அஞ்சரை பெட்டிக்குள்

சமையலுக்குத் தேவையான பலவித மசாலாவகைகளைத் தனித்தனியாகப் பிரித்து ஒரே பெட்டியில் டப்பாக்களில் வரிசையாய் வைத்திருப்பார்கள் வீட்டுப்பெண்கள். அந்தப் பெட்டிக்குப் பெயர் அஞ்சரை பெட்டி. பல விஷயங்களை ஒரே நேரத்தில் இந்த ஆக்கத்தில் நான் விளக்கப்போவதால் இந்தப் பெயரைக் கொடுத்திருக்கிறேன். ஏறக்குறைய மூன்று வாரங்கள் வெளியூர் பயணத்திற்குப் பிறகு மறுபடியும் ஊர் வந்து சேர்ந்திருக்கிறேன். வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் எல்லாவற்றையும் நாம் பெரிதுபடுத்துவதில்லை; முக்கியமாக சிறுசிறு நிகழ்ச்சிகளை. பெரிய சம்பவங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துவிடுகிறோம்; அதுவும் அவை நம்மைப் பாதிப்பதாலோ அல்லது நமக்கு நன்மை தருவதாலோ மட்டுமே. இந்த மூன்று வாரங்களில் எத்தனையோ நிகழ்ச்சிகள் என் வாழ்க்கையில் மட்டுமல்ல, சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையிலும் உலகத்திலும் நடந்து முடிந்திருக்கின்றன. நினைத்துப் பார்க்கவேண்டியவையும், பாராட்டவேண்டியவையும், கடவுளைப் போற்றவேண்டியவையும், மறந்துபோக வேண்டியவையும், மனதைத் தவிக்கவைத்தவையும், மகிழ்ச்சி அடையச் செய்யதவையும் என்று ஏராளமான விஷயங்களுக்கு முகங்கொடுத்து கடந்துவந்திருக்கின்றோம். மனிதனாகப் பிறந்திருக்கும் நமக்கு எல்லா விஷயங்களையும் சம அளவில் நினைத்துப் பார்க்கவோ அவற்றில் இருந்து பாடங்கற்றுக்கொள்ளவோ முடியாது; நமது ஞானமும், ஆற்றலும் குறைவானது. இருந்தபோதும் நடந்துபோன பல விஷயங்களை நினைத்துப் பார்க்காமலும் அவற்றில் இருந்து பாடங்கற்றுக்கொள்ளாமலும் இருப்பது மனிதனுக்கு உகந்ததல்ல. ஒன்று தெரியுமா? நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அனைத்திலும் கடவுள் சம்பந்தப்பட்டிருக்கிறார்; நேரடியாகவோ, பின்னால் இருந்தோ செயல்பட்டிருக்கிறார். அவரின்றி ஒன்றும் நிகழ்வதில்லை; அவர் சம்பந்தப்படாத விஷயங்கள் எதுவுமே இல்லை. கடவுள் இறையாண்மையுள்ளவர் என்ற அவசியமான, ஆழமான சத்தியத்தை நம்புகிற நாம் இதை நம்பித்தான் ஆகவேண்டும். இந்த நம்பிக்கையே நம்மை முன்செல்ல வைக்கிறது; ஊக்குவிக்கிறது; உற்சாகப்படுத்துகிறது.

புடம்போட்டெடுக்கும் போராட்டங்கள்

204px-Glazing_a_crucibleஊருக்கு வந்திறங்கியபோதே மனதைத் தளரவைக்கும் ஒரு செய்தியை நண்பர் ஒருவர் தொலைபேசியில் சொன்னார். அது நம்பிக்கைத் துரோகம் சம்பந்தமான விஷயம். அதைக் கேட்டபிறகு நான் சொன்னேன், ‘இதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை; என்ன, மனிதனாக நாம் பிறந்திருப்பதால் மனது கொஞ்சம் வலிக்கும். ஆனால், கிறிஸ்தவனாக இருப்பதால் இது தரும் பாடத்தைக் கற்றுக்கொண்டு, சம்பவத்தை ஒதுக்கிவைத்துவிட்டு முன்னோக்கிப் போகவேண்டும்’ என்று. மனிதர்கள் எப்போதும் மனிதர்களாகத்தான் இருப்பார்கள்; கிறிஸ்தவர்களும்கூட. வாழ்க்கையில் சுகமும், துக்கமும் சேர்ந்தே வரும்; ஆழமான நட்பின் அனுபவத்தையும், நம்பிக்கைத் துரோகத்தையும் நாம் சேர்ந்தே அனுபவிப்போம். தொலைபேசியில் பேசிய நண்பருக்கு ஆறுதல் சொல்லி, செய்யவேண்டிய ஆத்மீகப் பணிகளில் இருந்து நமது கவனத்தைத் திசைதிருப்பப் பார்க்கும் இத்தகைய சம்பவங்களை ஒதுக்கிவைத்துவிட்டு முன்னோக்கிப் போவதை இலக்காகக் கொண்டிருக்கவேண்டும் என்று பேச்சை முடித்தேன்.

நடைமுறைக் கிறிஸ்தவத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். கிறிஸ்தவம் நமக்கு கடவுளோடு உறவை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. கிறிஸ்துவை வாழ்க்கையில் அடையவும், அவருக்காக வாழவும் நமக்கு மறுபிறப்பைத் தந்திருக்கிறது. இருந்தபோதும் இது கிறிஸ்துவை நம்பி, அவருடைய போதனைகளை வாழ்க்கையில் அன்றாடம் பின்பற்றி விசுவாசத்தோடு வாழவேண்டிய வாழ்க்கை; அதுவும் போராட்டங்களின் மத்தியில் வாழவேண்டிய வாழ்க்கை. போராட்டங்கள் இதில் முக்கிய இடம் பெறுகின்றன. இப்போராட்டங்கள் நம்முடைய பாவ சரீரத்தோடு நாம் போராடி இச்சைகளைத் தொடர்ந்து அழிப்பதனால் ஏற்படலாம்; நம்மைப் பிடிக்காதவர்கள் மூலம் நமக்கு ஏற்படலாம்; சத்தியத்தை மட்டும் விசுவாசித்து அதற்காகத் தலை நிமிர்ந்து நிற்பதனால் ஏற்படலாம்; நாம் நம்பியவர்கள் நமக்கு ஏமாற்றத்தைத் தரும்போது ஏற்படலாம்; நம்முடைய சரீர பலவீனத்தினால் உண்டாகலாம்; பிசாசின் கிரியைகளினால் ஏற்படலாம்; இன்னும் சொல்லப்போனால் பாவமான இந்த உலகத்தில் பரிசுத்தமாக வாழ நாமெடுக்கும் முயற்சிகள் அனைத்தும் போராட்டத்தைச் சந்திக்காமல் இருக்க வழியில்லை. போராட்டங்கள் இல்லாமல் பரிசுத்த வாழ்க்கையில் முன்னேற்றம் கிடையாது. ஒருவகையில் நாம் சந்திக்கும் போராட்டங்கள் நமக்கு சவால்கள். இந்தப் போராட்டங்கள் இல்லாமல் கிறிஸ்தவ வாழ்க்கையை நாம் நினைத்தும் பார்க்கமுடியாது. போராட்டங்களால் நம்மை அழிக்க முடியாது; அவை நம்மைப் புடம்போட்டெடுக்கும் அக்கினி. அக்கினி எரியும், சரீரத்தில் வலியை ஏற்படுத்தும்; ஆனால் நம்மை சுட்டெரிக்காது, இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடாது. இதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?

ஒவ்வொரு போராட்டமும் நமக்கு சவாலாக அமைந்து நம்முடைய பாவங்களிலும், தவறுகளிலும் இருந்து நம்மைத் திருத்திக்கொள்ள உதவுகின்றன. அத்தோடு கிறிஸ்துவின் கிருபையின் மகத்துவத்தை உணர்ந்து அதில் வளரவும் உதவுகின்றன. இவை போராட்டம் நம்மில் ஏற்படுத்தும் இருவகை நிகழ்வுகள். இங்கு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசமும், ஜெபமும் நமக்கு உறுதுணையாக இருக்கும் சாதனங்கள். இந்தப் போராட்டங்களுக்கு முகங்கொடுத்து தளர்ந்து போகிறவர்கள் ஒன்றில் பலவீனமான கிறிஸ்தவர்களாக இருப்பார்கள், அல்லது கிறிஸ்தவர்களாகத் தங்களைத் தவறாக எண்ணி மறுபிறப்பை அனுபவிக்காமல் வாழும் போலிகளாக இருப்பார்கள். இந்தப் போராட்டங்களை வெற்றிகண்டு முன்னோக்கிப் போகிறபோதே ஒருவரின் ஆத்தும வாழ்க்கையின் இரகசியத்தை நாம் அறிந்துணர்கிறோம். போலிகளுக்கு போராட்டங்கள் எதிரிகள்; கிறிஸ்துவை நேசிக்கிறவர்களுக்கு அவை வெறும் சவால்கள் மட்டுமே. ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே, கிறிஸ்துவை விசுவாசிக்கும் நமக்கேன் இந்தப் போராட்டங்கள் என்று நீங்கள் கேட்கலாம். மரணத்துக்குரிய சரீரத்தை நாம் தொடர்ந்து சுமந்திருப்பதாலேயே (ரோமர் 7) போராட்டங்கள் இந்த உலகில் நாம் பூரணத்துவத்தை நோக்கிப் போகும் பாதையில் நம்மைப் புடம்போட்டெடுக்கும் கருவியாக இருந்துவருகின்றன.

வாசிப்பும் பொது அறிவும்

2115வெளிநாட்டுப் பிரயாணத்தின்போது நண்பர் ஒருவர் சொன்னார், ‘கிறிஸ்தவ விஷயங்களையும், கிறிஸ்தவ வாசிப்பையும் தவிர வேறு எதன் பக்கமும் போகக்கூடாது என்ற போதனையின்கீழ்தான் நான் வளர்ந்து வந்திருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பிருந்துதான் அது தவறு என்று உணர்ந்து வாசிப்பில் ஈடுபட்டிருக்கிறேன்’ என்று. இது பொதுவாகவே நம்மினத்துக் கிறிஸ்தவர்களிடம் இருந்து வரும் எண்ணம். யார் சொல்லித் தந்ததோ தெரியாது. அவர்களுக்குப் போதித்து வரும் போதகர்கள் கொண்டிருக்கும் தவறான நம்பிக்கையால் ஏற்பட்டதாகத்தான் இருக்கவேண்டும். கிறிஸ்தவர்கள் பரிசுத்தமான எண்ணங்களோடு இருக்கவேண்டும் என்ற காரணத்தால் கிறிஸ்தவ விஷயங்களைத் தவிர்த்த அனைத்துமே பாவமானதென்றும், பாவத்தில் நம்மைத் தள்ளிவிடும் என்றும் கருதி கிறிஸ்தவ எழுத்துக்களல்லாதவற்றையும், நேரடியாக கிறிஸ்தவத்தோடு தொடர்பில்லாதவற்றையும் அநேகர் புறக்கணித்து வருகின்றார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், கிறிஸ்தவர்களால் நடத்தப்படாத அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பட்டத்தையும், வேலையையும் பெற்றுக்கொள்ளுவதற்காக இவர்கள் எந்தப் கேள்வியும் கேட்காமல் கண்டதையும் தங்களுடைய பிள்ளைகள் படிக்க அனுமதிப்பதுதான்.

கிறிஸ்தவம் தவிர்த்த எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தக்கூடாது என்பது மிகத்தவறான வாதம்; நம்பிக்கை. கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களால் எழுதப்படும் கிறிஸ்தவபோதனைகளுக்கு முரணான விஷயங்களை நாம் ஒதுக்கிவைப்பது நியாயமானதுதான். கிறிஸ்துவின் வாழ்க்கைபற்றி வேதத்திற்கு முரணான விஷயங்களைக் கொண்டிருக்கும் ஒரு நூலை வாசித்து நாம் அடையப்போகும் பயன் ஒன்றுமில்லை. இருந்தாலும் இந்த உலகத்தில் வாழ்ந்தே பரிசுத்தத்தில் வளர வேண்டியிருக்கும் நாம் உலக ஞானமில்லாமல் இருந்துவிடக்கூடாது. உலகப்பிரகாரமாக வாழக்கூடாது என்றுதான் வேதம் சொல்லுகிறதே தவிர உலகஞானமில்லாமல் இருந்துவிடு என்று சொல்லவில்லை. பாவத்தால் பாதிக்கப்பட்டுத் தனது விடுதலைக்காகப் பரிதவித்துக்கொண்டிருக்கும் (ரோமர் 8) இந்த உலகத்தைக் கடவுள் தொடர்ந்து கரிசனையோடு பராமரித்தும் பாதுகாத்தும் வருவதாக வேதம் விளக்குகிறது. ஆகவே, இந்த உலகத்தை முற்றாகப் புறக்கணித்து ஒரு கிறிஸ்தவனால் விசுவாசத்தோடும் பரிசுத்தத்தோடும் வாழ முடியாது. இந்த உலகத்தில் காணப்படும், நமது பரிசுத்த வாழ்க்கைக்கு உதவாத பாவமான அம்சங்களை மட்டுமே நாம் எப்போதும் தவிர்க்க வேண்டும். இந்த உலகம் நாம் பயன்படுத்தி, அனுபவித்து நன்மையடையவே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த உலகத்தைப் புறக்கணித்து அதன் நிகழ்வுகளோடு நமக்கு சம்பந்தமில்லாதபடி நாம் வாழமுயற்சிப்பதற்குப் பெயர் கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல. 19ம் நூற்றாண்டில் எழுந்த ஒருவகை கிறிஸ்தவ ‘பரிசுத்தக் கூட்டத்தினர்’ இந்த உலகம் கிறிஸ்தவர்களுக்கு ஆபத்தானது என்று முடிவுகட்டி உலகத் தொடர்புகளனைத்தையும் அடியோடு முறித்துக்கொண்டு வாழமுற்பட்டார்கள். அத்தகைய போதனைகள் அனாபாப்திஸ்துகளின் வழிவந்தவர்களிடமும், மெனனைட் குழுவினரிடமும், சகோதரத்துவ சபைகளிடமும், கெரிஸ்மெட்டிக் குழுக்களிடமும் இன்றும் இருந்துவருகின்றன. இவர்களே கிறிஸ்தவர்களுக்கு அரசியல் கூடாது என்றும், போரில் ஈடுபடுவது தவறு என்றும், நாட்டுப் படைகளில் போர்வீரர்களாக இணையக்கூடாது என்றும், வரிகட்டக்கூடாதென்றும், இச்சைகளை அடக்கி ஆள கிறிஸ்தவத்தோடு தொடர்பில்லாத அனைத்தையும் வெறுத்து வாழவேண்டும் என்ற பல தவறான வேதம் போதிக்காத கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். இது பரிசுத்த வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதுபற்றிய தவறான எண்ணங்களால் ஏற்பட்டிருக்கும் ஆபத்தான போதனைகள்.

உண்மையில் கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தில் வாழும் நாட்களில், தாம் வாழும் நாடுகளில் நல்ல பிரஜைகளாக நாட்டில் அக்கறைகாட்டி கிறிஸ்துவை சகலவிதத்திலும் மகிமைப்படுத்த வேண்டும் என்று வேதம் போதிக்கிறது. ரோமர் 13ம் அதிகாரத்தில் ஒவ்வொரு ஆத்துமாவும் அரசாங்கங்களுக்கு கீழ்ப்படிந்து வாழவேண்டும் என்று பவுல் விளக்குகிறார். ஏனெனில் அரசை அமைத்துக்கொடுத்திருப்பவர் நாம் விசுவாசிக்கும் கடவுள். அவரில்லாமல் அரசிருக்க வழியில்லை. எல்லா அதிகார அமைப்புகளையும் அவரே வகுத்துத் தந்து நம்மை ஆளுகிறவராக இருக்கிறார் (13:1-7). அரச அதிகாரத்தினதும், அதன் கீழுள்ள அத்தனை அதிகார அமைப்புகளின் கட்டளைகளை மீறுவதும், அடிபணிய மறுப்பதும் ஆண்டவரையே எதிர்ப்பதற்கு சமமானதாகும். இதை நான் விளக்குவதற்குக் காரணம், அனைத்தையும் படைத்த ஆண்டவருக்கு இந்த உலகத்து மக்கள் மீதுமட்டுமல்லாமல் அதன் மீதும் அதிகமான அக்கறை இருக்கிறது என்பதைச் சுட்டுவதற்காகத்தான். இப்படியிருக்கும்போது இந்த உலகத்தைப் புறக்கணித்து ஒருவரால் எப்படி ஆண்டவரை மகிமைப்படுத்த முடியும்? தன்னை மட்டுமே மகிமைப்படுத்தும்படி ஆண்டவர் நம்மைக் கேட்கிறபோது, இந்த உலகத்தில் அவர் ஏற்படுத்தி வைத்திருக்கும் எந்தக் கட்டமைப்பையும் எதிர்க்காமல் அவற்றிக்கு உட்பட்டே தன்னை மகிமைப்படுத்தும்படிக் கேட்கிறார். அதனால் வரி செலுத்துவதும், படைகளில் இணைவதும், அரச பதவிகளை வகிப்பதும், வாக்களிப்பதும் கிறிஸ்தவன் நியாயமாக செய்ய வேண்டிய பணிகளே.

கிறிஸ்தவன் இந்த உலகத்தில் தன்னுடைய கடமைகளை ஆண்டவருடைய மகிமைக்காக செய்வதற்கு இந்த உலகத்தைப் பற்றிய பொதுவான அறிவு அவனுக்குத் தேவை. அந்த அறிவில்லாமல் அவன் வேதபோதனைகளை சரிவர உலகத்தில் நிறைவேற்ற முடியாது. வேதபோதனைகளை அவன் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அந்தப் போதனைகளை வைத்தே அவன் உலகத்தின் எல்லாக்காரியங்களையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியவனாக இருக்கிறான். பாவத்தை அவன் செய்யாதிருப்பதற்கு வேதபோதனைகளை அவன் அறிந்திருந்து பாவம் எது என்பதை ஆராய்ந்து தீர்மானித்து அதைச் செய்யாமலிருக்க வேண்டும். இந்த உலகத்தில் அவன் நிறைவேற்ற வேண்டிய கடமைகளைப் பூர்த்திசெய்ய அவனுக்கு வேதபோதனைகளும் அவற்றில் தெளிவும் அவசியம். இந்த உலகத்தில் அவன் அனுபவிக்கும்படி ஆண்டவர் அனுமதித்திருக்கும் காரியங்கள் எவை என்பதை ஆராய்ந்து அறிந்து அனுபவிக்கவும் அவனுக்கு வேதபோதனைகளில் நல்லறிவு தேவை. இதையே பவுல் ரோமர் 12:1-2 வசனங்களின் மூலம் விளக்குகிறார். தெளிவான வேத அறிவு இல்லாமல் ஒருவராலும் இந்த உலகத்தில் கிறிஸ்துவை மகிமைப்படுத்தும்படி வாழமுடியாது. வேதமே நமக்கு வெளிச்சமாக இருந்து எல்லா விஷயங்களையும் ஆராய்ந்துணரும் வழிகாட்டியாக இருக்கிறது.

ஒரு புறம் வேத ஞானம் நமக்குத் தேவையாக இருக்க, இன்னொரு புறம் உலகத்தைப் பார்க்கின்ற நம் பார்வை சரியாக இருக்கவேண்டும். அதற்கு உலகத்தைப் பற்றியும் நடந்துவரும் நிகழ்வுகளையும் நாம் ஆராயாமல் இருக்க முடியாது. சுற்றி நடப்பவற்றை அறிந்துவைத்திருந்து அவற்றையெல்லாம் கிறிஸ்துவின் பார்வையோடு அவதானிக்கவும், ஆராயவும் கிறிஸ்தவன் முற்பட வேண்டும். அதற்கு வாசிப்பு உதவுகிறது. கிறிஸ்தவர் அல்லாதவர்களால் எழுதி வெளியிடப்படும் அநேக நாளிதழ்களையும், வார மாத இதழ்களையும் நாம் வாசிக்காமல் இருந்துவிடுகிறோமா? இவற்றில் தரமானவை எவை என்பதைக் கண்டறிந்து அவற்றைப் பொது அறிவுக்காக வாசிக்க வேண்டியது அவசியம். அதுவும் போதகப் பணியில் இருக்கிறவர்கள் இவற்றை உதாசீனம் செய்வது அவர்களை உலகமறியாதவர்களாக வைத்துவிடும். உலகந்தெரியாதவனால் இந்த உலகத்தில் எப்படி ஊழியம் செய்யமுடியும்? கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் வாசிக்கும்படி நான் சொல்லவில்லை. தரமானவற்றை வாசித்து வேத அடிப்படையில் அவைபற்றிய எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

சமீபத்தில் இளம் வயதில் அருமையாகப் பாடும் கர்நாடக சங்கீதக் கலாநிதி சஞ்சய் சுப்பிரமணியத்தின் ஆங்கிலப் பேட்டி ஒன்றைப் பார்த்தேன். ஆச்சரியப்படும் வகையில் அவருடைய பல்வேறுபட்ட விஷய ஞானம் இருந்தது. சங்கீதத்தை மையமாகக்கொண்டே பெரும்பாலும் அவர் விளக்கமளித்தபோதும் இக்காலத்து இளைஞர்கள் பற்றியும், சங்கீதத்தில் புதிய உத்திகளை உருவாக்குவது பற்றியும், பாரம்பரிய இசையை முற்றாகத் தூக்கியெறிந்துவிடாமல், அதேநேரம் புதுமையை நோக்கிப் பயணம் செய்வது எப்படி என்பது பற்றியும், சிறுவனாக இருந்து சங்கீத உலகுக்குள் தான் நுழைந்தவிதம் பற்றியும் அருமையான, சுவையான, தெளிவான விளக்கங்களைக் கேள்விகேட்டவுடனேயே பட்டுப்பட்டெனத் தந்தார். அதுவும் கூடியிருந்த பெருங்கூட்டம் படித்த பிராமணர்கள் அதிகமிருந்த கூடுகை. மிகுந்த தன்நம்பிக்கையோடு சரளமாக அவர் பதிலளித்தது எந்தளவுக்கு இசைஞானமுள்ளவர் என்பதை வெளிப்படுத்தியது. ஒவ்வொரு நாளும் பலமணி நேரங்கள் விடாமல் அவர் பாடல்பயிற்சி எடுத்துக்கொள்ளுகிறாராம்; அதுவும் அவருடைய மகளுக்காக ஒவ்வொரு நாளும் இருபது பாடல்கள். மூச்சு வாங்குகிறது இல்லையா? சஞ்சேயின் உழைப்பைப்பற்றிக் கேட்டபோது, பிரசங்க மேடைக்குப் போகும்வரையும் பிரசங்கத்தைத் தயாரிக்காத நம்மினத்துக் கிறிஸ்தவ பிரசங்கிகளின் சோம்பேரித்தனத்தை நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. இதெல்லாம் போதாதென்று சஞ்சேக்கு போர்ட் கேம், இலக்கிய வாசிப்பு என்று வேறு இத்தியாதி ஆர்வங்கள். பழைய பஞ்சாங்கமாக இல்லாமல் இந்த நூற்றாண்டு மனிதனாக அவர் விளக்கிய அநேக விஷயங்கள் கடவுளின் பொதுவான கிருபையின் கீழ் மனிதனுக்கு அவர் தந்திருக்கும் ஆற்றல்களை விளக்குவதாக இருந்தது. ஒரு கிறிஸ்தவனாக இந்தப் பேட்டியை என்னால் எப்படிக் கேட்க முடிந்தது? முதலில் இசையில் எனக்கு இருக்கும் ஆர்வந்தான். ஆண்டவரே மனிதன் அனுபவிக்கும்படி இசையை உருவாக்கியவர். அந்த இசையில் தேர்ந்தவராக இருக்கும் சஞ்சய் கிறிஸ்தவராக இல்லாவிட்டாலும் பொதுவான விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளவும், அதேநேரம் இசை பற்றிய கிறிஸ்தவ பார்வையை வேதபூர்வமாக உருவாக்கிக்கொள்ளவும் என்னால் முடிகிறது. நான் கர்நாடக சங்கீத வாத்திய இசையை மட்டுமே கேட்பேன். பாடல் கச்சேரி பெரும்பாலும் இந்துமத தெய்வங்களை மேன்மைப்படுத்துவதால் அதன் பக்கம் தலைவைப்பதில்லை. சஞ்சய் சுப்பிரமணியத்தின் சிறப்பு என்ன தெரியுமா? அவர் தமிழில் அதிகம் கச்சேரி செய்வதுதான்.

நச்சென்ற மேலாடை நாறுகிறது உள்ளாடை

சாதிவெறி – தர்மபுரியில் சாதிவெறி உயிர்குடித்த இளவரசனின் நினைவு மங்கிப்போவதற்குள் சாதிப்பேய் மறுபடியும் தலைதூக்கியிருக்கிறது. உண்மையில் செய்தியில் வருவதைவிட இது நாளாந்தம் நடந்துவரும் நிகழ்வுதான். சமீபத்தில் இந்து நாளிதழில், தேர்தல் காலத்தில் சாதி பண்ணுகின்ற அட்டகாசத்தை விளக்கியிருந்தார்கள். இதெல்லாம் இந்த நூற்றாண்டில் தொடர்கிறதை நினைத்தாலே வயிறெரிகிறது. கடந்த வருடம் வண்ணியர் பெண்ணும் தலித் ஆணும் ஓடிப்போனதால் விளாரிப்பாளயத்து மேல் சாதியினர் தலித்துக்கள் வாழ்ந்த சோமம்பட்டியைத் தாக்கி நாசமாக்கினர். உடுமலைப்பட்டியில் தலித் வாலிபன் சங்கர் கோரமாக வெட்டிச் சாய்க்கப்பட்டிருக்கிறான். இரண்டுவகைத் ‘டம்ளர் முறையும்’ (மேல் சாதிக்கு பிளாஸ்டிக் கப் தலித்துக்கு டம்ளர்), மேல்சாதி நிலத்தில் தலித்துக்கள் காலில் செருப்பில்லாமல் நடக்கவேண்டிய நிலையும் தலித்துக்களுக்கெதிரான இன்னும் பல தடைகளும் தொடர்ந்திருந்து வருகின்றன தமிழகத்தில் என்பதை அறிகிறபோது எந்தளவுக்கு சுவிசேஷம் சத்தியமாக வைராக்கியத்தோடு இக்காலத்தில் சொல்லப்பட வேண்டும் என்பதை நினைக்காமல் இருக்க முடியாது. சட்டங்களும், சமூக சீர்திருத்தங்களும், கீழ் சாதி என்ற பெயரைத் துடைத்தெறிய உருவாக்கப்படும் ‘தலித்’ போன்ற அடையாளங்களும் ஒருபோதும் சாதி அமைப்பை அகற்றமுடியாது என்பதைத் தொடரும் சாதிவெறி இனங்காட்டுகிறது. தேர்தல் காலங்களில் அரசியல் லாபத்துக்காக திராவிட கட்சிகளும் சாதியைப் பயன்படுத்திக் கொள்ளுகின்றன. கிறிஸ்து மட்டுமே தலித், வண்ணியன், கொங்கு வேளாளன் என்ற பாகுபாட்டையெல்லாம் இல்லாமலாக்கி மனிதனை மனிதனாகப் பார்க்கின்ற இருதயத்தைக் கொடுக்கிறார். தேர்தல் வருகிறது, கிறிஸ்தவர்களே சிந்தித்து வாக்களியுங்கள். சாதிப் பிசாசு உங்கள் இருதயத்தில் ஒருக்காலும் இல்லாதிருக்கும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள்.

22_03_2016_TOI

குழந்தைத் திருமணம் – சென்னையில் இருந்தபோது ஆங்கில நாளிதழ் ஒன்றில் முன்பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் வந்திருந்த செய்தி என்னை மலைக்க வைத்தது. அது இந்திய தேசத்தில் தொடர்ந்திருக்கும் குழந்தைத் திருமணத்தைப் பற்றியது. அதெல்லாம் எப்போதோ முடிந்துபோன கதை என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு பத்திரிகையில் தரப்பட்டிருந்த புள்ளிவிபரங்கள் இந்திய சமுதாயம் இன்னும் தனக்குள் சீழ்விட்டுப் பரவியிருக்கும் அசிங்கங்களை அழித்துப் போடவில்லை என்பதை சுட்டியது. இந்தியாவில் பீகார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் வருடத்துக்கு இலட்சக்கணக்கில் குழந்தைத் திருமணங்கள் நடந்துவருவதாக அறிவித்த புள்ளிவிபரம், தமிழகத்தில் வருடாந்தம் 65,000 குழந்தைத் திருமணங்கள் நிகழ்வதாகவும் அதுவும் சென்னை அதில் முதலிடம் பெறுவதாகவும் தெரிவித்தது ஆச்சரியந்தந்தது. தொழில் நுட்பம், கல்வி அறிவு, பொருளாதாரம், கணினித்துறை என்று பல்வேறு துறைகளில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறபோதும் சமுதாயம் தொடர்ந்தும் புரையோடிப்போன அசிங்கங்களைத் தன்னில் இருந்து அகற்றிக்கொள்ள முடியாமல் அவற்றிற்கு வக்காலத்து வாங்கி வருவது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும். இதிலெல்லாம் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவராமல் இந்தியா மிளிர்கிறது, ஒளிர்கிறது என்றெல்லாம் மார்தட்டிக்கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

குழந்தைத் திருமணம் கொடூரமான செயல். 1900ங்களின் ஆரம்பத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின்போதும் தமிழகத்தில் இது இருந்துவந்தது. ஏமி கார்மைக்கல் தென் தமிழகம் வந்தபோது இதை எதிர்நோக்காமல் இருக்கவில்லை. பெரும்பாலும் கிறிஸ்தவ மிஷனரிகளின் பணிகளினாலேயே சமுதாயத்திற்கு இதிலிருந்து ஒருவித விடுதலை கிடைத்தது. சாதிப் பாகுபாட்டை நிர்த்தாட்சணியமாக ஆதரித்து அதன் அடிப்படையில் இருந்துவரும் சமுதாயம் குழந்தைத் திருமணத்தைத் தொலைத்துவிடாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை. இது அடிப்படையில் சாதியையும், நெருங்கிய குடும்ப உறவையும் பாதுகாக்க உருவான முறைதான். கிறிஸ்துவை அறிந்துகொள்ளுகிறபோதே மனிதனுக்கு இதில் இருந்து முழுமையான வெற்றிகிடைக்க முடியும். சமுதாய மாற்றங்களை வெறும் சமூக சீர்திருத்தத்தால் கொண்டுவந்துவிட முடியாது என்பதைக் கம்யூனிசத்தின் தோல்வி உலகுக்குக் காட்டியிருக்கிறது. கார்ல் மார்க்ஸும், மாவோவும், ஸ்டாலினும், கெஸ்ட்ரோவும் அதைத்தான் நிரூபித்திருக்கிறார்கள். அடிப்படை இருதய மாற்றத்தை சமூக சீர்திருத்தக் கோட்பாடுகளால் ஏற்படுத்த முடியாது. அதைப் படைத்தவர் மட்டுமே செய்யக்கூடியவராக இருக்கிறார். கம்யூனிசம்கொண்டுவர முடியாத சமுதாய மாற்றத்தைக் கிறிஸ்து கொண்டு வந்ததை அப்போஸ்தலர் நடபடிகள் 2ம் அதிகாரம் விளக்குகிறது. பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டு இருதயத்தில் கிறிஸ்துவை விசுவாசித்தவர்கள், அன்று எருசலேமில் தேவனை விசுவாசித்தவர்களில் பஞ்சம் பட்டினியோடு வாழ்ந்தவர்களுக்கு தங்களிடம் இருப்பவற்றையெல்லாம் விற்று அவர்களுடைய தேவையை நிறைவு செய்தார்கள். இதை சமுதாய சீர்திருத்தப் போதனைகளோ, நடவடிக்கைகளோ ஏற்படுத்தவில்லை; அரசு இயந்திரம் உண்டாக்கவில்லை; ஆண்டவர் மனிதனுடைய இருதயத்தில் ஏற்படுத்திய ஆத்மீக மாற்றம் அவனை சிந்திக்க வைத்து மற்றவர்களின் தேவைகளை உடனடியாக சந்திக்கவைத்தது. கம்யூனிசத்தாலும், சோஷலிசத்தாலும் செய்யமுடியாததை கிறிஸ்தவம் செய்தது. இதுபோல புரையோடிப்போன சமுதாய அசிங்கங்களான, சாதி அமைப்பு, குழந்தைத் திருமணம் போன்றவற்றில் இருந்து சமுதாயத்துக்கு கிறிஸ்து மட்டுமே விடுதலையளிக்கக் கூடியவராக இருக்கிறார்.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 30 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக