை “வார்த்தைக்கு வார்த்தை தெய்வீகமாக ஊதி அருளப்பட்டவை” என்று அழைக்கலாம். இதன் மூலம் வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையும் அநாவசியத்துக்கு, அர்த்தமில்லாமல் பயன்படுத்தப்படாமல் கருத்தோடும், கவனத்தோடும் காரணத்துக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை நாம் உணரவேண்டும். வேதம் கர்த்தருடைய தெய்வீக அதிகாரத்தின் வெளிப்படுத்தல் என்று நம்புகிறவர்கள் இந்த உண்மையை நம்பாமல் இருப்பதில் பொருளில்லை.

ஆதியாகமத்தில் கர்த்தர் இந்த உலகத்தை ஆறு நாட்களில் படைத்ததாக விளக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவ வரலாற்றில் நவீன விஞ்ஞானத்தோடு பொருந்திப்போவதாக வேதம் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் புத்திஜீவிகளில் சிலர் ஒரு நாள் மில்லியன் ஆண்டுகளாக இருந்திருக்கிறது என்று விளக்கம் கொடுக்கின்றனர். அது விஞ்ஞானத்துக்கும், சமுதாயத்துக்கும் ஒத்துப்போகும் முறையில் வேதத்திற்கு விளக்கம் கொடுக்கும் முயற்சி. இந்த முயற்சியில் தாராளவாத இறையியலறிஞர்கள் மட்டுமல்லாது விபரம் தெரிந்த இறையியலறிஞர்களும் ஈடுபட்டிருக்கின்றனர். ஆதியாகமத்தின் முதல் அதிகாரத்தில் காணப்படும் “நாள்” என்ற வார்த்தை இருபத்திநான்கு மணித்தியாளங்களைக் கொண்ட ஒரு நாள் அல்ல என்று விளக்கங்கொடுக்கும் இறையியல் கல்லூரிகளே நம்மினத்தில் அதிகம். அந்தளவுக்கு வேத நம்பிக்கை அற்றவையாக அவை இருக்கின்றன.

ஆதியாகமத்தில் கர்த்தர் உலகத்தை ஆறு நாட்களில் படைத்தார் என்பதற்கு அந்த அதிகாரம் மட்டுமல்லாமல் வேதத்தின் ஏனைய பகுதிகளும் சான்று பகிர்கின்றன. இயேசு கிறிஸ்துவும், அப்போஸ்தலர்களும் அதற்குச் சான்று பகிர்கிறார்கள். அப்படியிருக்கும்போது ஒரு நாள் மில்லியன் ஆண்டுகள் என்று விளக்கமளிப்பது இந்த உலகத்தின் போக்கில் போய்க் கொடுக்கும் விளக்கமே தவிர கர்த்தரை விசுவாசித்து நம்ப வேண்டிய உண்மையல்ல. இதை வெயின் குரூடம் (Wyane Grudem), டிம் கெல்லர் (Tim Keller) போன்ற பிரபலமான இன்றைய இறையியல் அறிஞர்களும் முன்வைத்து வருகிறார்கள். வெயின் குரூடம் இத்தகைய கருத்தைக் கொண்டிருப்பதை அவருடைய முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூலும், இது பற்றி அவரெழுதிய இன்னுமொரு நூலும் விளக்குகின்றன. இதுவே டிம் கெல்லரின் போதனை என்பதை அவருடைய எழுத்துக்களும் பிரசங்கங்களும் விளக்குகின்றன. இது வார்த்தைக்கு வார்த்தை வேதம் தெய்வீக வெளிப்படுத்தலாக இருக்கின்றது என்ற நம்பிக்கைக்கு முரணான போக்கு. வேதத்தின் அதிகாரத்தைப்பற்றி அதிகமாக தன்னுடைய முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூலில் விளக்கும் வெயின் குரூடம், உலகம் உருவாக மில்லியன் வருடங்கள் ஆயின என்றும், நோவாவின் காலத்தில் கர்த்தர் உலகத்தைத் தண்ணீரால் அழித்தபோது அது முழு உலகத்தையும் அழித்ததாக அல்லாமல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே நிகழ்ந்தது என்றும், கர்த்தர் வெளிப்படுத்தலைத் தொடர்ந்து இன்று தனி மனிதர்களின் மூலம் அளித்துக்கொண்டிருக்கிறார் ஆகிய போதனைகளின் மூலம் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறார். அவர் வேதத்தைப் பற்றி அநேக அருமையான உண்மைகளை விளக்கியிருந்தபோதும், அவற்றைக் கறைப்படுத்தும் இத்தகைய முரண்பாடான நம்பிக்கைகளையும் கொண்டிருக்கிறார் என்பதைக் காண்கிறோம். நிச்சயம் வெயின் குரூடம் இந்த விஷயங்களில் சீர்திருத்த இறையியல் விசுவாச நம்பிக்கைகளைக் கொண்டிருக்கவில்லை.

சீர்திருத்தவாதிகளான மார்டின் லூத்தரும், ஜோன் கல்வினும் கர்த்தர் உலகத்தை ஆறுநாட்களில் உருவாக்கினார் என்பதை நம்பி விளக்கினர். ஒரு நாளை அவர்கள் இருபத்தி நான்கு மணித்தியாளங்கள் கொண்ட நாட்களாகவே விளக்கினர். இருவருமே வார்த்தைக்கு வார்த்தை வேதம் தெய்வீக வழிநடத்தலின் மூலம் எழுத்தில் தரப்பட்டிருக்கிறது என்பதை ஆணித்தரமாக நம்பியிருந்தனர். வில்லியம் டின்டேலும், மார்டின் லூத்தரும், ஜோன் கல்வினும் வேத வசனங்கள் பல அர்த்தங்களைக் கொண்டிராது ஒரே அர்த்தத்தைக் கொண்டிருக்கின்றன என்பதையும் நம்பியிருந்தார்கள்.

பதினேழாம் நூற்றாண்டில் உருவான விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப்போதனைகளும் கர்த்தர் உலகத்தை ஆறு நாட்களில் படைத்தார் என்றே விளக்குகின்றன. இதுவே பாரம்பரியமாக கிறிஸ்தவ வரலாற்றில் இருந்து வந்திருக்கின்ற நம்பிக்கை. 1689 விசுவாச அறிக்கையும் படைப்பைப் பற்றிய அதிகாரத்தில் இதையே விளக்குகின்றது. அப்படியிருக்க நவீன கால சுவிசேஷ இயக்க இறையியலறிஞர்களும், சில சீர்திருத்த கிறிஸ்தவர்களும் ஒரு நாளை இருபத்தி நான்கு மணித்தியாளங்களுக்கு மேலானதாகவும், உலகம் 6000 வருடங்களுக்கு உட்பட்ட காலங்களில் அல்லாது பில்லியன் வருடங்களில் உருவாக்கப்பட்டது என்றும் வாதிடுவது திருச்சபை கொண்டிருந்த பாரம்பரிய வரலாற்று இறையியல் நம்பிக்கைகளுக்கு முற்றிலும் முரணானது. இத்தகைய போக்கு வேதவார்த்தைகள் ஒவ்வொன்றும் கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்டு ஆவியின் தெய்வீக வழிநடத்தலால் அதை எழுதியவர்களால் எழுதப்பட்டது என்ற அவசியமான போதனைக்குக் களங்கம் உண்டாக்குகின்றது. இது மேலும் பாரதூரமான தவறான போதனைகளை உருவாக்கும் முயற்சிக்கே இட்டுச் செல்லும்.

எழுத்துபூர்வமாக நாட்களை ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் கணிக்காமல் இருப்பது அப்பகுதியை உருவகப்படுத்தி விளக்கும் முயற்சிக்கே (Allegorical) வழிவகுக்கிறது. அதைத்தான் இன்று அநேகர் செய்து வருகிறார்கள். இது வேதத்தில் எவருக்கும் இருக்கவேண்டிய நம்பிக்கையைத் தகர்த்துவிடுகின்ற முயற்சி. ஆதியாகமம் வரலாற்று நூல். அது எழுத்துபூர்வமாக கணிக்கப்படவேண்டிய நூல். அதை வேறுவிதத்தில் கணித்து விளக்கங்கொடுப்பது வேதவிளக்க விதிமுறைகளுக்கு முரணானது. படைப்பின் நாட்களுக்கு மறுவிளக்கமளிக்க முற்படுவது அதோடு நின்றுவிடாது. அந்த விளக்கமுறை ஆதாமை வரலாற்று மனிதன் என்ற நம்பிக்கைக்கு எதிராக விளக்கங்கொடுப்பதில் போய் முடியும். அத்தோடு நோவாவின் காலத்து வெள்ளம், மனிதனின் பாவம் போன்ற வரலாற்று நிகழ்வுகளுக்கும் மறுவிளக்கங்கொடுக்கும் பிசாசுத்தனத்திற்கு வழிவகுக்கும். அதுமட்டுமல்லாது, இறுதியில் கர்த்தரின் மீட்பின் வரலாற்றையும் அத்தகைய விளக்கமுறை பாதித்து இரட்சிப்புப் பற்றிய போதனைகளையும் களங்கப்படுத்திவிடும்.

வார்த்தைக்கு வார்த்தை வேதம் தெய்வீக வழிநடத்தலினால் அருளித் தரப்பட்டிருக்கிறது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் போவதின் ஆபத்து கோரமானது என்பதை நீங்கள் உணரவேண்டும். வேதம் கர்த்தருடையது என்ற நம்பிக்கை மட்டும் போதாது. அதை அநேகர் கிளிப்பிள்ளை போல சொல்லிவருகிறார்கள். வேதம் வார்த்தைக்கு வார்த்தை கர்த்தரின் தெய்வீக வெளிப்படுத்தல் என்பதை நம்பி அதை எழுத்துபூர்வமாக வாசித்து ஆராய்ந்து விளக்கவேண்டியது அவசியம். இதைச் செய்யாதவர்களுடைய வேத நம்பிக்கை மிகவும் பலவீனமானதாக, போலிப்போதனைகளுக்கு வழிநடத்திச் செல்லுவதாக மட்டுமே இருக்கமுடியும். உங்கள் விசுவாசமும், திருச்சபையும் பாதுகாக்கப்பட வேதத்தைப் பயபக்தியோடு வாசித்து, ஏனையோருக்கும் விளக்குவதை உங்கள் கடமையாக வைத்திருங்கள்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s