அமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்

கடந்த மாதம் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்குப் போய்வந்தேன். அமெரிக்காவில் ஆறு மாநிலங்களிலும், கனடாவில் இரு நகர்ப்புறங்களிலும் பயணம் செய்தேன். நவம்பரில் நிகழவிருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றி அமெரிக்கர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கிருந்தது. அதுபற்றிப் பலரிடம் பேசியிருக்கிறேன். பொதுவாகவே என்றுமிருந்திராதவகையில் நாட்டு அரசியல் மிகவும் மோசமான நிலையை அடைந்திருக்கிறது என்ற பொதுவான கருத்தை நான் எல்லோரிடமும் காணமுடிந்தது. அமெரிக்கா பியூரிட்டன் பெரியவர்களால் உருவாக்கப்பட்ட நாடு. ஒழுக்கமுள்ளவர்களாக, நேர்மையுள்ளவர்களாக, உறுதியானவர்களாக நாட்டுத் தலைவர்கள் இருக்கவேண்டுமென்பதிலெல்லாம் அந்நாடு சிரத்தை காட்டி வந்திருக்கின்றது. அத்தகைய கொள்கைகளை இன்று சமுதாயம் தூக்கியெறிந்துவிட்டு பில் கிளின்டன் காலத்தில் இருந்து ஹொலிவுட் பாணி அரசியலுக்குப் போய்விட்டிருக்கிறது என்பதை உணர்ந்து வருந்துகிற அநேகரை நான் சந்தித்தேன். ஒழுக்கம் அதிகளவுக்கு சீரழிந்துவிட்டிருக்கிறது, அதுவும் ஒபாமாவின் எட்டுவருட ஆட்சியில் நாடு மிகவும் மோசமாகிவிட்டிருக்கிறது என்பது பொதுவாகவே கிறிஸ்தவர்களின் கணிப்பாக இருந்தது. இந்த எண்ணங்களோடு தேர்தல் நேரத்தில் என்ன செய்வது என்ற ஆதங்கத்தில் கிறிஸ்தவர்கள் இருப்பதைக் கண்டேன். ஹிளரி அதிபராவது நாட்டுக்கு ஆபத்தானது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தபோதும் வழமையான குடியரசுக்கட்சி தலைவர் போலில்லாமல் முரண்பாடுகள் கொண்ட மனிதராக, அரசியல் அனுபவம் எதுவும் இல்லாதவராக இருந்த டிரம்ப்பை நம்புவதா இல்லையா என்ற பெரிய தலைவலியும் அவர்களுக்கிருந்தது. அவர்களைப் பொறுத்தவரையில் அதிபராவதற்கு தகுதியற்றவர்களாயிருந்த இரண்டு தலைவர்களில் யாருக்கு வாக்களிப்பது என்ற நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. யாருக்கும் வாக்களிக்கக்கூடாது என்பவர்களையும், இரண்டு மோசமான தலைவர்களில் குறைந்தளவு மோசமானவருக்கு வாக்களிக்கலாம் என்ற எண்ணங்களை முன்வைப்பவர்களையும் கண்டேன். லொஸ் ஏன்ஜலிஸ் நகரில் கிறிஸ்தவரல்லாத ஒருவரும் இந்த வருடத் தேர்தல் குழப்பமுள்ளதாகவே இருக்கிறது என்ற கருத்தை முன்வைத்தார்.

அமெரிக்காவுக்கு வெளியில் ‘லிபரல்’ சமுதாயத்தில் (அதாவது கிறிஸ்தவப் போதனைகள் எதற்கும் மதிப்பளிக்காத சோஷலிஸ சமுதாயப்போக்கு) வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு அமெரிக்கா சமுதாயத்தைப் புரிந்துகொள்ளுவது கொஞ்சம் கஷ்டந்தான். நம்மைப் பொறுத்தவரையில் எந்தக் கட்சி தேர்தலில் நின்றாலும் எல்லாக் கட்சிகளுமே லிபரல் கட்சிகளாக, வேத ஒழுக்கத்திற்கும், வேத சமுதாயப் போக்கிற்கும் மதிப்பளிக்காதவையாக இருக்கும். ஆகவே, இரண்டு மோசமான கட்சிகளில் எது குறைந்தளவு ஆபத்தை விளைவிக்கும் என்ற அடிப்படையில் வாக்களித்தே நமக்குப் பழக்கமாகிவிட்டது. நான் வாழும் நியூசிலாந்தைப் பொறுத்தவரையில் இதுதான் உண்மை. ஒன்று சோஷலிஷ லிபரல் கட்சியான தொழிற் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது சமூகக் கண்ணோட்டத்தைப் பொறுத்தவரையில் லிபரல் கட்சியானாலும் பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் தனியார் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் தேசியக் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும். இந்த இரண்டும் மோசமான கோட்பாடுகளை முன்வைத்தால் ஆபத்துத்தான். இது நமக்குப் பழகிப்போய்விட்டது. ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரையில் கிறிஸ்தவ பாதிப்பு சமுதாயத்தில் தொடர்ந்தும் அதிகமாக இருப்பதால் குடியரசுக்கட்சி இதுவரை கிறிஸ்தவர்களுக்கு சார்பானதாக இருந்து வந்திருக்கிறது. அத்தோடு பெருமளவுக்கு கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டவர்கள் அரசியலில் இருந்துவருகிறார்கள்; கிறிஸ்தவ சமுதாயப் பார்வையையும் வலியுறுத்தி வருகிறார்கள். அமெரிக்க சட்ட அமைப்பும் மத சுதந்திரத்தை வலியுறுத்திப் பாதுகாத்து வருவதாக இருக்கிறது.

Donald-Trumpஇப்போது அதிபர் தேர்தல் முடிந்துவிட்டிருக்கிறது. வரலாறு காணாதவகையில் டொனல்ட் டிரம்ப் வெற்றி கண்டிருக்கிறார். அரசியல் வல்லுனர்கள், தேர்தல் கணிப்பாளர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் என்று எல்லோருமே அதிர்ச்சியடையும்வகையில் அவர்களுடைய கணிப்புகளையெல்லாம் தூள் தூளாக்கிவிட்டு டிரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார். சி. என். என். போன்ற லிபரல் தொலைகாட்சிகள், வாஷிங்டன் போஸ்ட் போன்ற லிபரல் செய்தித் தாள்கள் மற்றும் ஹொலிவுட் நடிகர்கள் என்று லிபரல்கள் அனைவரும் டிரம்ப்பை வெறுத்து அவர் மீது ஒரு வருடத்துக்கு மேல் தூற்றுதல்களை வாரி வாரி இறைத்திருக்கிறார்கள். இந்தளவுக்கு வெறுக்கப்பட்டவர்களும், அசிங்கப்பேச்சுக்கு உள்ளானவர்களும் எவரும் இல்லை எனலாம். இத்தனைக்கும் மத்தியில் டிரம்ப்பை நம்பி மக்கள் அவருக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். இது எப்படி நிகழ்ந்தது என்று நம்பமுடியாமல் அவருடைய எதிரிகள் எல்லோரும் மூளை குழம்பிப்போய் தவிக்கிறார்கள். இது சாதாரண வெற்றியல்ல; கொங்கிரஸ், செனட் என்று அத்தனையையும் வென்று மிகவும் பலமுள்ள அரசாங்கத்தை அமைத்திருக்கிறார் டிரம்ப். அமெரிக்க குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் தலைவரான போல் ரயன், ‘இந்த வெற்றிக்கு டிரம்ப்பே முழுக்காரணம்’ என்று டிரம்பின் வெற்றியை அங்கீகரித்திருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரையில் டிரம்ப் எப்படிப்பட்ட அதிபராக இருக்கப்போகிறார் என்பது தெரியாது. அவர் முரண்பாடுகள் கொண்டவர் என்பதை அவருடைய தேர்தல்காலப் பேச்சுக்கள் சுட்டியிருக்கின்றன. இருந்தும் டிரம்ப் ஒரு நல்ல தலைவராக இருக்கப்போவதில்லை என்று நம்மால் சொல்லிவிட முடியாது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் ஒன்று மட்டும் தெரிகிறது; கர்த்தர் தன்னுடைய கோபத்தின் மத்தியிலும் அமெரிக்க கிறிஸ்தவர்களின் ஜெபங்களைக் கேட்டு அவர்களுக்கு வரவிருந்த பேராபத்துகளைத் தவிர்த்திருக்கிறார். டிரம்ப்பை வெறுக்கின்ற அநேகர் டிரம்ப்பை மட்டுமே பார்க்கிறார்களே தவிர அமெரிக்க சமுதாயத்திற்கு ஏற்பட்டிருந்த போராபத்தை உணர மறுக்கிறார்கள். லிபரல் சமுதாயப் பார்வையைக் கொண்டவர்களுக்கு அதிலெல்லாம் அக்கறை இருக்காது. ஹிளரி கிளின்டன் தேர்தல் காலத்தில், குழந்தை பிறப்பதற்கு ஒரு நாளுக்கு முன்புகூட அதைத் தாயின் வயிற்றில் கருக்கலைப்பு செய்வதில் தவறில்லை என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இது ஆறாம் கட்டளைக்கு எதிரானது. அமெரிக்க சட்டங்களுக்கெல்லாம் எதிரான ஒரு நிலைப்பாடு இது. ஹிளரி அதிபராகியிருந்தால் இது நிச்சயம் சட்டமாகியிருக்கும். அமெரிக்க சுப்ரீம் கோர்ட் மிகவும் அதிகாரம் கொண்டது. அது அமெரிக்காவின் சட்ட அமைப்பைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பைக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் மரணமான அன்டோனின் ஸ்காலியா என்ற அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பழமைவாதி. அவருடைய இடத்தில் இன்னொருவரையும் இன்னும் இரு நீதிபதிகளையும் புதிய அதிபர் சுப்ரீம் கோர்ட்டுக்கு நியமிக்கும் நிலை உருவாகியிருக்கிறது. நிச்சயமாக ஹிளரி கிளின்டன் லிபரல் நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு நியமித்திருப்பார். அப்படி நிகழ்ந்திருக்குமானால் நாட்டின் நிலை மிகமோசமாகியிருக்கும். ஜனநாயகக் கட்சியின் லிபரல் கொள்கைகள், திருநங்கையருக்கு பொதுக் கழிப்பறைக்குள் போகும் அனுமதி உட்பட நாட்டில் சட்டமாகியிருந்திருக்கும். இத்தகைய லிபரல் ஒழுக்கக்கேடு மற்றும் லிபரல் சமுதாய மாற்றங்களை ஜனநாயகக் கட்சி அனுமதித்திருக்கும். அதிலிருந்து அமெரிக்கா பழமைவாதத்துக்குத் திரும்புவதென்பது நடவாத காரியமாகியிருக்கும். இந்தப் போராபத்திலிருந்து கர்த்தர் அமெரிக்காவைக் காப்பாற்றவில்லை என்று எவரால் சொல்ல முடியும்? டிரம்ப் அதிபராகியிருப்பதால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தொடர்ந்து கன்சர்வேடிவ் பழமைவாதிகளாக இருக்கவும், அமெரிக்க குடியரசின் சட்ட அமைப்பின் பாதுகாப்புக்கும், மத சுதந்திரத்திற்கும் தற்காலிக உத்தரவாதமும் கிடைத்திருக்கிறது. கிறிஸ்தவர்களும் ஓரளவுக்கு நிம்மதியாக மூச்சுவிட முடிந்திருக்கிறது.

சுவிசேஷ கிறிஸ்தவத்தின் பலம்

அமெரிக்க நாட்டைப்போல கர்த்தரின் பொதுவான கிருபை அதிகம் காணப்படும் நாட்டை நான் கண்டதில்லை. சுவிசேஷத்தின் தாக்கமும் அதனால் ஏற்பட்டிருக்கும் சமுதாய விளைவுகளும் அந்த நாட்டைப் பெரிதும் பாதித்திருப்பதைப்போல வேறு நாடுகளில் அதிகம் காணமுடியாது. ஐரோப்பா, கனடா போன்ற நாடுகள் ஒழுக்கத்தை மூட்டை கட்டிவைத்துவிட்டு ஹொலிவுட் பாணியில் என்றோ போய்விட்டன. அமெரிக்காவில் இன்றுவரை சுவிசேஷ கிறிஸ்தவர்களின் பலம் வேறு எங்கும் இல்லாதவகையில் இருந்துவருகிறது. உதாரணத்திற்கு திருநங்கையர்கள் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளுக்குப் போகலாம் என்ற நடைமுறையை டார்கட் (Target) என்ற வர்த்தக நிறுவனம் அனுமதித்தபோது அமெரிக்க கிறிஸ்தவர்கள் வட கரலைனா மாநிலத்தில் அந்நிறுவனத்தை அடியோடு புறக்கணித்து அதன் வர்த்தகத்திற்கு பெரும் இடறலை ஏற்படுத்தினார்கள். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல லிபரல் விளையாட்டு, வர்த்தக நிறுவனங்கள் அம்மாநிலத்தைவிட்டு வேறு மாநிலங்களுக்குத் தங்களுடைய வர்த்தக ஸ்தாபனங்களை நகர்த்தியபோதும் வட கரலைனா இன்றுவரை அசைந்துகொடுக்கவில்லை. அந்தளவுக்கு அந்த மாநிலத்தில் சுவிசேஷ கிறிஸ்தவர்கள் பலமுடன் இருந்துவருகிறார்கள். கிறிஸ்தவர்களால் நடத்தப்படும், மிகவும் பிரபலமான சிக் பிலே (Chick-fil-A) என்ற உணவுக்கூடம் ஞாயிறு தினத்தில் வர்த்தகம் செய்வதில்லை என்பதை வழக்கத்தில் கொண்டிருப்பதோடு அதை வெளிப்படையாகக் கூறி விளம்பரப்பலகைகளை எல்லாப் பகுதிகளிலும் ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க பல்கலைக்கழகங்களிலும் சுவிசேஷத்தின் தாக்கத்தை அதிகம் காணலாம். லூசியானா மாநிலத்தில் 5000 பேர் கொண்ட ஒரு சிறைச்சாலையில் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியொன்று நடந்துவருகின்றது. அதில் பயிற்சிபெற்று தேர்ந்தவர்கள் சிறைக்குள்ளேயே சபைநிறுவி பிரசங்கித்து வருகிறார்கள். இந்தளவுக்கு கிறிஸ்தவர்கள் தங்களுடைய நம்பிக்கைகளை வெளிப்படையாக, தைரியமாக வெளிப்படுத்தி சுதந்திரத்தோடு வாழ்ந்துவருவதை வேறு நாடுகளில் நாம் காணமுடியாது. லிபரலிசம் அமெரிக்காவைப் பெரிதும் பாதித்திருக்கும்போதும் சுவிசேஷ கிறிஸ்தவத்தின் தாக்கம் அமெரிக்க சமுதாயத்தில் இன்றும் தொடர்ந்திருந்துவருவதை நான் காண்கிறேன். அதை வேறு உலக நாடுகளில் நான் கண்டதில்லை. அந்நாட்டு சட்ட அமைப்பு மத சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் தந்து அதை வழியுறுத்துகிறது. இருந்தபோதும் அதற்குப் பேராபத்து வந்திருப்பதையும் அமெரிக்க கிறிஸ்தவர்கள் இன்று உணராமலில்லை. அதுவே அவர்களை டிரம்புக்கு வாக்களிக்க வைத்திருக்கிறது.

ஜெபக்கூட்டங்கள்

bibleversesஅமெரிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் பெனிஹின் போன்ற பிரசங்கிகளால் செழிப்பு உபதேசப் போலிப்போதனைகளும், வேறு லிபரல் போதனைகளும் ஏனைய நாடுகளைப்போல மலிந்து காணப்பட்டபோதும் அடிப்படை சுவிசேஷக் கோட்பாட்டைப் பின்பற்றி வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் கிறிஸ்தவர்கள் பரந்து காணப்படுகிறார்கள். அத்தகைய விசுவாசம் கொண்ட சபைகளும், நிறுவனங்களும் நாட்டில் அதிகம் உள்ளன. சீர்திருத்தவாத போதனைகளில் அதிக அக்கறை காட்டிவரும் கிறிஸ்தவர்களும் அங்கு இன்று அதிகரித்து வருகிறார்கள். எனக்குப் பரிச்சயமான அமெரிக்க கிறிஸ்தவ சபைகளில் என்னை உணர்ச்சிவசப்பட வைத்த ஒரு விஷயம் அவர்களுடைய விசுவாசமுள்ள, நேர்மையான, உறுதியான ஜெப வாழ்க்கைதான். ஜெபிப்பது அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு வழக்கமாக இல்லாமல் அதுவே வாழ்க்கையாக மாறியிருக்கிறது. அங்கு நான் கண்டதைப்போன்ற விசுவாசமுள்ள ஜெபவாழ்க்கை முறையை வேறெங்கும் நான் கண்டதில்லை. அந்நாட்டு கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசத்தில் தீவிர அக்கறை காட்டுகிறார்கள். அவர்களுடைய பேச்சிலும் செயலிலும் அவர்களுடைய விசுவாசத்தின் வல்லமையைக் காணமுடிகின்றது.

இன்று எல்லா நாடுகளிலுமே கிறிஸ்தவ சபைகளில் வாரத்தின் மத்தியில் ஜெபக்கூட்டத்தை நடத்துவது அருகி வந்துகொண்டிருக்கிறது. ஒரு ஆராதனையோடு ஓய்வு நாள் முடிந்துவிட்டது என்ற எண்ணப்பாடே பொதுவாக அநேக கிறிஸ்தவர்கள் மத்தியில் எங்கும் இருந்துவருகிறது. ஓய்வு நாளில் இரண்டு ஆராதனைகளை நடத்தி வார மத்தியில் ஜெபக்கூட்டம் நடத்துகிற சபைகளைப் பழைய பஞ்ஞாங்கமாகக் கருதுவது அதிகரித்துவருகிறது. (அத்தகைய பழைய பஞ்ஞாங்கத்தைப் பின்பற்றுகிறவர்களில் நானும் ஒருவன்). இதற்கு மத்தியில் தொடர்ந்து இம்முறையைப் பின்பற்றி விசுவாசமாக திருச்சபை நடத்தும் சபைகள் அங்கு அநேகம். அவர்களுக்கும் எதிர்ப்பு இல்லாமலில்லை. ஜெபக்கூட்டத்திற்கு எல்லோருமே போவதில்லை. இருந்தபோதும் அவர்களுடைய ஜெபக்கூட்டங்களில் மெய்யான விசுவாசத்தோடும் பாரத்தோடும் ஜெபங்கள் ஏறெடுக்கப்படுவதை நான் இருபது வருடங்களுக்கு மேலாகக் கவனித்து வந்திருக்கிறேன். அத்தகைய ஆழமான விசுவாசம் கொண்ட உறுதியான ஜெபங்கள் இன்றும் தொடர்கின்றன. உலக நாடுகளில் சுவிசேஷம் பரவ வேண்டும் என்ற அக்கறை அவர்களுக்கு அதிகமாக இருப்பதோடு அத்தகைய ஊழியங்களுக்காக அவர்கள் விசுவாசத்தோடு ஜெபிக்கிறார்கள். ஏனைய நாட்டுச் சமுதாய ஆத்துமாக்களின் பெயர்களும், ஊர் பெயர்களும் சொல்லுவதற்கு கடினமானவையாக இருந்தபோதும், அந்நாடுகளுக்குப் போகாமலும், அந்த ஆத்துமாக்களை ஒருபோதும் சந்திக்காமல் இருந்தபோதும் அதையெல்லாம் பொருட்படுத்தாது அவர்களுக்காக விசுவாசத்தோடு ஜெபிக்கும் அவர்களுடைய விசுவாசம் என்னைப் பொறுத்தவரையில் உயர்ந்ததாகவே பட்டது. இந்தவிதத்தில் சபை மக்களை வளர்த்துவருகின்ற போதகர்களைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. மெய்யான போதகர்களால் மட்டுமே இத்தகைய ஆசீர்வாதத்தைத் தங்களுடைய ஊழியத்தில் சந்திக்க முடியும். ஜெபத்தில் எந்தளவுக்கு உயர வேண்டியவர்களாக இருக்கிறோம் என்ற மனநிலையோடு நான் திரும்ப நேர்ந்தது.

ஜோர்ஜ் விட்பீல்ட்

george-whitefieldஅமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் போதக நண்பர் ஒருவர் என்னை ஜோர்ஜ் விட்பீல்ட் பிரசங்கம் செய்திருந்த ஓர் ஊருக்கு அழைத்துப் போனார். பச்சைப் பசேல் என்ற பரந்த வெளியில் அழகான சூழலைக் கொண்டிருந்த ஊர் அது. பென்சில்வேனியாவில் ஆமிஷ் (Amish) சமுதாயத்தை இந்தப் பகுதிகளில் காணலாம். மிகவும் பழமையான சமுதாயப் போக்கினைப் பின்பற்றும் மக்கள் ஆமிஷ் மக்கள். எந்த நவீன வசதிகளையும் அவர்கள் பின்பற்றுவது குறைவு. அவர்களுடைய உடைகள்கூட பழமையானதாக இருக்கும். உதாரணத்திற்கு அவர்கள் மின்சாரத்தைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டினைக் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் மின்சாரத்தைப் பயன்படுத்தமாட்டார்கள்; ஆனால், தங்களுடைய தொழிலுக்காகக் கொண்டிருக்கும் கூடத்தில் அதைப் பயன்படுத்துவார்கள். அவர்கள் பயணிக்கும் வண்டியும் குதிரை வண்டிதான். விவசாயத்திற்காக அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களும் பழமையானதாக இருக்கும். ஆமிஷ் சமுதாயம் பெரும்பாலும் வெளியுலகத் தொடர்பைத் தள்ளிவைத்து வாழ்ந்து வருகிறது. என் நண்பரொருவர் இவர்கள் மத்தியில் சுவிசேஷத்தைப் பலவருடங்கள் சொல்லி வந்திருக்கிறார். அது திருச்சபை அமைப்பதில் போய் முடியும் ஒரு கட்டத்தை இப்போது நெருங்கிக்கொண்டிருக்கிறது.

ஜோர்ஜ் விட்பீல்ட் பிரசங்கம் செய்திருந்த இந்த ஊரில் ஒரு பிரஸ்பிடீரியன் சபை இன்றும் இருந்து ஆராதனை நடத்தி வருகிறது. 1800களில் கட்டப்பட்ட சபை அது. சாமுவேல் டேவிஸ் போன்றோரும் இங்கு பிரசங்கம் செய்திருக்கிறார்கள். விட்பீல்ட் பிரசங்கம் செய்த இடத்தில் இருந்த ஒரு மரத்தை நண்பர் சுட்டிக்காட்டினார். ஆயிரக்கணக்கானவர்கள் அதிகாலையில் பனியையும் இருட்டையும் பொருட்படுத்தாமல் பரந்த வெளியில் கூடிவந்து விட்பீல்டின் பிரசங்கத்தை அக்காலத்தில் கேட்டிருக்கிறார்கள். ஜோர்ஜ் விட்பீல்டின் பிரசங்கங்கள் அமெரிக்கர்கள் மத்தியில் அன்று கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டன. எத்தகைய கிறிஸ்தவ அடித்தளத்தை ஆசீர்வாதமாகக் கொண்டமைந்திருக்கிறது இந்நாடு என்பதை எண்ணிப்பார்க்காமல் இருக்கமுடியவில்லை. இத்தகைய நாட்டில் இன்று நடந்துவருகின்ற நிகழ்வுகள் நிச்சயம் அந்நாட்டுக்காக ஜெபிக்கவேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன. நாட்டை உருவாக்கிய அருமையான கிறிஸ்தவ தலைவர்களின் வழிமுறைகளையும், ஆத்மீக வெளிப்படுத்தல்களால் உருவாகிய கிறிஸ்தவ பாரம்பரியத்தையும் துச்சமாகக் கருதி வெகுவேகமாக லிபரல் சமுதாய வாழ்க்கையில் நேசம் காட்டி அதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஆபிரகாம் பரந்த வெளியை லோத்துவுக்குக் காட்டி உனக்குப் பிடித்த பகுதியைத் தெரிந்துகொள் என்று சொன்னபோது, கண்ணுக்குக் கவர்ச்சியாக இருந்த சோதோம், கொமோரா நகரங்கள் இருந்த பகுதியை லோத்து தெரிந்துகொண்டான். அது எத்தனைப் பெரிய தவறு! அந்தத் தவறை இன்று செய்து லிபரல் சமுதாய வாழ்க்கையைத் தெரிந்துகொண்டிருக்கிறது அமெரிக்க சமுதாயத்தின் ஒருபகுதி. என்றுமில்லாதவகையில் சுவிசேஷப் பிரசங்கங்கள் விட்பீல்டின் காலத்தைப் போல இன்று தேவையாக இருக்கிறது இந்நாட்டுக்கு.

நியூயோர்க்

நியூயோர்க் நகரில் புருக்ளின் (Brooklyn) பகுதியில் பிரசங்கம் செய்யச் சென்றிருந்தபோது சில நண்பர்களோடு இரவு உணவுக்காக நியூயோர்க்கின் மன்ஹேட்டன் பகுதிக்குப் போயிருந்தேன். எத்தனை தடவை இங்கு வந்தாலும் இந்த மாபெரும் நகரைப் பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. வானுயர்ந்த கட்டடங்களும், மஞ்சள் நிற டாக்சிகளும், கோடீஸ்வர யூதர்களும், அப்பார்ட்மென்ட் வாழ்க்கை வாழும் உயர் மத்தியதர மக்களும் நிறைந்த ‘கொங்கிரீட் நகரம்’ என்று அழைக்கப்படும் நியூயோர்க் நிச்சயமாக ஒரு பெரும் நகரந்தான் (Big apple). நியூயோர்க் மக்கள் வாழ்க்கையே வேறு. இந்நகர் தனக்கென ஒரு கலாச்சாரத்தையே கொண்டிருக்கிறது. நியூயோர்க் சிந்தனை, நியூயோர்க் பேச்சு, நியூயோர்க் வாழ்க்கை என்றெல்லாம் பேசும் அளவுக்கு அமெரிக்காவின் ஏனைய நகரங்களை விட மிகவும் வித்தியாசமானது நியூயோர்க்.

புருக்ளினில் கருப்பர்களைப் பெரும்பாலாகக் கொண்டிருந்த ஒரு சபையில் நான் முதன் முறையாகப் பிரசங்கித்தேன். நியூயோர்க்கில் இந்த சபை இருந்தபோதும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களாகத்தான் இருந்தார்கள். கிறிஸ்துவில் அன்பையும் விசுவாசத்தையும் கொண்டிருந்து வேதப் பிரசங்கங்களைக் கேட்பதிலும், ஆராதனை செய்வதிலும் ஊக்கம் காட்டிவரும் இந்த சபை சீர்திருத்த சத்தியத்தில் ஆர்வம்காட்டி வளர்ந்து வருகின்றது. புருக்லீன் நியூயோர்க்கின் ஐந்து பரோக்களில் (Borough) பெரியது. சபை இருந்த பகுதி அதிகமாக கருப்பர்கள் வாழும் பகுதி. வீடுகள் கட்டப்பட்டிருந்த முறை வித்தியாசமானதாக இருந்தது. அவை கட்டப்பட்டிருக்கும் விதம் எத்தகைய சமுதாய தரத்தில் உள்ளவர்கள் அந்தப் பகுதியில் வாழ்கிறார்கள் என்பதை விளக்குவதாக இருந்தது.

freedom_tower_newநியூயோர்க்கின் டுவின் டவர் தீவிரவாதிகளால் அழிக்கப்பட்டபிறகு அதே இடத்தில் இன்று ‘சுதந்திரக் கட்டடம்’ விண்ணைத் தொடும்விதத்தில் உயர்ந்து நிற்கிறது. எங்களை எவரும் அத்தனை விரைவில் அழித்துவிட முடியாது என்று சவால் விடும் விதத்தில் அது நிமிர்ந்து நிற்கிறது. கட்டடத்தைச் சுற்றி இன்று எல்லையற்ற பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்தும் அங்கு வேலை நடந்து வருகிறது. பல வருடங்களுக்கு முன் டுவின் டவரில் நின்ற நினைவு மனதில் வந்தது. அதற்கு அடுத்த வருடமே அந்தக் கட்டம் தாக்குதலுக்கு உள்ளாகிய நினைவும் கூடவே வந்தது. கட்டடம் தாக்கப்பட்ட வருடம் அக்டோபர் மாதத்தில் அது இருந்த பகுதியைச் சுற்றிப்பார்த்திருக்கிறேன். அந்தக் காட்சிகளும் மனதில் சித்திரமாக ஓடின.

அமெரிக்கா தற்செயலாக உருவான ஒரு நாடல்ல. அது கிறிஸ்தவ சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்டு கர்த்தரால் உருவாக்கப்பட்ட நாடு. கர்த்தரின் ஆசீர்வாதத்தை அதிகளவுக்கு அனுபவித்து வந்திருக்கும் நாடு. உலகத்தின் தலைமை நாடாக இருந்து மற்ற தேசங்களுக்கு வழிகாட்டி வந்திருக்கும் நாடு. உலகின் பாதுகாப்புக்கும் அதிகம் பணி செய்திருக்கும் நாடு. எல்லாவற்றுக்கும் மேலாக கிறிஸ்தவத்தின் தாக்கத்தைப் பெருமளவுக்கு தன் சமுதாயத்தில் கண்டிருக்கும் நாடு. இந்நாட்டில் ஏற்படும் லிபரல் மாற்றங்களும், கிறிஸ்தவத்திற்கெதிரான சமூக மாற்றங்களும் உலக நாடுகளுக்கு நன்மை தரப்போவதில்லை. அது நிகழாமல் இருக்க கர்த்தர் மட்டுமே துணைசெய்ய முடியும். புதிய அதிபரும் கொங்கிரசும், செனட்டும் நாட்டை நல்ல நிலைமைக்கு இட்டுச்செல்ல அந்நாட்டிற்காக ஜெபிக்க வேண்டிய கடமை உலகின் எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் உண்டு. கர்த்தர் அமெரிக்காவை ஆசீர்வதிக்கட்டும்.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 30 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக