மறுபடியும் அஞ்ஞரைப் பெட்டிக்குள்

அஞ்சரைப் பெட்டிக்குள் மீண்டும் ஒருமுறை கைவைத்துப் பார்க்கலாமா? நாட்கள் வேகமாக ஓட ஓட நம்மைச் சுற்றி நடக்கும் காரியங்கள் அதிர வைப்பவையாக இருக்கின்றன. ஐசிஸ் தீவிர வாதம் ஒருபுறம் உலகை உலுப்பிக் கொண்டிருக்கிறது. இயற்கை மாற்றங்களினால் நாடுகள் வெப்ப அதிகரிப்பையும், கடுங்குளிரையும், நிலநடுக்கங்களையும் அத்தோடு சில பகுதிகளில் நெஞ்சையுறுக்கும் மானிடக் கொலைகளையும் கண்டுகொண்டிருக்கிறது. பிரெக்ஸிட் போன்ற அதிரடி அரசியல் மாற்றங்களும், பின்நவீனத்துவ ஒழுக்கக் கேட்டின் உச்சக்கட்ட வெளிப்பாடுகளும் மானுடத்தை உரைய வைத்துக் கொண்டிருக்கின்றன. இதுபற்றியெல்லாம் கிறிஸ்தவர்களான நம்மால் சிந்திக்காமல் இருக்கமுடியுமா? இரட்சித்து நமக்கு ஜீவனளித்திருக்கும் ஆண்டவர் தாம் படைத்திருக்கும் இந்த உலகிலல்லவா அந்த வாழ்க்கையை வாழும்படிச் செய்திருக்கிறார். நிகழ்ந்துகொண்டிருக்கும் முக்கியமான சிலவிஷயங்களை இந்த அஞ்ஞரைப் பெட்டிக்குள் பார்க்கலாம் வாருங்கள்.

பெருமாள்முருகனுக்கு மறுவாழ்வு

பதினேழு நாட்கள் தொடர்ச்சியாக வெளிதேசத்தில் பணியாற்றிவிட்டு ஐந்து நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மறுபடியும் எழுத்துப்பணியை ஆரம்பித்திருக்கிறேன். இரண்டு மாதங்களாகவே பல தவிர்க்கமுடியாத காரணங்களால் எழுத்துப் பணி பாதிக்கப்பட்டிருந்தது. எழுதுவதுதான் இடையில் நின்றிருந்தபோதும் ஆண்டவரின் வசனத்தைப் படித்துப் போதிக்கும் பணி தொடர்வதாகத்தான் இருந்தது. எழுதுவதற்கு எனக்கு ஏற்பட்ட தடைகள் பயமுறுத்தல்கள் காரணமாகவோ, எதிர்ப்புக்களினாலோ ஏற்பட்டவையல்ல; அவை எல்லோரும் அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கும் நடைமுறைக் காரணிகளால் உருவானவை. அந்தத் தடைகள் நீங்க நான் மறுபடியும் எழுத ஆரம்பித்துவிட்டேன். எழுதுகிறவனுக்கு தடைபோடுகிறவர்களும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். மாற்றுக்கருத்துக்களைப் பொறுத்துக்கொள்ளும் இருதயம் இல்லாதவர்கள் உலகமுடிவுவரை இருக்கத்தான் போகிறார்கள். எவருக்கும் எந்தக் கருத்தையும் காரணகாரியங்களோடு கூடிய எதிர்க்கருத்துக்களைக் கொண்டு சந்திக்கும் ஆண்மை இருக்கவேண்டுமே தவிர அவலட்சணமான நடவடிக்கைகள் மூலம் எழுதுகிறவனை அடக்கிவைக்கின்ற ஆண்மையற்ற தன்மையிருக்கக்கூடாது.

Writingபங்களாதேசத்தில் சமீபகாலமாக தீவிரவாத இஸ்லாமியக் கோட்பாட்டைப் பின்பற்றுகிறவர்கள் மாற்றுக்கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களின் தலையைச் சீவி இரத்தங்குடித்திருக்கிறார்கள். இந்நூற்றாண்டில் இப்படி நடப்பது ஆச்சரியமாகத்தான் இருந்தாலும் தீவிரவாதத்தின் விளைவான அது யதார்த்தமாக இருந்து வருகிறது. இந்தளவுக்குப் போகாவிட்டாலும் சில காலத்துக்கு முன் தமிழகத்தில் எழுத்தாளர் பெருமாள்முருகன் இனி எழுதுவதை நிறுத்திவிட்டேன், பெருமாள்முருகன் என்ற எழுத்தாளன் இறந்துவிட்டான் என்று அதிர்ச்சியளிக்கும் விதத்தில் அறிக்கையிட்டது உங்களுக்கு நினைவிருக்கும். அவரெழுதிய மாதொருபாகன் என்ற நூல் ஒரு குறிப்பிட்ட சாதீய சமுதாயத்தை இழிவுபடுத்துவதாக அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு சிறு கூட்டத்தால் கருதப்பட்டு அவர்கள் இந்த எழுத்தாளருக்குப் பெரும் மனத்துன்பத்தை ஏற்படுத்தி அவருடைய எழுதுகோளையும், தார்மீக உரிமையையும் பறித்துக்கொண்டார்கள். எழுத்தாள வர்க்கத்தையே அதிரவைத்த ஒரு செயலிது. பயமுறுத்தல்களால் எழுத்தை ஆளமுயலும் அதிகார வர்க்கத்தின் மூடத்தனமான செயலிது. இருந்தபோதும் இப்போது உயர்நீதிமன்றம் பெருமாள்முருகனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட வழக்குக்கு பலமாதங்களுக்குப் பிறகு உறுதியான தீர்ப்பளித்திருக்கிறது.

பெருமாள்முருகனுக்கு எதிரான அத்தனைக் குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் அடியோடு நிராகரித்து, அவரை மறுபடியும் தலைநிமிர்ந்து நடக்கவும், எழுதுகோளை மீண்டும் கையிலெடுத்து அவரால் முடிந்த, செய்யத்துடிக்கின்ற எழுதுகின்ற பணியைத் தொடர்ந்து செய்ய அனுமதித்து உத்தரவிட்டிருக்கின்றது. இத்தகைய சந்தர்ப்பங்களில் அரசோ, போலிஸோ எழுத்தாளனைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும்விதத்தில் ஒரு குழுவை அமைத்து அது சில முக்கிய நிபந்தனைகளை இத்தகைய சந்தர்ப்பங்களில் பின்பற்றச் செய்யவேண்டும் என்றும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் இந்த அறிவுபூர்வமான செயல் எழுத்தாளர்கள் தலைநிமிர்ந்து நடக்க துணைசெய்திருக்கின்றது. இதெல்லாம் இத்தகைய செயல்கள் இனித் தமிழகத்திலோ இந்தியாவிலோ தொடராது என்பதற்கு அறிகுறியல்ல. எழுத்தையும், எழுத்தாளனையும் ஆளுகின்ற கூட்டங்கள் எழும்போதெல்லாம் சிந்திக்கின்ற மக்களும், அறிவுஜீவிகளும் வெறுமனே சும்மாயிருந்துவிடப்போவதில்லை என்பதை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிசெய்திருக்கின்றது. கிறிஸ்தவனான எனக்கு பெருமாள்முருகனின் கருத்துக்களில் பெரும் ஈடுபாடில்லை. இருந்தபோதும் எழுத்தாளனுக்கு இழைக்கப்படுகின்ற துன்பத்திற்கும், அவன் கையைக் கட்டிப்போடுகின்ற கொடுஞ்செயலுக்கும் எழுதுகிற எவரும் துணைபோக முடியாது. ஒரு கருத்தை எதிர்க்கருத்தால் மட்டும் சந்திக்க வேண்டுமே தவிர பயமுறுத்துதல்களாலும், துன்புறுத்துதல்களாலும் எழுதுகிறவனை அடக்கி அழிக்க முயல்வது கையாலாகாத்தனத்தின் கோரவெளிப்பாடாக மட்டுமே இருக்கமுடியும்.

இந்தச் சம்பவம் சாதீய வெறி எந்தளவுக்கு தமிழினத்தின் இன்றும் புரையோடிப்போய் பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாக இருக்கிறது. சாதீய வழியில் அரசியல் செய்த பல கட்சிகள் சமீபத்திய தேர்தலில் டெப்பாசீட் இழந்து இருந்த இடமில்லாமல் போயிருக்கிறார்கள்; இந்து சாதீயம் பேசும் பா. ஜா. க உட்பட. பொதுவாகவே சாதீய அடிப்படையில் எதையும் செய்வதைத் தமிழக மக்கள் விரும்பாவிட்டாலும் சாதியை வைத்துப் பிழைப்பு நடத்தும் கூட்டம் இன்றும் அதிகாரங்கொண்டதாக தமிழக சமுதாயத்தை அடக்குமுறையால் ஆள முற்பட்டு வருவதை மறுக்க முடியாது. சாதிக்கு வேட்டு வைக்கவேண்டும் என்று கிளம்பிய திராவிடக் கட்சிகளே இன்று அதற்குப் பலியாகி அடிமைகளாகிவிட்டிருக்கின்றனர். சமுதாயத்தில் இன்றைய சாதீயத்தின் ஆளுகை கிறிஸ்தவர்களை சிந்திக்க வைக்கவேண்டும். வேதபூர்வமான ஆவிக்குரிய மெய்க்கிறிஸ்தவ திருச்சபைப் பணிகள் தமிழகத்தில் உருவாக வேண்டுமானால் சாதிப்பேயின் ஆக்கிரமிப்பை இருதயத்தில் இருந்து அகற்றி வாழும் கிறிஸ்தவர்கள் தொகை அதிகரிக்க வேண்டும். பண்பாடு என்ற பெயரில் சாதிப்பேயையும், இந்துப் பாரம்பரியங்களையும் அரவணைத்து கிறிஸ்தவம் என்ற பெயரில் கபட நாடகம் ஆடும் சபைகளும் ஊழியங்களும் கிறிஸ்துவோடு எந்தத் தொடர்பும் கொண்டவை அல்ல. சாதீயத்திற்கு வக்காலத்து வாங்குகிறவர்கள் கிறிஸ்துவோடு சம்பந்தமில்லாதவர்கள். எங்கு சாதி ஆளுகிறதோ அங்கு கிறிஸ்துவையும், கிறிஸ்தவனையும் காணமுடியாது. அந்தளவுக்கு கிறிஸ்துவும் கிறிஸ்தவமும் சாதிக்குப் பேரெதிரிகள்.

அல்லோலகல்லோலப்படுத்திவரும் அமெரிக்கத் தேர்தல் ஜுரம்

usa-votinghandஇவ்வருட இறுதியில் நடக்கவிருக்கும் அமெரிக்க தேர்தல் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். குடியரசுக் கட்சியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும் டொனல்ட் டிரம்ப்பின் துரித எழுச்சியையும் பற்றி விளக்கியிருந்தேன். வாஷிங்டன் அரசியல்வாதிகளின் மேல் நம்பிக்கையிழந்து கோபத்தில் இருந்துவந்த குடியரசுக் கட்சி ஆதரவாளர்களே டிரம்பின் எழுச்சிக்கு முழுக்காரணம். அந்தக்கோபத்தை நல்ல முறையில் வசதியாக பயன்படுத்திக்கொண்டார் டொனல்ட் டிரம்ப். என்றுமில்லாதவகையில் குடியரசுக் கட்சியின் ஆரம்பத் தேர்தலில் அனுபவசாலிகளான அரசியல்வாதிகளான பதினேழு பேரைச் சாய்த்து, வரலாற்றில் காணப்படாத வகையில் 14 கோடி வாக்குகளைப் பெற்று இன்று குடியரசுக்கட்சி நியமனத்தை நோக்கி டிரம்ப் நடைபோட்டுக்கொண்டிருக்கிறார். தன்னைக் கிறிஸ்தவாக டிரம்ப் இனங்காட்டிக் கொண்டபோதும் அவர் நடைமுறையில் வேதபூர்வமான கிறிஸ்தவ அனுபவத்தைப் பெற்றவரோ அல்லது அத்தகைய வாழ்க்கை முறையை நடைமுறையில் கொண்டவரோ அல்ல. பலமுறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் மட்டுமல்லாது அவருடைய செயல்திட்டங்களும், கோட்பாடுகளும் கிறிஸ்தவ போதனைகளை ஒத்தவையல்ல. ஒருசில கிறிஸ்தவ போதகர்களும், முன்னணிக் கிறிஸ்தவ தலைவர்களும் டொனல்ட் டிரம்ப்பை ஆதரித்துப் பேசிவருவதற்குக் காரணம் அரசியல் பொருளாதார நோக்கங்களே தவிர அவருடைய கிறிஸ்தவ நம்பிக்கைகளினாலல்ல. சமீபத்தில் ஓர்லான்டோவில் ஓரினச்சேர்க்கையாளர்களின் கிளப் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு டிரம்ப் ஓரினச் சேர்க்கையாளர்களை ஆதரித்துப் பேசியிருக்கிறார். ஓரினச்சேர்கையாளரான இசைவல்லுனர் எல்டன் ஜோன் டிரம்ப்பின் நண்பர். அவருடைய ஓரினத் திருமணத்தைக் குறித்துக் கருத்துக்கூறிய டிரம்ப் அவர்கள் என்ன செய்துகொண்டாலும் அது அவர்களுடைய சொந்தவிருப்பம் என்று கூறியிருக்கிறார். அமெரிக்காவின் பெரும்பாலான சுவிசேஷக் கிறிஸ்தவர்கள்ள ஹிளரி கிளின்டன் அதிபராக வருவதை எந்தவிதத்திலும் விரும்பாவிட்டாலும் டிரம்ப்பை ஆதரிப்பதற்குத் தயங்குவதில் ஆச்சரியமில்லை. இவ்வருட குடியரசுக்கட்சி அதிபர் நியமனத்தேர்தலில் டொனல்ட் டிரம்ப் மூலம் பலருக்கு தர்மசங்கடமான நிலை உருவாகியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. டிரம்ப் குடியரசுக்கட்சியின் வழமைகளுக்கெல்லாம் மாறான கென்டிடேட்டாக இருக்கிறார். இது கன்சர்வேட்டிவ்களான புஷ் குடும்பத்தாருக்கும், அவர்களைப்போன்றவர்களுக்கும் பெரும் எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. இம்மாதம் நிகழவிருக்கும் குடியரசுக்கட்சி கன்வென்ஷன் சச்சரவிலும், கோமாளித்தனத்திலும் முடியாமல் இருந்தால் சரி.

குடியரசுக் கட்சியின் நிலை இப்படியிருக்க ஹிளரி கிளின்டனின் நிலையும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு பற்றி பலருக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. லிபியாவின் பெங்காஸி சம்பவம் கிளின்டனின் நிர்வாகத்திறமையில் பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. அரச இமெயில்களை சொந்த சேர்வர்களில் பயன்படுத்திக் கவனக்குறைவான முறையில் செயல்பட்டு வந்திருப்பதும், அதை நியாயப்படுத்தி உண்மையை மறைத்துப் பேசி வந்திருப்பதும் ஹிளரி கிளின்டன் நம்பக்கூடிய விதத்தில் அதிபராகப் பணிபுரியத் தகுந்தவரா என்ற எண்ணத்தைத் தோற்றுவித்திருக்கிறது. ஜனநாயகக்கட்சியினரிடத்திலேயே அவருக்கு எல்லோர் மத்தியிலும் ஆதரவிருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. அதுவும் அமெரிக்க உளவுத்துறையான எப். பி. ஐ கிளின்டன் அரச இமெயில்களைப் பயன்படுத்தியிருக்கும் விதம் முழுத்தவறானவை என்று அறிக்கையிட்டிருந்தபோதும், கிரிமினல் குற்றஞ்சாட்டும் அளவுக்கு அவர் தவறு செய்யவில்லை என்று அறிவித்திருப்பதும் பெரும் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. இதில் அரசியல் உள்நோக்கம் இருக்குமோ என்றும் ஒபாமாவிற்கு இதில் எந்தளவுக்கு சம்பந்தமிருக்கிறது என்றும் பலரை எண்ணவைத்திருக்கிறது. அமெரிக்க தேர்தல் நாடகங்கள் தொடர்ந்து எல்லோரையும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது என்பது மட்டும் சந்தேகமில்லை.

என்றுமில்லாதவகையில் இந்தத் தேர்தல் காலம் அமெரிக்க சமுதாயம் எந்தளவிற்கு ஒழுக்கத்தை ஓரங்கட்டிவிட்டு ஏனைய ஐரோப்பிய நாடுகள், கனடா போன்றவற்றைப்போல துரிதகதியில் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது. கடவுளைப் பற்றிய நம்பிக்கை அந்நாட்டுச் சமுதாயத்தில் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் கீழிறங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க போதக நண்பர் ஒருவரோடு இது பற்றி சமீபத்தில் பேசியபோது தேவனின் நியாயத்தீர்ப்பு தன் நாட்டின்மேல் இறங்கியிருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை என்றார். வரலாற்றுப் பெருமைமிக்க பியூரிட்டன்களை அடித்தளமாகக் கொண்டமைந்த இந்நாடு இன்று ஒழுக்கக்கேடான லிபரல் வாழ்க்கை முறையையும், செயலிழந்து, பொருளற்றுப் போய்விட்ட சோஷலிஸக் கொள்கைகளையும் நாடி விரும்புவது எந்தளவுக்கு அச்சமுதாயத்தின் அத்திவாரத்துக்கு ஆபத்தேற்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டுகிறது. சமீபத்தில் ஒபாமா ஹிளரி கிளின்டனை ஆதரித்துப் பேசிய ஒரு கூட்டத்தில் அவரை ஆதரித்து வோட்டளித்தால் முன்னேற்றத்தை அடையலாம் என்றும், டிரம்ப்பை ஆதரிப்பது சமுதாயத்தைப் பின்னோக்கிப் பழங்கோட்பாடுகளைப் பின்பற்ற வைக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். ஒபாமா விரும்பித் தேடும் முன்னேற்றம் அமெரிக்க சமுதாயத்தில் ஒழுக்கத்திற்கு மறுவிளக்கம் கொடுக்கும் ஒழுக்கக்கேடான பின்நவீனத்துவ மாற்றங்களே. ஹிளரி அதிபராக வருவது மறுபடியும் ஒபாமா வழியில் தேசம் அழிவை நோக்கிப் போவதிலேயே இட்டுச்செல்லும். ஹிளரியா, டிரம்ப்பா என்று தீர்மானிப்பதற்காக அமெரிக்க மக்கள் நவம்பரில் தேர்தலை சந்திக்கப்போகிறார்கள். இது அமெரிக்க தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகிற தேர்தல். யார் வென்றாலும் அது நல்லதற்கு அல்ல என்பதில் பெரும்பாலான அமெரிக்க கிறிஸ்தவர்களுக்கு எந்த சந்தேகமுமில்லை என்பதைத்தான் உணரமுடிகின்றது. இறையாண்மையுள்ள தேவன் மட்டுமே இந்தத் தேசத்தை அழிவுப்பாதையில் இருந்து காப்பாற்ற முடியும். இந்த தேசமும் நாசத்தை சந்திக்கவேண்டும் என்ற நியாயத்தீர்ப்பு அதன் மேல் இருக்குமானால் அதைத் தடுக்க யாரால் முடியும்?

பிரிட்டனில் ‘பிரெக்ஸிட் (Brexit)’

brexitபிரிட்டனின் பிரதமரான டேவிட் கெமெரன் கடந்த மாதம் ஐரோப்பிய ஐக்கியத்தில் (European Union) பிரிட்டன் தொடர்ந்திருக்க வேண்டுமா, இல்லையா? என்பது பற்றி வாக்கெடுப்பு நடத்தத் தீர்மானித்தார். அதில் தொடர்ந்திருக்க வேண்டும் என்பதே அவருடைய நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டையே தன் கட்சியும், நாடும் எடுக்கும் என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்த கெமரன் அதுபற்றிப் பிரச்சாரம் செய்து வந்தார். அமெரிக்க அதிபரான ஒபாமாவும் பிரிட்டனுக்கு விஜயம் செய்து பிரிட்டன் தொடர்ந்து ஐரோப்பிய ஐக்கியத்தில் இருப்பதே அதற்கு நல்லது என்றும் பேசியிருந்தார். இதெல்லாம் நடந்தும் பேரதிர்ச்சி அளிக்கும் விதத்தில் வாக்கெடுப்பு நடந்து முடிந்தபோது வெளியேற வேண்டும் என்று வாக்களித்தவர்கள் 52வீத வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தனர். இது டேவிட் கெமரன் கொஞ்சமும் எதிர்பார்த்திராத நிகழ்ச்சி. உடனடியாகவே கெமரன் தான் அக்டோபருக்கும் பின் பிரதமராக இருக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். அவருடைய கட்சி இப்போது அடுத்த பிரதமரைத் தேடும் பணியில் இறங்கியிருக்கிறது. அதுவும் வெளியேற வேண்டும் என்ற கோஷ்டியைச் சேர்ந்தவர்களே அதற்குத் தெரிவாக வேண்டும் என்ற நிலையும் எழுந்திருக்கிறது. லேபர் கட்சியும் இதனால் பாதிக்கப்பட்டு வெளியேறக்கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அதன் தலைவர் தனக்கெதிரான பெரும் எதிர்ப்பு நிலைக்கு கட்சியில் முகங்கொடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியைச் சந்தித்து பதவியைக் காத்துக்கொள்ளப் போராடிக்கொண்டிருக்கிறார். வெளியேற வேண்டும் என்ற கோஷ்டியின் தலைவர்களில் ஒருவரான நைஜல் பராஜ் இதற்கான தன்னுடைய பதினேழு வருட போராட்டத்தில் பெரு வெற்றி கண்டிருக்கிறார்.

என்னதான் நடந்தது? ஏன் பிரெக்ஸிட்? என்று கேட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது. இதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. முதலில், உலகமயமாக்குதல் (Globalization) உச்சகட்டத்தை அடைந்து பல நன்மைகளை உலகுக்குக் கொண்டு வந்திருந்தபோதும் பெரும் பாதிப்புகளையும் உண்டாக்கி அவற்றிற்கு விடிவு காணமுடியாமல் செய்திருக்கிறது. ஐரோப்பிய ஐக்கியத்தில் இருக்கும் சில நாடுகளின் சமீபத்திய பொருளாதார வீழ்ச்சியும், அந்நாடுகளை நிமிர வைப்பதற்காக ஏனைய அங்கத்துவ நாடுகள் பணத்தை வாரிக் கொட்ட வேண்டிய நிலையும் மக்களுடைய சிந்தனையில் உலகமயமாக்குதல் பற்றிய பல கேள்விகளைக் கேட்க வைத்தன. இதுபோதாதென்று சிரியாவிலும், ஈராக்கிலும் நடந்து வரும் போர் இலட்சக்கணக்கானவர்களை ஐரோப்பா நோக்கிப் படையெடுக்க வைத்ததால் பெருகி வழியும் அகதிகள்கூட்டம் ஐரோப்பிய நாடுகளைத் தள்ளாட வைத்து, அகதிகள் விஷயத்தில் ஒத்துப்போக முடியாத பிரச்சனைகளையும் பிரிவினையையும் உருவாக்கியது. போதாததற்கு ஐசிஸ் தீவிரவாத அமைப்பு பிரான்ஸிலும், பிரெசெல்ஸ்ஸிலும் தீடிர் தாக்குதல் நிகழ்த்தி நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றதும் பிரிட்டிஸ் மக்களை அதிகம் பாதித்து, சிந்திக்க வைத்து தங்களுடைய நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்க வைத்தது. ஐரோப்பிய ஐக்கியத்தில் தொடர்ந்திருந்தால் தங்களுடைய நாடு பாதிப்புக்குள்ளாகும் என்ற எண்ணம் தீவிரமடைந்து அதிலிருந்து வெளியேற வேண்டும் என்ற உறுதிப்பாட்டை எடுக்க வைத்தது. ஒரு காலத்தில் உலகமயமாக்குதலே அனைத்திற்கும் விடிவு என்றிருந்த நிலைப்பாடு இன்று சொந்த நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஐரோப்பிய ஐக்கியத்தில் இருந்து விலக வேண்டும் என்று பிரிட்டிஷ் மக்களை வாக்களிக்க வைத்திருக்கிறது.

இதேநிலையை இன்று அமெரிக்க மக்களிடமும் காண்கிறோம். டொனல்ட் டிரம்ப்பின் கொள்கைகள் பிரெக்ஸிட் நிலைப்பாட்டையே மக்கள் முன் வைக்கின்றன. அதற்குப் பேராதரவு அங்கு பெருகி நிற்பதையும் நாம் காண்கிறோம். ஐரோப்பிய ஐக்கியத்தில் தொடர்ந்திருக்கக் கூடாது என்று வாக்களித்தவர்களும், அவர்களின் தலைவர்களும் பிரெக்ஸிட் எங்குபோய் முடியும், அதன் விளைவுகள் என்ன என்பதை அறிந்திருந்ததாகவோ, அதுபற்றி சிந்தித்துப் பார்த்திருப்பதாகவோ தெரியவில்லை. அது பற்றிய காரசாரமான விவாதங்கள் இப்போது நிகழ்ந்து வருகின்றன. உண்மையில் பிரெக்ஸிட் பலரையும் வியப்படைய வைத்திருப்பதோடு, ஓரளவுக்கு பயத்தையும் உண்டாக்கியிருக்கிறது. அடுத்து என்ன என்பது பற்றி எவருக்கும் சரியாகத் தெரியாத நிலையை பிரெக்ஸிட் உண்டாக்கியிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் வேறு சிலவும் இந்த முடிவை எடுத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதுபற்றி கிறிஸ்தவர்களான நாம் எத்தகைய கருத்தை முன்வைக்கக் கூடும்? முதலில் எத்தனைப் பொருளாதார, வளர்ச்சிக்கான நிலைப்பாட்டை மனிதர்கள் எடுத்தாலும் அவையல்ல பூரணமான தீர்வை மனிதனுக்கும் நாட்டுக்கும் அளிக்க முடியும் என்பதுதான். நமக்கு மேல் ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணமே இல்லாமல் இவ்வுலகத்தில் சமாதானத்தையும், சொகுசு வாழ்க்கையையும் நாடிப்போய் எடுக்கவைக்கும் எந்த முடிவும் பூரணமாக விடிவை மனிதனுக்கு அளித்துவிடாது என்பதை பிரெக்ஸிட் சுட்டுகிறது. இரண்டாவதாக, பாவம் மனிதனில் தொடர்ந்திருக்கும் வரையில், அதற்கு அவனில் விடிவு ஏற்படாதவரையில் அவனால் நிம்மதியாக சக பிரஜையோடு தன்னலமில்லாமல் வாழ முடியாது என்பதையும் பிரெக்ஸிட் சுட்டுகிறது. அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷ்யாவுக்கும் இடையில் இருந்த ‘உரைபனிப் போர்’ முடிவுற்ற பிறகே பேர்லின் சுவர் இடிக்கப்பட்டு இரண்டு ஜெர்மனியும் ஒன்றாகி உலகமயமாக்குதலுக்கு வழிகாணப்பட்டது. அது இன்று ஒரு முடிவை எட்டியிருக்கிறது என்று நினைக்கும் வகையிலேயே பிரெஸ்ஸிட் நிகழ்வு ஏற்பட்டிருப்பதாகக் காண்கிறேன். பிரெக்ஸிட்தான் எதிர்காலத்திற்குத் தீர்வு என்று நினைப்போமானால் மீண்டும் நாம் தவறு செய்தவர்களாகிவிடுவோம். கடவுளை மையமாகக் கொண்டு அமைந்திராத எந்த அரசியல், பொருளாதார, சமூகத் தீர்வும் மனிதனுக்கு நிரந்தர விடுதலையை ஒருபோதும் தரமுடியாது. துரித கதியில் சந்தோஷத்தோடு ஓடிக்கொண்டிருந்த ஒரு வண்டி சடுதியாக எதிலோ இடிபட்டு திடீரென்று நின்றதுபோல்தான் பிரெக்ஸிட் எல்லோரையும் நிலைகுலைய வைத்திருக்கிறது. இதுவே முடிவல்ல. தனக்கு மேலிருக்கும் கடவுளை ஒரு தடவை நினைத்துப் பார்த்து பாவவிடுதலைக்காக அவருடைய மன்னிப்பைக் கிறிஸ்துவை விசுவாசித்துப் பெற்று தன் வாழ்க்கையை ஆண்டவருடைய வேதத்தின்படி மனிதன் அமைத்துக்கொள்ளுகிறபோதே அவனுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் எல்லா விடிவும் ஏற்பட முடியும். நம்மைச் சுற்றிவர, பிரெக்ஸிட் உட்பட நிகழ்ந்து வரும் அதிரடி அரசியல், பொருளாதார, சமுதாய நிகழ்வுகள் எல்லாமே பாவத்தின் வலிமையைத்தான் எனக்குச் சுட்டிக்காட்டுகிறது. முழுமையான மீட்பு மனிதனுக்கும், நாடுகளுக்கும் கிறிஸ்துவிடம் இருந்து மட்டுமே வரமுடியும். ஆவிக்குரிய ஆத்மீக எழுச்சிகள் பலவற்றை வரலாற்றில் கண்டிருக்கும் பிரிட்டன் இன்று அதையெல்லாம் தாக்கியெறிந்துவிட்டு ‘பிரெக்ஸிட்டை’ ஆபத்பாந்தவனாக எண்ணி அணுகியிருப்பது அதன் புத்திசாலித்தனத்தைக் காட்டவில்லை; பாவ சிந்தனையின் தொடர்விளைவின் அறிகுறியாகத்தான் படுகிறது.

வேதப்பிரசங்கப் பஞ்சம்

சமீபத்தில் ஒரு ஆத்மீக கூட்டத்தில் மத்தேயு 18ம் அதிகாரத்தை விளக்கிக் கொண்டிருந்தேன். கூட்டமுடிவில் ஒரு சிலர் அந்த அதிகாரத்திற்கு நான் அளித்த விளக்கத்தைப் பாராட்டி, அவர்களுக்கு நான் பேருதவி செய்திருப்பதாகக் கூறினார்கள். ஏன் என்று தெரிந்துகொள்வதற்காக இந்தப் பகுதியை நீங்கள் இதுவரை எப்படிப் புரிந்துகொண்டிருந்தீர்கள்? என்று கேட்டு வைத்தேன். அதற்கு ஒருவர் ‘கட்டுவது, கட்டவிழ்ப்பது’ என்ற பதங்கள் நமக்கு பேய்களைக் கட்டவும், கட்டவிழ்க்கவும் ஆண்டவர் தந்திருக்கும் அதிகாரத்தைக் குறிப்பதாகத்தான் இதுவரை நினைத்துப் பேய் விரட்டி வந்திருக்கிறோம் என்றார். ஒரு கணம் திகைத்துப் போனபோதும் அவர்கள் அப்படி நினைத்து செய்த காரியங்கள் இப்போது தவறு என்று உணர்ந்திருப்பது அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். இது எந்தளவுக்கு நம்மினத்தில் வேதப்பஞ்சம் நிலவி வருகிறது என்பதை உணர்த்துகிறது. வேதப் பஞ்சத்தால் பிரசங்கப் பஞ்சமும் உருவாகி ஆத்துமாக்கள் சத்தியத்தை சத்தியமாக கேட்கும் வழி இல்லாமல் இருக்கும்போது மெய்க் கிறிஸ்தவத்திற்கு நம்மினத்தில் ஏது வழி? வேதப் பஞ்சமும் எழுப்புதலும் எப்படி இணைந்து வாழமுடியும்? மெய்யான எழுப்புதலும் சீர்திருத்தமும் ஏற்பட்டபோதெல்லாம் வேதப் பஞ்சத்தின் தளையிலிருந்து மக்கள் அகல பிரசங்கங்கள் வேதபூர்வமாக உயர் நிலையில் இருந்திருப்பதைத்தான் வரலாறு நமக்கு சுட்டுகிறது. அந்நிலை உருவாகும் ஆரம்ப நிலையில் கூட நம்மினம் இல்லாதிருப்பது என் இருதயத்தில் வலியை ஏற்படுத்தியது. போதகர்கள், பிஷப்புகள், பிரசிடண்டுகள் என்றெல்லாம் பெயர்சூட்டிக்கொண்டு கிறிஸ்தவ தலைவர்களாக, அரசியல்வாதிகளைப்போலத் தங்களை இனங்காட்டிக்கொள்ளுகின்ற ஒரு பெருங்கூட்டத்தைத்தான் இங்கு பார்க்கிறோமே தவிர, வேதத்தைத் தெளிவாக அறிந்துணர்ந்து அதை விளக்கிப்போதித்துப் பிரசங்கிக்கும் மெய்ப்போதகனைக் காணமுடியாமல் இருப்பது நெஞ்சைப் பிளக்க வைக்கிறது.

இதேபோல் இன்னுமொரு கூட்டத்தில் ஆவியால் நிரம்பிய பிரசங்கம் எப்படி இருக்க வேண்டும் என்று மூன்று செய்திகளை அளித்தேன். முதலில் அது எனக்கே ஆசீர்வாதமாக இருந்தது. ஆவிக்குரிய, ஆவியால் நிரம்பிய பிரசங்கம் இன்று இல்லாமலிருப்பதற்கான ஐந்து காரணிகளை முதலில் விளக்கி, அதற்குப் பின் ஆவியானவரின் தன்மையை விவரித்து முக்கியமாக, வார்த்தை மூலம் அவர் செய்து வரும் ஆவிக்குரிய செயலை விளக்கி, இறுதியாக ஆவியில் நிரம்பிய பிரசங்கம் அமைவதற்கு அத்தியாவசியமான உதிரிப்பொருட்கள் எவை என்பதை விளக்கினேன். இதுபோன்ற செய்திகளை இதுவரை கேட்டதில்லை என்றே கூட்டத்தில் கலந்துகொண்ட போதகர்கள் சொன்னார்கள். ஆவலோடு அநேக நூல்களை அவர்கள் அள்ளிக்கட்டிக்கொண்டு போவதைப் பார்த்து இதயம் மகிழ்ந்தது. சாகரமாகப் பரந்து வியாபித்து நிற்கும் கடலில் சிறு தோனியில் போய்க்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. கண்ணுக்கெட்டிய தூரம்வரையில் ஊழியம் என்ற பெயரில் வேதப்பஞ்சத்தைப் போக்க வக்கில்லாத கூத்துக்கள் தொடர்ந்து நடந்துவருகின்றபோது எறும்புபோலிருந்து நம்மால் முடிந்ததை செய்துவர இத்தனைப் பாடுபட வேண்டியிருக்கிறதே என்றும், வேதத்தைப் படிப்பதற்கும், அதில் தேர்ச்சிபெற்று வேதத்தை மட்டுமே போதித்து ஆத்தும ஆதாயம் செய்வதற்கும் துடிப்போடு முன்வரும் இளைஞர்கூட்டம் நம்மினத்தில் உருவாக ஆண்டவர் கிருபை பாராட்ட வேண்டும் என்றும் ஜெபிக்காமல் இருக்க முடியவில்லை. அத்தகைய ஒரு இளைஞனை நான் சமீபத்தில் சந்தித்தேன். சபையில் பாடல் நேரத்தில் வழிநடத்துபவனாக இருந்த அந்த இளஞன் நான் பேசியதைக் கேட்டு என்னிடம் வந்து வேத இறையியலைத் திறம்படக் கற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். திருமறைத்தீபம் ஐந்து வால்யூம்களை வாங்கித் தீவிரத்தோடும் கருத்தோடும் வாசி என்றும், நாம் வெளியிட்டிருக்கும் நூல்கள் அத்தனையையும் பெற்று வாசிப்பை வளர்த்துக்கொள் என்றும் ஆலோசனை கூறினேன். நம் பிரசங்கத்தாலும் போதனையாலும் ஒரு இளைஞனையாவது சிந்தித்து செயல்பட வைக்கமுடியுமானால் இந்தக் காலகட்டத்தில் அதுவே பெரும் சீர்திருத்தத்திற்கு அடிக்கல் நாட்டியதாக அமையும்.

john-calvin-2வரும் பத்தாம் திகதி சீர்திருத்தவாதியான ஜோன் கல்வினின் பிறந்தநாள். அதை ஒரு சாக்காக வைத்து எட்டு மணிநேரம் கல்வினின், வளர்ப்பு, வாழ்க்கை, திருச்சபை சீர்திருத்தத்தில் அவர் வகித்த முக்கிய பங்கு, எழுதிக்குவித்திருந்த இலக்கிய இரத்தினங்கள், அவர் விட்டுச் சென்றிருக்கும் சவால்கள் என்பவற்றை விளக்கி எட்டுமணி நேரம் விரிவுரை அளித்தேன். இன்னும் சில மணிநேரங்கள்கூட அதுபற்றிப் பேசியிருந்திருக்க முடியும். அந்தளவுக்கு அந்த மனிதனைக் கர்த்தர் அற்புதமாகப் பயன்படுத்தி திருச்சபை சீர்திருத்தத்தில் முக்கிய பங்காற்ற வைத்திருந்தார். இந்த விரிவுரைகளை நூல்வடிவில் வெளியிடலாமே என்ற எண்ணமும் உடனடியாகத் தோன்றியது. இனி அந்தப் பணியை ஆரம்பிக்க வேண்டும். இவற்றைக் கேட்டு மகிழ்ந்த ஊழியக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுமானால் மரித்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் கல்வினின் மூலம் கர்த்தர் பேசியிருக்கிறார் என்று தான் அர்த்தம். கல்வினைப் பற்றி பெரும் பிரசங்கியான ஸ்பர்ஜன் சொல்லுகிறார், ‘என் வாழ்நாளில் தொடர்ந்து படிக்கப் படிக்க, ஜோன் கல்வினின் இறையியல்  போதனைகளே பூரணத்துவத்தைத் தொடுகின்ற போதனைகளாக இருப்பதை நான் தெளிவாகக் காண்கிறேன்.’ வில்லியம் கன்னிங்கம் என்ற ஸ்கொட்லாந்து இறையியலறிஞர் சொல்லுகிறார், ‘பவுலுக்கு அடுத்தபடியாக மனிதகுலத்துக்கு அதிக நன்மைகள் புரிந்திருக்கும் மனிதர் ஜோன் கல்வின்.’ ‘பதினாறு வருடங்கள் அவருக்குப் பக்கத்தில் இருந்து அவருடைய வாழ்க்கையை நான் கவனித்திருக்கிறேன். அதனால் அவரைப் பற்றிக் கருத்துச் சொல்லுகிற உரிமை எனக்கிருக்கிறது. சகலருக்கும் உதாரணமாக இருக்கும் விதத்தில் ஒரு கிறிஸ்தவனின் வாழ்வையும், மரணத்தையும் ஜோன் கல்வின் தன் வாழ்க்கையில் பிரதிபலித்திருந்தார். அத்தகைய உதாரணத்தை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிடவோ அல்லது அதைப் பின்பற்றி வாழ்வதோ முடியாத காரியம்’ என்று கல்வினின் நெருங்கிய நண்பரான தியடோர் பீசா தெரிவித்திருக்கிறார்.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 30 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக