கரகாட்டக்காரனும் நடுநிலையாளனும்

Madurai-1858நான் பணிபுரியும் சபையில் ஓய்வு நாள் காலை வேளையில் 1689 விசுவாச அறிக்கைக்கான விளக்கத்தைக் கொடுத்துக்கொண்டு வருகிறேன். அதில் சமீபத்தில் ஒரு முக்கிய விஷயத்தை ஆராய நேர்ந்தது. பரிசுத்தவான்களின் விடாமுயற்சியைப் பற்றிப் போதிக்கும் விசுவாச அறிக்கை கிறிஸ்தவர்களின் அந்தக் கிருபை ஐந்து தூண்களில் தங்கியிருப்பதாக விளக்குகிறது. அந்தப் பெருந்தூண்களில் ஒன்று கிறிஸ்துவின் மரணத்தின் மதிப்பு (Efficacious merit). இன்னொருவிதமாக விளக்குவதானால், பரிசுத்தவான்களாகிய விசுவாசிகள் தங்களுடைய விசுவாசத்தைக் காத்து அதில் வளருவதற்குரிய பணிகளை விடாமுயற்சியுடன் செய்வதற்குக் காரணமாக இருக்கும் தூண்களில் ஒன்று கிறிஸ்துவின் மரணத்தினால் சம்பாதிக்கப்பட்ட பலன்களாகும். இது வேதம் போதிக்கின்ற உண்மை. கிறிஸ்துவின் மரணத்தினால் சம்பாதிக்கப்பட்ட பலன்களே விசுவாசி விசுவாசியாக இந்த உலகத்தில் தொடர்ந்து வாழ வளர உதவுகிறது; அவர்கள் பரலோகத்தை நோக்கி வெற்றிகரமாக நடைபோட துணை செய்கிறது.

கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் யாருக்குரியது என்பது பற்றிய பல கருத்துவேறுபாடுகள் சுவிசேஷக் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருந்துவருகிறது. உண்மையில் இந்த விஷயத்தில் கருத்துவேறுபாடுகள் இருக்கக் கூடாது. வேதத்தின் மிக முக்கியமான போதனைகளில் நம்மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருப்பது சரியல்ல. நாம் பலவீனர்களாக இருப்பதாலும், நமது அறிவு பூரணமானதாக இல்லாமலிருப்பதாலும் நாம் வேதத்தைப் பூரணமாக புரிந்துகொள்ள முடியாமல் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கும் நிலை ஏற்படுகிறது.

நடுநிலையாளர்

இந்தக் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்ற காரணத்தினால் சிலர், நாம் எப்போதும் இரண்டு பக்கமும் சாயாமல் நடுநிலையான கருத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்பார்கள். இத்தகைய நடுநிலைக் கருத்துக் கொண்டிருக்கும் மன்னர்கள் நம்மத்தியில் அதிகம். முக்கியமாக அநேக வேதாகமக் கல்லூரிகள் இத்தகைய நிலையை எடுத்து இயங்கி வருகின்றன. வேதத்தில் எந்தப் பகுதியை எடுத்தாலும் அந்தப் பகுதி இதைத்தான் விளக்குகிறது என்று உறுதியாக சொல்லாமல் இதற்கு வேறு ஒரு கருத்து இருக்கிறதென்று ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களை சொல்லித் தருவதோடு இதில் நடுநிலை அவசியம் என்று விளக்குவார்கள். எனக்கு நண்பரான ஒரு போதகர் ஒரு முறை சரியாகவே சொன்னார், ‘எனக்குத் தெரிந்த நடுநிலை எல்லாம் நட்ட நடுவீதியில் இறந்து கிடக்கின்ற நாய் மட்டுந்தான்’ என்று.

may 2013 rope

மிக உயரமாக கட்டப்பட்டிருக்கும் கயிற்றில் ஒரு பக்கமிருந்து மறுபக்கம்வரை ஒரு நீளமான கம்பைக் கையில் சுமந்துகொண்டு நடப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? கயிற்றில் நடந்து வருகிறவர் கையிலிருக்கும் கம்பை விழுந்துவிடாமல் சுமந்து நடந்து வரவேண்டும். அந்தக் கம்பு அவர் இருபக்கமும் சாய்ந்துவிடாமல் நடுமத்தியில் நின்று நடக்க உதவுகிறது. இப்படியாக ஒரு பக்கம் சாய்ந்துவிடாமல் நடுநிலையில் நடந்து வருவது கயிற்றில் நடக்கும் வித்தைக்கு அவசியம். இதே மாதிரிதான் கரகாட்டமாடுகிறவனும் செய்வான். தலையில் இருக்கும் கரகத்தை நடுநிலையில் இருத்தி அதை விழுந்துவிடாமல் இருக்க வைத்து ஆடுவதே கரகாட்டக்காரனின் தொழில். இந்தக் கரகாட்ட வித்தையைக் கர்த்தரின் வேதம் போதிக்கும் சத்தியத்தில் பயன்படுத்துவது என்னைப் பொறுத்தவரையில் அகோரமானது. நடுநிலை வித்தை காட்டுவதற்காக கர்த்தர் நமக்கு வேதத்தைத் தரவில்லை. அவருடைய வேதம் ஒரே சத்தியத்தை எப்போதும் உள்ளது உள்ளபடி போதிக்கிறது. கஷ்டப்பட்டு வாசித்து அதை விளங்கிக்கொண்டு விசுவாசத்தோடு பின்பற்றி வருவது மட்டுந்தான் நம்முடைய கடமை. அதில் நடுநிலை வித்தை காட்டும் நாசவேலையில் நாம் ஈடுபடக் கூடாது.

கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் யாருக்கு சொந்தமானது என்ற கேள்விக்கு சிலர் பின்வருமாறு பதிலளிக்கிறார்கள், “கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் எல்லோருக்கும் போதுமானது, ஆனால் சிலருக்கு மட்டுமே பயனளிக்கும்” (Sufficient for all, efficient only for some). இதன் கருத்து என்ன தெரியுமா? கிறிஸ்துவின் மரணம் எல்லோரையும் இரட்சிக்கும் வல்லமை கொண்டது. ஆனால், சிலர் மட்டுமே அதனால் நிச்சயம் இரட்சிப்படைவார்கள் என்பதே. இந்த “சிலர்” தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்று இந்தக் கருத்தைக் கொண்டிருப்பவர்கள் விளக்குவார்கள். இந்தக் கருத்து இன்று நேற்றில்லாமல் பல காலமாக இருந்து வருகிறது. கிருபையின் போதனைகளைப் பின்பற்றுகிற அநேகரிடம் கூட இந்தக் கருத்து இருந்து வருகிறது.

இந்தக் கருத்து எப்படி உருவானது, ஏன் உருவானது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? திருச்சபையைப் போலிப்போதனைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் நெதர்லாந்தில் 1618-1619ல் பல்வேறு திருச்சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கூடிய இறையியலறிஞர்கள், ஜெக்கபஸ் ஆர்மீனியஸின் சீடர்களுடைய போதனைகள் (ஐந்து போதனைகள்) வேதபோதனைகளைப் பிரதிபலிக்கவில்லை என்று ஆராய்ந்து தீர்மானித்து அந்தத் தவறான போதனைகளுக்கு எதிராக வேத போதனைகளின் அடிப்படையில் ஐந்து கருத்துக்களை வெளியிட்டனர் (கல்வினிச ஐம்போதனைகள்). அந்தப் போதனைகளை ஜோன் கல்வின் உருவாக்கவில்லை. ஆனால், அவருடைய பெயரில் அது அழைக்கப்பட்டு வருகின்றது. அந்தக் கருத்துக்களில் ஒன்றுதான் “வரையறுக்கப்பட்ட பரிகாரப்பலி” (Limited Atonement) என்பது. இது கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் யாரைச் சேரும் என்பதை விளக்கும் கருத்தின் தலைப்பு. ஆதாவது, கிறிஸ்து யாருக்காக சிலுவையில் மரித்தார் என்பதை இது விளக்குகிறது. இதற்கு வேறு பெயர்களும் உண்டு – குறிப்பிட்டவர்களுக்கான மீட்பு (Particular Redemption), தீர்க்கமான மீட்பு (Definite Atonement) என்ற பெயர்களும் உண்டு. இந்தக் கருத்தின்படி அன்று கூடிய இறையியலறிஞர்கள் பிதாவினால் அனுப்பப்பட்ட கிறிஸ்து அவரால் முன்குறிக்கப்பட்டவர்களுக்காக மட்டுமே சிலுவையில் மரித்தார் (யோவான் 6:37-40; 44; 10:27-29; 17:6-10; எபேசியர் 1:4-6) என்று வேதம் தெளிவாகப் போதிப்பதாக விளக்கினார்கள். அதையே நெதர்லாந்தில் மட்டுமல்லாமல் உலகின் ஏனைய பகுதிகளில் இருந்த சபைகளும் வேத போதனையாக ஏற்று நடக்கத் தீர்மானித்தார்கள்.

இந்த ‘வரையறுக்கப்பட்ட பரிகாரப்பலி’ என்ற கருத்து கிறிஸ்துவின் மரணத்தின் பலன்களின் மதிப்பை (Infinite value) மட்டுப்படுத்துகிறது என்று சிலர் குற்றஞ்சாட்டினார்கள். அவர்கள் அது விளக்கும் போதனை என்ன என்பதை சிந்தித்துப் பார்க்காமல் வெறும் தலைப்பை மட்டுமே வைத்து அந்தத் தீர்மானத்துக்கு வந்தார்கள். வேறு சிலர், இந்தக் கருத்து பிதாவின் நீதியையும், கருணையையும், அன்பையும் மாசுபடுத்துகிறது, அவர் நிச்சயம் சிலரை இரட்சிப்பதற்காக மட்டும் தன் குமாரனைப் பலியாக்கியிருக்க மாட்டார் என்று குறை கூறினார்கள். இப்படிப்பட்டவர்களே கிறிஸ்துவின் மரணத்தின் பலாபலன்களை வேறுவிதமாக விளக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் கண்டுபிடித்த கருத்தே, “கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் எல்லோருக்கும் போதுமானது, ஆனால் சிலருக்கு மட்டுமே பயனளிக்கும்” என்பது. இந்தக் கருத்தில் என்ன தவறிருக்கிறது என்பதை நாம் ஆராயாமல் இருக்க முடியாது.

1. முதலில் இந்தக் கருத்து ‘வரையறுக்கப்பட்ட பரிகாரப்பலி’ என்ற கருத்தை சரிவரப் புரிந்துகொள்ளவில்லை. வரையறுக்கப்பட்ட பரிகாரப்பலி என்ற உண்மை கிறிஸ்துவின் மரணத்தின் பலன்களின் மதிப்பை எந்தவிதத்திலும் மட்டுப்படுத்துகின்ற வார்த்தைப் பிரயோகமல்ல. அதன் நோக்கம் கிறிஸ்துவின் மரணம் எத்தகைய பெலன் கொண்டது என்பதை விளக்குவதல்ல; கிறிஸ்துவின் மரணத்தின் பலாபலன்கள் யாருக்குரியது என்பதை விளக்குவதே. கிறிஸ்துவின் மரணத்தின் பலாபலன்களை அடையவேண்டியவர்களின் எண்ணிக்கை கடவுளால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதை அது விளக்குகிறது. “இந்த வார்த்தைப் பிரயோகம் சரியானதா இல்லையா என்பதைவிட அது எதை விளக்குகிறது என்பதுதான் முக்கியமானது” என்று பேராசிரியர் ஜோன் மரே சொல்லியிருக்கிறார் (Pg 64, Redemption Accomplished and Applied). தப்பான எண்ணத்தை சிலர் மனதில் அது தோற்றுவிக்கிறது என்பதால்தான் அந்தக் கருத்தை வேறு பெயர்களிலும் அழைப்பார்கள். அதாவது, ‘குறிப்பிட்டவர்களுக்கான பரிகாரப்பலி அல்லது மீட்பு’ என்ற வார்த்தைப் பிரயோகம் யாருக்காக கிறிஸ்து சிலுவையில் மரித்தார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. குறிப்பிட்டவர்களுக்காகவே அதாவது, அநாதி காலத்தில் எவரைக் கடவுள் இரட்சிக்கப்போகிறேன் என்று நிர்ணயித்தாரோ அவர்களுக்காகவே அவர் மரித்தார் (எபேசியர் 1:4-6) என்பதே அது தரும் விளக்கம்.

2. இந்தக் கருத்தின் இரண்டாவது தவறு, இது கிறிஸ்து எல்லோருக்குமாக மரித்தார் என்று தவறாக அனுமானம் செய்கிறது. அதாவது, எல்லோரையும் இரட்சிக்கக்கூடிய வகையில் மரிப்பதற்காக கிறிஸ்து அனுப்பப்பட்டு அத்தகைய வல்லமையுள்ள பரிகாரப்பலியை அவர் நிறைவேற்றினார் என்கிறது இந்தக் கருத்து. அது தவறான அனுமானம். வேதம் அப்படிச் சொல்லவில்லை. வேதம் தெளிவாக கிறிஸ்து தன்னுடைய ஆடுகளுக்காக, தன்னுடைய மக்களுக்காக, தன் கரத்தில் பிதாவினால் ஒப்புக்கொடுக்கப்பட்டவர்களுக்காக, எவருக்காக தான் இந்த உலகத்திற்கு வந்தாரோ அவர்களுக்காக, தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக, பிதாவினால் உலகத்தோற்றத்திற்கு முன்பாக முன்குறிக்கப்பட்டவர்களுக்காக மரித்தார் என்றே பல இடங்களிலும் ஆணித்தரமாக விளக்குகிறது. அதைவிட்டுவிட்டு கிறிஸ்து எல்லோருக்குமாக, அதாவது, முழு மனிதகுலத்துக்குமாக, ஒருவர் தவறவிடாமல் அனைவருக்குமாக மரித்தார் என்று சொல்லுவது வேதத்தில் முற்றிலும் காணப்படாத போதனை.

3. இந்தக் கருத்தின் மூன்றாவது தவறு, இது கிறிஸ்துவின் மரணத்தை மாசுபடுத்துகிறது. கிறிஸ்து சிலுவையில் தன்னைப் பரிகாரப்பலியாக ஒப்புக்கொடுத்தபோது தான் இரட்சிக்கப்போகிறவர்களை நிச்சயம் இரட்சிக்கக்கூடிய அனைத்தையும் அதன் மூலம் செய்து முடித்தார். ஆகவே, அந்தப் பரிகாரப்பலி அவர்களுடைய முக்காலத்துப் பாவங்களையும் அடியோடு அகற்றக்கூடிய வல்லமையைக் கொண்டிருந்தது. இரட்சிக்கப்படப் போகிறவர்களுக்கு அது எந்தவித சந்தேகமுமில்லாமல் பாவநிவாரணம் தரக்கூடிய பலியாக இருந்தது. அப்படியிருக்கும்போது அது முழு மனிதகுலத்தையும் இரட்சிக்கக்கூடியது என்று தீர்மானித்தால் முழு மனித குலமும் நிச்சயமாக இரட்சிக்கப்பட வேண்டும். ஆனால், அப்படிக் கூறுவது வேதம் போதிக்காத போலிப்போதனையில் (Universalism) போய் முடிந்துவிடும். ஏனென்றால், முழு மனிதகுலத்துக்கும் அறிவிக்கப்படும்படியாக சுவிசேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர முழு மனிதகுலத்தையும் இரட்சிக்கும்படியாக கிறிஸ்து கொடுக்கப்படவில்லை. யோவான் 3:16ல், “அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்” என்ற வார்த்தைகளை வைத்து இயேசு முழு உலகத்தையும் இரட்சிப்பார் என்று கூறுவது பெருந்தவறு. ‘உலகம்’ என்ற வார்த்தை வேதத்தில் ‘உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும்’ என்ற அர்த்தத்தில் அது காணப்படும் இடங்களிலெல்லாம் பயன்படுத்தப்படவில்லை. யோவான் 3:16ல் அது உலகத்தில் உள்ள நாடுகளையும், வெவ்வேறு இனங்களையும் குறிக்கும் ‘ஆகுபெயராகவே’ பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘உலகம்’ என்ற பதம் வரும் இடங்களில் உள்ள பகுதியை அதன் சந்தர்ப்பத்தின் அடிப்படையில் ஆராய்ந்தே பொருள் கொடுக்க வேண்டும். ஜோன் ஓவனின் “கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்” என்ற நூல் இதைத் தெளிவாக விளக்கும் அருமையான நூல். (ஓவனின் இந்த நூல் சுருக்கமாக தமிழில் வெளியிடப்பட்டிருக்கிறது.)

இதுவரை “கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் எல்லோருக்கும் போதுமானது, ஆனால் சிலருக்கு மட்டுமே பயனளிக்கும்” என்ற வாசகங்களில் உள்ள மூன்று தவறுகளை சுட்டிக் காட்டியிருக்கிறேன். இந்த வாசகங்கள் வேத உண்மைகளுக்குப் புறம்பானவை. கிறிஸ்துவின் மரணம் பற்றிய வேத சத்தியங்களை திரித்துக் காட்டுபவை. இனி கிறிஸ்துவின் மரணத்தின் பலாபலன்கள் பற்றிய உண்மையை சுருக்கமாக விளக்கிவிடுகிறேன்.

கிறிஸ்துவின் மரணத்தின் பலாபலன்கள்

கிறிஸ்து சிலுவையில் தன்னுடைய பரிகாரப்பலியின் (Atonement) மூலம் சம்பாதித்த பலாபலன்கள் வரையறுக்க முடியாத, எல்லையற்ற மதிப்புக் கொண்டது. அது உலகத் தோற்றத்துக்கு முன்பே முன்குறிக்கப்பட்ட அத்தனை பேருடைய சகல பாவங்களையும் அகற்றி அவர்களுக்கு இரட்சிப்பு வழங்கக்கூடிய எல்லையில்லாத மதிப்பும் வலிமையும் கொண்டது (Infinite in value). இதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆகவே, கிறிஸ்துவின் பரிகாரப்பலியின் எல்லையற்ற மதிப்பை எவரும் கட்டுப்படுத்த முடியாது.

இப்படியாக கிறிஸ்து தன் பரிகாரப்பலியின் மூலமாக சம்பாதித்த பலன்கள் பிதாவினால் முன்குறிக்கப்பட்டவர்களின் பாவங்களை அகற்றி அவர்களுக்கு கிறிஸ்துவில் இரட்சிப்பு வழங்கப் போதுமானது (Sufficient). இதிலும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. கிறிஸ்துவால் ஒரே தடவை நிறைவேற்றப்பட்ட பரிகாரப்பலியைத் தவிர வேறு எதுவும் பாவிகளின் இரட்சிப்புக்கு அவசியமில்லை. அந்தளவுக்கு கிறிஸ்துவின் பரிகாரப்பலி தெரிந்துகொள்ளப்பட்ட அனைவருடைய பாவங்களையும் கழுவிச் சுத்தப்படுத்தும் நிலையில் பூரணமாக போதுமான தன்மையுடன் இருக்கிறது.

இதை 1689 விசுவாச அறிக்கை பின்வருமாறு விளக்குகிறது:

வி. அ. 8:1 – “நித்தியத்திலிருந்தே கடவுள் தனது குமாரனுக்கு சந்ததியாகப் போகிறவர்களை அவரிடம் தந்திருந்தார். குமாரன் அவர்களை குறிப்பிட்ட காலத்தில் மீட்டு, அழைத்து, நீதிமான்களாக்கி, பரிசுத்தப்படுத்தி மகிமைப்படுத்தும் செயலில் ஈடுபட்டார்.”

வி. அ 8:5 – “. . . பிதாவினால் தமக்குக் கொடுக்கப்பட்ட எல்லோருக்காகவும் பரலோக ராஜ்ஜியத்தில் ஒரு நித்திய சுதந்திரத்தைக் கிரயம் செலுத்தி வாங்கினார்.”

குறிப்பு: 1689 விசுவாச அறிக்கையின் PDF பிரதியை பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.

இதுவரை பார்த்த விசுவாச அறிக்கையின் வாசகங்கள் மிகத் தெளிவாக கிறிஸ்து செலுத்திய பரிகாரப் பலியையையும், அதை யாருக்காக செலுத்தினார் என்பதையும் விளக்குகின்றன.

கிறிஸ்துவின் பரிகாரப்பலி மனித குலம் அனைத்தையும் இரட்சிப்பதற்காக செலுத்தப்பட்டதா? என்றால் இல்லை என்றுதான் உறுதியாக பதிலளிக்க முடியும். அப்படி சொல்லுவது கிறிஸ்துவின் பரிகாரப்பலியின் மதிப்பையும் போதுமான தன்மையையும் குறைவுபடுத்துவதாகாது. உண்மையில் எல்லையற்ற மதிப்புள்ள அந்தப் பரிகாரப்பலி யாருக்கு செலுத்தப்பட்டது அல்லது யாருக்கு பலன்கொடுப்பதாக இருக்கிறது என்பதுதான் கேள்வி. அந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் 1689 விசுவாச அறிக்கை பின்வறுமாறு விளக்குகிறது. “கிறிஸ்து தான் யாருக்காகவெல்லாம் நித்திய மீட்பை பெற்றுக்கொண்டாரோ அவர்கள் அனைவருக்கும் அதை நிச்சயமாகவும், திட்ப உறுதியாகவும் அளித்துப் பலிதமாக்குகிறார் . . . ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் காணப்படக்கூடிய எந்த நன்மையையும் முன்னறிந்ததன் விளைவாக அல்லாமல் நிபந்தனையற்ற முறையில் இவை செய்யப்படுகின்றன.’” விசுவாச அறிக்கையின் இந்த வாசகங்கள் கிறிஸ்து பிதாவினால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு மட்டுமே அவருடைய பரிகாரப்பலியின் பலன்கள் உரித்தானவை என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

ஒரு பேச்சுக்கு சொல்லப்போனால், உண்மையில் கிறிஸ்துவின் மரணத்தின் பலாபலன்கள் மனுக்குலமனைத்தின் பாவத்தையும் போக்கக் கூடிய வல்லமையுடையது. அந்தளவுக்கு அது எல்லையற்ற மதிப்பும் வல்லமையும் கொண்டது. எந்தவிதத்திலும் குறைவற்றதாக அனைத்துப் பாவங்களையும் கழுவக்கூடிய போதுமான தன்மை கொண்டது. அதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால், இந்த இடத்தில்தான் பிரச்சனையும் இருக்கிறது. உண்மையில் அந்த நோக்கத்துடன்தான் பிதாவும், குமாரனும் மீட்பின் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்களா? அந்த நோக்கத்துடன்தான் பிதா குமாரனை இந்த உலகத்துக்கு அனுப்பினாரா? என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்றுதான் பதிலளிக்க வேண்டியிருக்கிறது. அதுதான் வேதம் போதிக்கும் உண்மையும்கூட.

இப்படிக் குறைவற்ற எல்லையில்லா மதிப்புடைய கிறிஸ்துவின் பரிகாரப்பலியின் பலாபலன்களை சிந்தித்துப் பார்க்காமல் மனுக்குலமனைத்துக்கும் உரிமையானதாகக் காட்டும்போதுதான் சிலர் தவறிழைக்கிறார்கள். அப்படிச் செய்வதற்கு அவர்களுக்கு எந்த உரிமையையும் வேதம் கொடுக்கவில்லை. தன்னுடைய ஆடுகளுக்காக மட்டுமே இந்த உலகத்துக்கு வந்ததாக இயேசு தெளிவாகப் போதித்திருக்கிறார். அந்த ஆடுகளுக்கு கிறிஸ்துவின் பரிகாரப்பலியின் பலன்கள் போய்ச் சேர வேண்டும் என்பதே பிதாவினுடையதும், குமாரனுடையதும் திட்டமாக இருக்கிறது. எவருக்காக பரிகாரப்பலி (Atonement) செலுத்தப்பட்டதோ அவர்களே கிறிஸ்துவால் மீட்கப்படுகிறார்கள் (Redemption). எவரெவர் முன்குறிக்கப்பட்டு கிறிஸ்துவில் இரட்சிப்புக்காக தெரிந்துகொள்ளப்பட்டார்களோ அவர்களுக்காகவே கிறிஸ்து நீதியை சம்பாதித்து ஒப்புரவாக்குதலையும் (Reconciliation) உண்டுபண்ணினார். கிறிஸ்துவின் பரிகாரப்பலி விலைமதிப்பற்றது. அவருடைய மீட்பு முன்குறிக்கப்பட்டவர்களுக்குரியது. உலகத்தோற்றத்திற்கு முன் பிதாவும், குமாரனும் உருவாக்கிய உடன்படிக்கை அவர்களால் தெரிந்துகொள்ளப்பட்ட ஆடுகளை மீட்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆடுகளுக்காகவே கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்தார். அந்த ஆடுகள் பாவிகளாக மனுக்குலத்திலே நிறைந்திருக்கிறார்கள். அந்த ஆடுகளில் ஒன்று தவறாமல் கிறிஸ்து தன்னிடம் அழைத்துக்கொள்ளுவார். இதுவே வேதம் போதிக்கும் உண்மை.

வேதம் போதிக்கும் உண்மை இப்படியிருக்க, “கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் எல்லோருக்கும் போதுமானது, ஆனால் சிலருக்கு மட்டுமே பயனளிக்கும்” என்று கூறுவது உண்மைக்கு மாறானதாகும். கிறிஸ்துவின் பரிகாரப்பலி எல்லோருக்கும் போதுமானதாக இருந்தால் எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டும். அவ்வாறு எல்லோரும் இரட்சிக்கப்படாமல் சிலர் மட்டும் இரட்சிக்கப்படுவார்களானால் கிறிஸ்துவின் பரிகாரப்பலியின் மதிப்பு குறைந்துவிடும்.

கர்த்தரின் திட்டமும் நோக்கமும் தன்னுடைய மக்களைக் கிறிஸ்துவின் மூலம் இரட்சிப்பதுதான். “கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் எவருக்காகப் போதுமானதாக நிறைவேற்றப்பட்டதோ அவர்களுக்கு மட்டுமே பலனளிக்கும்” என்பதுதான் சரியான விளக்கமாகும். வேத சத்தியங்களைப் பொறுத்தவரையில் சிலருக்கு அவை பிடிக்கவில்லை என்பதற்காக நடுநிலையை உருவாக்கப் பார்ப்பது சத்தியப் புரட்டலில் கொண்டுபோய் விட்டுவிடும். இதில் கரகாட்டத்துக்கு இடமில்லை.

கிறிஸ்துவின் பரிகாரப்பலியும் பொதுவான கிருபையும்

கிறிஸ்துவின் பரிகாரப்பலி தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு மட்டுமே பலனளிக்குமென்று வேதம் போதிப்பதைத் தெள்ளத் தெளிவாகப் பார்த்துவிட்டோம். ஸ்பர்ஜன் கூறுவதுபோல், “தர்சுவைச் சேர்ந்த பவுலுக்காக மரித்ததுபோல் கிறிஸ்து யூதாஸுக்காகவும் மரித்தார் என்று நிச்சயமாகக் கூறமுடியாது.” இருந்தபோதும் அந்தப் பரிகாரப்பலியால் தெரிந்துகொள்ளப்படாதவர்களுக்கு பொதுவான சில நன்மைகள் கிட்டுவதாக சிலர் விளக்குகிறார்கள். இதை சார்ள்ஸ் ஸ்பர்ஜனும் விளக்கியிருக்கிறார். கிறிஸ்துவின் பரிகாரப் பலியின் மூலம் பல நன்மைகள் இருப்பதாகக் கூறும் அவர் அவற்றிலொன்றாக, “அது பாவிகளின் மேல் கடவுளுக்கு இருக்கும் பொதுவான கருணையையும், அவர்களுக்கு அவரளிக்கும் பொதுவான நன்மையையும் காட்டுகிறது” என்கிறார். அதுமட்டுமல்லாமல், “பாவம் செய்ததனால் உடனடியாக அழிக்கப்பட்டிருக்க வேண்டிய மனித குலம் அதை உடனடியாக அனுபவிக்காமல் கிறிஸ்துவின் பரிகாரப்பலியின் காரணமாக தள்ளிப்போடப்பட்டிருப்பதோடு, அவர்களுடைய பாவ நடவடிக்கைகளை அவர் இவ்விடைக்காலத்தில் மட்டுப்படுத்துவதோடு தற்காலிகமாக இந்த உலகத்தில் பல நன்மைகளை அனுபவிக்கவும், தடையில்லாமல் சுவிசேஷத்தைக் கேட்கும் ஆசீர்வாதத்தையும் கொடுத்திருக்கிறார்” என்று விளக்கியிருக்கிறார். ஸ்பர்ஜனுடைய இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். இதை எசேக்கியல் 18:32; 1 தீமோத்தேயு 2:4 ஆகிய வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதுபோல் பல வசனங்கள் வேதத்தில் காணப்படுகின்றன. இத்தகைய பொதுவான பலன்களைவிட கிறிஸ்துவின் மரணத்தின் காரணமாகத்தான் இன்றைக்கு மனுக்குலமனைத்தும் சுவிசேஷத்தைக் கேட்டுப் பாவத்தில் இருந்து விடுபட வழியேற்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் மரணம் நிகழ்ந்திராவிட்டால் சுவிசேஷத்திற்கு வழியிருந்திருக்காது.

யாருக்கு, எப்படி சுவிசேஷம் சொல்லுவது?

இத்தனையையும் விளக்கிய பிறகும் சிலருக்கு முக்கியமான ஒரு கேள்வி எழலாம். அப்படியானால் நாம் யாருக்கு எப்படி சுவிசேஷத்தை சொல்லுவது? என்பதுதான் அது. அந்தக் கேள்விக்கு நிச்சயம் பதிலளிப்பது அவசியம். சுவிசேஷத்தை நாம் எல்லோருக்கும் பாரபட்சமெதுவுமின்றி அறிவிக்க வேண்டும். சுவிசேஷத்தைக் கேட்டு மனந்திரும்ப அவசியமில்லாத பாவி ஒருவர்கூட இந்த உலகத்தில் இல்லை. படைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் சுவிசேஷம் தேவை. சுவிசேஷம் தெரிந்துகொள்ளப்பட்டிருப்பவர்களுக்காக மட்டும் பிரசங்கிப்படாமல் எல்லோரும் கேட்கும்படியாக சகல நாடுகளிலும், சகல இனங்கள் மத்தியிலும் பிரசங்கிக்கப்பட வேண்டும் என்பதை இயேசுவே மத்தேயு 28:18-20 வரையுள்ள வசனங்களில் கட்டளையாகத் தந்திருக்கிறார்.

சுவிசேஷத்தை அறிவிக்கும்போது நாம் எவரையும் பார்த்து ‘கிறிஸ்து உனக்காக மரித்தார்’ என்று சொல்ல முடியாது. அது முழுப் பொய்; பெருந்தவறு. அப்படி அறிவிக்க வேதம் அனுமதிக்கவில்லை. எந்த மனிதனுக்காக கிறிஸ்து மரித்தார் என்பதை அறிந்த மனிதர்கள் எவருமில்லை. அது பிதாவுக்கும், குமாரனுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை. அது தெரிந்தவர்கள்போல் நாம் எவரையும் பார்த்து ‘கிறிஸ்து உனக்காக மரித்தார், இன்றே கிறிஸ்துவிடம் வந்துவிடு’ என்று சொல்லுவது தவறு. மனிதர்கள் தங்களைத் தாங்களே இரட்சித்துக்கொள்ளுவதற்கு வழியேற்படும் விதத்தில் கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை. தெரிந்துகொள்ளப்பட்டவர்களை நிச்சயமாக இரட்சிக்கும்படியாக அவர் சிலுவையில் மரித்தார். ஆகவே, யாரைப் பார்த்தும் “உனக்காக இயேசு மரித்தார்” என்று சொல்லுவது தவறு; அது அப்பட்டமான பொய்.

சுவிசேஷம் சொல்லும்போது தெரிந்துகொள்ளுதலை பாவிகளுக்கு விளக்கும்படியாக வேதம் போதிக்கவில்லை. தெரிந்துகொள்ளுதலல்ல பாவிகளுக்கு இரட்சிப்பைக் கொடுப்பது; கிறிஸ்து இயேசுவே அவர்களை இரட்சிக்கிறவராக இருக்கிறார். ‘நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள்’ என்று பாவிகளாகிய மனிதரைப் பார்த்துக் கேட்பது ஹைபர்-கல்வினிசம்.  ‘பாவிகளாகிய நீங்கள் ஏன் இன்னும் இரட்சகராகிய கிறிஸ்துவிடம் வராமலிருக்கிறீர்கள்?’ என்று கேட்பது வேத சுவிசேஷம்.

அத்தோடு சுவிசேஷம் சொல்லும்போது, நாம் சுவிசேஷத்தில் அதைக் கேட்பவர்களுக்கு பரிகாரப்பலியைக் கொடுக்கக்கூடாது. அதுவும் தவறு. பரிகாரப்பலியல்ல பாவியை இரட்சிப்பது; அதை நிறைவேற்றிய கிறிஸ்துவே பாவிக்கு இரட்சிப்பைக் கொடுக்கிறார். சுவிசேஷத்தில் கிறிஸ்துவையே நாம் பாவிகளுக்கு அளிக்க வேண்டும். பாவங்களை நீக்கக்கூடிய கிறிஸ்துவிடம் வரும்படியாக அவர்களை அழைக்க வேண்டும். கிறிஸ்துதான் பாவத்தை நீக்கி இரட்சிப்பு அளிக்கக்கூடியவராக இருக்கிறார்; பரிகாரப்பலியல்ல. கிறிஸ்துவின் பரிகாரப்பலியையும் சுவிசேஷத்தையும் போட்டு மனதைக் குழப்பிக்கொள்ளக் கூடாது. சுவிசேஷம் இரட்சகரிடம் வரும்படி பாவியை அழைக்கிறதே தவிர பரிகாரப்பலியிடம் வரும்படி அல்ல. சுவிசேஷத்தைக் கேட்கிற பாவியாகிய மனிதன் கிறிஸ்துவின் பரிகாரப்பலி தனக்குரியதா என்று ஆராய்ந்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவன் கவலைப்பட வேண்டியதெல்லாம், ‘நான் பாவியா’ என்று சிந்தித்துப் பார்ப்பதுதான்; தன்னைக் கிறிஸ்து இரட்சிப்பாரா என்று கேட்டுப்பார்ப்பதுதான்; அப்படி இரட்சகராக அவர் இருந்தால் அவர் அழைப்புக்கு நான் ஏன் இன்னும் செவிசாய்க்காமல் இருக்கிறேன் என்று கேட்டுப் பார்ப்பதுதான்.

ஒருவனின் இருதயத்தில் சுவிசேஷம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமானால், அவன் தான் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறேனா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவனுடைய கடமையல்ல. தனக்காக கிறிஸ்து மரித்திருக்கிறாரா என்று கேட்டுப் பார்ப்பதும் தவறு. தன்னுடைய பாவ வியாதிக்கு மருந்திட்டு தன்னை விடுதலை செய்ய யாரிருக்கிறார்? என்று கேட்பதே அவனுடைய கடமை. கிறிஸ்துவை நோக்கிப் பார்! பாவ நிவாரணத்துக்காக கிறிஸ்துவிடம் ஓடு! என்கிறது கிறிஸ்துவின் சுவிசேஷம். இயேசு சொல்லுகிறார், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” (மத்தேயு 11:28). மனிதனுக்கு தேவை கிறிஸ்துவே. அவன் தன் இரட்சிப்பிற்காக அவரிடம் மட்டுமே போக வேண்டும் (1 தீமோதேயு 2:5-6).

ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள் – பிதாவின் தெரிந்துகொள்ளுதலும், திட்ப உறுதியான அழைப்பும், கிறிஸ்துவின் முன்குறிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரப்பலியும், அனைத்துப் பாவிகளுக்குமான சுவிசேஷமும் ஒன்றுக்கொன்று முரணான சத்தியங்களல்ல. இவையெல்லாமே ஒன்றோடொன்று கர்த்தரின் மகா ஞானத்தின்படி பொருந்திப்போகின்ற வேத உண்மைகள். பிதாவின் தெரிந்துகொள்ளுதலில் கிறிஸ்துவின் பரிகாரப்பலி தங்கியிருக்கிறது. கிறிஸ்துவின் பூரணமான ஒரேதடவை நிறைவேற்றப்பட்ட பரிகாரப்பலி இல்லாமல் சுவிசேஷ செய்தி உருவாகியிருக்க முடியாது. பாவிகளின் பாவங்களையெல்லாம் கழுவியெடுக்கக்கூடிய கிறிஸ்துவின் பரிகாரப்பலியே சுவிசேஷத்தைத் தாங்கி நின்று அதற்கு வலிமையூட்டுகின்றது. நம்முடைய கண்களுக்கு இவை ஒத்துப்போகாததுபோல் முரண்பட்டுத் தெரிகிறது என்பதற்காக இவற்றை தத்துவரீதியாக சமநிலைப்படுத்தும் கரகாட்டத்தில் நாம் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. பூரணர்களாக இல்லாமலிருக்கும் நம் கண்களில்தான் முரண்பாடே தவிர வேதத்தில் அல்ல. வேதம் தெளிவானது; சத்தியமானது. இணைத்துப் பார்க்கக் கூடாதவைகளை இணைத்துப் பார்க்க முயற்சிக்காமலும், இரகசியமாக தேவன் வைத்திருப்பவற்றை அறிந்துகொள்ளப் பெரும்பாடுபடாமலும், பிரிக்கக் கூடாதவைகளை பிரித்துப் பார்க்காமலும் சத்தியங்களை சத்தியமாக உள்ளதை உள்ளவாறு விசுவாசத்தோடு ஏற்று வேதத்தைப் பின்பற்றுவதே மெய்க் கிறிஸ்தவனின் பணி. அதற்காகவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

_____________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

One thought on “கரகாட்டக்காரனும் நடுநிலையாளனும்

  1. இணைத்துப் பார்க்கக் கூடாதவைகளை இணைத்துப் பார்க்க முயற்சிக்காமலும், இரகசியமாக தேவன் வைத்திருப்பவற்றை அறிந்துகொள்ளப் பெரும்பாடுபடாமலும், பிரிக்கக் கூடாதவைகளை பிரித்துப் பார்க்காமலும் சத்தியங்களை சத்தியமாக உள்ளதை உள்ளவாறு விசுவாசத்தோடு ஏற்று வேதத்தைப் பின்பற்றுவதே மெய்க் கிறிஸ்தவனின் பணி. அதற்காகவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
    I like that and it is Absolutely true..
    Thank you for differentiation and explanation..

    Like

மறுமொழி தருக