தொடர்ந்து பத்திரிகை எங்களுக்கு ஆத்ம விருந்தளித்து ஆவிக்குரிய வாழ்க்கையில் ஆசீர்வாதங்களைத் தந்து வருகின்றது என்று வரும் கடிதங்களும், இன்றைய காலகட்டத்திற்கு பொருந்திவரும் ஆக்கங்களைத் தாங்கி வருகின்றது என்று வரும் கடிதங்களும் எங்கள் பணியைப் பெரிதும் சுலபமாக்குகின்றன. கிறிஸ்தவ பத்திரிகை என்ற பெயரில் வெளிவந்து கிறிஸ்தவத்திற்கு எந்த மகிமையையும் அளிக்க மறுக்கும் நூற்றுக்கணக்கான வார இதழ்களும், மாத இதழ்களும் மலிந்து கிடக்கும் இந்நாட்களில் வித்தியாசமான இதழாக வேத அடிப்படையில், வேதபோதனைகளை மட்டும் அளித்துவருவதை நோக்கமாகக் கொண்டு ஏழு வருடங்களைத் தாண்டி வந்துவிட்டோம். இந்நாள்வரைக்கும் எம்மோடிருந்து எமக்குத் துணை புரிந்து வரும் தேவன் இப்பணியில் இனியும் துணைசெய்வார் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.