கருத்துரை – ஷேபா மிக்கேள் ஜோர்ஜ்
நெல்லை அப்போஸ்தலர் ரேனியஸின் சுவிசேஷம் மற்றும் இலக்கியப் பணிகளை சீகன்பால்க், வில்லியம் கேரி, கால்டுவெல், ஜி.யு. போப் என்பவர்களோடு சேர்த்து சீர்திருத்த கிறிஸ்தவ மிஷனரிகள் என்ற ரீதியில் மேலோட்டமாகத் தெரிந்து வைத்திருந்த போதிலும் ஆழமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு இதற்கு முன் கிடைத்ததில்லை. எனவே திருமறைத்தீபம் இதழில் வந்திருக்கும் இந்த ஆக்கம் அதற்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. ரேனியஸின் பன்முகப்பட்ட அருட்பணி ஊழியத்தின் சாராம்சத்தை இதழ் மூலம் அறிந்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதேவேளை இத்தனை அசாதாரணமான ஆவிக்குரிய எழுப்புதல் நிகழ்ந்த மாவட்டம் இன்று அதன் அடையாளமே இல்லாமல் அவிந்து போனது ஏன்? என்ற கேள்வியும் சேர்ந்து எழுந்தது. அது மட்டுமல்லாமல் ‘எழுப்புதல்’ ‘சீர்திருத்தம்’ என்ற வார்த்தைகளைக் கேட்டாலே ஜெட் வேகத்தில் ஆறு நூற்றாண்டுகள் பின்நோக்கி ஓடும் மூளைக்கு, ஒரு நூற்றாண்டுக்கு முன் பக்கத்து மாவட்டத்தில் நடந்த அற்புதமான சுவிசேஷ எழுப்புதல் குறித்த நிகழ்ச்சிகள் எட்டாமல் இருந்திருக்கிறதே! என்ற ஆதங்கத்தையும் உண்டாக்கியது.