கர்த்தருடைய சத்தியத்தைத் தாங்கி வரும் வேதத்தைப் பற்றிய நம்முடைய அறிவும், அணுகுமுறையும் எப்போதும் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். அதாவது, வேதத்தை எப்போதும் தேவபயத்தோடு அணுகுவது அவசியம். அது நம்மைப் படைத்தவரின் சித்தத்தைத் தாங்கி வருவதால் அதைத் துல்லியமாக அறிந்துகொள்ளுவதற்கு நமக்குத் தேவபயமும் பரிசுத்த ஆவியானவரின் துணையும் மிகமிக அவசியம். இவை இரண்டும் இல்லாமல் வேதம் படிக்க முயல்வது ஆபத்து.
இவற்றோடு நிதானித்துப் பொறுமையோடு ஆராய்ந்து அறிந்துகொள்ளும் பக்குவமும் தேவை. ஏனெனில், வேதத்தைப் படிக்கும்போது தினசரி செய்தித்தாளை வாசிப்பதுபோல அதைப் படிக்கமுடியாது. இரண்டிற்கும் இடையில் இருக்கும் வேறுபாடு தெரியாதவன் கிறிஸ்தவனாக இருக்கமுடியாது. வேதம் ஆராய்ந்து கவனத்தோடு படித்தறிந்துகொள்ள வேண்டிய தெய்வீகச் செய்தி. அதைப் படித்தறிவதற்கு அவசியமான வேதவிதிகளைக் கற்றுத் தேர்ந்து அவற்றை முறையோடு பயன்படுத்தி தேவ செய்தியை அறிந்துகொள்ள நேரமும், நிதானமும், பொறுமையும் அவசியம்.