இன்னுமொரு இதழோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அநேகர் தொடர்ந்து பத்திரிகையை வாசித்து வருகிறார்கள்; புதிய வாசகர்களும் இணைந்துகொள்ளுகிறார்கள். வாக்குத்தத்த வசன துண்டுப்பிரசுரங்களும், காணிக்கைக்காக அலையும் உப்புச்சப்பற்ற இதழ்களுமே மலிந்து காணப்படும் நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் இப்படியொரு ஆவிக்குரிய வேதவிளக்கமளிக்கும், வாசித்து சிந்திக்கவேண்டிய இதழுக்கு எத்தகைய வரவேற்பிருக்குமோ என்று இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன் நினைத்தேன். நம்மத்தியிலும் வாசித்து சிந்திக்கிறவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள் என்பதைத்தான் கடந்துபோயிருக்கும் காலங்கள் துல்லியமாகக் காட்டுகின்றன. நிரப்பப்படாததொரு இடத்தைப் பத்திரிகை நிரப்பிக் கொண்டிருக்கிறதென்ற உளப்பூர்வமான புரிதலோடு தொடர்ந்து உழைக்கிறோம். கர்த்தரின் கிருபையால் பத்திரிகை எங்கெங்கெல்லாமோ போய் என்னென்னவெல்லாமோ செய்துகொண்டிருக்கிறது என்பதும் எனக்குப் புரிகிறது. சிலபேருடைய வாழ்க்கையில் ஆவியின் மூலம் அது செய்திருக்கும் ஆவிக்குரிய கிரியைகள் என்னை மலைத்துப்போகச் செய்திருக்கிறது. இதற்கெல்லாம் சர்வவல்லவரான அந்த பரலோக நாயகனே காரணம்.