அநேக வருடங்களுக்கு முன் நான் வைத்திருந்த முதல் காரை எண்ணிப் பார்க்கிறேன். பழைய காராக இருந்தபோதும் என் தேவையை அப்போதைக்கு அது நிறைவேற்றியது. எல்லாப் பழங்கார்களுமே இருந்திருந்து பிரச்சனை தரும். ஒரு முறை என் கார் எஞ்சினில் பிரச்சனை ஏற்பட அதைக் கவனித்த நண்பனொருவன் தானே அதை சரி செய்ய முன்வந்தான். நானும் நம்பிக் காரை அவன் கையில் ஒப்படைத்தேன். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கார் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்ப்பதற்காக வெளியில் வந்தபோது நான் அதிர்ந்து போனேன். முழு எஞ்சினுமே அக்குவேறு ஆணிவேறாகக் கழட்டி நிலத்தில் பரப்பி வைக்கப்பட்டிருந்தது. என்னடா இது, என்று கேட்டால் சீக்கிரம் முடிந்துவிடும் என்று பதிலளித்தான் நண்பன். அதற்குப் பிறகு நடந்ததைப் பற்றி என்ன சொல்ல. எஞ்சினைப் பீஸ் பீஸாகக் கழட்டத் தெரிந்திருந்த நண்பனுக்கு அதை மறுபடியும் இணைக்கத் தெரியவில்லை. கடைசியில் காரை ஒரு வண்டியில் ஏற்றி சர்வீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தேன்.
இதை எதற்குச் சொல்லுகிறேன் என்றால் ஒரு காரியத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தால் மட்டுந்தான் அந்தக் காரியம் பற்றிய சகல விஷயங்களையும் நாம் புரிந்துகொள்ளுதலோடு அணுக முடியும்; பிரச்சனை ஏற்பட்டாலும் சரி செய்ய முடியும். அதைப் பற்றிய குறைந்தளவு ஞானம் போதாது. அது பிரச்சனை ஏற்படும்போது சரி செய்ய உதவாது. எந்தவொரு காரியத்தைப் பற்றியும் தேவையான அளவுக்கு ஞானம் இருப்பது அவசியம். பொது அறிவுகூட அதைத்தான் சொல்லும். தெரியாத விஷயத்தில் ஒருவர் தலையிட்டால் அவர் அதை பிரச்சனையுள்ளதாக்கி விடுவார். தெரியாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பதே நல்லது.