நாடாளும் அரசியைத் தன் நாவன்மையால் நடுங்கவைத்து, ஸ்கொட்லாந்தில் சீர்திருத்த விளக்கை ஏற்றிவைத்த சிங்கம்.
ஜோண் நொக்ஸ்
ஸ்கொட்லாந்தின் மாபெரும் சீர்திருத்தவாதி ஜோண் நொக்ஸ் என்பது வரலாறு அறிந்த உண்மை. சீர்திருத்தவாதிகளில் எனது மனதைக் கவர்ந்த பெருமகன் நொக்ஸ். சீர்திருத்தப் போதனையும், வேதபூர்வமான ஆராதனையும் ஸ்கொட்லாந்து நாட்டுத் திருச்சபைகளை இன்றும் தொடர்ந்து அணி செய்கின்றன என்றால் அதற்குப் பெரும் காரணகர்த்தாவாக இருந்தவர் ஜோண் நொக்ஸ். பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் ஹெடிங்டன் என்ற இடத்தில் பிறந்து, கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் பயின்று, உறுதியான ஒரு சீர்திருத்தவாதியாக மாறியவர் நொக்ஸ். சீர்திருத்தத்திற்கு எதிராகப் பெரும் எதிர்ப்புகள் ஸ்கொட்லாந்தில் தோன்றியபோது நொக்ஸ் ஐரோப்பாவிற்குப் போய்விடத் தீர்மானித்தார். ஆனால், ஸ்கொட்லாந்து அரசுக்கு உதவ பிரான்ஸில் இருந்து வந்திறங்கிய படையிடம் அவர் பிடிபட்டு 19 ஆண்டுகள் சிறையில் வாட நேர்ந்தது. நொக்ஸையும் அவரோடு பிடிபட்டவர்களையும் ரோமன் கத்தோலிக்க மதத்திற்குத் திருப்பப் பெரு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், நொக்ஸ் இறுதிவரை எல்லா முயற்சிகளையும் எதிர்த்துப் போராடி தனது விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்.