யார் உங்கள் கடவுள்?

பிரபலமான ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் சமீபத்தில் மரணமான ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தின் தலைவரான ஸ்டீவ் ஜோப் பற்றிய கட்டுரை வந்திருந்தது. அதன் தலைப்பு “இந்த சந்ததியின் கடவுள்” என்றிருந்தது. இது என்னை சிந்திக்க வைத்தது. உங்களில் எத்தனை பேருக்கு ஸ்டீப் ஜோப்பைப் பற்றித் தெரியும் என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் இந்த அசாதாரண மனிதனின் வாழ்க்கையைப் பற்றி நினைத்துப்பார்ப்பது நமக்கு நன்மை தரும். வெகு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஸ்டீவ் ஜோப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு தன் நண்பனோடு வீட்டுக் கார் கராஜில் கம்பியூட்டர் தயாரித்து விற்கும் வியாபாரத்தை ஆரம்பித்தார். இப்படித்தான் இன்று உலகத்தில் முன்னிலையில் இருக்கும் ஆப்பிள் கம்பியூட்டர் ஆரம்பத்தில் உருவானது. ஸ்டீப் ஜோப்பிற்கு அசாதாரண விடாமுயற்சி, முன்னோக்கிப் பார்க்கும் அறிவுத் திறன், எல்லோரையும்விட ஒரு பங்கு முன்னால் போய் யாரும் செய்யாததை செய்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் எல்லாம் சேர்ந்தே பிறந்திருந்தது. அவர் மரணமடையும் தருவாயில் ஆப்பிள் கம்பேனி மைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸின் கம்பேனியையும் தாண்டி முதல் நிலையில் இருந்தது. 489 பில்லியன் சொத்தை சேர்த்துக் குவித்திருந்தார் ஸ்டீப் ஜோப். அமெரிக்க அரசாங்கத்தைவிட ஸ்டீவ் ஜோப்பிடம் அதிக பணமிருந்ததாக செய்திப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பொட்,
ஐ-போன், ஐ-பேடு ஆகிய தயாரிப்புகள் உலக மக்களின் வாழ்க்கை முறையையும், நடவடிக்கைகளையும் முற்றாக மாற்றி அவர்களுடைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருந்தன. இன்னும் பத்து வருடங்கள் உயிரோடிருந்திருந்தால் ஸ்டீவ் ஜோப் இந்த உலகத்தை எந்தளவுக்கு மாற்றியிருந்திருப்பார் என்று எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. இத்தனைக்கும் எந்த மனிதனும் உலகத்தில் சாதித்திராத இத்தனை சாதனைகளும் மரணத்திலிருந்து ஸ்டீப் ஜோப்பிற்கு விடுதலை கொடுக்க முடியவில்லை. கடுமையானதும், விரைவில் பரவுகிறதுமான ஒருவகை புற்று நோய் ஸ்டீவ் ஜோப்பின் வாழ்க்கையை 55 வயதில் முடித்து வைத்தது.

இந்த சாதனையாளருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை. தன்னால் முடியும் என்ற சுய நம்பிக்கை அளவுக்கு மேல் அதிகமாக இருந்தது. வெறியோடு சாதிக்க வேண்டும் என்று உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஸ்டீவ் ஜோப் வாழ்ந்தார். அவருடைய வாழ்க்கை இலட்சியத்தை பிரதிபலிப்பது போல் அவருடைய தாயாரிப்புகளின் பெயர்கள் எல்லாமே “ஐ” என்ற ஆங்கில எழுத்தை முன்னால் கொண்டிருந்தன. “ஐ” என்றால் “நான்” என்பது அர்த்தம். எந்தளவுக்கு ஸ்டீவ் ஜோப் தன்மீதும், தன்னுடைய திறமை மீதும், சாதனைகள் மீதும் அளவில்லாத நம்பிக்கை வைத்திருந்தார் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. அவருடைய படத்தை அட்டைப் படமாகக் கொண்டு அவரைப் பற்றி எழுதப் போட்டியிடாத பத்திரிகைகள் இல்லை. அந்தப் படங்களும், கட்டுரைகளும் தனக்குப் பிடித்தமான விதத்தில் வர ஸ்டீவ் ஜோப் அதிக அக்கறை காட்டினார். அவர் தன்னையே வணங்கி தனக்காக மட்டும் வாழ்ந்திருந்தார்.

இதையெல்லாம் எழுதும்போதே ஸ்டீவ் ஜோப் மீது எனக்கு பரிதாபம் தான் வருகிறது. தனக்காக மட்டும் வாழ்ந்து எந்தளவுக்கு அவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருந்தார் என்பதால்தான் அந்த பரிதாபம். தானே கடவுள் என்பது போல் வாழ்ந்து “இந்த உலகத்தின் கடவுள்” என்று தன்னைப் பற்றி ஒரு பத்திரிகையும் தலைப்புச் செய்தி எழுத வைத்திருந்த ஸ்டீவ் ஜோப்பின் வாழ்க்கை வெறுமையில் தான் முடிந்தது. அவரது பெயர், பணம் அனைத்தையும் இந்த உலகத்தில் விட்டுவிட்டு கடவுள் இல்லாத ஓரிடத்துக்கு ஸ்டீவ் ஜோப் போய் சேர்ந்து விட்டார். அது பரிதாபப்பட வேண்டிய நிலைதான். என்னதான் இந்த உலகத்தில் நாம் சாதித்தாலும், எத்தனை சொத்துக்களை சேர்த்துக் குவித்தாலும், எத்தனை சுகங்களை எல்லையில்லாமல் அனுபவித்தாலும் யாரை நாம் வணங்கியிருக்கிறோம், யாருக்காக வாழ்ந்திருக்கிறோம் என்பதே மரணத்திற்குப் பிறகு நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கப்போகின்றது. தனக்காக மட்டுமே வாழ்ந்த ஸ்டீவ் ஜோப்பிற்கு சுயத்தால் அழிவில்லாத வாழ்க்கையை அளிக்க முடியவில்லை. வாழ்ந்த போதும் அவருடைய வாழ்க்கையில் கடவுள் இல்லை. போன பிறகும் அவரிருக்கும் இடத்தில் கடவுள் இல்லை. எத்தனைப் பரிதாபம்!

இதை வாசிக்கும் நண்பர்களே, நீங்கள் யாருக்காக வாழ்கிறீர்கள்? யார் உங்களுடைய இருதயத்தில் முதலிடம் பிடித்திருக்கிறார்? இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதில்களில்தான் உங்களுடைய எதிர்காலமே தங்கியிருக்கிறது. ஸ்டீவ் ஜோப்பைப் போல உங்களுக்காக மட்டும் நீங்கள் வாழ்வீர்களானால் உங்களுடைய எதிர்காலம் வீணாய்த்தான் போகும். “நான்” என்ற அகந்தை உங்களுடைய இருதயத்தை ஆளுமானால் கடவுள் இருக்கும் இடத்துக்கு நீங்கள் போகப்போவதில்லை. தன்னம்பிக்கை மனிதனுக்கு இருப்பதில் தப்பில்லை. தானே எல்லாம் என்று நினைப்பது தான் அவனை அழித்துவிடும். நமக்கு மேல் நம்மைப் படைத்த எல்லாம் வல்ல கடவுள் இருக்கிறார் என்ற எண்ணம் நமக்கு வேண்டும். உங்களுக்கு அது இருக்கிறதா? அப்படி இருக்குமானால் அவரை நீங்கள் அறிந்துகொண்டிருக்கிறீர்களா? அவருக்காக வாழ்ந்து வருகிறீர்களா? படைத்தவர் நம்மைப் பார்த்து என்ன சொல்கிறார் தெரியுமா? நாம் அவருக்காக மட்டும் வாழவேண்டும் என்று சொல்லுகிறார். தான் படைத்த மக்கள் பின்பற்றும்படியாக அவர் கொடுத்திருக்கும் பத்துக் கட்டளைகள் எப்படி ஆரம்பிக்கின்றன தெரியுமா? அவை “நானே கடவுள்”  (யாத்திராகமம் 20) என்ற அறிமுகத்தோடு ஆரம்பிக்கின்றன. கடவுளின் இடத்தை யாரும், எதுவும் பிடிக்க முடியாது. இயேசு கிறிஸ்து மூலம் அந்தக்  கடவுளைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் பாவங்களில் இருந்து விடுதலை பெற்று சுயத்தை வெறுத்து அவருக்காக மட்டும் வாழப் பாருங்கள். அது மட்டுமே மரணத்திற்குப் பிறகுள்ள வாழ்க்கைக்கு உங்களைத் தயாராக்கும். யார் உங்கள் கடவுள் என்பதை இன்றே, இப்போதே தீர்மானியுங்கள்.

3 thoughts on “யார் உங்கள் கடவுள்?

மறுமொழி தருக