உங்கள்மேல் இருக்கும் தேவகோபம்

தேவனுடைய கோபம் மனிதர் மேல் இருப்பதாக வேதத்தில் வாசிக்கிறோம். “சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லா அவபக்திக்கும் அநியாயத்திற்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது” என்கிறது வேதம் (ரோமர் 1:18). அன்புகாட்ட வேண்டிய கடவுள் எப்படி மனிதன் மேல் கோபப்பட முடியும்? அது நீதியாகாதே? என்று சிலர் கேட்கக்கூடும். மனிதன் மேல் இருக்கும் தேவகோபம் நியாயமானதா? என்று நாம் சிந்திக்கத்தான் வேண்டும்.

இதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் முதலில் கடவுளுடைய குணாதிசயங்களைப்பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். கடவுள் நீதியும், உண்மையும், பரிசுத்தமும் உள்ளவர் என்று வேதம் சொல்லுகிறது. அவரிடம் அநீதிக்கோ, அசுத்தத்திற்கோ, பொய்க்கோ இடமில்லை. கடவுள் பூரணமானவர். அவர் என்றும் மாறாதவர். அப்படிப்பட்டவர் ஒருபோதும் அநீதிக்கு இடங்கொடுக்க மாட்டார் என்பதில் நமக்கு சந்தேகமே இருக்கக் கூடாது.

அப்படியானால் அவருக்கு எப்படி மனிதன் மேல் கோபம் வந்தது? நீதியும், உண்மையும், பரிசுத்தமும் உள்ள கடவுள் அநீதியைப் பார்த்து சகித்துக்கொண்டிருந்தால் அவர் நீதியுள்ளவராக இருக்க முடியாது. கடவுள் அநீதியை ஒருபோதும் சகிக்க மாட்டார். ஒளி வீசிக்கொண்டிருக்கும் போது இருட்டுக்கு எப்படி அங்கே இடமிருக்காதோ அதே போலத்தான் கடவுளுக்கு முன் அநீதிக்கு இடமிருக்காது. மேலே நாம் பார்த்த ரோமர் 1:18 வசனம், சத்தியத்தை அநியாயத்தினால் அடக்கி வைக்கிற மனிதனுடைய எல்லாச் செயல்களுக்கும் எதிராக தேவகோபம் இருக்கிறது என்று சொல்கிறது. பாவத்தினால் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் மனிதன் அநியாயத்தை மட்டுமே செய்து வருகிறான். அவனுக்கும் பக்திக்கும் தொலைதூரம். கடவுள் இருக்கிறார் என்று தெரிந்திருந்தும், அவரையும் சத்தியத்தையும் நிராகரித்துவிட்டு மரங்களையும், மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும் மனிதன் வழிபட்டு வருகிறான் (ரோமர் 1:23). நீதியுள்ள கடவுளால் அதை எப்படி சகித்துக்கொண்டிருக்க முடியும்? அது நியாயமாகாது. அதனால் தான் தேவகோபம் மனிதன் மேல் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தான் படைத்த மனிதன் தன்னையே தூக்கி எறிந்துவிட்ட பிறகும் அவனைத் தண்டிக்காவிட்டால் கடவுளின் நீதிக்குப் பங்கம் ஏற்படும். என்றும் மாறாத பூரணத்துவரான கடவுள் தன்னுடைய நீதிக்கு எதிராக ஒருபோதும் நடக்க மாட்டார். தான் கிழித்த கோட்டை அவர் தாண்டமாட்டார். அநீதியைத் தண்டிப்பது நீதியுள்ள கடவுளின் கடமை. அதனால்தான் தேவகோபம் மனிதன் மேல் நிலைத்திருக்கிறது. மனிதன் நீதியாகவே அவருடைய கோபத்தின் கீழ் வந்திருக்கிறான் என்று வேதம் சொல்லுகிறது.

கடவுளை மனிதன் நிராகரித்துவிடுவதோடு நின்றுவிடாமல் அவருடைய சகல கட்டளைகளையும் புறக்கணிக்கிறான். “சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்து” (ரோமர் 1:29) நிற்கிறான். ஆகவேதான் “இப்படிப்பட்டவை களைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராய் இருக்கிறார்கள் என்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்” என்று வேதம் சொல்கிறது (ரோமர் 1:32). அப்படி அறிந்திருந்தும் கடவுளுக்கெதிராக மனிதன் பாவம் செய்வதோடு அவருக்கெதிராகப் பாவம் செய்கிறவர்களிடம் பிரியத்தோடும் இருக்கிறான்.

ஆகவே, கடவுள் எப்படி நம்மீது கோபங்கொள்ள முடியும்? என்று கேட்பதைவிட, அவருடைய கோபத்திலிருந்து நாம் எப்படி விடுபடுவது? என்று சிந்திப்பது நியாயமானது. இதற்குப் பதில் அளிக்கும் வேதம் கடவுளே இதற்கு ஒரு வழியை ஏற்படுத்தித் தந்திருப்பதாக விளக்குகிறது. மனிதன் மேல் இருக்கும் தேவ கோபத்தை நீக்குவதற்காகவும், அவன் அழிந்து போகாமல் இருப்பதற்காகவும் கடவுள் தன்னுடைய ஒரே குமாரனை இந்த உலகத்துக்குத் தந்தருளியிருக்கிறார் (யோவான் 3:16) என்கிறது வேதம். அதைக் கடவுள் அன்புள்ளத்தோடு செய்திருப்பதாகவும் அது விளக்குகிறது.
கல்வாரி சிலுவையில் மரித்த தேவ குமாரனாகிய இயேசு மனிதன் மேல் இருக்கும் தேவ கோபத்தைக் தன் மேல் சுமந்து அவனுடைய பாவத்துக்கு தன்னையே பரிகாரப் பலியாக்கினார். கடவுளுடைய கோரிக்கைகளைப் பூரணமாக சிலுவை மரணத்தின் மூலம் நிறைவேற்றினார். மனிதன் தேவகோபத்திலிருந்தும், பாவத்திலிருந்தும் விடுதலை பெற இயேசு கிறிஸ்து நிறைவேற்றிய கிருபாதாரப் பலி இதுவே. ஆகவேதான் வேதம், கடவுளுடைய அன்புக்குப் பாத்திரரான குமாரனை விசுவாசிக்கிற ஒருவன் நித்திய ஜீவனை நிச்சயமாக அடைவான் என்கிறது. மேலும், “அவரை விசுவாசியாதவன் தண்டனைக்குள்ளானவனாயிருக்கிறான்” என்றும் விளக்குகிறது (யோவான் 3:18).

கடவுளிடம் அநீதி இருக்கிறதென்று நாம் சொல்லக் கூடாது (ரோமர் 9:14). உருவாக்கப்பட்ட ஒரு பொருள் உருவாக்கினவரைப் பார்த்து, நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று கேட்கலாமா? (ரோமர் 9:20). தன்னுடைய கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும் கடவுளுக்கு உரிமையுண்டு (ரோமர் 9:22). அழிவுக்கு பாத்திரமாக்கப்பட்டு அவருடைய கோபாக்கினைக்கு உள்ளானவர்கள் மேல் அவர் நீடிய சாந்தத்தோடு இன்னும் பொறுமையாக இருப்பதை நினைத்து நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் (ரோமர் 9:23).
தண்டனையின் நாள் நெருங்கிக் கொண்டே இருக்கிறது. கடவுளின் ஒரே குமாரரான இயேசு கிறிஸ்து மறுபடியும் இந்த உலகத்துக்கு வந்து எல்லோரையும் நியாயந்தீர்க்கப்போகும் நாளே நித்திய தண்டனையின் நாள். அந்த நாள் வரும்வரையும் உள்ள காலம்தான் கடவுளின் பொறுமையின் நாட்களாக இருக்கும். இந் நாட்களைத் தான் வேதம் கிருபையின் நாட்கள் என்று அழைக்கிறது. அதற்குப் பிறகு அவருடைய பொறுமைக்கு இடமிருக்காது. கடவுளின் ஒரே குமாரரான இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் நியாயத்தீர்ப்புநாளில் கொடுக்கப்படும் நித்திய தண்டனையிலிருந்து தப்பிக்கொள்ளலாம். அவர்கள் தேவ குமாரனாகிய கிறிஸ்து மட்டுமே கொடுக்கக் கூடிய நித்திய ஜீவனை இலவசமாகப் பெற்று சமாதானத்துடன் கடவுளின் அன்பை அனுபவிக்கலாம்.

நண்பர்களே! உங்கள் பாவமே உங்களைத் தேவகோபத்துக்குள்ளாக்கி இருக்கிறது. பரலோக வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்க முடியாதபடி உங்களைத் தடுத்து வைத்திருப்பதும் அந்தப் பாவமே. இந்தக் கிருபையின் நாட்களில் அந்தப் பாவம் உங்களைவிட்டு நீங்க ஆண்டவரை நாடுங்கள். வரப்போகும் நித்திய தண்டனையிலிருந்து தப்பிக்கொள்ளுங்கள். பின்வரும் வேத வசனங்களை ஆராய்ந்து பார்த்து உங்கள் பாவங்களுக்காக கடவுளிடம் மன்னிப்பை நாடுங்கள். பாவ வாழ்க்கைக்கு இன்றே ஒரு முடிவு கட்டுங்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். அவர் உங்களைத் தேவ கோபத்திலிருந்து விடுவித்து நித்திய ஜீவனையும், பரலோக வாழ்க்கையையும் இலவசமாகத் தருவார்.

“தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்துக்கு அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரே பேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத் தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான்.” (யோவான் 3:16–20)

“தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லோரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே”
(1 தீமோத்தேயு 2:5,6).

“பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமானது”
(1 தீமோத்தேயு 1:15).

2 thoughts on “உங்கள்மேல் இருக்கும் தேவகோபம்

    • இந்தத் தளத்தில் தரப்பட்டிருக்கும் சீர்திருத்த வெளியீடுகள், சென்னை (இந்தியா) முகவரியோடு (ஜேம்ஸ்) தொலைபேசியிலோ, மின் அஞ்சலிலோ தொடர்புகொள்ளுங்கள். புத்தக அட்டவணையை அனுப்பி வைப்பார்கள். உங்களுக்குத் தேவையான நூல்களை அவர்களிடம் பெற்றுக்கொள்ளலாம். Please call this number for books: 9445671113

      Like

மறுமொழி தருக