2 இராஜாக்கள் 4:17-37
நாம் தொடர்ந்து 2 இராஜாக்கள் நூலை ஆராய்ந்து வருகிறோம். கடந்த இதழில் சூனேமியப் பெண்ணைக் பற்றிய வசனங்களை 8-16 வரை ஆராய்ந்திருக்கிறோம். இந்த ஆக்கத்திலும் சூனேமியப் பெண்ணைக் குறித்த வசனங்களை 17-37 வரையுள்ள பகுதியில் ஆராயவிருக்கிறோம்.
பல வருடங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சியில் பிரசங்கி ஒருவர் இந்த வேதப்பகுதிக்கு விளக்கமளித்ததை நான் இங்கு பதிவு செய்கிறேன். இந்த சூனேமியப் பெண்ணின் வாழ்க்கையில் நடந்த அற்புதமான காரியத்தைப் பற்றித்தான் அன்று அவர் விளக்கினார். அவர் என்ன சொன்னாரென்றால், இந்தப் பெண் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எலிசா தீர்க்கதரிசியோடு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டாளாம். ஆகவே அவள் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தனது தேவையை நிறைவேற்றிக்கொண்டாள். அதாவது அவள் தனது திட்டப்படி அந்த தீர்க்கதரிசிக்குத் தன் வீட்டில் ஒரு அறையை தயார் செய்து கொடுத்தாள். அவ்வாறு அவள் செய்தபோது அவளுடைய விசுவாசத்தின் காரணமாக அந்தத் தீர்க்கதரிசியால் அதை மறுக்கமுடியவில்லை. ஆகவே அவள் தன்னுடைய விசுவாசத்தின் காரணமாக தனக்குத் தேவையான ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்துக் கொண்டாள் என்று சொன்னார் அந்த பிரசங்கி.