20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்

ஜனவரி 14ம் திகதி பெங்களூரில் திருமறைத்தீபத்தின் 20ம் ஆண்டுவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. கெம்பஸ் குருசேட் நிறுவனத்தின் மிகப்பெரிய ஹாலில் கூட்டத்தை பெங்களூர் சபையினர் ஏற்பாடு செய்திருந்தனர். அங்குபோனபோதே இத்தனைப் பெரிய இடத்தை எப்படி நிரப்பப் போகிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அதுவும் பெங்களூரில் அன்று போக்குவரத்து நெருக்கடி மற்ற நாட்களைவிட அதிகம். கூட்டம் நடந்த இடத்துக்குப் போய்ச்சேருவதற்கே ஒன்றரை மணிநேரம் எடுத்தது. கூட்டம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற ஆதங்கம் உள்ளுக்குள். வருகிறவர்களை வரவேற்று உபசரித்து இருக்குமிடத்துக்கு அழைத்துச் செல்வது போன்ற பணிகளையும், புத்தகங்கள் விற்பனை செய்வது, உணவு பரிமாறுவது போன்றவற்றையும் செய்வதற்காக இருபது பேருக்கு மேல் திருமறைத்தீப 20ம் ஆண்டு விழாவை சிறப்பிப்பதற்காக வெளியிடப்பட்டிருந்த மஞ்சள் நிறத்தில் ஸ்பர்ஜன் அவர்களின் வார்த்தைகளைக்கொண்டிருந்த நீல நிற டீ-சேர்ட்டை அணிந்து சுருசுருப்போடு இயங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் பெரிய ஏற்பாடுகளை செய்திருப்பது மட்டுமல்ல ஒழுங்கோடு கூட்டத்தை நடத்தும் வகையிலும் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்பது பார்த்த உடனேயே தெரிந்தது.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக, கிறிஸ்தவ இலக்கிய ஆர்வலரும், வெஸ்ட்மின்ஸ்டர் வெளியீடுகளின் நிறுவனருமான ரொபட் வெட்டி நியூசிலாந்திலிருந்து வந்து கலந்துகொண்டார். ஸ்ரீ லங்காவின் வவுனியாவில் இருந்து புரொட்டஸ்தாந்து சீர்திருத்த சபையின் போதகரான பார்த்திபன் வந்திருந்தார். இவர்களோடு இன்னும் சில தமிழகப் போதகர்கள் கூட்ட நிகழ்ச்சி நிரலின் வரிசைபடி திருமறைத்தீப இதழைப்பற்றிய தங்ளுடைய அனுபவங்களைக் கூட்டத்தில் பகிர்ந்துகொண்டனர். இறுதியில் நான் சுருக்கமாக செய்தியளித்தேன். திரு. ரொபட் வெட்டி, திருமறைத்தீப இதழுக்கும் தனக்கும் இடையில் உள்ள உறவை விளக்கினார். தமிழே தெரியாத அவர் இதழின் பணியில் காட்டிவரும் அக்கறைக்கான காரணத்தை விளக்கினார். சீர்திருத்த போதனைகளை வேதபூர்வமாகவும், தெளிவாகவும் தமிழுலகுக்கு அளித்து வருகிற பத்திரிகை என்பதே தன்னை அதில் ஈடுபாடுகாட்ட வைத்திருப்பதாகவும், இதழாசிரியர் மேல் தனக்கிருக்கும் நம்பிக்கையும் முக்கிய காரணம் என்றார். அடுத்து புத்தகங்களைத் தான் எப்படி வாசிக்க ஆரம்பித்தேன் என்பதை விளக்கினார். இளம் வயதில் கிறிஸ்தவனாக வந்தபிறகே எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டதாகக் கூறிய அவர், தான் முதலில் படித்த கிறிஸ்தவ புத்தகம் மோட்சபயணம் என்றார். நண்பரொருவருடைய துணையோடு அதை வாசித்து முடித்ததாகக் கூறிய அவர், அன்று முதல் வாசிப்பு தன்னுடைய வாழ்க்கையில் நிரந்தர இடத்தைப் பிடித்ததாக விளக்கினார். இப்போது 7000க்கும் குறையாத கிறிஸ்தவ ஆங்கில நூல்களைத் தன்னுடைய சொந்த நூலகத்தில் வைத்திருப்பதோடு பழம் கிறிஸ்தவ இலக்கியங்களை வேறு மொழிகளில் வெளியிடுவதையும் நோக்கமாகக் கொண்டு பணியாற்றி வருவதாகக் கூறினார். இறுதியில் வாசிப்பில்லாமல் கிறிஸ்தவனாக இருக்க வழியில்லை என்று விளக்கிய வெட்டி, “வாசியுங்கள், வாசியுங்கள், வாசியுங்கள்” என்றுகூறி தன்னுடைய உரையை முடித்தார். போதகர் பார்த்திபன் தன் சிற்றுரையில், திருமறைத்தீபம் இன்னும் ஐம்பது, நூறு வருடங்களுக்கு வெளிவரவேண்டும் என்று பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் சொன்னார். போதகர் ஜேம்ஸ் இதழ் திருச்சபைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் புள்ளிவிபரங்களோடு விளக்கினார். கூட்டத்தை நேரத்தோடு முடிக்க வேண்டுமென்பதால் உரையாற்ற வேண்டியிருந்த எல்லோரும் அன்று உரைநிகழ்த்த முடியாமல் போனது.

special editionஎல்லோருடைய உரைகளுக்குப் பின் திருமறைத்தீபத்தின் வரலாற்றை விளக்கும் 27 நிமிட ஒளி, ஒலி நாடா காட்டப்பட்டது. அதற்குப் பின் திருமறைத்தீபம் 20 வருட இதழ் தொகுப்புகள் ஐந்து வால்யூம்களாக வெளியிடப்பட்டன. அந்தப் பிரதிகளை ரொபட் வெட்டி அவர்கள் பெற்று வெளியிட்டு வைத்தார். அவரே இன்னொரு நூலான ‘இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு’ நூலையும் பெற்று வெளியிட்டார். அந்த நூலின் சிறப்பை சுருக்கமாக விளக்கிய அவர், தமிழில் அத்தகைய நூல் வெளிவந்திருப்பது தனக்கு மிகுந்த மகிழ்சியளிப்பதாகக் கூறினார். ஸ்ரீ லங்காவில் இருந்து வந்திருந்த போதகர் பார்த்திபன் ‘சட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு’ என்ற நூலைப் பெற்று வெளியிட்டு வைத்தார். வரவேற்புரை நிகழ்த்தி கூட்டத்தை ஆரம்பித்து நடத்திய போதகர் முரளி ஜெபத்துடன் கூட்டத்தை நிறைவு செய்தார். வந்திருந்த அனைவருக்கும் சுவையான உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை சகோதரர்கள் உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

book release

கிறிஸ்தவ இலக்கியத்தை முதன்மைப்படுத்தி ஆத்மீக வளர்ச்சிக்கு அவசியமான வாசிப்பை வலியுறுத்தும் இரண்டரை மணிநேர நிகழ்ச்சியில் அன்று ஐந்நூறு பேர்வரை கலந்துகொண்டு சிறப்பித்தது தமிழினத்தில் வியப்பான செயல்தான். ஆர்ப்பாட்டங்கள் எதுவுமில்லாமல் அமைதியாக நிகழ்ந்த கூட்டத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசலையும் பொருட்படுத்தாமல் அத்தனை பேர் கலந்துகொண்டது ஆச்சரியத்தைத் தந்தது. கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அன்று அதிகமாக புத்தகங்களையும் ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர். இந்நிகழ்வு தொலைக்காட்சியில் விரைவில் ஒலிபரப்பாகவிருக்கிறது. அன்றையதினம் நிச்சயம் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாளாக அமைந்தது.

நியூ புக் லேண்ட்ஸ்

IMG_0782எந்த நாட்டுக்குப் போனாலும் நான் ஒருமுறை புத்தகக் கடைகளுக்குப் போய்வந்துவிடுவேன். சில புத்தகங்களையும் இதழ்களையுமாவது வாங்கிவிடுவேன். விமானநிலையப் புத்தகக் கடைகளிலும் தவறாது அரைமணி நேரத்தைச் செலவிடுவது என் வழக்கம். மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனைப்பற்றிய ஒரு புதிய தொகுப்பு ‘மனா’ லட்சுமனன் எழுதி வெளிவந்திருப்பது அறிந்து அதை எங்கே பெற்றுக்கொள்ளலாம் என்று எழுத்தாளர் ஜெயமோகனை எழுதிக் கேட்டேன். அவர் நியூ புக் லேண்ட்ஸ் புத்தகக் கடையில் கிடைக்கும் என்றார். ஒரு மாதிரியாக கடையைத்  தேடிப்பிடித்தேன். தி நகரில் வட உஸ்மான் தெருவின் மேம்பாலம் முடியுமிடத்தில் கடை இருந்தது. பழைய எண், புதிய எண் குழப்பத்தால் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தனை தூரம் வந்துவிட்டோம், எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற ஆதங்கத்தோடு சிலரிடம் விசாரித்து அங்கு போய்ச்சேர்ந்தேன். நண்பர் வெட்டியும் என்னோடிருந்தார். திரும்பிவர கொஞ்ச நேரமாகும் என்று கார் டிரைவரிடம் கூறினேன். அது முழு உண்மையல்ல. புத்தகக் கடைக்குள் நுழைந்துவிட்டால் நான் அத்தனை சீக்கிரம் வெளியில் வந்துவிடுவதில்லை என்பது டிரைவருக்கு எங்கே தெரியும். தெருவில் இருந்து பார்க்கிறபோது கடை பெரிதாகத் தெரியாவிட்டாலும் உள்ளே நுழைந்துவிட்டால் இடம் பெரிதுதான் என்பது புரியும். சென்னை ஹிக்கின்ஸ்பொட்டம் புத்தகசாலை முதல் பல புத்தகக் கடைகளுக்கு பல ஊர்களிலும் போய்வந்திருந்தாலும் இந்தக் கடைக்குப் போனது புது அனுபவமாக இருந்தது. உள்ளே நுழைந்தவுடனேயே எனக்குள் ஒரு புல்லரிப்பு ஏற்பட்டது. கடையைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பதால் மட்டுமல்ல, உள்ளே ஆயிரக்கணக்கில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்ததாலும் ஏற்பட்ட புல்லரிப்பு அது.

Mr Srinivasanகடையின் மேலாளர் ஸ்ரீனிவாசன். கடை இலக்கிய வாஞ்சையுள்ள நர்மதா பதிப்பகத்தால் ஆரம்பிக்கப்பட்டது. திரு ஸ்ரீனிவாசன் ஆரம்பகாலத்தில் இருந்து கடையை மேற்பார்வை செய்துவருகிறார். அவரோடு பேச்சுக்கொடுத்து விபரங்கள் அறிந்துகொள்ள முயன்றேன். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வந்திருக்கும் காரணத்தைச் சொன்னேன். உடனடியாக வரிசைக்கிரமாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஜெயகாந்தன் நூல்களின் அருகில் அழைத்துச் சென்றார். அடுத்த ஒருமணி நேரம் கடையை அலசிப் பார்க்கும் செயலில் ஈடுபட்டேன். எழுத்தாளர்களின் பெயர் வரிசைப்படி அவர்களுடைய நூல்களெல்லாம் வரிசைக்கிரமாக வைக்கப்பட்டிருந்தன. பிரபலமான பழைய புதிய எழுத்தாளர்களின் நூல்களனைத்தும் அங்கே இருந்தன. அழகிரிசாமி, சி. சு. செல்லப்பா, மு வவிலிருந்து இக்காலத்து ஜெயமோகன், ராமகிருஷ்ணன்வரை எல்லோருடைய நூல்களும் இருந்தன. நான் தேடிக்கொண்டிருந்த ஜெயமோகனின் காடு நூல் அங்கு கிடைத்தது. இதுவரை இந்தளவுக்கு இலக்கிய நூல்களை ஒரே கடையில் நான் பார்த்ததில்லை. சிற்றிதழ்கள் இன்று எத்தனை புத்தகக் கடையை அலங்கரிக்கின்றன? நுழைந்த உடனேயே கடையில் அவை கண்ணில் படும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் மட்டும் 70,000 நூல்கள் இருப்பதாக ஸ்ரீனிவாசன் சொன்னார். அதுதவிர ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான நூல்களும் இருக்கின்றனவாம். சென்னைவாசிகள் அதிர்ஷ்டக்காரர்கள் என்று நினைக்கத் தோன்றும். அது நினைப்பாக மட்டுந்தான் இருக்க முடியும் என்பதை திரு ஸ்ரீனிவாசனோடு தொடர்ந்து பேச்சுக்கொடுத்தபோது தெரிந்தது. இத்தனை பெரிய புத்தகக் கடையில் ஆயிரக்கணக்கான இலக்கிய நூல்களை வைத்திருக்கிறீர்களே, எத்தனை பேர் வாசிக்கிறார்கள், கடை நடத்தும் அளவுக்கு லாபமிருக்கிறதா? என்று கேட்டேன். இல்லை சார் என்று அவர் உடனடியாக சொன்னார். 9 மில்லியன் மக்கள் வாழும் சென்னை மாநகரத்தில் ஆயிரம் பேர் மட்டுமே தீவிர வாசகர்களாக அங்கே புத்தகங்களை வாங்கி வாசிக்கிறார்களாம். அதிர்ச்சி தரும் செய்தி இது. வாசிப்பு நம்மினத்தில் கீழ் நிலையில் இருக்கிறது என்பது எனக்குத் தெரிந்திருந்தபோதும் இது கொஞ்சம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தந்தது. ஆயிரம் கஸ்டமர்களை வைத்து எப்படிக் கடை நடத்துகிறீர்கள்? என்பது என்னுடைய அடுத்த கேள்வியாக இருந்தது. இல்லை சார், இங்கே ஆயிரம் பேர்தான் புத்தகங்களை வாங்கி வாசித்தாலும் வெளிநாடுகளில் இருந்து பத்தாயிரம் பேர்வரை நூல்களை ஆர்டர் செய்து வாங்கி வாசிக்கிறார்கள், அவர்களாலேயே கடை நடத்த முடிகிறது என்று பதில் வந்தது. வெளிநாட்டுத் தமிழர்களாவது தமிழகத்தின் மானத்தைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்களே என்று சந்தோஷப்படத்தான் முடிந்தது. ஸ்ரீனிவாசன் ஆழம் சிற்றிதழுக்கு ‘வாசிக்கும் பழக்கம் குறைத்திருக்கிறதா’ என்ற தலைப்பில் பேட்டி கொடுத்திருக்கிறார்.

நியூ புக் லேண்ட்ஸ் கடையில் வாசிக்கிறவர்களைத்தான் வேலைக்கு வைக்கிறோம் என்று ஸ்ரீனிவாசன் சொன்னார். அதுவும் ஆச்சரியமாக இருந்தது. எத்தனையோ கடைகளுக்குப் போயிருந்தபோதும் இங்குதான் கடைக்காரரோடு புத்தக்கங்களைப்பற்றியும், நூலாசிரியர்களைப் பற்றியும் பேச முடிந்தது. ஸ்ரீனிவாசன் சொன்னார், ‘சார், சென்னையில் ஒரு இலட்சம் பேர் வாசிக்க ஆரம்பித்தாலே போதும் அரசு மாறிவிடும்’ என்று. அவை உண்மையான வார்த்தைகள். வாசிக்கிறவர்களே சிந்திக்கிறவர்கள். மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் கோமாளித்தன அரசுகளுக்கு நாட்டில் வாய்ப்பிருக்காது. ஒரு காலத்தில் இலக்கிய வாசிப்பில் இளைஞர்களுக்கு இருந்த நாட்டம் இன்று இல்லை. இருபது இருபத்தியோரு வயது இளைஞர்கள் எல்லாம் வாட்ஸப்பிலும், இன்ஸ்டகிராமிலும், முகநூலிலும் குறுஞ்செய்தி அனுப்பி குதூகலித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர வாசிப்பையே அறியாதிருக்கிறார்கள். வருங்காலத் தலைமுறை எப்படி இருக்கப்போகிறது? பெங்களூரில் இருந்தபோது தொலைபேசியில் சிறிது நேரம் எழுத்தாளர் ஜெயமோகனோடு பேசினேன். ஓரிருதடவை கடிதம் எழுதியிருந்தபோதும் அவரை நேரில் பார்த்ததில்லை. அதற்கு இந்தத் தடவை வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இருந்தாலும் ஐந்துநிமிடங்களுக்கு மேல் அவரோடு பேசியபோது அவருடைய இளம் வாசகர்கள் வாசிக்கிறவர்களாகவும், சிந்திக்கிறவர்களாகவும், நல்ல தமிழில் எழுதக்கூடியவர்களாகவும் இருப்பதை சுட்டிக்காட்டினேன். தன்னுடைய நூல்களைக்கூட அதிகம் பேர் வாசிப்பதில்லை என்றும், தமிழ் நாட்டில் வாசிப்பு அருகியே இருக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார். நம்மினத்தில் வாசிப்பின்மை பற்றிய நம்முடைய ஆதங்கம் பெரிதாகி அநேகரை வாசிக்க வைக்க என்ன செய்யலாம் என்று தீவிர நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது. ஜனவரி மாதத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சிகள் மிகவும் நல்ல முயற்சி; சென்னை போயும் அதற்குப் போகமுடியாதபடி போனது ஒரு புறம் வருத்தமே.

திரு ஸ்ரீனிவாசனோடு என் நண்பர் ரொபட்டும் நானும் பேசிய சந்தர்ப்பம் மகிழ்ச்சியளித்தது. புத்தகக்கடைக்குப் போய் நூல்கள் வாங்காமல் இருக்க முடியுமா? வேதத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்களில் ஒருவரான பெப்ரீசியஸின் அகராதி மீள்வெளியீடு செய்யப்பட்டு கடையில் இருந்தது. அதுவரை அது அச்சில் இருப்பதை நான் அறிந்திருக்கவில்லை. அதை வாங்கிக்கொண்டேன். அத்தோடு 6000 ரூபாய்க்கு என் வாசிப்புக்கும், எழுத்துப் பணிக்கும் அவசியமான நூல்களை வாங்கி நியூசிலாந்துக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தேன். இரண்டரை மணிநேர அந்த சந்திப்பும், புத்தகக் கடை அனுபவமும் மனதுக்கு இதமாக இருந்தது. என் நண்பரைப் பார்த்து சொன்னேன், ‘இங்கேயே ஒரு பாயைப் போட்டுப் படுக்க இடம்கொடுத்தார்களானால் இரவிரவாக இந்த நூல்களையெல்லாம் அலசிப்பார்க்க வசதியாக இருக்கும்’ என்று. உண்மையில் கடையைவிட்டு வெளியில் வர கஷ்டமாகத்தான் இருந்தது. சென்னைவாசிகளே, நீங்கள் ஏன் நியூ புக் லேண்ட்ஸ் புத்தகக் கடைக்கு ஒருமுறை போய்வரக்கூடாது? ஸ்ரீனிவாசன் அவர்களையும் சந்தித்துப் பேச மறக்காதீர்கள். தரமான ஒரு புத்தகக் கடைக்குப் போன இதமான அனுபவத்தோடு வேறுவேலைகளைக் கவனிக்க நண்பரோடு கடையை விட்டு வெளியில் வந்தேன்.

வடஇந்தியப் பயணம்

நண்பர் ரொபட் வெட்டியும் என்னோடு வந்திருந்ததனால் இருவரும் ஒரு வாரத்துக்கு வடஇந்தியப் பயணத்தை மேற்கொண்டோம். இரண்டு நாட்கள் குஜராத்திற்குப் போய் நண்பர் போல் சிங்கையும், நண்பர்களையும் சந்தித்தோம். எங்குபோனாலும் பேச்சு எப்படியோ புத்தகங்களைப்பற்றியும், கிறிஸ்தவ இலக்கிய வெளியீடுகளின் திசையிலும் திரும்பிவிடுவது வழக்கம். குஜராத் மொழியில் நல்ல கிறிஸ்தவ இலக்கியங்கள் வரவேண்டிய அவசியத்தை ரொபட் வலியுறுத்தி அளவலாவினார். இந்திய மொழிகளில் வேதமொழிபெயர்ப்புகள் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப்போல சிறப்பாக இல்லாததுபற்றியும் விவாதித்தோம். வாசிப்பின் அவசியத்தை ரொபட்டும், நானும் பலர் மத்தியில் வலியுறுத்திவிட்டு அங்கிருந்து ஜெய்ப்பூருக்குப் பறந்தோம் (விமானத்தில்தான்). கல்லூரிப்படிப்புக்கு முன்பிருந்தே நான் வரலாற்றில் முக்கிய நாட்டம்காட்டி வந்திருந்தேன். வரலாற்றுப் பாடம் எனக்குப் பிடித்தமானது. இந்திய வரலாற்றை நான் வாசித்து வியப்படைந்திருக்கிறேன். ராஜபுத்திர மன்னர்களின் வீரம், மொஹலாய ராஜ்ஜிய விஸ்தரிப்பு, சோழ, பாண்டிய, சேர, பல்லவ, விஜயநகர ராஜ்ஜியங்களின் மகிமைகளை இந்திய வரலாற்றில் வாசித்து ஆச்சரியமடைந்திருக்கிறேன். முக்கியமாக ராஜஸ்தானின் ராஜபுத்திரர்களின் வீரம் என்னை எப்போதும் கவர்ந்திருந்தது. ஜெய்ப்பூருக்கு போகும் வாய்ப்புக்கிடைக்கிறபோது விட்டுவிடவா போகிறேன்.

Rambagh palace (2)ஜெய்ப்பூரில் நான் சந்திக்க விரும்பியிருந்த ஓர் வெளிநாட்டு ஊழியர் அங்கிருந்து வேறு மாநிலத்துக்கு மாறியிருந்தபடியால் அவரை சந்திக்க இயலாமல் போனது. ஒன்றரை நாட்கள் மட்டுமே ஜெப்பூரில் இருந்ததால் ஒரு வழிகாட்டியை ஏற்பாடு செய்து அரவாளி மலைத்தொடரில் இருந்த அம்பர் கோட்டையைப் பார்க்கப் புறப்பட்டோம். இரண்டு மணிநேரம் எடுத்தது அந்தக் கோட்டையைச் சுற்றிப்பார்த்து கோட்டையில் பெருமைகளை உணர. இது யாரால் கட்டப்பட்டது என்பது புதிராக இருந்தபோதும், 1600களில் ராஜபுத்திர மன்னனாக இருந்த ராஜா முதலாம் மான்சிங் கோட்டையின் பெரும்பாலான பகுதிகளைப் புதுப்பித்துக் கட்டியிருக்கிறான் என்கிறது வரலாறு. 85 கிலோ மீட்டருக்கு சீனாவின் பெருமதிலை நினைப்பூட்டும் வகையில் ஒரு பாதுகாப்பு அரணை மான்சிங் எழுப்பியிருந்தான். 16ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டிருந்த பாதுகாப்பு அரண்களைக் கொண்டிருந்த அந்தக் கோட்டை அந்தக் காலத்து தொழில்நுட்ப வளர்ச்சியையும், மன்னர்களின் கலை ஆர்வத்தையும், மாவீரத்தையும் படம்பிடித்துக் காட்டியது. கோட்டையைப் பார்த்தபோது என் நினைவுகள் வரலாற்றில் நான் வாசித்திருந்த மாமன்னன் மகாராணா பிரதாப்,  மன்னன் பிரித்திவிராஜ் சௌஹான் போன்றோர் பக்கம் திரும்பியது. ராஜபுத்திரர்கள் வாள் வித்தையிலும், வில் வித்தையிலும், குதிரை ஓட்டுதலிலும் மிகவும் சிறந்தவர்கள். வீரத்துக்குப் பேர்பெற்றவர்கள். அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளுவதை நிறுத்தியிருந்தால் அவர்களை எவரும் அசைக்க முடியாதிருந்திருக்கும்.

Jaipurராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூர் அழகிய நகரம். ராஜபுத்திரர்களின் கட்டடக் கலையை நினைவூட்டும் வகையில் நவீன கட்டடங்களும் நகரில் இருந்தன. பழங்கலைகளைத் தொடர்ந்து பாதுகாத்து பின்பற்றுவது பாராட்டப்படவேண்டிய விஷயம். வீதிகள் நல்ல நிலையில் இருந்தன. பழைய ஜெய்ப்பூர் நகரைச் சுற்றிப் புதிய ஜெய்ப்பூர் நகரம் கட்டப்பட்டிருந்தது. பழமையும் புதுமையும் நகரில் இணைந்து காணப்பட்டன. முக்கியமான ராஜபுத்திர கட்டடக்கலையை நினைவூட்டும் கட்டடங்களும் கோட்டைகளும் பழைய ஜெய்ப்பூரில் இருந்தன. இந்தளவுக்கு ஜெய்ப்பூர் அழகாகவும், வசதியாகவும் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ராணி காயத்திரி தேவியின் மாளிகைகளில் ஒன்று ராம்பாஹ் மாளிகை (Rambagh Palace). அது இன்று தாஜ் ஓட்டல் நிர்வாகஸ்தர்களின் கவனிப்பில் ஐந்து நட்சத்திர ஓட்டலாக இயங்கி வருகிறது. பழமை அப்படியே பாதுகாக்கப்பட்டு நவீன வசதிகளுடன் ஓட்டல் இருந்தது. அங்கு ஒரு நாளுக்குத் தங்குவதற்கு 45,000 ரூபாய்கள். அம்பர் கோட்டையைச் சுற்றிப்பார்த்துவிட்டு ராம்பாஹ்ஹில் ரொபட்டும் நானும் மதிய உணவு அருந்தச் சென்றோம். மாளிகையின் அழகான வெளிப்புற தோட்டத்தில் உணவருந்தினோம். மகாராஜாக்கள் போல் தலைப்பாகையும், உடையுமணிந்து பணியாளர்கள் உணவு பறிமாறினார்கள். அருமையாக உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. அதிலிருந்தே ஓட்டலின் சிறப்பை அறிந்துகொள்ள முடிந்தது. லோர்ட் மவுன்ட்பேட்டன் மற்றும் சார்ள்ஸ் இளவரசரில் இருந்து தற்கால ஹொலிவுட் நடிகர்கள்வரை பலர் இங்கு தங்கியிருந்திருக்கிறார்கள்.

Thick mistஜெய்ப்பூரில் இருந்து அடுத்த நாள் அதிகாலையில் கிளம்பி ஆக்ராவுக்கு பயணமானோம். வசதியான காரோடு, ஆங்கிலம் பேசும் டிரைவரும் கிடைத்ததால் பயணம் நல்லபடியாக ஆரம்பித்தது. ஆனால், எவரும் முன்கூட்டியே எச்சரித்திருக்காத பெருந்தடையை பயணத்தை ஆரம்பித்தபோது சந்திக்க நேர்ந்தது. முழு வடஇந்தியாவும் குளிர் காலத்தில் (அக்டோபர்-மார்ச்) மேகம் போன்ற தடித்த பனியில் மத்தியானம்வரை மூடி இருக்கும் என்பது அன்றுதான் தெரிந்தது. இதைப்பற்றி எதிலும் நான் வாசிக்கவும் இல்லை. இனி முன்வைத்த காலை பின்வைப்பதில்லை என்று பயணத்தைத் தொடர்ந்தோம். கண்களுக்கு முன் பத்துமீட்டர்வரை மட்டுமே பார்க்க முடிந்தது. போகும் பாதையில் வரைந்திருந்த வெள்ளைக்கோடுகள் மட்டுமே அந்தக் கோட்டுக்குள் வண்டி போக உதவியாக இருந்தது. சுற்றி இருந்த மரம் செடி எதுவுமே கண்களுக்குத் தெரியவில்லை. கொஞ்சநஞ்சமிருந்த தூக்கமும், அசதியும் என்னைவிட்டு ஓடிப்போயின. டிரைவருக்கு துணையாக சம்பாஷனையைத் தொடர கார் ஆக்ராவை நோக்கிப் போனது. மொத்தம் நாலரை மணி நேரப் பயணம். காரை அருமையாக ஓட்டிப் பத்திரமாக எங்களை ஆக்ராவுக்கு கொண்டு சேர்த்தார் டிரைவர் சாம். அவர் ராஜபுத்திரர்களின் வம்சத்தில் வந்தவராக தன்னை ஏற்கனவே அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். அவரோடு நடந்த சம்பாஷனையில் ராஜஸ்தானைப்பற்றிய அநேக விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்.

ஆக்ரா உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் சிறு நகரம். ராஜஸ்தானைக் கடந்து ஆக்ராவை சமீபித்தபோது பனிமூட்டம் கொஞ்சம் குறைந்து சுற்றி இருப்பவைகளைப் பார்க்க முடிந்தது. ஓட்டுனர் சாம் இனி பாதை மிகவும் நன்றாக இருக்கும் என்றார். இதுவரை இருந்ததைவிடவா, என்று நினைத்துக்கொண்டேன். ஜெய்ப்பூரில் இருந்து வந்த பாதை மிக அருமையாக இருந்தது. தனியார் நிறுவனத்தால் போடப்பட்ட பாதை என்று சாம் சொன்னார். உத்தரப்பிரதேசத்துக்குள் நுழைந்தவுடனேயே பாதையில் மாற்றம் தெரிந்தது. சாம் சொன்னதுபோல் அது நல்ல பாதையாக இருக்கவில்லை. அப்போதுதான் அவர் நகைச்சுவையாக அதைச் சொல்லியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். ராஜஸ்தான் அரசு செம்மையான பாதைகளை மாநிலத்தில் போட்டிருக்கிறது. அதே நிலை உத்தரப்பிரதேசத்தில் இல்லை. ஆக்ரா நெருங்க நெருங்க பாதை இன்னும் மோசமாக இருந்தது. இப்போது உத்தரப்பிரதேசத்தின் அகிலேஷின் ஆட்சி. உலகத்தின் அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் இருக்கும் ஊர் நல்ல முறையில் இருக்கும் என்ற என் எண்ணங்களில் மண் விழுந்தது. மத்திய அரசு தாஜ்மகால் இருக்கும் ஊரைச் சிறப்பாக வைத்திருப்பதற்கு கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுக்கின்றபோதும் அது அந்தப்பணியில் செலவிடப்படவில்லை என்பதை ஆக்ரா வரும் எவரும் புரிந்துகொள்ளுவார்கள். இதே தாஜ்மகால் வெளிநாட்டில் இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்து ஊரை ஒழுங்காக வைத்திருந்திருப்பார்கள் என்று நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

ஆக்ராவுக்குள் வண்டி நுழைந்ததுமே பாதைக்கு இருபுறமும் கழிவு நீர்போகும் சாக்கடையை சுத்தம்படுத்துகிறோம் என்று பாதைக்கு இருபுறமும் மூக்கைப் பொத்திக்கொள்ள வைக்கும் கழிவுகளை அள்ளி மலைபோல் குவித்திருந்தார்கள். நண்பர் ரொபட் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.  மேகமூட்டம்போல் ஊரெங்கும் தூசி. ராஜஸ்தானுக்கு பக்கத்தில் இருக்கும் உத்தரப்பிரதேசத்திற்கும் ராஜஸ்தானுக்கும் இடையில்தான் எத்தனை வித்தியாசம். கடைகள் எல்லாம் ஓர் அங்குலத் தடிப்பில் தூசிபடிந்து மிகவும் பழைய ஊராக ஆக்ரா காட்சி தந்தது. ஒருவழியாக கார் நாங்கள் தங்கப்போகும் ஓட்டலை அடைந்தது. உடனடியாக அறைக்குப் போய் உடை மாற்றிக்கொண்டு தாஜ்மகாலைப் பார்க்க ஓட்டல் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த காரில் போனோம். சாம் எங்களை இறக்கிவிட்டுவிட்டு மறுபடியும் ஜெய்ப்பூருக்கும் போகத் தயாரானார்.

IMG_0497எங்களுக்கு வழிகாட்டியாக வந்திருந்தவர் ஆங்கிலம் பேசத் தெரிந்த வரலாற்றறிவுள்ள வாலிபர். நன்றாகப் புகைப்படம் எடுக்கத் தெரிந்தவரும்கூட. அவர் வழிகாட்ட முதலில் தாஜ்மகாலைப் பார்க்கப்போனோம். வெளிநாட்டில் இருந்து வந்திருந்தபடியால் இந்திய இரத்தம் உடம்பில் ஓடினாலும் வெளிநாட்டார் கட்டணந்தான். அதைக்கட்டிவிட்டு உள்ளே நுழைந்தோம். தாஜ்மகாலுக்குள் நுழையும்போது காலணிகளுக்கு மேலாக அணிந்துகொள்ள காலுறை ஒன்றைத் தந்தார்கள். தூரத்தில் இருந்தே அந்த மாபெரும் கட்டடத்தைப் பார்த்தபோது மலைப்புத் தட்டியது. படங்கள் எப்போதும் சிறப்பாக எடுக்கப்படுவதால் அவை கொஞ்சம் அழகாகத்தான் எதையும் காட்டும். நேரில் பார்த்தபோது தாஜ்மகால் அந்தப் பனிமூட்டமுள்ள பகல் வேளையிலும் மின்னத்தான் செய்தது. சில மணி நேரங்களை அங்கே செலவிட்டு எல்லாக் கோணத்திலும் தாஜ்மகாலை மனதில் பதிவு செய்ய முயன்றேன். முழு நிலவு காலத்தில் அதில் பதிக்கப்பட்டிருந்த ஆரஞ்சுக் கற்கள் அனைத்தும் ஒளியில் மின்னி தாஜ்மகாலை இன்னொரு கோணத்தில் காட்டும் என்று கூறிய வழிகாட்டி அந்தக் கல்லில் கைவிளக்கை பிடித்துக் காட்டினார். அது மின்னத்தான் செய்தது. தாஜ்மகாலைப் பார்த்தபோது ஷாஜகானைப்பற்றியும், மும்தாஜைப்பற்றியும் வரலாற்றில் வாசித்திருந்த உண்மைகள் நினைவோட்டத்தில் படமாக ஓட ஆரம்பித்தன. ஷாஜகானின் மகன் அவுரங்கசிப் தந்தையைக் கொடூரமாக நடத்தியதும் நினைவில் வட்டமிட்டது. மும்தாஜ் ஷாஜகானின் மூன்றாம் மனைவி. அவளுக்குப் பிறந்தது பதினான்கு பிள்ளைகள்; எட்டு மட்டுமே உயிரோடு வாழ்ந்தவை. ஷாஜகானுக்கு மும்தாஜ் மீது அத்தனைப் பிரியமிருந்தது. அந்தப் பிரியத்தின் அடையாளமாகத்தான் இந்த அழகான கட்டடத்தை அவள் நினைவாகக் கட்டியிருக்கிறான் ஷாஜகான். 1632ல் ஆரம்பித்து 22 வருடங்கள் எடுத்தது இதைக் கட்டிமுடிப்பதற்கு. யமூனா நதிக்கரையில் 42 ஏக்கர் நிலப்பரப்பில் இது கட்டப்பட்டது. செலவான தொகை 32 மில்லியன் ரூபாய்கள். இதேபோல் இன்னொன்றையும் யமுனைக்கு அந்தப்புறம் ஷாஜகான் கட்டத் திட்டமிட்டு அத்திவாரம் போட்டிருந்தபோதும் அது நடக்கமுடியாமல் போய்விட்டது. ஒருதடவை மதத்தையும், பலதார திருமணத்தையும் மறந்து, தாஜ்மகாலின் கட்டடக்கலையைக் கண்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்ய முயன்றேன். பக்கத்திலேயே நடந்துவந்த வழிகாட்டி கொடுத்த விபரங்கள் மலைக்க வைப்பவை. எத்தனை நாடுகளில் இருந்து விலைமதிப்பான கற்களைத் தருவித்து, எத்தனைத் தொழில்நுட்பக் கலைஞர்களை உழைக்கவைத்து, ராஜஸ்தானில் கிடைத்த பளிங்குக் கற்களைக் கொண்டு அத்தனை அருமையான உலக அதிசயங்களில் ஒன்றை ஷாஜகான் கட்டியிருக்கிறான். தாஜ்மகால் நாட்டில் இருப்பதற்காக நிச்சயம் இந்தியா பெருமைகொள்ளத்தான் வேண்டும்.

Red Fort, Agraதாஜ்மகாலுக்கு சமீபத்திலேயே இருந்த மாமன்னன் அக்பர் கட்டிய செங்கோட்டையைப் பார்க்கப் போனோம். மொஹலாய கட்டடக் கலையை அதில் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அழகான தோட்டத்திலும், படுக்கை அறைகளிலும், வரவேற்பறைகளிலும், திறந்தவெளி குளிப்பறைகளிலும் மொஹலாய கலையம்சங்களைத் துல்லியமாகக் காணமுடிந்தது. எங்களோடு வந்த வழிகாட்டி அக்பரின் 500 மனைவிகளைப்பற்றியும், அவன் நடத்திய சொகுசு வாழ்க்கையைப் பற்றியும், கோட்டையின் சிறப்புக்களையும் விளக்கிக்கொண்டே வந்தார். செங்கோட்டை பழங்காலத்து சிறப்புக்களைக் கண்முன் நிறுத்தியது. சிறைபிடிக்கப்பட்டிருந்த ஷாஜகான் இங்கிருந்துதான் ஒவ்வொருநாளும் தாஜ்மகாலைக் கடைசிவரைக் கண்களால் கண்டு மடிந்திருக்கிறான். அவனுக்காக அவுரங்கசிப் கட்டியிருந்த பளிங்கு வாசஸ்தலத்தையும் பார்த்தோம். அங்கிருந்து புகைமூட்டத்தின் மத்தியில் தூரத்தில் காட்சிதந்த தாஜ்மகாலைப் பார்த்து வியந்தோம்; அவுரங்கசிப்பின் கோரச்செயல் ஒருபுறம் நெஞ்சைச் சுட்டது.

அடுத்தநாள் அதிகாலை மறுபடியும் பனிமூட்டத்தின் நடுவில் நியூடெல்லி நோக்கிச் சென்றோம். இப்போது ஓட்டுனர் வேறு ஒருவர். இருந்தபோதும் பத்திரமாக டெல்லி கொண்டுபோய்ச் சேர்த்தார். அங்குபோனபிறகுதான் குடியரசு தினத்திற்காக பலத்த பாதுகாப்பு இருந்ததால் முக்கிய இடங்களைப் பார்க்க முடியாது என்பது தெரிந்தது. டெல்லி போவது இதுதான் முதல்தடவை. கடுமையான டிராபிக் ஜேமும், புகைமூட்டம்போல் தலைநகரைச் சூழ்ந்திருந்த அசுத்தக் காற்றும் வா வாவென்று வரவேற்றன. இருந்தபோதும் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்த ஒரு போதகரை அவருடைய முகவரியைக் கண்டுபிடித்து சந்தித்து மூன்று மணிநேரத்தைக் கழித்தோம். சீன ஓட்டல் ஒன்றுக்கு அழைத்துப்போய் மதிய உணவு அருந்த வைத்தார். அதற்குப் பிறகு ஓட்டலுக்குப் போய் தங்கியிருந்துவிட்டு அடுத்தநாள் சென்னை நோக்கிப் பயணமானோம்.

ஒரு வாரத்திற்குள், மின்னல் வேகப் பயணம் என்று சொல்லுவார்களே அதுபோல பெங்களூரில் இருந்து மும்பாய், குஜராத், ஜெய்ப்பூர், ஆக்ரா, டெல்லி போய்வந்துவிட்டோம். இந்தியாவின் பெருமைவாய்ந்த பழம் வரலாற்றுப் பெருமையும், முக்கியத்துவமும் பெற்ற இடங்களைப் பார்த்த அனுபவம் மறக்க முடியாததுதான். ராஜபுத்திர வம்ச வரலாறு, மொஹலாய சாம்ராஜ்ய வரலாறு, ஆறு வேறுபட்ட மொழிகளையும், மதங்களையும், பண்பாடுகளையும் கொண்டிருக்கும் மாநிலங்கள் அனைத்துமே என்னைச் சிந்திக்க வைக்காமலில்லை. எத்தனை வம்சங்கள் வந்து மறைந்தாலும், ஆட்சிகள் உருவாகிக் கவிழ்ந்தாலும், கோட்டைகளும், மாளிகைகளும் மாமன்னர்களின் மாவீரத்தையும், போர்த்திறத்தையும், கலையார்வத்தையும், தொழில்நுட்பத் திறனையும், ஏன் கொடுஞ்செயல்களையும்கூட விவரித்துக் காட்டினாலும் ஆண்டவரை அறிந்திராத வெறுமை வாழ்க்கை வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. உலகமிருக்கும் வரையில் அவர்களுடைய இவ்வுலக சாகசங்களையும், பெருமைகளைகளையும் அவர்கள் விட்டுச்சென்றிருக்கும் அம்பர் கோட்டையும், தாஜ்மாலும், செங்கோட்டையும் பறைசாற்றிக்கொண்டிருந்தபோதும், அவர்கள் ஆண்டவரை அறியாது சுயத்திற்கு மட்டுமே மகிமைதேடி மடிந்திருக்கிறார்கள் என்பதையும் கூடவே சேர்த்துச் சொல்லாமலிருக்கவில்லை. எத்தனையோ சாதனைகளை வாழ்க்கையில் செய்து, சொகுசாக வாழ்ந்த சாலமோன் மன்னன் மனந்திரும்பி எல்லாம் இறுதியில் மாயை என்று சொல்லவில்லையா? ஆண்டவரை அறிந்து வாழும் வாழ்க்கையில் இருந்த நிம்மதியையும், சமாதானத்தையும், நிலைத்திருக்கும் பரலோக வாழ்க்கையனுபவத்தையும் நிலையற்ற உலக சுகங்களில் அவனால் காணமுடியவில்லை. இந்த உலகத்து சாதனையாளர்களின் வாழ்க்கை நமக்கு நிலையான வாழ்க்கையைத் தரக்கூடிய கிறிஸ்துவை நினைக்க வைக்கவேண்டும். எது இருந்தும் கிறிஸ்து இல்லாமல் எவருக்கும் பயனில்லை.

இந்த வட இந்தியப் பயணத்தில் பெரும்பாலும் நான் பார்த்த வரலாற்றுச் சின்னங்களெல்லாம் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அந்த நூற்றாண்டிலேயே எல்லா உலக அதிசயங்களையும்விட அற்புதமான ஆண்டவர் எழுப்பிய திருச்சபை சீர்திருத்தம் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கெதிராக ஐரோப்பாவில் ஆரம்பித்தது. வேதம் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்படவும், சத்தியம் பிரசங்கிக்கப்படவும் ஆண்டவர் பலரை எழுப்பி ஆவியானவரின் மூலம் வல்லமையான சீர்திருத்தம் நெருப்புப்போல் எங்கும் பரவச் செய்தார். லூத்தரும், கல்வினும், டின்டேலும் வாழ்ந்த காலமது. சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டு கிறிஸ்து இலவசமாகத் தரும் இரட்சிப்பைப்பற்றி ஐரோப்பியர்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு உருவான காலம். இருந்தும் அதன் அடிச்சுவடுகூடப் பதியும் ஆசீர்வாதமில்லாமல் இந்தியா இருந்துவந்திருக்கிறது என்பதையும் என்னால் நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. இந்தக் காலத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பேனி ஏற்கனவே வியாபாரத்தை இந்தியாவில் ஆரம்பித்திருந்தபோதும் பதினேழாம் நூற்றாண்டிலேயே புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்த சீகன்பால்க் இந்தியாவுக்கு வந்தார். அதற்கு நூறு வருடங்களுக்குப் பின்னரே கேரி இந்தியா வந்தார்; பல்வேறு இந்திய மொழிகளில் வேதத்தை மொழிபெயர்த்தார். இனியாவது அவர்களுடைய வருகையின் அடையாளமாக மகத்தான வேத சீர்திருத்தம் இந்தியாவில் உருவாகுமா, மெய்ச்சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டு கோடிக்கணக்கான மக்கள் ஆத்ம விடுதலை அடைய வழியேற்படுமா? இன்று இந்திய தேசத்தில் மகாராஜாக்களும், சிற்றரசர்களும், குடிமக்களிடம் அடிமைத்தனமும், காலனித்துவ ஆட்சியும் இல்லாமல் போயிருக்கலாம். இருந்தும் பெரியளவில் ஆத்மீக விடுதலை இல்லாமல் தேசம் இருந்து வருகிறது. டில்லியில் இருந்து கன்னியாகுமரிவரை வீசும், கிறிஸ்துவின் சுவிசேஷம் தரும் ஆத்மீக அறிவொளியே இன்று இந்தியாவுக்கு தேவை.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 28 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக