வேதத்தை எவ்வாறு வாசித்துப் புரிந்துகொள்ளுவது? பொதுவாகவே கிறிஸ்தவர்கள் ஆதியாகமத்தில் இருந்து ஒவ்வொரு நூலாக வாசிப்பார்கள். மீண்டும் மீண்டும் அந்த நூல்களை வாசித்து அதன் பொதுவான போக்கைப் புரிந்துகொள்ளப் பார்ப்பார்கள். பெரும்பாலானோருக்கு புதிய ஏற்பாட்டைத் தெரிந்துகொண்டிருக்கும் அளவுக்குப் பழைய ஏற்பாட்டைப்பற்றிய புரிதல் இருக்காது. பொதுவாகச் சொல்லப்போனால் கிறிஸ்தவர்களுக்கு வேதத்தின் வரலாற்று நிகழ்வுகள் பற்றிய புரிதல் மிகக் குறைவு. ஒவ்வொரு நூலுக்கும் இடையில் காணப்படும் தொடர்பு, முழு வேதத்தின் ஒருங்கிணைந்த தொடர்ச்சியான வரலாற்றுப் பயணம், அதன் மூலம் படைத்தவர் செய்திருக்கும், செய்து வருகின்ற கிரியைகள், இவையனைத்திற்கும் புதிய உடன்படிக்கை கால மக்களான நமக்குமுள்ள தொடர்பு போன்ற விஷயங்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதற்குக் காரணம் வேதத்தை எப்படி முறையாக, எந்த அடிப்படையில் வாசித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருப்பதுதான்.