தொமஸ் புரூக்ஸ் (Thomas Brooks) பியூரிட்டன் பெரியவர்களில் ஒருவர். சீர்திருத்தப் போதகரும், பிரசங்கியுமான அவர் அநேக நூல்களை எழுதியுள்ளார். அவருடைய எழுத்துக்கள் ஆறு வால்யூம்களாக ஆங்கிலத்தில் இன்றும் பதிப்பில் இருந்து வருகின்றன. “பிசாசின் வஞ்சனைகளுக்கெதிரான விலைமதிப்பற்ற மருந்துகள்” என்ற அவருடைய ஆக்கம் சிறப்பானது. ஜோடனைகளெதுவுமில்லாத, உள்ளத்தை அசைக்கும், உணர்வுபூர்வமாக கர்த்தரின் கட்டளைகளுக்கடங்கி பக்திவிருத்தியை நாடும் கிறிஸ்தவத்தைப் பற்றி அதிகம் பிரசங்கித்தும் எழுதியும் இருக்கிறார் புரூக்ஸ். மறுபிறப்பாகிய அனுபவத்தை அடையாமல் கிறிஸ்தவர்களைப் போல பாசாங்கு செய்பவர்களை அடையாளம் காட்டும் தொமஸ் புரூக்ஸின் இந்த ஆக்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கட்டும். – ஆசிரியர்
எந்தவொரு மாய்மாலக்காரரும் இந்த உலகத்தில் கர்த்தரையோ அல்லது கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதையோ, தன் வாழ்வில் நல்லதைச் செய்வதையோ, பரிசுத்தமாக வாழ்வதையோ அதி முக்கிய நோக்கமாகக் கொண்டு வாழ்வதில்லை. உலக இச்சைகளை அனுபவிப்பதும், உலக நன்மைகளை அடைவதும், உலகத்தின் பாராட்டுதல் களைப் பெறுவதுமே மாய்மாலக்காரனின் நோக்கமாக இருக்கும். இந்த மூன்றுமே அவனுடைய திரித்துவம். அவற்றையே அவன் அக்கறையோடு வழிபட்டு, அவைகளுக்காக வாழ்ந்து வருவான் (1 யோவான் 2:16). சுயநலம் கொண்ட அவனுடைய வாழ்க்கை கறைபடிந்ததாக இருக்கும். கர்த்தருக்காக வாழ்வதாக அவன் வெளியில் காட்டிக்கொண்டாலும், சுயமே அவனுள்ளத்தில் ஆட்சி செய்யும். சுயத்தை அவனால் ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது. அதற்காகவே அவன் வாழ்ந்து வருவான். “நான் சகல நன்மைகளையும், சகல பாராட்டுதல்களையும், மகிமையையும் அடைய வேண்டும்” என்பதே அவனுடைய இருதயத்தின் எண்ணமாக இருக்கும்.