திரித்துவம்
அதிகாரம் 2: பாகம் 4
விளக்கம்: அலன் டன் (Alan Dunn)
3. அவரது எல்லையற்ற தெய்வீக உள்ளியல்பில் பிதா, வார்த்தை அல்லது குமாரன், ஆவியானவர் மூவரும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறார்கள். உள்ளியல்வு (சாரம்) வல்லமை, நித்தியம், ஆகியவற்றில் அவர்கள் அனைவரும் ஒருவரே. அதேவேளை ஒவ்வொருவரும் பிரிக்கப்படாத முழுமையான தெய்வீகத்தையும் உடையவர்களாய் இருக்கிறார்கள். பிதாவானவர் வேறெந்த உயிரினத்திலும் இருந்து பெறப்படவில்லை, அவர் எந்தவொரு உயிரினத்தாலும் தோற்றுவிக்கப்படாததோடு, எந்தவொரு உயிரினத்திலும் இருந்தும் தோற்றுவிக்கப்படவில்லை. குமாரன் தந்தையிடமிருந்து நித்தியமாய் தோன்றினவராயிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர், தந்தையிடமிருந்தும், குமாரனிடமிருந்தும் நித்தியமாய் வெளிப்படுகிறவராய் இருக்கிறார். மூவருமே தொடக்கமற்றவர்களாகவும் அதேவேளை எல்லையற்ற ஒரே கடவுளாயும் இருப்பதால் அவர்களுடைய இயற்கைத்தன்மையையோ, உள்ளியல்பையோ பிரித்துப் பார்க்கக்கூடாது. ஆனாலும், அவர்களுக்கிடையிலான தனிப்பட்ட உறவைக் குறித்தும் (அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் குடும்ப உறவு), அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் பல்வகையான செயல்கள் குறித்தும் வேதத்தில் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. கடவுளோடு நமக்குள்ள எல்லா ஐக்கியத்திற்கும், அவரில் நாம் தங்கியிருப்பதால் நாம் பெறும் ஆறுதலுக்கும் திரித்துவத்தைக் குறித்த இந்தக்கோட்பாடே அடிப்படையாக அமைகின்றது.
யாத்தி. 3:14; மத். 28:19; யோவான் 1:14, 18; 15:26; 1 கொரி. 8:6; 2 கொரி. 13:14; கலா. 4:6; 1 யோவான் 5:7.