ரோமன் கத்தோலிக்கர்களே! உங்களுக்கு ஓர் நல்ல செய்தி!

எனக்கு ரோமன் கத்தோலிக்கர்கள் மத்தியில் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். உண்மையில், சிறு வயதில் நான் ரோமன் கத்தோலிக்க மதத்தவர்களால் நடத்தப்பட்ட கல்லூரியில் படித்திருக்கிறேன். அங்குதான் வாழ்க்கையில் நேரத்தோடு காரியங்களை செய்வதையும், எதையும் ஒழுங்கு முறையோடு செய்துமுடிக்கும் வழக்கத்தையும் நான் கற்றுக்கொண்டேன். ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள் நடத்துகின்ற ஒரு சமூகசேவை நிலையத்தில்தான் நான் இன்றும் சபைத் தலைவர்களுக்கான கிறிஸ்தவ போதனை வகுப்புகளை நடத்துகிறேன். உண்மையில் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களை மனிதநேயத்தோடு நான் நேசிக்கிறேன். அவர்களிடம் வேறுபாடு காட்டி நான் ஒருபோதும் பழகுவதில்லை. ரோமன் கத்தோலிக்கர்கள் சமூக சேவை செய்வதில் அதிகம் ஈடுபட்டிருக்கிறார்கள். அது பாராட்ட வேண்டிய செயல். ரோமன் கத்தோலிக்க மதத்தவரான அன்னை தெரேசாவின் சமூக சேவைப் பணி யாருக்குத் தெரியாமல் இருக்கும்? அந்தளவுக்கு மனித நேயத்தோடு நான் அன்பு காட்டுகின்ற ரோமன் கத்தோலிக்கர்களுக்கு ஓர் நல்ல செய்தியை விளக்க விரும்புகிறேன்.

1. உங்கள் பாவங்களை மன்னிக்க இயேசு கிறிஸ்து என்றும் தயாராக இருக்கிறார்.

உலகத்தில் பிறந்திருக்கும் அனைத்து மதத்தாரும் பாவிகளாகவே பிறந்திருக்கிறார்கள். இதில் எவருக்கும் விதிவிலக்கில்லை. யூதர்களிடம் பழைய ஏற்பாடு இருந்தும், ஆபிரகாம் போன்ற அருமைப் பெரியவர்கள் அவர்கள் மத்தியில் பிறந்திருந்தும் யூத இனம் பாவத்தில் பிறந்ததாக மட்டுமல்லாமல், இயேசு கிறிஸ்துவிடம் இருந்து பாவமன்னிப்பைப் பெறாமல் இருந்து வருகிறது. நிக்கொதேமு போன்ற யூதர்கள் இதை உணர்ந்ததாலேயே இயேசு கிறிஸ்துவிடம் ஓடி வந்து பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொண்டார்கள் (யோவான் 3). யூத மதத்தில் பாவத்தைப் பற்றிய போதனை இருந்தும், சடங்குகளால் மட்டும் அந்தப் பாவங்களைப் போக்கிக்கொள்ள அது முயல்கிறது. அதைப் போலவே ரோமன் கத்தோலிக்க மதத்திலும் அந்தச் சபையில் சேர்வதாலும், அதன் சடங்குகளைப் பின்பற்றுவதாலும் மட்டுமே பாவம் போகும் என்ற போதனை இருந்து வருகிறது. இறப்பதற்கு முன் பாவத்திற்கு முழு விடுதலை தரக்கூடிய விதத்தில் ரோமன் கத்தோலிக்க மதப் போதனைகள் காணப்படவில்லை. இறக்கின்ற ஒவ்வொரு ரோமன் கத்தோலிக்கரும் முழப் பாவமும் போகாமல் ‘பெர்க்கட்டரி’ என்று அழைக்கப்பட்டும் ஆத்தும திருத்த இடத்தை அடைந்து அங்கே தங்களுடைய பாவங்களுக்கான தண்டனையைத் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகின்றது? ரோமன் கத்தோலிக்கரான நீங்கள் உங்களுடைய பாவத்துக்கு மன்னிப்பு அடைய முடியாமலும், பரலோக நிச்சயமில்லாமலுமே இறக்கிறீர்கள் என்பது தெரிகிறதல்லவா.

Continue reading