மூன்றாம் மிலேனியத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். இரண்டாயிரம் வருடங்கள் உருண்டோடிவிட்டன. கிறிஸ்து இவ்வுலகுக்கு வந்து தனது சபையைக் கட்டி எழுப்பி இரண்டு மிலேனியங்கள் கடந்துவிட்டன. இத்தனைக் காலங்களிலும் கிறிஸ்துவின் சபை கத்தோலிக்க மதத்தின் கடுந்தாக்குதலையும் பல்வேறு போலிப்போதனைகளையும் சந்தித்து வெற்றிகரமாக அவற்றை முறியடித்து தொடர்ந்தும் தலை நிமிர்ந்து வருகின்றது. கர்த்தரின் அருளால் பல எழுப்புதல்களையும் கிறிஸ்துவின் சபை வரலாற்றில் சந்தித்துள்ளது. மார்டின் லூதர், ஜோண் கல்வின் போன்றோர் மட்டுமன்றி ஜோர்ஜ் விட்பீல்ட், ஜொனத்தன் எட்வர்ட்ஸ், ஸ்பர்ஜன் போன்றோரையும் கொண்டு தன்னை அலங்கரித்துக் கொண்டது கிறிஸ்துவின் சபை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சபை சந்தித்த இடர்பாடுகளில் இரண்டாக சார்ள்ஸ் பினியின் அர்ப்பண அழைப்பு முறையையும், கெரிஸ்மெட்டிக் இயக்கத்தையும் கருதலாம். இரண்டுமே போலித்தனமான ஆத்மீக உணர்வலைகளைக் கொண்ட ஒரு கூட்டத்தை திருச்சபைக்கு அறிமுகப்படுத்தின. இவற்றின் பாதிப்பு இன்றும் சபையை விட்டபாடில்லை.